மு.கு: இது ஒரு மொக்கை பதிவு. சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல.
வணக்கம் நண்பர்களே... பதிவுகள் எழுதத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் முடியப்போகிறது. நான் வந்தபோது ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் இன்னும் எழுதுகிறார்கள். பலர் எழுதுவதை விட்டு விட்டார்கள். சிலர் எழுதாமல் விட்டதில் எனக்கும் நிறைய வருத்தம் உண்டு. இந்த இரண்டு வருட காலத்தில் பெரிதாக எதுவும் எழுதி விடாத நிலையில் பதிவர்களின் தன்மைகளைப் பற்றியாவது கொஞ்சம் புரிந்து வைத்திருக்கிறேன். பதிவர்கள் பல வகைப்படுவார்கள். தலைவர் ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் பதிவர்களை பொதுவாக மூன்று வகைக்குள் அடக்கலாம். சாத்வீகம், ப்ரசோதகம், பயானகம். இதற்குள்ளும் உட்பிரிவுகள் உண்டு.
சாத்வீகம்:
பதிவுலகில் இவர்கள் வாயில்லா பூச்சிகள். எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்கள். இவர்கள் பதிவுகள் மிகவும் சாந்தமாக இருக்கும். தானுண்டு தன் பதிவு உண்டு என்று இருப்பவர்கள். பெரும்பாலும் காதல் கவிதைகள், சிறுகதைகள், பார்வர்ட் மெயிலை பதிவாக எழுதுபவர்களாக இருப்பார்கள். பெரும்பாலான பெண் பதிவர்கள் இந்த பிரிவுக்குள் வந்து விடுவார்கள். இவர்கள் தவிர தொழில்நுட்ப பதிவர்களும் இதில் அடங்குவார்கள். வலைத்தள டிசைன்களுக்கு டிப்ஸ் என்று தொடங்கி பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுவார்கள். இவர்களின் தன்மையை வலைத்தள டெம்ப்ளேட்டை வைத்தே கண்டுபிடித்து விடலாம். பூக்கள், மரங்கள், இலைகள், வண்ணத்து பூச்சிகள் என்று லேஅவுட் வைத்திருப்பார்கள். இவர்களை திட்டி கமெண்ட் போட்டாலும், வருகைக்கு நன்றி என்று கூறுவார்கள். அதே போல வேறு பதிவர்களின் தளத்திற்கு சென்றாலும், விமர்சனம் செய்யாமல், பாராட்டி விட்டு வந்து விடுவார்கள். இவர்களிடம் உள்ள ஒரு நல்ல குணம், யாருமே வந்து கமெண்ட் போடாவிட்டாலும் தங்களின் பணியை சிறப்பாக செய்வார்கள். பெரும்பாலான புதிய பதிவர்கள் முதலில் இந்த பிரிவிலேயே இருப்பார்கள். கொஞ்ச நாள் ஆன பிறகே அடுத்த பிரிவுகளுக்கு முன்னேறுகிறார்கள்.
மிகவும் சேஃப்பான ஆனால் அதே நேரம் அதிகம் கலெக்ஷன் ஆகாத பீல்குட் பிரிவு இது.
ப்ரசோதகம்:
பெரும்பாலான பதிவர்கள் கடைசியாக வந்து சேரும் இடம் இதுதான். இந்த பிரிவினருக்குத்தான் பதிவுலகில் வரவற்பு அதிகம். இந்த வகை பதிவுகள் எழுதுவதற்கு நாட்டு நடப்பு அறிவும், கொஞ்சம் தில்லும் இருந்தால் போதும். இந்த வகை பதிவர்கள்,
'கில்மா பதிவர்கள்' என்று அழைக்கப்பட்டாலும் அதுவும் ஒரு உட்பிரிவுதான். கும்மி பதிவர்கள், சினிமா பதிவர்கள், மொக்கை பதிவர்கள், காக்டெயில் பதிவர்கள் என்று எல்லோருமே இந்த வகைக்குள் வந்துவிடுவார்கள். பதிவு எழுதுவதற்கு யோசிக்கிறார்களோ இல்லையோ, தலைப்பு வைக்கவே நிறைய யோசிப்பார்கள். இந்த பிரிவினரின் தலைப்புகள் மிக கவர்ச்சியாக, இலைமறை காய்மறையாக, அதே நேரம் இரட்டை அர்த்தத்துடன் இருக்கும். முதன் முதலில் படிப்பவர்கள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு வந்து பல்பு வாங்குவார்கள். ஆனால் அவர்களை திருப்தி படுத்தும் வகையில் கண்டிப்பாக நடிகைகளின் படங்களாவது இருக்கும். இவ்வகை பதிவர்கள் வரம்பு மீறினாலும் அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே போல யாராவது இவர்களை திட்டினாலும் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சினிமா, அரசியல் அவ்வப்போது விளையாட்டு என்று ஒரே கோட்டில் பயணிக்கும் இவர்கள், சிலநேரம் உள்குத்து எழுதி கலாய்த்து விடுவதும் உண்டு. இதில் காக்டெயில் பதிவர்கள், சாத்வீகம் மற்றும் பயானகம் பிரிவுக்குள் சென்று வருவதும் உண்டு. நிறைய கருத்துக்கள் மற்றும் ஓட்டுகள் வாங்கும் இந்த பதிவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை, இவர்கள் சீரியசாக பேசினாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாததுதான்.
பயானகம்:
ரோட்டில் நடந்து போகும்போது ஆங்காங்கே நடக்கும் சண்டைகள், ஊர் வம்புகள், அரசியல் மேடைப்பேச்சுகள் ஆகியவற்றில் நீங்கள் ஆர்வம் காட்டுபவரா? கண்டிப்பாக இவ்வகை பதிவர்களை உங்களுக்கு தெரிந்திருக்கும். மிக மிக சீரியசாக பதிவுகள் எழுதும் இவர்களுக்குள்ளும் நல்லவர்கள்,
வம்புக்காரர் மற்றும் வீம்புக்காரர் என்று உட்பிரிவுகள் உண்டு. . நல்லவர்களின் பதிவுகள் நேர்மையாக, நடுநிலைமையாக அதே நேரம் பல சான்றுகளோடு இருக்கும். இவர்கள் மிக அரிதாக இருப்பவர்கள். மேலும் இவர்கள் பதிவுகள் மிக நீளமாக உப்பு சப்பில்லாமல் இருப்பதால் இவர்களுக்கு மவுசு குறைவு. ஆனால் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டே தெரிந்து தெரியாமலோ வம்பு செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்களுக்குரிய மேட்டர்களை பதிவுலகில் இருந்தே எடுக்கிறார்கள். பிற பதிவர்களின் செய்கைகளை விமர்சித்தோ அல்லது கடுமையாக திட்டியோ காரசாரமாக பதிவு எழுதுவார்கள். இந்த பதிவுகள் படிப்பவர்களுக்கு
எதேனும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இது வெறும் திரிதான். இதன் பின்னர்தான் பெரிய அணுகுண்டுகள் வெடிக்கும். இவரால் வம்பிழுக்கப்பட்டவர் பயானகமாகவோ அல்லது ப்ரசோதகமாகவோ இருந்து விட்டால் ஆட்டம் களை கட்டி விடும். இரு தரப்பினரும் அடியாட்களோடு ஆஜர் ஆகி விடுவார்கள். வம்புக்காரர்களின் பதிவுகளை விட, கருத்துரைப்பகுதிகளே மிக சுவாரசியமாக இருக்கும். கருத்துக்களை படிப்பதற்கென்று தனியே பெரிய வாசகர் வட்டமே உண்டு. வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பதிவு யுத்தம் அல்லது கருத்து யுத்தம் நடக்கும். திடீரென்று எல்லோரும் தத்தம் வேலைகளைப்பார்க்க சென்று விடுவார்கள். நம்மாள் அடுத்த மேட்டரை தேடி சென்று விடுவார்.
இதில் உள்ள மற்றொரு பிரிவினர்தான் வீம்புக்காரர். இவரோடு யாருமே சேரமாட்டார்கள். ஏனென்றால் கூட பழகும் நண்பரையே கடித்து விடும் குணமுடையவர். இவர் தனியாளாகத்தான் இருப்பார். ஒன் மேன் ஆர்மீ. தன் எண்ணம்போல கண்டபடி பதிவிடுவார். இது கண்டிப்பாக எதேனும் சமுதாய பிரச்சனையை அல்லது பதிவர்களை பற்றியே இருக்கும். தன் பதிவிற்கு வரும் கருத்துக்களை சாரி திட்டுக்களை ஒற்றை ஆளாக சமாளிப்பார். அதே நேரம் பிற பதிவர்களின் தளத்துக்கு சென்று ஒற்றை ஆளாக வம்பிழுத்து சளைக்காமல் போராடுவார். கடைசியில் எல்லோரும் சேர்ந்து இவரை காமெடி பீஸ் ஆக்கி விடுவார்கள். அது தெரியாமலேயே வெற்றி களிப்போடு திரும்பி வருவார். கொஞ்ச காலம் இப்படியே இருந்து விட்டு, பிறகு யாருமே வராத கடையில் உட்கார்ந்து தனக்குத்தானே புலம்பி கொண்டிருப்பார். பிறகு விரக்தியில் எழுதுவதையே விட்டுவிடுவார்.
நிறைய மைனஸ் ஓட்டுக்களை வாங்கி குவிக்கும் பயானக பிரிவினரும் ஒரு வகையில் மிக பிரபலமானவர்களே. இவ்வகைப்பிரிவினர்களின் ஒரே பலம் மற்றும் பலவீனம், தனக்கு மட்டுமே இந்த சமூகத்தின் மீது அக்கறை உண்டு என்றும், மற்றவர்கள் எல்லோருமே போறம்போக்குகள், அவர்களை தன்னால் மட்டுமே திருத்த முடியும் என்று நினைப்பதுதான். கடைசியில் அந்த எண்ணம் பொய்யாகும்போது எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுகிறார்கள் அல்லது ரூட்டை மாற்றி ப்ரசோதக ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார்கள்.
இன்ன பிற வகையினர்:
ஆர்வக்கோளாறு பதிவர்கள்: வந்த புதிதில் நிறைய அலப்பறை செய்து, எல்லோரையும் வம்பிழுத்து, அர்ஜண்ட் ரவுடியாக தன்னை காட்டிக்கொண்டு, பிறகு ஒரு கட்டத்துக்குமேல் என்ன எழுதுவது என்று தெரியாமல் காலப்போக்கில் காணமல் போவார்கள். அல்லது எதேனும் ஒரு குருப்பில் தன்னை இணைத்துக்கொண்டு அவ்வப்போது கூட்டத்தோடு கோவிந்தா போடுவார்கள்.
அல்ப பதிவர்கள்: இவர்களுக்கு தெரிந்தது இரண்டே விஷயம்தான். ஒன்று காப்பி. மற்றொன்று பேஸ்ட். பிரபல பதிவர், புது பதிவர் என்று விவஸ்தையே இல்லாமல் யார் எழுதிய பதிவாக இருந்தாலும், எழுத்துப்பிழை முதற்கொண்டு மாறாமல் அப்படியே ஒட்டி வெளியிடுவார்கள். இவர்களால் வெகுகாலம் நிலைக்க முடிவதில்லை.
ஸ்பூஃப் பதிவர்கள்: இது சமீபகாலமாக உருவாகி வரும் ஒரு பிரிவு. வேறொரு பதிவர் எழுதிய பதிவுகளை, அதே ஸ்டைலில் செமையாக கலாய்த்து ரீமேக் செய்து வெளியிடுவார்கள். நகைச்சுவை உணர்வுக்காக அல்லது தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இவ்வகை பதிவுகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. ஆனால் யாரும் வெளிப்படையாக பாராட்டுவதில்லை.
நான் பதிவுலகத்தை புரிந்து கொண்டது அவ்வளவுதான். இது போக பதிவர்களில் வேறு பிரிவினர் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் கருத்துரையில் தெரிவியுங்கள். கூடிய விரைவில் வாசகர்கள் பலவிதம் என்பது குறித்து ஒரு பதிவு வெளியிடுகிறேன்.
முழுவதும் படிக்க >>