அப்போ ஹர்பஜன் இப்போ ஹர்விந்தர்
கடந்த வாரம் முழுவதும் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் மிக பரபரப்பாக ஒளிபரப்பப்பட்ட இந்த சண்டைக்காட்சி பல இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதே போல அரசியலையே சேவையாக செய்துவரும் பல நல்ல மனிதர்கள் வயிற்றில் புளியையும் கரைத்திருக்கிறது. இது குறித்து செய்தி வெளியிட்ட அனைத்து ஊடகங்களுமே மறைமுகமாக கிண்டலாகவே வெளியிட்டன. ஒரு பெரிய மனிதருக்கு பொது இடத்தில் வைத்து ஒரு இளைஞனிடம் அறை வாங்குவதை போல பெரிய அவமானம் எதுவும் இருக்க முடியாது. ஆனால், "இதற்கெல்லாம் அஞ்சுபவர்களா நாங்கள்? இதை எல்லாம் பார்த்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா? என்று தங்கள் அவமானத்தையும் மறந்து தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வார்கள் சரத் பவார் போன்ற நல்லவர்கள். அதானே? இதையெல்லாம் பார்த்தால் தொழில் பண்ண முடியுமா? என் கவலை எல்லாம் அவரின் பாதுகாப்பு அதிகாரிகளைப் பற்றித்தான். இனி அவர்கள் நிலைமை என்ன?
கருணாநிதி
செல்வி ஜெயலலிதா அவர்கள் அதிரடியாக விலையேற்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சாபத்தையும் பெற்றுக்கொண்டிருக்கிறார். விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாதுதான். ஆனால் ஒரேயடியாக இப்படி மக்கள் தலையில் கட்டுவது எந்த வகையில் நியாயம்? மக்கள் பணத்தை பிடுங்கி அரசாங்க பானையை நிரப்புவதை விட, அரசாங்க பானையில் இருக்கும் ஆயிரம் ஓட்டைகளை அடைத்தாலே பானை தானாக நிறைந்து விடும். வரி ஏய்ப்பு, ஊழல், கள்ள மார்க்கெட், லஞ்சம், முறைகேடு, மோசடி என்று எல்லா ஓட்டைகளையும் அரசு அடைப்பதாலும், அரசாங்கத்தின் அனாவசிய செலவீனங்களை குறைப்பதாலும் கூட இதை சாத்தியப்படுத்த முடியும். உதாரணமாக, பெட்ரோல், தொலைபேசி, பயணச் செலவுகள், சில்லறை செலவுகள் ஆகியவற்றை குறைக்கலாம். ஆனால் இது எல்லாம் எக்காலத்திலும் சாத்தியமல்ல என்பது மட்டும் நிச்சயம்.
எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 59 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்ததை போல இருக்கிறது தமிழக அரசு. இதை சரியாகப் பயன்படுத்தி அரசியல் ஸ்டண்ட் அடிக்க, திமுகவுக்கு நல்ல வாய்ப்பு. ஆனால் அவர்களோ, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி சொதப்புவது கண்டிப்பாக தோல்வியில்தான் முடியும். இந்நேரத்துக்கு மக்களை சந்திப்பது, ஆதரவு திரட்டுவது, போராட்டம் நடத்துவது என்று நிறைய அரங்கேற்றி இருக்கலாம். வெளியில இருக்கிற கொஞ்சநஞ்ச திமுக பிரமுகர்களையும் கம்பி எண்ண வச்சுட்டா எண்ண பண்றதுன்னு நினைத்திருக்கலாம். பாவம் கலைஞர். அவருக்கு இருக்கிற கவலைகளில் இதை எல்லாம் கவனிக்க எங்கே நேரம் இருக்கிறது? அவரே கனிமொழி வெளியே வருவாரா? மாட்டாரா? என்ற டென்சனில் இருந்தார். அப்புறம் இதெல்லாம் எப்படி ஞாபகத்தில் வரும்? முதலில் வீடு அப்புறம்தானே நாடு?
ஏழாம் அறிவு
கடந்த சில நாட்களாக ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் படங்களுக்கிடையேயான விளம்பர யுத்தம் பற்றி அறிந்திருப்பீர்கள். கலைஞர் செய்தியையும், ஜெயா செய்தியையும் ஒரே நேரத்தில் கேட்பது போலிருந்தது. நிறைய பத்திரிக்கைகளில் இந்த விளம்பரங்கள் அருகருகில் வெளிவந்து கிச்சு கிச்சு மூட்டின. "இது மசாலா வெற்றி அல்ல ஒரிஜினல் வெற்றி", என்று ஒரு தரப்பும், "தமிழ் மக்களின் ஆதரவு பெற்றி ஒரே படம்." என்று இன்னொரு தரப்பினரும் மாறி மாறி காமெடி செய்தனர். இப்போ என்னடான்னா 80 வருட திரை வரலாற்றிலேயே அதிகம் வசூல் செய்த படங்கள் என்று எந்திரன், சிவாஜிக்கு அப்புறம் ஏழாம் அறிவு படத்தை காட்டுகிறார்கள். இது பொய் என்று சொன்னால் உடனே எல்லோரும், நிறைய வலைதளங்களின் லிங்க்களை கொடுப்பார்கள். இது பொய் என்று நான் சொல்ல போவதில்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். 2008இல் குருவி என்று ஒரு படம் வெளிவந்தது. இந்த படத்தின் 150வது நாள்(!!) விளம்பரத்தில் இதன் வசூல் சிவாஜியை முறியடித்ததாக வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிறகு ஆதவனுக்கும் அதே போல விளம்பரம் வந்தது.
தெளிவா ஒரு சந்தேகம் கேட்கிறேன் (அதெப்படி தெளிவா ஒரு சந்தேகம்? மயக்கம் என்ன பார்த்த எஃபெக்டோ?). திரு உதயநிதி அவர்கள் அப்போ சொன்னது உண்மை என்றால் இப்போ சொல்வது பொய்தானே? இல்லை, இப்போ சொல்வதுதான் உண்மை என்றால் அப்போ சொன்னது பொய்தானே? ரெண்டாவது சொன்னதுதான் சரி என்றால், அப்போவே பொய் சொன்னவர் இப்போ சொல்ல மாட்டார்னு என்ன நிச்சயம்? இப்போ சொல்வதுதான் பொய் என்றால் அப்போ சொன்னது மட்டும் எப்படி உண்மை என்று நம்ப முடியும்? (புரியவில்லை என்றால் கோபப்படாமல் மறுபடியும் படிக்கவும்) அநேகமாக ஒரு கல், ஒரு கண்ணாடி எந்திரனையும் முறியடிக்கும் என்று நம்பலாம். சில நண்பர்கள் உதயநிதி, சூர்யாவை வைத்து விஜய்க்கு எதிராக ஏதோ வேலை செய்வதாகவும் சொல்கிறார்கள். அதன் விளைவே, "ரஜினிக்கு அடுத்தபடியாக சூர்யா." என்பதை நிலைநிறுத்தும் இந்த முயற்சி என்றும் சொல்கிறார்கள். சூர்யா தம்பி, "உன் வாழ்க்கை உன் கையில்".
"விஜய்யின் 52 படங்களையும் வேலாயுதம் வசூலில் விழுங்கி விட்டது." என்று சொல்கிறார்கள். அப்படியானால் இனி வரும் விஜய் படங்களை கில்லியுடன் ஒப்பிடாமல் வேலாயுத்துடன் ஒப்பிடுவார்கள் என்று நம்பலாம். இல்லை என்றால் மேலே சொன்ன உதயநிதி கதை இதற்கும் பொருந்தும். எங்கள் ஊரில் வேலாயுதத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விட்டார்கள். இன்னும் ஏழாம் அறிவு ஓடிக்கொண்டிருக்கிறது. "இதன் மூலம் என்ன சொல்லவருகிறாய்? எனக்கு தெரியும். என்ன இருந்தாலும் நீ அஜீத் ரசிகன்தானே? அப்படித்தான் பேசுவாய்." என்று நினைப்பீர்கள். நான் அஜீத் ரசிகன்தான். ஆனால் அந்த தியேட்டர் ஓனர் அஜீத் ரசிகன் அல்ல.
கோச்சடையான்
இந்த படமாவது வருமா? இல்லை இன்னும் கொஞ்ச நாளில் வேறு ஒரு பட அறிவிப்பு எதுவும் வெளிவருமா? என்று தெரியவில்லை. எதுவானாலும் ரஜினி பட அறிவிப்பு வந்தால் அது மகிழ்ச்சியே. அடுத்த அறிவிப்பு வரும் வரை இதுதான் அடுத்த ரஜினி படம் என்ற நம்பிக்கை தொடரும். படம் அடுத்த ஆகஸ்டில் வெளிவரும் என்று சொல்லி இருக்கிறார்கள். எது எப்படியோ, பதிவுலக நண்பர்களுக்கு வாயில் மெள்ளுவதற்கு அவல் கிடைத்து விட்டது. ரஜினி குறித்து பாராட்டி, சிலாகித்து, ரசித்து, கிண்டல் செய்து, மட்டம் தட்டி, வயிற்றெரிச்சலை கொட்டி, காப்பி பேஸ்ட் செய்து, நிறைய பதிவுகள் தேத்தலாம். மறுபடியும் ரஜினியின் ஆரம்பகாலத்தில் இருந்து அவரது நடவடிக்கைகளை கிண்டல் செய்தும், சிலாகித்தும் எழுதலாம். கமான் ஸ்டார்ட்.....
கொலவெறி
இந்த பாடல் இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆகி விட்டது என்று சொல்கிறார்கள். இந்த பாடலில் இன்னும் ஒரு வரியை கூட கேட்டிராத பாவாத்மாக்களில் நானும் ஒருவன். ஏனோ இந்த பாடலை கேட்கவேண்டும் என்ற எண்ணம் வரவேயில்லை. இருக்கும் இடத்தில் இருந்து யூடியூபை தட்டினால் அடுத்த நொடியே பாடலை கேட்கமுடியும். இருந்தும் தோன்றவில்லை. இதே மாதிரிதான் 'எவண்டி ஒன்ன பெத்தான்' பாடலையும் வெகு நாட்கள் கழித்து கேட்டு காண்டு ஆனேன். பிறகு திரையில் பார்க்கும்போது நன்றாக இருக்கும் என்று நம்பி கண் பார்வை பறிபோனதுதான் மிச்சம். படம் வந்த பிறகு பாடலை ஒளியும் ஒலியுமாக பார்ப்பது என்று முடிவு கட்டி விட்டேன்.
கிரிக்கெட்
இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த கடைசி டெஸ்ட் போட்டியும் சரி, நேற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியும் சரி, கடைசி நேரத்தில் இழுத்துக்கோ பறிச்சுக்கோ நிலைமைதான். இப்படியே எல்லா போட்டிகளிலும் நடந்தால் கண்டிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு ஆதரவு கூடும். எனக்கென்னவோ மேட்ச் அந்த நிலைமைக்கு போனதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்தான் காரணம் என்று தோன்றுகிறது. நிறைய மிஸ்பீல்டிங், சொதப்பலான பவுலிங் என்று முதலிலேயே சிரத்தை இல்லாமல் ஆடினார்கள். கிரீஸ் கெய்லையும், டிவைன் பிராவோவையும் ஏன் அணியில் சேர்க்கவே மாட்டேன்கிறார்கள்?
மறுபக்கம் தென்னபபிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் சம அளவில் பலத்தை வெளிப்படுத்தின. இதே மாதிரி சம அளவில் தொடங்கிய இலங்கை பாகிஸ்தான் போட்டிகள், மெல்ல மெல்ல பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விட்டது. பாகிஸ்தான் அணி வீரர்கள் வெகு விரைவாக முன்னேறி வருகிறார்கள் என்பதற்கு இந்த தொடர் ஒரு சாட்சி. அதே நேரம் "இலங்கை அணி ஜெயவர்தனே, சங்கக்காரா மற்றும் மலிங்காவை மட்டுமே நம்பி இருக்கிறதோ?", என்று எண்ணத்தோன்றுகிறது.
இப்போதைக்கு வெட்டி அரட்டை அவ்வளவுதான்....
உங்களது கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
முழுவதும் படிக்க >>