ஒரு அறிவிப்பும், பெருமிதமும்....
தமிழ்மணம் திரட்டியில் இருந்து, மார்ச் 5 முதல் 12 வரையிலான வாரத்தில், நட்சத்திர பதிவராக இருந்து பதிவெழுதுமாறு கேட்டிருந்தார்கள். மிகப்பெரிய, பிரபலமான பதிவர்கள் நட்சத்திரமாக ஜொலித்த இடத்துக்கு என்னை அழைத்தபோது, உடனே சம்மதம் சொல்லி விட்டேன். அப்புறம்தான் உரைத்தது. அந்த வாரத்தில் குறைந்தது தினம் ஒரு பதிவாவது எழுதவேண்டுமே? இங்கே வாரம் ஒரு பதிவு எழுதுவதே பெரிய வேலையாக இருக்கிறதே? என்று. ஆகவே என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். என்ன இருந்தாலும் பேரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா? காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன்.
விமலன் அவர்கள் எனக்கு வெர்சடைல் ப்ளாகர் விருது வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறார். பல்துறைகளிலும் சிறந்து விளங்குபவர் என்ற இந்த விருதை பெறவேண்டுமானால், குறைந்தபட்சம் இரண்டு துறைகளாவது தெரிந்திருக்க வேண்டும். ஆனால் வெட்டி அரட்டை அடிப்பதை தவிர எதையும் எழுதி விடாத எனக்கு விருது அளித்திருப்பது, "இனிமேலாவது ஒழுங்காக எழுது..", என்று சொல்வதை போல இருக்கிறது. அந்த வகையில் இவ்விருதை, ஒரு அச்சாரமாகவே ஏற்றுக்கொள்கிறேன் நன்றிசார்.....
உதை வாங்கிய இந்தியா... உதை கொடுத்த இந்தியா....
2000ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் செமத்தியாக உதை வாங்கி கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலிய, மற்றும் இலங்கை அணிகளை மிகப்பலம் பொருந்தியவை என்று கூறி விட முடியாது. முதலில் கொஞ்சம் சொதப்பிய இலங்கை அணி, அதன் பிறகு சுதாரித்துக்கொண்டு ஓரளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தங்களின் பலமான பேட்டிங் வரிசையை சாதகமாக்கிக் கொண்டு போட்டிகளை வென்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியோ, மிடில் ஆடரில் வரும் ஹஸ்ஸி, வேட்(அவரை வடே என்றும் சொல்கிறார்கள். எது கரெக்ட்?) ஆகியோரை வைத்து ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோரை எட்டி விடுகிறார்கள். அதன்பிறகு, தன்னம்பிக்கையான பவுலிங், மற்றும், சிறப்பான பீல்டிங் மூலம் வெற்றியை பெற்று விடுகிறார்கள். ஆனால் தனக்கு எது பலம், அல்லது பலவீனம் என்று தெரியாத நிலையில், ஏனோ தானோ என்று ஆடி இரண்டு அணிகளிடமும், உதை வாங்கி வருகிறார்கள் இந்திய அணியினர். என் நண்பர் ஒருவர், "ஒரு தொடரில் தோனி தலைமையில் ஒரு போட்டி டை ஆனால், அந்த கோப்பையை தோனி வென்று விடுவார்." என்று ஆரூடம் கூறுகிறார். இனி இலங்கை மனது வைத்தால்தான் இந்த ஆருடம் பலிக்கும் போலிருக்கிறதே...
மாறாக ஒலிம்பிக் தகுதிசுற்று போட்டிக்களில் இந்திய அணியினரின் ஆட்டம், மிகப்பிரமாதமாக இருந்தது. கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலுமே இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தார்கள். இறுதி போட்டியில் பிரான்சுக்கு எதிராக 8-1 என்ற கோல் கணக்கில் பிரமாண்ட வெற்றியை பெற்று ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆட தகுதி பெற்றிருக்கும் இவர்கள், சிறப்பாக ஆடி இழந்த பெருமைகளை மீட்டு தருவார்கள் என்று நம்பலாம். தொடரில் சிறப்பாக ஆடி 16 கோல்களை அடித்த சந்தீப் கண்டிப்பாக இந்திய அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம். அவருக்கு 25 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, அதே போல அணியில் இடம்பெற்ற பிற வீரர்களுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட்டுக்கு மட்டுமே கோடிகளை வாரி இறைக்காமல், இந்த மாதிரி வெற்றிகளை ஊக்குவித்தால் இந்திய அணி பல சாதனைகளை நிகழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
சினிமா படலம்
கடந்த வாரம் வெளியான படங்களுள் குறிப்பிடத்தக்க படங்கள் மூன்றை பார்த்தாகி விட்டது. காதலில் சொதப்புவது எப்படி, ஏற்கனவே குறும்படமாக பார்த்து விட்டதால், அதில் சுவாரசியம் குறைவாகவே இருந்தது. ஆனால் வசனங்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தன. மிக மிக ஜாலியான, கல்லூரி மாணவர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட படம், நகர்புற, மக்களை மட்டுமே கவரும் என்பது உறுதி. அதே போல முப்பொழுதும் உன் கற்பனைகள் படம், மிக ஸ்டைலிஷ் ஆக எடுக்க வேண்டும் என்று நினைத்து சொதப்பி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதே கதையில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணுக்குள் நிலவு என்று ஒரு படம் விஜய் நடிப்பில் வெளிவந்தது.இது படம் தொடங்கி 15 நிமிடத்துக்குள் எனக்கு புரிந்து போனது. ஆகவே படத்தோடு மனம் ஒட்டவே இல்லை. அதர்வாவை குறை சொல்ல முடியாது. நடிக்க முயற்சி செய்திருக்கிறார். எத்தனை முறைதான், முரளி மகன் என்பதால் எக்ஸ்கியூஸ் கொடுக்க முடியும்? மூன்றாவது திரைப்படம் அம்புலி. பார்த்திபன் தவிர்த்து பெரிதாக ஸ்டார் வேல்யூ இல்லாமல், நிறைய புதுமுகங்களை வைத்து இயக்கி இருக்கிறார்கள், ஹாரிஸ் ஷங்கர், மற்றும் ஹரீஷ் நாராயணன். இவர்கள் எழுதி வரும் டிரீமர்ஸ் வலைத்தளத்துக்கு தீவிர வாசகன் நான். அதிலும் கேணிவனம் தொடர் மிகப்பிரபலம். இவர்கள் ஒரு பதிவர்கள் என்று சொல்வதில் நானும் ஒரு அல்ப சந்தோஷம் கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டில் மிரட்டலான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். 3டிதான் கொஞ்சம் கண்களை உறுத்தியது. அது நான் பார்த்த திரையரங்கின் குறையாக கூட இருக்கலாம். இவர்களின் முயற்சியே மிக பாராட்டுக்குரியது. இவர்களிடம் இருந்து இன்னும் சிறப்பான திரைபடங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
மின்வெட்டில் வெட்டு....
முன்பெல்லாம், "எதற்கு மின்வெட்டு?" என்று மக்கள் போராடுவார்கள். இப்போது, "எல்லோருக்கும் சமமாக மின்வெட்டு கொடு!" என்று போராடும் நிலைமைக்கு வந்து விட்டோம். மார்ச் முதல் நகரங்களில் 2 மணிநேரமும், பிற இடங்களில் 4 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள். இது ஓரளவுக்கு நிம்மதியை கொடுத்தாலும், இது எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. கோடைகாலம் நெருங்கி வருவதால், மின்வெட்டு இன்னும் அதிகாரிக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அதிக பட்சம் 24 மணி நேரம் மட்டுமே மின்வெட்டை அமல் படுத்த முடியும் அல்லவா?
வேளச்சேரியில் ஐந்து பேரை போலீஸ் என்கவுண்டர் செய்து கொன்றிருக்கிறது. அவர்கள் உண்மையிலேயே கொள்ளையில் ஈடுபட்டார்களா? அவர்கள் மீது என்கவுண்டர் செய்தது சரிதானா? என்று வழக்கம்போல பட்டி மன்றங்கள் தொடங்கி விட்டன. அடுத்த பரபரப்பு செய்தி வரும்வரை பேசுவதற்கு ஏதாவது விஷயம் வேண்டும் அல்லவா? அதன் பிறகு எல்லோரும் இதை மறந்து விடுவார்கள். ஆனால் வடமாநிலத்தில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் அப்பாவிகளுக்குத்தான் இனி பிரச்சனை. ஏற்கனவே அவர்களை எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இப்போது அவர்களோடு நெருங்கி பழகவே அஞ்சுவார்கள். ஒரு சிலர் செய்த தவறுகளுக்கு ஓட்டு மொத்த சமுதாயமும் பழிக்கபடும். இதை கவர் செய்த ஊடகங்களோ தங்களின் எண்ணத்திற்கேற்ப செய்திகளை பரப்பி வருகிறார்கள். உதாரணமாக வடநாட்டு ஊடகங்கள் அனைத்துமே, கொல்லப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே செய்திகள் வெளியிட்டு வருகின்றன. கொலையுண்டவர்களின் உடல்களை போலீஸ் எடுத்து வரும் காட்சியை, புதிய தலைமுறை தவிர்த்து அனைத்து சேனல்களும், மிக தெளிவாக காட்டின. ரத்த வெள்ளத்தில் இருக்கும் அவர்களின் பிரேதங்களை குழந்தைகளும் பார்க்க நேரிடும் என்று துளியும் இவர்களுக்கு கவலை இல்லை. புதிய தலைமுறை மட்டுமே அந்த காட்சிகளை மறைத்து விட்டது.
வெட்டி அரட்டை இப்போதைக்கு அவ்வளவுதான், உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....
முழுவதும் படிக்க >>