இது உண்மையா பொய்யா?
சிறு வயதில் இருந்தே எனக்கு கிரிக்கெட்டும், மல்யுத்தமும் மிகவும் பிடித்தவை. இங்கே மல்யுத்தம் என்று நான் குறிப்பிடுவது WWF என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்களே அதைத்தான். கிரிக்கெட் புரிய ஆரம்பித்த வயதில் இருந்தே மல்யுத்ததையும் விரும்பி பார்க்கத் தொடங்கி விட்டேன். அதில் வரும் வீரர்கள், அவர்கள் களத்தில் நுழையும்போது ஒலிக்கப்படும் இசை என்று ஒவ்வொன்றையும் ரசித்தேன். பதின்ம வயது வரை கூட அதில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்றே நம்பி வந்தேன். வீரர்கள் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் காரசாரமாக திட்டிக்கொள்வது, அவர்கள் அணிக்குள்ளாகவே துரோகம் செய்து கொள்வது, உணர்ச்சி மிக்க தருணங்களுள் கண்ணீர் ததும்ப அழுவது, என்று அனைத்து இளம் ரசிகர்களையும் கட்டிப்போடும் ஒரு விளையாட்டு அது.
இன்றும் ஒவ்வொரு வருடமும் பார்வையாளர்கள் அதிகரித்துக்கொண்டே போகும் ஒரு விளையாட்டு இந்த மல்யுத்தம்தான். இந்த விளையாட்டின் சிறப்பம்சமே, முதலில் மந்தகதியில் தொடங்கி, முடிவு நெருங்க, நெருங்க, இருக்கை நுனிக்கே நம்மை வரவைத்து விடுவார்கள். எந்த நேரத்தில் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்லவே முடியாத அளவுக்கு த்ரில்லிங்காக இருக்கும். வாரா வாரம் நடக்கும் இந்த விளையாட்டின் முக்கிய நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமோ, அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ நடக்கும். அதிலும் உச்ச கட்டமாக, ரஸ்ல்மேனியா(Wrestle Mania) என்று ஒரு போட்டி வருடத்துக்கு ஒருமுறை நடக்கும். இது கிட்டத்தட்ட உலகக்கோப்பை போல மொத்த சுவாரசியங்களின் அம்சமாக இருக்கும்.
இதற்கு விற்கப்படும் டிக்கெட்டுகள் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ரெக்கார்டுகளை தானே முறியடித்து வருகிறது. இந்த போட்டியில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று சில வீரர்களை பாத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். வரலாற்றை போலவே இதிலும் கெட்டவர்கள் கையே ஓங்கி இருக்கும். நல்லவர்கள் பெரும்பாலும் தோற்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் கெட்டவர்களின் ஒட்டுமொத்த வெற்றிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நல்லவர்களின் ஒரே ஒரு வெற்றி அமைத்து விடும். அந்த நேரத்தில் ஏற்படும் உணர்ச்சி பெருக்குக்கு அளவே கிடையாது. கவர்ச்சிக்கும் கிளுகிளுப்புக்கும் கூட இதில் பஞ்சமில்லை. சில நேரங்களில் ஹாலிவுட் நடிகர்கள் கூட இந்த அரங்குகளில் தோன்றியிருக்கிறார்கள்.
பதின்ம வயதை கடக்கும்போதுதான், இவை அனைத்தும் உட்டாலக்கடி என்பதை புரிந்து கொண்டேன். வீரர்கள் வாங்கும் அடி அனைத்தும் உண்மை. ஆனால் அதில் நடக்கும் துரோகம், பழிவாங்கல், ஆக்ரோஷம், ஆனந்தம் அனைத்தும் பொய் என்பதை உணர்ந்து கொண்டேன். இவை அனைத்தையும் புரிந்து கொண்டாலும், ஒரு போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்று மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியாது. என்னால் மட்டுமல்ல, பெரும்பாலானோர்களால் அது முடியாது. ஏனென்றால் நல்லவர்கள் அரிதாகத்தான் இதில் ஜெயிப்பார்கள்.
ஒரு வீரர் இன்னொரு வீரரை தாக்கும்போது, அவருக்கு குறைந்த பட்ச வலி ஏற்படுவது போலவே தாக்குகிறார், அடி வாங்கியவர் அதிக பட்ச வலி ஏற்பட்டதைப்போல நடிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். அதே போல எல்லா போட்டிகளின் முடிவையும் முதலிலேயே நிர்ணயித்து விடுவார்கள், பிறகு அதன் சுவாரசியத்தை கூட்ட நிறைய அம்சங்களை சேர்ப்பார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். என்னதான் இவர்களைப்பற்றி புரிந்து கொண்டாலும், இதை இன்றும் நான் ரசிப்பதை என்னால் மறுக்க முடியாது. ஒரு அதிரடி சினிமா போல, சுவாரசியமாக இருப்பதால் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஒரே வித்தியாசம், முன்பெல்லாம் உணர்ச்சி பொங்க பார்த்தேன். இப்போதெல்லாம் சும்மா ஜாலிக்காக பார்க்கிறேன். யார் ஜெயித்தாலும், தோற்றாலும் வருத்தம் ஏற்படுவதில்லை.
உலகளவில், ஒலிம்பிக் போட்டிகளில் நடக்கும் மல்யுத்தத்துக்கும், இதற்கு துளியளவும் சம்பந்தமே இல்லை என்றாலும், “இது அந்த மல்யுத்தம் அல்ல, ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் வேறொரு விளையாட்டு.” என்று மனதுக்கு பழகி விட்டது.
“சரி, இப்போ எதுக்கு இத்தனை விஷயங்களை பேசுகிறாய்?” என்று கேட்கிறீர்களா? மேலே உள்ள கட்டுரையை எழுதி முடித்தபின் மல்யுத்தம் என்ற வார்த்தைக்கு பதில் கிரிக்கெட் என்றும், WWF என்ற வார்த்தைக்கு பதில் ஐபிஎல் என்றும் மாற்றி எழுதினாலும் என் எண்ணத்தின் வெளிப்பாடு அப்படியே பொருந்துகிறது. ஆமாம் ஐபிஎல் உண்மையான கிரிக்கெட் அல்ல. ஆனாலும் ஐபிஎல் எனக்கு சுவாரசியமாகவே இருக்கிறது. ஆனால் முன்பெல்லாம் சென்னை மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்ற ரீதியில் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பேன். இப்போது, யார் ஜெயித்தாலும் பரவாயில்லை, அந்த மூன்று மணிநேர சுவாரசியத்துக்காக மட்டுமே பார்க்கிறேன்.
சும்மா சொல்லக்கூடாது இந்த வருடம், முன்னெப்போதும் பொலில்லாமல், சர்ச்சைகளுக்கும், சுவாரசியங்களுக்கும் பஞ்சமே இல்லை. லீக் ஆட்டத்தின் கடைசி தினம் வரை, அடுத்த சுற்றுக்கு முன்னேறப்போகும் அணிகள் எவை என்பதை மர்மமாகவே மெயிண்டேயின் செய்தது மிக அருமை. என்னை பொறுத்தவரை இது கிரிக்கெட் அல்ல. கிரிக்கெட் போலவே நடத்திக்காட்டப்படும் ஒரு சுவாரசிய தனியார் ரியாலிட்டி ஷோ.
'ஆ'.... தீனமும் சில அல்பைகளும்
இப்போது ஊடகங்களின் ஹாட் டாபிக், மதுரை ஆதீனம் குறித்த சர்ச்சைதான். என்னை பொறுத்தவரை ஒரு சமய சங்கம் என்பது அந்த குறிப்பிட்ட சமயத்தின் சேவைமையமாக செயல் பட வேண்டும். அந்த சமயத்தின் அடிப்படை விஷயங்களை எல்லோருக்கும் எடுத்து கூறவேண்டும். இந்து மாதத்தின் அடிப்படையே, ‘தான்’ என்ற அகங்காரத்தை விட்டோழிப்பதுதான். அதை நோக்கியே அனைவரும் பயணம் செய்ய வேண்டும். ஆனால் முன்னாள் ஆதீனமும், இந்நாள் ஆதீனமும் பேசும் பேச்சுக்களை பார்த்தால், “நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். வாயை மூடிட்டு போங்கடா வெண்ணைகளா…”, என்பது போல இருக்கிறது. இது அகங்காரத்தின் உச்சம்.
இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்னும் இவர்களின் பின்னால் செல்பவர்களை கண்டு பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை. நித்தி அந்த தப்பு செய்தார் இந்த தப்பு செய்தார் என்பதை குறித்து சர்ச்சை எழுப்ப தேவை இல்லை. எப்போது ‘தான்’ என்று நினைக்க தொடங்கி விட்டாரோ அப்போதே அவரும் ஒரு சாதாரண மனிதரே. அவர்கள் சாமியார்கள் அல்ல. சமய சங்கத்தலைவர்கள். அவ்வளவே....
இது இப்படி இருக்க, இதை வைத்து சில நண்பர்கள் இந்து மதத்தையே இழிவு படுத்தும் நோக்கில் எழுதி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முன்பே சொன்னது போல ஒரே ஒருவரை வைத்து ஒரு ஒட்டுமொத்த சமுதாயமும் மதிப்பிடப்படுமானால் அதற்கு இரண்டே காரணங்களாகத்தான் இருக்க முடியும். ஒன்று அவரது அறியாமை காரணமாக இருக்கலாம். குறிப்பிட்ட இந்த விஷயத்தில் போதிய அறிவு இல்லாமையே இப்படி நினைக்க, பேச, எழுத, காரணமாக இருக்கும். மற்றொன்று விஷமத்தனம். அதாவது வேண்டுமென்றே ஒன்றை பழிப்பதற்கு காரணம் தேடிக்கொண்டிருக்கும்போது, இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு பழிப்பது. இது இந்து மதத்துக்கு மட்டும் நடக்கும் விஷயமல்ல. அந்தந்த கால கட்டத்தில் எல்லா பிரிவினருக்கும் நடப்பதுதான். இப்போது இங்கே நடக்கிறது.
நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?
மாவோயிஸ்டுகள். இந்த பெயரைக் கேட்டவுடன் மக்கள் மனதில் ஒரு உத்வேகம் பிறப்பதை விட சமீபகாலமாக வெறுப்பே ஏற்படுகிறது. மக்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களது அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து, அரசாங்கத்தின் அடக்கு முறையை எதிர்த்து அவர்களைக் காப்பதற்காக உருவான ஒரு அமைப்பு என்பது மாறி, “எங்கே மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய் விடுவார்களோ?” என்கிற எண்ணம் இந்த மாவோயிஸ்டுகளுக்கு ஏற்பட்டு விட்டோதோ என்று எண்ணத்தோன்றுகிறது. அரசாங்கம் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மீது காட்டும் வெறுப்பையே இவர்கள் ஏனைய மக்களிடம் காட்டுவது போல தெரிகிறது.
கலெக்டர் கடத்தல், ரயிலுக்கு குண்டு வைத்தது என்று தங்களை இப்போது மக்கள் விரோத சக்திகளாக காட்டத்தொடங்கி இருக்கிறார்கள் இந்த மாவோயிஸ்டுகள். இவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் கஞ்சா, ஒபியம் முதலியவற்றையும் பயிரிடுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இது இப்படி இருக்க, இவர்களைப்பற்றி இன்னுமும் சிலர் வெக்கமில்லாமல், கலெக்டர் கடத்தல் முதற்கொண்டு இவர்கள் செய்வது சரி என்பது போல எழுதி வருவது கடுப்பை கிளப்புகிறது.
மேலே நான் கூறி உள்ள எல்லா செய்திகளுக்குள்ளும் ஒழிந்திருப்பது ஒரே கருத்துதான். எந்த ஒரு விஷயமும் அது எந்த காரணத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதை விட்டு தடம் மாறி போக தொடங்கும்போது, நிச்சயமாக மக்கள் மத்தியில் மதிப்பை இழக்க தொடங்குகின்றன. அது விளையாட்டாக இருந்தாலும் சரி, சமய அமைப்பாக இருந்தாலும் சரி, வலைத்தளமாக இருந்தாலும் சரி, தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் சரி.
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>