மன்னிக்கவும். கொஞ்சம் வேலை அதிகம் இருந்ததால் பதிவு எழுதமுடியவில்லை என்று சொன்னால் அது சுத்த பொய். நமக்கு எல்லாம் கற்பனையும் கிடையாது, குதிரையும் கிடையாது தட்டி விடுவதற்கு. என்ன எழுதுவது என்று யோசிப்பதற்குள் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. இடையில் என் வீட்டில் இணைய இணைப்பு வேறு மக்கர் பண்ணிவிட்டது. சரி மேட்டருக்கு வருவோம். இது காமெடி பதிவு என்றோ, நக்கல் பதிவு என்றோ, சமுதாய நோக்கமுள்ள பதிவு என்றோ, அதிமேதாவித்தனமான பதிவு என்றோ யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. என் மனதில் தோன்றியவற்றை எழுதுகிறேன்.
நம்ம பதிவுலகத்தில் என்னைப்போன்ற பல நண்பர்கள் எழுதி வருகிறார்கள். பொதுவாக படைப்பு திறன் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனாலும் எழுதவேண்டும் என்ற வேகத்தில் தனக்கு தெரிந்ததை எழுத தொடங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து என்ன எழுவது என்று தெரியாமல் யோசிக்க தொடங்குகிறார்கள். கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டாலும் தொடர்ந்து எழுதவேண்டுமே என்ற கட்டாயம் வேறு. அப்போது அவர்களுக்கு துணை இருப்பது அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகள். உதாரணமாக ஐபிஎல், காம்ன்வெல்த், சுறா, எந்திரன் என்று கொஞ்ச நாள் பொழப்பு ஓடும். இப்போது காமன்வெல்த் முடிந்து விட்டது, எந்திரன் என்ற பெயரை பார்த்தவுடன் வேறு பக்கத்துக்கு தாவி விடுகிறார்கள். கிரிக்கெட் போட்டியும் கிடையாது. என்ன செய்வது? ஆகவே பதிவுலகமே கொஞ்சநாளைக்கு வறண்டு போய் இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. "சரி அப்ப எப்பத்தான் மறுபடியும் களை கட்டும்?" என்கிறீர்களா, கவலைப்படாதீர்கள் தீபாவளி வருகிறது. அந்த சமயத்தில் எந்த மாதிரி பதிவுகள் வரும் என்று நான் கணித்திருக்கிறேன்.
பெண் பதிவர்கள்:
தீபாவளிக்கு வந்திருக்கும் புதுமையான ஆடைகள், நகைகள், சமையல் ரெஸிப்பிகள் ஆகியவற்றைப்பற்றி பதிவு எழுதுவார்கள். அதே போல தான் கணவருடன் ஷாப்பிங் சென்ற அனுபவங்கள். வெளிநாட்டில் இருப்பவராக இருந்தால் அங்கே தீபாவளி கொண்டாட்டங்கள், தங்கள் செல்ல குட்டிகளின் தீபாவளி குறும்புகள் ஆகியவற்றை பற்றி எழுதுவார்கள். தீபாவளி கொண்டாட்டங்களின் போது தீவிபத்து ஆகியவற்றை எப்படி தவிர்ப்பது என்றும் எழுதுவார்கள். கவனியுங்கள் எல்லா பெண் பதிவர்களும் இப்படி எழுதுவார்கள் என்று நான் சொல்லவில்லை (எதுக்கு வம்பு...ஹி ஹி).
தோழர்கள்:
பட்டாசு கம்பெனிகளின் தொழிலாளர் விரோத போக்கு, போனஸ் வழங்குவதில் அரசு காட்டும் பாரபட்சம், தனியார் கம்பெனிகள் போனஸ் வழங்காமல் இருப்பது ஆகியவற்றை பற்றி எழுதுவார்கள். மேலும் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றும் குழந்தைகள் மற்றும் அந்த பட்டாசுகளை வாங்கி வெடிக்கும் பணக்கார குழந்தைகள் இருவரையும் ஒப்பிட்டு உருக்கமான கவிதைகள், கதைகள் ஆகியவை எழுதுவார்கள்.
பகுத்தறிவாளர்கள்:
தீபாவளி பண்டிகை என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி, நாம் திராவிட இனத்தை அடிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆரியர்கள் உருவாக்கிய போலியான ஒரு கொண்டாட்டமே தீபாவளி. அது ஆபாசமான கடவுளான கிருஷ்ணன், தன் பல மனைவிகளில் ஒருவரான பூமாதேவியின் கையாலேயே தன் மகனை கொன்ற கேவலமான ஒரு கட்டுக்கதையை மையமாக வைத்து கொண்டாடப்படுவது. ஆகவே தீபாவளியை கொண்டாடுவது நாம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதாகும். எனவே தீபாவளியை புறக்கணியுங்கள் என்ற ரீதியிலான பதிவுகள் வரலாம்.
சமூக ஆர்வலர்கள்:
பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் நச்சுக்கள், அதனால் உண்டாகும் நோய்கள் ஆகியவற்றை பற்றி எழுதலாம். தீபாவளி சமயத்தில் சமைக்கும் உணவில் இருக்கும் கலப்படம், அதனால் உண்டாகும் ஆபத்துக்கள் என்று எழுதி வயிற்றில் புளியை கரைப்பார்கள். பட்டாசுகளின் அதிரடி விலையேற்றம், பொதுமக்கள்படும் அவதி, ஊடகங்களில் வரும் ஆபாச நிகழ்ச்சிகள், செல்போன் கம்பெனிகளின் அராஜகங்கள், தள்ளுபடி விற்பனையில் உள்ள சூழ்ச்சி என்று பட்டியலிடுவார்கள்.
மொக்கராசுக்கள்:
தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு சொம்படித்து அல்லது மனசாட்சியே இல்லாமல் கலாய்த்து பதிவு எழுதுவார்கள். தீபாவளி சிறப்பு நகைச்சுவைகள், நடிகர்களை வைத்து கற்பனை நகைச்சுவை தீபாவளி கொண்டாட்டங்கள் உதாரணமாக "கவுண்டமணி, பிற நடிகர்கள் வீட்டுக்கு தீபாவளி அன்று செல்கிறார்" என்பது மாதிரியான பதிவுகள் எழுதுவார்கள். மேலும் தான் சின்ன வயதில் எப்படி தீபாவளி கொண்டாடினேன் என்று ஆட்டோகிராஃப் பதிவுகளும் வெளியிடுவார்கள்.
ஒட்டு மொத்த பதிவர்கள்:
ஆளாளுக்கு தங்கள் பாணியில் தீபாவளி வாழ்த்து பதிவு எழுதுவார்கள்.
பி.கு: இவ்வளவு எழுதுறியே, நீ என்ன பதிவு எழுதுறன்னு பாக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு, இப்பவே சொல்றேன் மேல சொன்ன ஏதாவது ஒன்றைத்தான் நானும் எழுதுவேன்.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>












