விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 28, 2010

அஜித்குமார் ஆடும் மங்காத்தா




தலயின் ஐம்பதாவது படம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ரேசில் முழு கவனம் செலுத்தி வரும் தல வரும் அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அஜித் தன்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று கவுதமும் சொல்லியதாக செய்திகள் வந்தன. இதில் திடீர் திருப்பமாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்கப்போவது கவுதம்மேனன் அல்ல. சென்னை 600028, சரோஜா, கோவா ஆகிய படங்களை இயக்கிய வெங்கட்பிரபு என்று. படத்தை தயாரிப்பது க்ளவுட் நைன் தயாநிதி அழகிரியேதான். முன்பே கூறியது போல அஜித் ரேசில் இருந்து ஜூலையில் (ரேஸை விட்டு விட்டு) திரும்புகிறார், படப்பிடிப்பு ஆகஸ்டு முதல் தொடங்கும் என்றும், இதற்கான அறிவிப்பு ஜூலை கடைசியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா "மங்காத்தா". படம் ஆக்சன் கலந்த காமெடி படமாக இருக்குமாம். தலைப்பை பார்த்தால் Cat and Mouse கதை மாதிரி தோன்றுகிறது. அதாவது Catch me if You can மாதிரி. படத்திற்கு வேறு சில தலைப்புகளும் பரிசீலனையில் இருக்கிறதாம். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்துக்கு இணையாக நாகார்ஜுனாவும் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் எதையும் உறுதியாக கூற முடியாது. பொறுத்திருந்து பார்க்கலாம். எது எப்படியோ தல ரசிகர்களை பொறுத்தவரை இது ஒரு இனிப்பான செய்திதான்.



உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக முடிவுகள் வருகின்றன. சென்ற முறை இறுதி போட்டியில் பங்கேற்ற இத்தாலி மற்றும் பிரான்சு அணிகள் இரண்டுமே முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களை ஏமாற்றி உள்ளன. இரண்டு அணிகளின் ஆட்டத்தை பார்க்கும்போது ஒரு சுரத்தே இல்லாமல் விளையாடுவது போல இருந்தது. என்ன பிரச்சனையோ? 16 அணிகளின் நாக் அவுட் முறை சுற்று தொடங்கி உள்ளது. இந்த முறை ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் இந்த சுற்றிலேயே பெரிய அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி, போர்சுகல் மற்றும் ஸ்பெயின். ஏற்கனவே ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், போர்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணியில் ஏதாவது ஒன்றுதான் காலிறுதிக்கு முன்னேற முடியும். எனவே இந்த சுற்றில் மேலும் இரு பெரிய அணிகள் வெளியேறிவிடும். இது அடுத்த சுற்றுகளின் சுவாரசியத்தை குறைத்து விடும். மேலும் காலிறுதியில் அர்ஜென்டினாவும் ஜெர்மனியும் மோதுகின்றன. 


இந்த உலககோப்பையில் ரேப்ரீகளும் தன் பங்குக்கு ஆடி இருக்கிறார்கள். முக்கிய ஆட்டங்களில் ஆப்சைடு கோல்களை கவனிக்காமல் விட்டது, கோல்களை அளிக்காமல் விட்டது, பெனால்டி தராமல் விட்டது என்று நிறைய தவறுகள் நடந்தன. நேற்றைய ஆட்டத்தில் கூட இங்கிலாந்து வீரர் அடித்த பந்து கோல் போஸ்டுக்குள் சென்ற பிறகே ஜெர்மனி கீப்பர் அதை பிடித்தார். நியாயமாக அது கோல்தான். இப்போட்டியில் மூன்று கோல் வித்தியாசத்தில் ஜெர்மனி வென்று விட்டாலும் முக்கிய ஆட்டத்தில் இது போன்ற தவறான முடிவுகள் வீரர்களின் நம்பிக்கையை குலைக்கும் என்பது உறுதி. சுவிட்சர்லாந்து, ஹோண்டுராஸ் அணிகள் ஆடிய ஆட்டம் என்று நினைக்கிறேன். இந்த ஆட்டத்தில் ஹோண்டுராஸ் வீரர் ஒருவர் பந்தை கையால் தொட அதை ரெப்ரீ கவனிக்க வில்லை. இல்லையேல் சுவிட்சர்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்து அவர்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்க முடியும். இதே மாதிரி சில தவறுகள் இத்தாலி ஆடிய ஆட்டத்திலும் நடந்தது. எவ்வளவுதான் சொன்னாலும் விளையாட்டு என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம். ஏற்று கொள்ளத்தான் வேண்டும். இனி வரும் போட்டிகளிலாவது ரேப்ரிக்கள் கவனமாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சானிய மிர்சா என்ற பெண் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியாவின் பெயரை உலகளவில் எடுத்துச்சென்றதில் பெரும் பங்கு ஆற்றியவர். ஆனால் அதன்பின் சர்ச்சைகள், திருமணம் என்று தடம் மாறி விட்டார். தற்போது அந்த இடத்தை பிடித்திருப்பவர் சாய்னா நெக்வால். இவர் ஆடுவது டென்னிஸ் அல்ல. பாட்மிண்டன். சீன வீரர், வீராங்கனைகளே ஆட்சி செய்து வந்த பாட்மிண்டன் ஆட்டத்தில் (முதல் ஏழில் ஆறு சீனர்கள்) கால்பதித்து, இந்தியாவின் பெயரை பதித்து வருகிறார் இந்த இருபது வயது புயல். தன் சாதனைகளின் மைல் கல்லாக இந்த ஆண்டு விளையாட்டு தர வரிசையில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தி இருக்கிறார். இன்னும் இவர் படைக்க வேண்டிய சாதனைகள் அதிகம் இருக்கின்றன. அதற்குள் இவரை விளம்பர கம்பெனிகள் புக் செய்து, பணத்தாசை காட்டி, ஆட்டத்தை கோட்டை விட செய்யாமல் இருந்தால் நல்லது. 


ஒருவழியாக எல்லாரும் விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு கடுப்புடன் கிளம்பி சென்றுவிட்டார்கள். எனக்கும் விடுமுறைதான். சன் குழுமம் மற்றும் கலைஞர் டிவிகளில் மாற்றி மாற்றி செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தங்கள் கடமையை செவ்வனே செய்து விட்டார்கள். மாறாக ஜெயாடிவியில் செம்மொழி மாநாட்டை பற்றி எப்படியாவது மக்களிடம் கெட்ட எண்ணத்தை உருவாக்கி விடவேண்டும் என்று மாறி மாறி செய்திகளிலும், இன்ன பிற நிகழ்ச்சிகளிலும் புலம்பி தள்ளி விட்டார்கள். அவர்கள் சொன்ன காரணம் ஈழத்தில் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது மாநாடு தேவையா?, தமிழக மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது மாநாடு தேவையா? என்று மேம்போக்காக இருந்ததே ஒழிய ஒரு முனைப்புடன் கூறியதாக தெரியவில்லை. செம்மொழி மாநாட்டையும் சும்மா சொல்லக்கூடாது. வழக்கமாக கட்சிகள் மூன்றாண்டு அல்லது நான்காண்டுகளுக்கு ஒருமுறை மாபெரும் மாநாடு ஒன்று நடத்தும். இந்த முறை திமுக தன் கட்சி மாநாட்டை செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடத்தி உள்ளது. கலந்து கொண்டவர்கள் எல்லோரும் திமுக அபிமானிகள் அல்லது அபிமானிகளாக நடிப்பவர்கள். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் எப்படியாவது திமுகவின் சாதனைகளை, கலைஞரின் புகழை பற்றி ஜால்ரா அடித்து விடவேண்டும் என்று எல்லா தமிழறிஞர்களும் முனைப்புடன் இருந்தனர். பட்டி மன்றம் ஒன்று நடந்தது. அதில் பேசியவர்கள் எல்லோரும் தலைப்பை பற்றி ஐந்து நிமிடம் பேசினார்கள். தலைவரை பற்றி இருபது நிமிடம் பேசினார்கள். உச்சகட்ட கூத்து கவி அரங்கத்தில்தான். தமிழின் புகழ் பாட வந்த புலவர்கள் (என்று சொல்லி கொள்பவர்கள்) அரசனை புகழ்ந்து பிச்சை எடுக்கும் அன்னக்காவடி போல கலைஞரை புகழ்ந்து தள்ளி விட்டார்கள். 


நான் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒரு கால் மணி நேரம் கூட பார்க்கவில்லை. ஜால்ரா சத்தம் தாளாமல் என் காதில் இருந்து ரத்தம் வந்து விட்டது. கலைஞர் எப்படி ஐந்துநாள் பொறுமையாக இருந்தார் என்று தெரியவில்லை. என்னதான் தன்னை புகழ்ந்து பேசினாலும் அதுவும் சலித்து விடாதா? எனக்கு ஒரு சந்தேகம். இப்படி மாறி மாறி புகழ்ந்து தள்ளுகிறார்களே இவர்கள் கடைசிவரை இப்படியே இருப்பார்களா? ஒருவேளை ஆட்சி மாறி வேறு ஒரு முதல்வர் வந்துவிட்டார் என்று வைத்துகொள்வோம். என்ன செய்வார்கள்? கலைஞர் என்பவர் உயிருடன் இருக்கும் வரைதான் இந்த மாதிரி ஜால்ரா எல்லாம். கலைஞர் மறைந்து விட்டால் இந்த ஜால்ராக்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடுவார்கள் என்பது மட்டும் உறுதி. இது கலைஞருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். தான் இறந்து விட்டால் ஒரு பயலும் நம்மை பற்றி ஒரு வார்த்தை கூட புகழ மாட்டான். குறைந்த பட்சம் தான் இருக்கும் வரையாவது காது குளிர கேட்டுவிட்டு கண் மூடலாம் என்று நினைக்கிறார் போலும். 

சமீபத்தில் வந்த ஒரு குறுந்தகவல் "கலைஞர் ரஜினியை விட பல மடங்கு அறிவாளி. ஏனென்றால் அருணாசலத்தில் ரஜினி முப்பது நாளில் முப்பது கோடி செலவழிக்க கஷ்டப்பட்டார். கலைஞர் ஒரே வாரத்தில் 380 கோடி செலவு செய்து அசத்தி விட்டார்." 



பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...

6 comments:

Anonymous said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பரே...

Unknown said...

குறுந்தகவல் சிந்திக்க வைக்கிறது ..

"ராஜா" said...

அம்பது வெங்கட் அம்பத்தி ஒன்னு கௌதமா .. கலக்கல் தல

அகல்விளக்கு said...

///தமிழின் புகழ் பாட வந்த புலவர்கள் (என்று சொல்லி கொள்பவர்கள்) அரசனை புகழ்ந்து பிச்சை எடுக்கும் அன்னக்காவடி போல கலைஞரை புகழ்ந்து தள்ளி விட்டார்கள். //

புலவர் பாணபத்திர ஓணான்டி-யும் 23ஆம் புலிக்கேசியும், நினைவுக்கு வருகிறார்கள்..

santhanakrishnan said...

ஆடட்டும்..ஆடட்டும்..

இது எப்போதும் நடப்பதுதான்
அவ்வப்போது ரெஃப்ரியும்
சேர்ந்து விளையாடுவார்கள்
ஒரு டீமுக்கு.

சாய்னா விளம்பர இடைவேளைக்கு
வரும் வரை தான் எல்லாம்.

செம்மொழி மாநாட்டால்
என் பசங்க ரொம்ப
என்ஜாய் பண்ணினாங்க. அஞ்சு நாள் லீவாச்சே..

Bala said...

@thiru
நன்றி திரு

@ கே.ஆர்.பி.செந்தில்
வருகைக்கு நன்றி நண்பரே...

@ "ராஜா"
இறுதி அறிவிப்பு வரும்வரை காத்திருப்போம்

@ அகல்விளக்கு
ஓணான்டியாவது புலிகேசியை திட்டுவான். இங்கு அதுவும் கிடையாது

@ santhanakrishnan
கருத்துக்கு நன்றி நண்பரே...

Related Posts Plugin for WordPress, Blogger...