விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 28, 2011

என் கிரிக்கெட் வரலாறு... - 3

முந்தைய பகுதிகள் 

பகுதி 3 - இந்தியாவின் ரன் மெஷின்


1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடந்தது. ஆகவே இந்திய மீடியாக்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிரிக்கெட் பற்றி எழுதின. கிரிக்கெட் பற்றி எழுதுவதில் தமிழில் தினமலர் நாளிதழ் எப்போதுமே முன்னணியில் இருக்கும். தினமும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி விலாவாரியாக எழுதுவார்கள். அப்போது ஒரு வீரருக்கு அவர்கள் கொடுத்த தலைப்புதான் இந்தியாவின் ரன் மெஷின். அவர் யார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. அப்போது அவர் இந்தியாவின் ரன் மெஷினாக இருந்தார். இப்போது கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்றுதான் சொல்ல வேண்டும்.




1989ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இருந்தாலும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு யார் கண்ணிலும் படாமல்தான் இருந்தார் சச்சின். ஆனால் அவரிடம் இருந்த துறுதுறுப்பு, அசாத்திய தைரியம் ஆகியவை தொடர்ந்து அவரை அணியில் இடம்பெற செய்தது. கபில் ஒவ்வொரு முறை சச்சின் பற்றி சொல்லும்போதும், "ஒரு முறை பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, எல்லா மாணவரும் என் பந்தை எதிர்கொள்ள பயந்தனர். ஒரே ஒரு மாணவன் மட்டும் தைரியமாக விளையாடினான். நான் முழு வேகத்தில் வீசினாலும் அவன் பயப்படவில்லை. அந்த மாணவன் பெயர் சச்சின்." என்று சொல்வார். 

1992 உலகக்கோப்பையில் ஓரளவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. பின்னர் இந்தியாவில் நடந்த ஹீரோ கோப்பையில் பவுலிங்கிலும் அசத்தினார். ஆனால் அப்போது சச்சினை யாரும் கவனிக்கவில்லை. இந்தியாவின் அப்போதைய நட்சத்திரவீரர் அசார்தான். மேலும் காம்ப்ளி உள்ளிட்ட இளம்வீரர்கள் நன்றாக ஆடினார்கள். ஆனால் 1994ஆம் வருடம் இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்ல, உலக கிரிக்கெட் வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் ஒரு வீரன் விஸ்வரூபம் எடுத்தான். தான் எந்த நிலையில் ஆடினால் சரியாக வரும் என்று புரியாத நிலையில் திடீரென ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் வாய்ப்பு வந்தது.


அது 1994இல் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு தொடர். அன்று ஹோலி பண்டிகை. சொந்த நாட்டில் விளையாடினாலும், முதலில் ஆடிய நியூசியால் 149 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் ஓப்பனிங் இறங்க வேண்டிய சித்து காயத்தால் விளையாடாததால் வேறு ஒரு வீரரை தேடவேண்டிய சூழ்நிலை. யாருமே விளையாட முன்வராததால், வேறு வழியில்லாமல், சச்சினை களமிறக்கினார்கள். காரணம் எளிய இலக்கு. கொஞ்சம் சமாளித்து விளையாடுவான் என்று நம்பினார்கள். ஆனால் நடந்ததே வேறு. அத்தனை காலம், ஒருநாள் போட்டி என்றால் கடைசி பத்து ஓவர்கள் மட்டுமே சுவாரசியமாக இருக்கும். ஆனால் முதல் பத்து ஓவரில் அதை நிகழ்த்தி காட்டினார் சச்சின். இந்தியா விரைவிலேயே வெற்றி பெற்று விட்டது. சச்சின் களத்தில் இறங்கியதில் இருந்து ருத்ரதாண்டவம்தான். பெரிய பந்து வீச்சாளர்கள் கூட என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள். கடைசியில் சச்சின் அவுட் ஆகும்போது அவர் எடுத்தது 82 வெறும் 49 பந்துகளில். தாங்கள் படுதோல்வி அடைய போகிறோம் என்பதை கூட மறந்து ஒரு நல்ல ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சியில் அரங்கமே எழுந்து கைதட்டியது. ரன் கம்பேரிசன் வினோதமாக இருந்தது 11 ஓவர் முடிவில் நியூசி எடுதது 16/2 இந்தியா எடுத்தது 92/1. இவ்வளவு வேகமான ஸ்கோரிங் ரேட்டை அதுவரை இந்தியா நிகழ்த்தியதில்லை. இந்தியா 22ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.

அந்த ஆட்டத்தின் முடிவில் 

"ஏதோ ஒரு போட்டியில் இப்படி நடக்கலாம். அதற்காக எல்லாம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை." என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அதற்கடுத்து அவர் களமிறங்கிய அனைத்து ஆட்டங்களிலும்  அதகளம்தான். இப்போது இருக்கும் முதுமையும், பொறுமையும் அவருக்கு அப்போது கிடையாது. இருந்ததெல்லாம் துணிச்சலும் வேகமும் மட்டும்தான். நாமெல்லாம் சேவாக், கில்க்றிஸ்ட் அடிப்பதை பார்த்து வாயை பிளக்கிறோம். ஆனால் 20 வயதில் சச்சின் அடித்ததை பார்த்தால்தான் தெரியும் இவர்கள் அடிப்பது சாதாரணம் என்று. மட்டையில் பட்ட அடுத்த நொடி எல்லைகோட்டை தொட்டுவிடும். அவ்வளவு பலமாக மட்டையை வீசுவார். பின்னர் தேவை இல்லாமல் சக்தியை வீணாக்க கூடாது என்று வேகத்தை குறைத்து விட்டார்.  வரிசையாக அரைசதமாக அடித்து வந்தவர், பத்தாவது ஆட்டத்தில் சதமடித்தார். 1994ஆம் ஆண்டை அவரால் மறக்கவே முடியாது. அதுவரை கட்டை வண்டியில் சென்றவர் திடீரென ராக்கெட்டில் ஏறியது போல இருந்தது. அதுவரை அவர் 70 போட்டிகளில் 1809 ரன்கள் எடுத்திருந்தார்.84 அதிகபட்சம்.
இப்போது 450 போட்டிகளில் 18000 ரன்கள், அதிகபட்சம் 200*.
இது ராக்கெட் வேகம்தானே?


 இந்தியாவுக்கு உலகில் மிகச்சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் கிடைத்து விட்டார். அதன்பின் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தொடர்ந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவே களமிறங்கினார்.  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓப்பனிங் ஆட்டக்காரர்கள் மாறுவார்கள், ஆனால் அவர்களுடன் இன்னொருபக்கம் சச்சின் களமிறங்குவார். மஞ்ச்ரேக்கர், மனோஜ்பிரபாகர், சித்து, கங்குலி, சடகோபன்ரமேஷ், தாஸ், சேவாக், கம்பீர் என்று எண்ணற்ற வீரர்களோடு சச்சின் களமிறங்கி இருக்கிறார். இதில் கங்குலியுடன் களமிறங்கியது, வெஸ்ட்இண்டீசின் கிரீனிட்ஜ, ஹெய்ன்ஸ் ஜோடிக்கு நிகராக உலகப்புகழ் பெற்றது. சச்சினின் ரெக்கார்டுகளைப்பற்றி சொல்லத்தேவை இல்லை. அதிக ரெக்கார்டுகள் வைத்திருக்கும் ரெக்கார்டையும் அவர்தான் வைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் எந்த ஒரு ரெக்கார்ட் பட்டியலை எடுத்துப்பார்த்தாலும் அதில் சச்சின் இருப்பார்.


1994இல் சச்சினின் ஆட்டத்தை பார்த்தபிறகு முடிவே செய்து விட்டேன். 1996 உலககோப்பை நமக்குத்தான். நான் மட்டுமல்ல மொத்த கிரிக்கெட் உலகமே அப்படித்தான் நினைத்தது. முதல் காரணம் போட்டிகள் நடப்பது இந்தியாவில். இன்னொரு காரணம் சச்சின். ஆனால் அதுவரை அமைதியாக இருந்துவந்த ஒரு அணி திடீரென நாலுக்கால் பாய்ச்சலில் முன்னால் வரும் என்று யாருமே நினைக்கவில்லை. 

இலங்கையின் எழுச்சியும், காம்ப்ளியின் கண்ணீரும் அடுத்த பதிவில்..... 



உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

April 20, 2011

என் கிரிக்கெட் வரலாறு... - 2


பகுதி 2 - ஹீரோ கோப்பையும், ஸ்ரீநாத்தும் கும்ளேவும்.  


இந்தியா 1992 உலகக்கோப்பையில் மரண அடி வாங்கிவிட்டு வீடு திரும்பியது.  தொடர்ந்து என் அண்ணன் 9ஆம் வகுப்பில் பெயில் ஆகியதால் எங்கள் வீட்டில் கிரிக்கெட் பார்க்கவே கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போதெல்லாம் இப்போது மாதிரி தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருக்காது. வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று தொடர்கள் மட்டுமே இருக்கும். ஆகவே அதில் பெற்ற வெற்றி பெரும் அளவில் பேசப்படும் வெற்றியாக இருக்கும். அப்படி வந்த ஒரு தொடர்தான் 1993இல் வந்த ஹீரோ கோப்பை. 

தென்னாப்பிரிக்காவுடன் அரையிறுதியில் 


கிட்டத்தட்ட ஒரு மினி உலககோப்பை போலவே நடந்தது. கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பின்வாங்கிவிட (எல்லாம் அதே காரணம்தான்) பங்கேற்றது என்னவோ ஐந்து நாடுகள்தான். இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, தென்ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள். ஆனால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் 1996 உலகக்கோப்பைக்கு ஒரு சிறு முன்னோட்டம்போல நடந்தது. முதன்முறையாக ஒரு நவீன தரத்துடன் இந்தியாவில் ஒரு தொடர். ஆனால் இந்தியா பல சங்கடங்களை சந்தித்தது. பல வீரர்கள் தாங்கள் சரியாக கவனிக்கப்படவில்லை என்று புகார் செய்தனர். சில பல வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. 


முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் எல்லோரும் மேற்கிந்திய தீவுகள்தான் வெல்லும் என்று முடிவு கட்டி இருந்தார்கள். அப்போது புதிதாக கேப்டன் ஆகி இருந்த ரிச்சர்ட்சன் தலைமையில் ஒரு மாதிரி பலமான அணியாக இருந்தது. லாரா உள்பட நிறைய புதுமுகங்கள், மிரட்டும் பவுலிங் என்று எல்லா வகையிலும் சிறப்பாக விளையாடினார்கள். இந்தியா தட்டு தடுமாறி அரையிறுதிக்கு வந்தது. அரையிறுதியில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதவேண்டும். விதி விளையாடியது. முதலில் ஆடிய இந்திய அணி 195க்குள் சுருண்டது. தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது. நாக் அவுட் என்றாலே தென்ஆப்பிரிக்க வீரர்கள் பீதி அடைகிறார்களே அது இப்போது மட்டுமல்ல, ஆதி காலத்தில் இருந்தே அப்படித்தான் போலிருக்கிறது. மிக எளிய இலக்கை நோக்கி சென்ற தென்ஆப்பிரிக்க வீரர்கள் மிகவும் பதற்றத்துடன் ஆடினார்கள். 

சச்சின் வீசிய கடைசி ஓவர் 

இரண்டு விக்கெட் மீதமிருக்க, ஜெயிப்பதற்கு இன்னும் ஆறு ரன்கள் மட்டுமே தேவை.  இருப்பது ஒரே ஒரு ஓவர். கபில், ஸ்ரீநாத், பிரபாகர் என்று ஆளுக்கு இரண்டு ஓவர் பாக்கி இருக்கிறது. யாருக்கு கடைசி ஓவர் என்று மண்டையை உடைத்து கொண்டிருக்க, யாருமே எதிர்பாராத வகையில் சச்சினுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. சச்சினுக்கு அதுதான் முதல் ஓவர். அவர் மீது எந்த நம்பிக்கையில் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. சீட் நுனியில் அமர்ந்திருக்க, தென்ஆப்பிரிக்காவால் அந்த ஓவரில் ஒரு விக்கெட் இழந்து மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதே மாதிரி ஒரு நிகழ்வு மறுபடியும் நடந்தது. நினைவிருக்கிறதா? 2002 மினி உலகக்கோப்பை அரையிறுதி. அபாயமான க்ளூஸ்னர் களத்தில் நிற்க, சேவாக்கை கடைசி ஓவரை வீச செய்து இந்தியா ஜெயித்தது.


இறுதி போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 225 எடுத்தது. அரையிறுதியில் ஜெயித்த நம்பிக்கையில் இந்திய அணி பந்துவீச்சை தொடங்கியது.  மைதானத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரசிகர்கள். அனைவரும் இந்தியா பக்கம். ஒரு கட்டத்தில் 57க்கு ஒரு விக்கெட் என்று இருந்த மேற்கிந்திய தீவுகள், அடுத்த 66 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அனில் கும்ப்ளே தான் வீசிய கடைசி நாலு ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஆறு விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த மேட்சில் அவர் 12 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார். அரங்கில் மக்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. தெருவில் நான் கத்திக்கொண்டே ஓடியது நன்றாக நினைவிருக்கிறது.


முதன் முறையாக எனக்கு இந்தியா 1996இல் உலகக்கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை வந்தது. ஸ்ரீநாத், கும்ப்ளே என்று இரண்டு புதிய வீரர்கள் அந்த நம்பிக்கையை எனக்கு ஊட்டினார்கள்.  இருவருமே இந்த தொடரில் சிறப்பாக ஆடினார்கள். மேலும், ஜடேஜா, மஞ்ச்ரேக்கர், வினோத் காம்ப்ளி, ராஜு என்று ஒரே இளைஞர் பட்டாளம்.  அசாருதீன் அசைக்க முடியாத பார்மில் இருந்தார்.  பிரபாகர், கபில் என்று மூத்த வீரர்களும் நம்பிக்கை அளித்தனர். இந்த தொடரில் சச்சின் அவ்வளவாக சோபிக்கவில்லை. சொல்லப்போனால் பேட்டிங்கை விட பவுலிங்கே சிறப்பாக இருந்தது. சச்சினை விட காம்ப்ளியே முன்னணியில் இருந்தார். அப்போது எனக்கு தெரியாது, 1996 உலககோப்பைக்கு மட்டுமல்லாமல், அடுத்த ஐந்து உலகக்கோப்பைகளுக்கும் சச்சின்தான் துருப்பு சீட்டாக இருக்கப்போகிறார் என்று...தொடர்ந்து பேசுவோம்...  



இந்தியாவின் ரன் மெஷின் அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்தை இங்கே பதிவு பண்ணுங்க..... 

முழுவதும் படிக்க >>

April 16, 2011

என் கிரிக்கெட் வரலாறு...


பகுதி 1- வெங்க்சார்கரும் இன்ன பிற வீரர்களும். 

முதன் முறையாக நீ...ண்ட பதிவு ஒன்றை எழுத போகிறேன். படிப்பவர்களின் வசதிக்காக மூன்று நான்காக உடைத்து வெளியிடுகிறேன். இது முழுவதும் சுய சரித்திரம் (எத்தனை நாளைக்குத்தான் புராணம்னு சொல்றது) மற்றும் என் பார்வையில் கிரிக்கெட். போராடித்தாலும் படித்து விடுங்கள். 



வருடம் 1989. தென் தமிழகத்தின் பல வீடுகளில் தொலைக்காட்சி ஒரு ஆடம்பரப்பொருளாக இருந்தது. எங்கள் வீட்டில் அப்போது ஷட்டர் வைத்த பழைய கருப்பு வெள்ளை சாலிடர் டிவி இருந்தது. கிரிக்கெட் மிக பிரபலமாவதற்கு முக்கிய கருவி டிவி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்போது சாட்டிலைட் டிவி எல்லாம் தமிழகத்தில் வந்திருக்கவில்லை. எப்போதாவது ஒரு தடவை தூர்தர்ஷனில் கிரிக்கெட் ஒளிபரப்புவார்கள். முதன்முதலாக இந்த விளையாட்டை பார்க்கிறேன். ஒரு வீரர் அரைசதமோ அல்லது சதமோ அடித்துவிட்டு மட்டையை உயர்த்துகிறார். என் அண்ணனிடம் "இவர் யார்?" என்று கேட்டேன். "இவர்தான் வெங்க்சார்கர்.  சூப்பரா அடிப்பாரு." என்று சொன்னார். ஆக நான் முதன்முதலாக பார்த்த கிரிக்கெட் வீரர் அவர்தான். தொடர்ச்சியாக அந்த ஆட்டத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. விதிமுறை எதுவும் அப்போது தெரியாது. என் தெருவில் ஒரே ஒரு வீட்டில் மட்டும் கலர் டிவி உண்டு. அப்போதெல்லாம் கலர் டிவி என்பது கார் வைத்திருப்பது மாதிரி. ரொம்ப பந்தா பண்ணுவார்கள். அவர்கள் வீட்டுக்குள் சென்று முதன் முறையாக கலர் டிவியில் கிரிக்கெட் பார்க்கிறேன். என்னுள் பரவசம் கலந்த அதிர்ச்சி. ஏன் என்றால் அதுவரை எனக்கு மைதானம் என்றால் செம்மண் அல்லது கரிசல் மண் பொட்டல் காடுதான் அறிமுகம். கருப்பு வெள்ளை டிவியில் பார்க்கும்போது கூட மைதானம் இந்த நிறத்தில்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பச்சை பசேல் என்ற கிரவுண்டை நான் எதிர்பார்க்கவே இல்லை.


பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சில பல வீரர்களின் பெயர்களை அறிந்துகொண்டேன். கபில்தேவ், மனோஜ் பிரபாகர், கிரண் மொரே , சிக்சர் சித்து (1987 உலகக்கோப்பையில் இவர் அடித்த சிக்ஸர்கள் 29 ) என்று அப்போதைய அணியில் சில அதி முக்கியமான வீரர்களையும் தெரிந்து கொண்டேன். மிக முக்கியமாக ஸ்ரீகாந்த் மற்றும் அசாருதீன். இருவரும் அதிரடி மன்னர்கள் என்று என் அண்ணன் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் இந்தியா அல்லாத அணிகளில், அம்ப்ரோஸ், டேவிட் பூன், டீன் ஜோன்ஸ், கிரஹாம் கூச், ஜாவிட் மியந்தத் ஆகியோர் மிகவும் ஆபத்தானவர்கள் என்று கூறினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக கிரிக்கெட் மேட்ச்கள் பார்த்து வந்தேன். இந்திய அணியில் சில பல புதுமுகங்கள் தெரிய ஆரம்பித்தன.


வந்தது 1992


இந்த உலகக்கோப்பையின்போது எனக்கு ஓரளவிற்கு கிரிக்கெட் விதிமுறைகள் புரிய ஆரம்பித்தது. இந்த உலகக்கோப்பையில் நிறைய தொழில்நுட்பங்களை புகுத்தி இருந்தார்கள். நிறைய இரவு ஆட்டங்கள், மூன்றாவது அம்பயர், ஸ்டம்ப் முதல் விளக்குகள் வரை நிறைய கேமராக்கள், அதி நவீன தொழில்நுட்பம் என்று பார்ப்பதற்கு குளுமையாக இருந்தது. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை ஆட்டங்கள் அதிகாலையிலேயே தொடங்கி விடும். இந்த தொடரில் பெரும்பாலான ஆட்டங்களை நான் பார்க்கவில்லை. சொல்லப்போனால் நான் பார்த்தது ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா ஆடிய ஆட்டங்கள், அரையிறுதிகள் மற்றும் இறுதி போட்டி அவ்வளவுதான். ஆனால் நான் பார்த்த அனைத்து போட்டிகளுமே மிக சுவாரசியமானவை. இந்திய-ஆஸ்திரேலிய ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒரு ரன் வித்தியாச தோல்வி என்னை மிகவும் பாதித்தது.

அதிரடி அறிமுகம்


சில ஆபத்தான வீரர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்று சொன்னேன் அல்லவா? ஆனால் அப்படி ஆபத்தான வீரர்கள் நிறைந்த ஒரு அணியே இந்த உலகக்கோப்பையில் களமிறங்கியது. அதுதான் தென் ஆப்பிரிக்கா. இருபது வருடங்களாக தடை செய்யப்பட்ட அணி முற்றிலும் மாறுபட்ட ஒரு அணுகுமுறை. அவர்களின் ஆட்டமுறை எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ரோட்ஸ் பறந்து சென்று இன்சமாம் உல் ஹக்கை ரன் அவுட் செய்தது அடுத்த நாள் பத்திரிக்கையில் இது பறவையா இல்லை விமானமா என்ற அடைமொழியொடு வந்தது. ஆனால் அவர்களுக்கு ஆப்பு டக்வோர்த் லூயிஸ் மூலமாக வந்தது. மூன்று ஓவரில் 22 ரன் அடிக்கவேண்டும் என்ற நிலை மாறி, 1 பந்தில் 22 ரன் அடிக்க வேண்டும் என்ற பரிதாப நிலைக்கு சென்று வெளியேறியது தென் ஆப்பிரிக்கா. ஆனால் இந்த தோல்வியை எந்த கிரிக்கெட் ரசிகரும் ஏற்கவில்லை. மாறாக அவர்களின் திறமைக்கு சல்யூட் அடித்தனர்.


ஒரு புறம் இப்படி வருண பகவான் தயவில் பைனலில் நுழைந்தது இங்கிலாந்து. மறுபுறம் நியூசிலாந்தை அடித்து துவைத்துவிட்டு வந்தது பாகிஸ்தான். அந்த பாகிஸ்தான் அணியில் இளைஞர்கள் அதிகமாக இருந்தார்கள். துடிப்போடு விளையாடினார்கள். அதிலும் இன்சமாம் பட்டையை கிளப்பிய உலகக்கோப்பை அது. மேலும் அக்ரம் என்றொரு அசுர பலமான பவுலிங் வேறு. பாகிஸ்தானுக்குத்தான் கோப்பை என்று எழுதி வைத்ததை போல நடந்து விட்டது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் என் மனதில் ஹீரோக்களாக இடம்பிடித்தார்கள் (பெரும்பாலான வீரர்கள் ஹிந்தி நடிகர்கள் போல அழகாகவே இருந்தார்கள்). அந்த கோப்பையின் அழகை பார்த்ததில் இருந்து என்னுள் ஒரு ஏக்கம் உருவானது. இந்தியா அணிக்கும் இந்த கோப்பை கிடைக்குமா என்று. இந்த தொடரில் யாரும் கவனிக்காத இந்திய அணியில் ஒரு சிறுவன் அதிரடியாக ஆடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தான். அவன் பெயர் சச்சின் டெண்டுல்கர்.


1992 உலகக்கோப்பை தொடரை விடாமல் முழுவதும் பார்த்ததன் விளைவாக என் அண்ணன் 9ஆம் வகுப்பில் கோட்டடித்தார். எங்கள் வீட்டில் கிரிக்கெட்டுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின் வெகு காலத்துக்கு கிரிக்கெட் ஆட்டங்களை பார்க்க முடியவில்லை. எப்போதாவது ஒருமுறைதான் திருட்டுத்தனமாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி பார்த்த முக்கியமான ஒரு தொடர். தொண்ணூறுகளில் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு தொடர் அது.

ஹீரோ கோப்பையும், 1996 உலகக்கோப்பையும் அடுத்த பதிவில்....


 உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

முழுவதும் படிக்க >>

April 11, 2011

மாப்பிள்ளை - ரஜினி ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை...


கிரிக்கெட் திருவிழா, ஊர் திருவிழா என்று சில பல காரணங்களால் வலைப்பக்கத்தில் தலைக்காட்ட முடியாமல் போய் விட்டது. கடந்த சில நாட்களாக பதிவுலகில் பெரும்பாலும் உலககோப்பை செய்திகள் அல்லது தேர்தல் சம்பந்தமான செய்திகள் என்று ரிப்பீட்டோ ரிப்பீட்டு. ஆகவே பெரும்பாலான வலைப்பக்கங்கள் ஒரு சுவாரசியமே இல்லாமல் இருக்கிறது. ஹி ஹி நான் மட்டும் என்ன விதிவிலக்கா? கிரிக்கெட் பற்றி தொடர்ந்து பதிவாக எழுதி தள்ளலாம் என்று முடிவு கட்டி இருக்கிறேன். (இது கிரிக்கெட் பதிவல்ல...) 



உலகக்கோப்பை கொண்டாட்டம்

1991 இல் இருந்து கிரிக்கெட் பார்த்து வரும் ஒருவனது இருபது வருட ஏக்கம் தீர்ந்த கணத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. இந்த கோப்பைக்கு இந்திய அணி தகுதியானதுதான். என் இருபது வருட கிரிக்கெட் பயணத்தை தனியாக பதிவிடுகிறேன். இப்போதைக்கு இந்தியாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்ம சச்சினையே கண் கலங்க வச்சுட்டாங்கப்பா... எத்தனை பேர் வீட்டில் தொலைக்காட்சி முன்னாள் அழுதார்களோ?

அடிதடி விஜயகாந்த் 

சமீப காலமாக விஜயகாந்த் தும்மினால் கூட அதை ஒரு செய்தியாக்கி வெளியிடும் வேலையில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மீடியாக்கள் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளரை அடித்தார், அதிமுகவினரை திட்டினார், ஆஃப் அடிக்க வேண்டும் என்று சொன்னார் என்று அவரது செயல்களை படம் போட்டு காட்டிகொண்டு இருக்கிறார்கள். 

கடந்த 4ஆம் தேதி எங்கள் ஊரில் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை முழுவதுமாக கேட்டேன். மறுநாள் 'நம்பர் ஒன்' பேப்பரில் அதனை பற்றி செய்தி. அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதாவது ராமமூர்த்தி ரோடு என்பதற்கு பதில் ராமநாதன் ரோடு என்று சொல்லிவிட்டார். மறுநாள், "குடிபோதையில் உளறிய விஜயகாந்த்." என்று செய்தி. மைக் சரியாக வேலை செய்யாததால், நிறுத்தி நிறுத்தி பேசிக்கொண்டிருந்தார். உடனே, " தொடர்ந்து பேசும் அளவிற்கு கூட நிதானம் இல்லாத விஜயகாந்த்." என்று செய்தி. ஆக சாதாரண ஒரு செய்தியை வேண்டுமென்றே திரித்து சொல்லி வருகிறார்கள். டாஸ்மாக் வருமானத்தை நம்பியே ஆட்சி நடத்தும் அரசுக்கு இதை கேட்க என்ன தகுதி இருக்கிறது? "மாறன்கள் உட்பட அனைத்து பேரன்களுக்கும் மெட்ரோ சிட்டிக்களில் இரவு நேர டிஸ்கோ கிளப்புகள் இயங்கி வருகின்றன, அங்கே ரெய்டுக்கு போனால் போலீசுக்கு ராஜ உபச்சாரம் கிடைக்கும்." என்று எப்போதோ படித்ததாக நினைவு. "ஒரு ரூபாய்க்கு அரிசி" என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் காய்கறி, பருப்பு, எண்ணை, கேஸ் ஆகிய விலை உயர்வை மறந்து விடுகிறார்கள். அது சரி எல்லாம் செலக்டிவ் அம்னீசியாதான். 


பிரச்சாரம் என்கிற பெயரில் ஒருவர் செய்யும் சிறு சிறு தவறுகளை பூதக்கண்ணாடியில் காட்டுவது காமெடியாகத்தான் உள்ளது. சிறப்பு பாராட்டு விழா நடத்தினால்தான் இலவச டிவி வழங்குவதற்கு வருவேன் என்று அடம்பிடித்தவர் எங்க ஊர் அமைச்சர். அதற்கு வீட்டுக்கு வீடு வசூல் நடந்ததெல்லாம் தனிக்கதை. 


ஒரு சந்தேகம். ஒருவேளை அதிமுக ஜெயித்து, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டால், வடிவேலு, லியோனி ஆகியோர் என்ன ஆவார்கள்? அதிலும் குறிப்பாக லியோனி அம்மாவை சரமாரியாக தாக்கி வருகிறார். 

அன்னா கசாரே 


நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பெயர். இவரது செயல், இதை பயன்படுத்திய மீடியாக்கள் ஆகியவற்றின் மீது பல்வேறான விமர்சனங்களை நிறைய தோழர்கள் சொல்கிறார்கள். என்னை பொறுத்தவரை நல்ல விஷயத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருப்பதே ஒரு சாதனைதான். இந்த லோக்பால் மசோதா நிறைவேறி நடைமுறைக்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும். குறிப்பாக நிறைய இளைஞர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த ஈடுபாடு ஐபிஎல் பார்த்தவுடன் திசை திரும்பாமல் இருந்தால் நல்லது. எல்லாவற்றிலும் லாபம் பார்ப்பது நம்ம அரசியல்வாதிகளின் வேலைதானே. "இந்த மசோதாவை ஏன் பாஜக ஆட்சியிலேயே நிறைவேற்றவில்லை?" என்று திருவாளர் பிரணாப் முகர்ஜி கேள்வி எழுப்பி உள்ளாராம். அட ...................(கெட்ட வார்த்தை. அவர் பதவிக்கு மதிப்பு கொடுத்து சென்சார்) இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியமா? அப்போதே நிறைவேறி இருந்தால் நிறைய ஊழல்களை தடுத்திருக்கலாம் என்ற நல்ல நோக்கத்தில் சொல்லி இருப்பாரோ?


மாப்பிள்ளை 


சுறா படம் பார்த்ததில் இருந்து எந்த படம் பார்ப்பதற்கும் மனதில் தைரியம் வந்துவிட்டது. ஆனால் சுறாவையே விழுங்கும் அளவிற்கு ஒரு படம் வரும் என்று அப்போது தெரியாது. அதுவும் ரஜினியின் படப்பெயரில். ரஜினி ரசிகர்கள் யாரும் தயவு செய்து தியேட்டர் பக்கம் கூட சென்று விடாதீர்கள். மிகுந்த துயரத்துக்கு ஆளாக வேண்டி வரும்.  ரஜினி நடித்த மாப்பிள்ளையில் வரும் நல்ல காட்சிகளை எல்லாம் ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள். அவற்றை அப்படியே எதிர்பதமாக, படுமட்டமாக எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது மாப்பிள்ளை. விவேக் பேசாமல் ஒரு இரண்டு வருடம் எங்காவது சென்று ஓய்வெடுத்தால் நல்லது. இல்லை வடிவேலு மாதிரி தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கலாம். அவுட் ஆஃப் ஃபார்ம். கடந்த ஞாயிறு அன்று, "வெளியிட்ட இடமெல்லாம் மெகா ஹிட்" என்று ஒரு பத்திரிக்கையில் விளம்பரம் வந்தது. எந்த பத்திரிக்கை என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்களேன். படத்தில் உருப்படியான ஒரே விஷயம், கீழே இருப்பவர்தான். அதையும் இயக்குனர் வீணடித்து விட்டார். 


தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு முறை கரண்ட் கட் ஆனது. உடனே ஒருவர், "எல்லோரும் கலைஞருக்கு ஓட்டு போடுங்கப்பா. இலவசமா சிம்னி விளக்கும், அஞ்சு லிட்டர் மண்ணெண்ணையும் தருவாறு." என்று சொல்ல ஒரே சிரிப்பொலி. 


உங்களுக்கு பிடிச்சிருந்த ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 
முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...