விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 30, 2011

நீங்க பேயை பார்த்திருக்கிறீர்களா?

முன் குறிப்பு: இது ஒரு காமெடி பதிவா? இல்லை சீரியஸ் பதிவா? என்று தெரியவில்லை. அவரவருக்கு ஏற்ற மாதிரி எடுத்துக்கொள்ளுங்கள். எது எப்படியோ ஒரு மரண மொக்கை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.... 


நீங்க பேயை பார்த்திருக்கிறீர்களா? இந்த கேள்விக்கு காமெடியாக பதில் சொல்வதாக இருந்தால், எஸ்‌வி சேகர் ஒரு நாடகத்தில் சொல்வது போல, "அதிலென்ன சந்தேகம் 25 வருஷமா குடும்பமே நடத்திக்கிட்டு இருக்கேன்." என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சீரியசாக இந்த கேள்வியை யாரிடமாவது கேட்டால், "நான் பார்த்ததில்லை அவர் பார்த்ததாக சொன்னார் என்று என் பாட்டி சொன்னதாக மாமா கூறினார்." என்று சுற்றி வளைத்து சொல்வார்கள். ஆக பெரும்பாலான மக்கள் பேயை பார்த்ததில்லை. அவர்கள் அனைவரும் சொல்லக்கேட்டவர்களே. அப்படி யார் சொன்னார் என்று தேடிக்கண்டுபிடித்து போய் பேயை பார்த்தவரிடமே கேட்டால் அவர், "மங்கலாக ஒரு உருவம் பேய் மாதிரியே இருந்தது." என்று தான் பார்த்த திகில் படங்களுக்கேற்ப கூறுவார். இவர் இவ்வாறு கூறிய விஷயமே ஒவ்வொரு காதாக தாவும்போது கை கால் முளைத்து ஒரு கேரக்டராகவே ஆகி விடுகிறது. 

சரி அதை எல்லாம் விடுங்க. நான் கேட்க வந்த விஷயம் அதுவல்ல. நாம் சிறு வயதில் இருந்தே நிறைய பேய் கதைகளை கேட்டு வளர்ந்திருக்கிறோம். நிறைய திகில் படங்களை பார்த்திருக்கிறோம். என்னதான் நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும். நம் அடி மனதில் பேய் குறித்த பயம் இருக்கிறது என்று நம்பவே செய்கிறோம். பெரிய சூரப்புலிகள் என்றாலும் இந்த விஷயத்தில் கொஞ்சம் நடுங்கித்தான் போகிறோம். இதை நான் காஞ்சனா படம் பார்க்கும்போது தெரிந்து கொண்டேன். ஆக நாம் எல்லோருக்குள்ளும் பேய் என்றால் இப்படித்தான் இருக்கும், அதற்கு இந்த மாதிரி குணாதிசயங்கள் உண்டு என்றெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம் அல்லவா? அப்படிபட்ட விஷயங்களில் எனக்கு சில சந்தேகங்கள் வந்து விட்டன. முடிந்தால் கொஞ்சம் தீர்த்து வையுங்கள். 


சந்தேகம் #1 
பேய்களுக்கு கால்கள் உண்டா கிடையாதா? கால்கள் உண்டு என்று வைத்துக்கொண்டால் அவை நடக்குமா ஒடுமா? பேய்கள் திடீரென்று தோன்றுகின்றன, மறைகின்றன, வேறொரு இடத்தில் தோன்றுகின்றன. அவற்றுக்கு கால்கள் உண்டு என்றால் மறைய வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை அதிக தூரம் செல்லவேண்டுமானால் மறைந்தும், தூரம் குறைவாக இருந்தால் நடந்தும் செல்லுமோ? இல்லை உண்மையிலேயே பேய்களுக்கு கால்கள் கிடையாதா? 

சந்தேகம் #2 
பேய்கள் நேர்மையானவையா? பொதுவாக பேய்கள் அடாவடித்தனம் செய்பவையாகவே இருக்கின்றன. மரியாதை இல்லாமல் பேசுவது, அல்லது கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று. இவ்வாறு அடாவடியாக நடக்கும் பேய்களின் நேர்மை நம்பக்கூடியதுதானா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், ஒருவரை பேய் பிடித்து ஆட்டும்போது, பேய் ஓட்டுபவர், "நீ கேட்பதை நான் கொடுத்து விட்டால் இவரை விட்டு போய் விடுவாயா?" என்று கேட்டால், அதுவும் தான் பங்குக்கு ஆடு கோழி சாராயம் என்று ஏதாவது கேட்டு விட்டு, சொன்னபடியே போய் விடுகிறதே? ஆடு கோழிக்கு ஆசைப்பட்டு அடிக்கடி வருவதில்லையே? பேய்கள் கொடுத்த வாக்குக்கு அவ்வளவு மரியாதை கொடுக்குமா? 


சந்தேகம் #3 
இது முந்தைய சந்தேகத்தின் தொடர்ச்சி. பேய்கள் ஆடு கோழி என்று கேட்கிறதே அவற்றை பேய்களால் சாப்பிட முடியுமா? அப்படி சாப்பிட முடியும் என்றால், செரிமானம், வயிற்று உபாதைகள் இன்ன பிற சமாச்சாரங்களும் உண்டா? அதே போல சாராயம் கேட்கும் பேய்களுக்கு சரக்கடித்தால் போதை வருமா? அப்படி அடித்து மட்டையானால் பேயின் நிலைமை என்ன? யாராவது பிடித்து அடைத்து விட மாட்டார்கள்? இல்லை சரக்கடித்தாலும் போதை ஏறாது என்றால், பின்னே எதற்கு சாராயம் கேட்கவேண்டும்? மேலும் சைவ பேய்கள் எதை சாப்பிடும்? அவற்றால் மனிதர்களுக்கு பிரச்சனை கிடையாதோ? (சைவ டைனோசர்கள் போல)... 

சந்தேகம் #4 
பேய்களுக்கு செட் பிராப்பர்ட்டிகள் எங்கிருந்து கிடைக்கின்றன? உதாரணமாக அவை அணிந்திருக்கும் உடைகள், வெள்ளை சேலை, மல்லிகைப்பூ, கொலுசு போன்றவை? கிராமத்து பேய்கள் மல்லிகைப்பூ வைத்திருப்பது போல நகரத்து பேய்கள் பெர்பியூம் போட்டிருக்குமா? சந்தேகம் #1இன் படி பேய்களுக்கு கால்கள் கிடையாது என்றால், அவற்றால் கொலுசு எப்படி அணிய முடியும்? ஆண் பேய்கள் பேண்ட் எப்படி அணிய முடியும்? கால்கள் உண்டு என்றால் வெள்ளி கொலுசுகள் வாங்க காசு எங்கிருந்து வந்தது. ஆட்டைய போட்ட காசா?

சந்தேகம் #5 
இப்போது ஒருவருக்கு உடலில் குறைபாடு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக அவரால் பார்க்க முடியாது என்றால், அவர் இறந்து போன பிறகும் அந்த பேய்க்கும் பார்வை இருக்காதா? காது கேட்காத, வாய் பேசாத பேய்களும் உண்டா? சினிமாவில் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டால் அவரது பேய் காயங்களுடன் வருவது போல காட்டுகிறார்களே அப்படியானால் பிறவியிலேயே குறைபாடு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்தானே? மேலும் மன நலம் குன்றிய அல்லது அரவாணியாக இருக்கும் ஒருவர் இறந்து விட்டால் அவரது ஆவியும் அப்படி இருக்கும்தானே (உபயம் : காஞ்சனா). மன நலம் குன்றிய பேயால் எப்படி நன்றாக சிந்தித்து பழிவாங்க முடியும்? 

சந்தேகம் #6 
பேய்களின் நேர்மையை பற்றி பேசினோம் அல்லவா? பேய்களின் நடத்தை குறித்தும் பேச வேண்டி இருக்கிறது. ஒருவர் சாதுவாக இருப்பாரானால் அவரது ஆவியும் அப்படியே இருக்குமா அல்லது ஆக்ரோஷமாக மாறி விடுமா? சாதுவானவருக்கே இப்படி என்றால், மிக மோசமான ரவுடியாக இருக்கும் ஒருவர் பேயாக மாறினால் இன்னும் முரடனாக அல்லவா மாறி விடுவார்? இப்படி இருக்க, சாதுவான தன்னை ஒரு ரவுடி கொலை செய்து விட்டதால் அவனை பழிவாங்க எண்ணுகிறது ஒரு சாதுவான பேய். அவனை எப்படி தன்னை கொன்றான் என்பதை நன்றாக ஞாபகம் வைத்து அதே மாதிரி அந்த ரவுடியையும் துரத்தி துரத்தி கொல்கிறது. ஆக அவனும் பேய் ஆகிறான். இப்போது இந்த ரவுடி பேய் அந்த சாதுவான பேயை துன்புறுத்தாது என்பது என்ன நிச்சயம்? அதற்கு அவன் சாகாமல் இருப்பதே மேல் அல்லவா? எதற்கு தேவை இல்லாமல் அவனை கொன்று ஆப்பை தானே தேடி செல்லவேண்டும்? 


சந்தேகம் #7 
 பேய்கள் கோழைகளா? எதற்கு தனியாக வரும் ஆட்களிடம் அதுவும் அப்பாவிகளிடம் வந்து வாலாட்ட வேண்டும்? உண்மையிலேயே அவற்றுக்கு சக்தி உண்டு என்றால், பொதுமக்கள் ஒன்றாக கூடும் இடத்துக்கு வந்து அல்லவா எல்லோரையும் மிரட்ட வேண்டும்? 

சந்தேகம் #8 
பேய்கள் ஒரே இடத்தில் தங்கி இருக்குமா அல்லது ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு செல்லுமா? மேலும் வெளியூரில் இருந்து மொழி தெரியாத ஒருவர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவரை இந்த பேய் மிரட்டுவதால் என்ன பயன்? மனிதனாக இருக்கும்போதே மொழி தெரியாதவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது பத்தாதா? அவன் தன் தாய் மொழியில் திட்டினால் பேய்க்கு தெரியவா போகிறது? மேலும் பேய்கள் கார் ஒட்டுமா? சாகும் வரை கார் ஓட்ட தெரியாத ஒருவர் இறந்தவுடன் கார் ஓட்டுவது போல காட்டுகிறார்களே இது சாத்தியமா? பேய்களுக்கு நீச்சல் தெரியுமா? 


சந்தேகம் #9 
பேய்கள் பகல் நேரத்தில் எங்கே இருக்கும்? அவை சரியாக பன்னிரண்டு மணிக்கு வருவதன் நோக்கம் என்ன? ஒரு மணிக்கு வந்தால் யாரும் பயப்பட மாட்டார்களா? மனிதர்களைப்போல, ஆடு, மாடு, கோழி, நாய் ஆகிய உயிரனங்களும் பேயாக அலையுமா? அப்படியானால் சிங்கம் புலி ஆகிய பேய்கள் ஊருக்குள் வந்தால் நம்ம நிலைமை என்ன ஆகும்? 

சந்தேகம் #10 
ஆச்சாரமான பேய்கள், தாழ்த்தப்பட்ட மக்களை கொல்லுமா? அப்படி கொல்ல வேண்டுமானால் தொட வேண்டும். அது தீட்டாகாதா? அதே போல பகுத்தறிவு பேய்கள் சாமிகளை கண்டால் பயப்படுமா? அவை பார்ப்பனர்களை கொல்லாது என்பது என்ன நிச்சயம்? புரட்சிக்கார பேய்களும் உண்டா? அவை பேய்களுக்குள்ளேயே யூனியன் அமைத்து எட்டுமணிநேர பேயாட்டம், உண்ணாவிரதம், கொல்லாவிரதம் என்று ஈடுபடுமா? கம்யூனிஸ்ட் பேய்கள் சிகப்பாக இருக்குமா?
 
என்ன எல்லோரும் முடிய பிச்சுக்கிட்டீங்களா? நானும் ரொம்ப நாளா இப்படித்தான் இருக்கேன். இதுக்கு யாராவது ஒரு வழி சொல்லுங்க பிளீஸ்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

August 26, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 20

ஒரு கிரிக்கெட் ரசிகனாக, என் மனதில் 1992 விழுந்த விதை அறுவடையான அந்த தருணத்தில் என் கிரிக்கெட் அனுபவங்களை எல்லாம் ஒன்றிரண்டு பதிவுகளில் சொல்லிவிட வேண்டும் என்ற ஆவலில் இந்த தொடரை எழுத தொடங்கினேன். ஆனால் நீண்ட தொடராக இது அமைந்துவிட்டது. எனக்கு தொடர் எழுதவேண்டும் என்பது நெடுநாளைய ஆசை. அதிலும் அண்ணன் ஹாலிவுட் பாலா அவர்கள் எழுதிய பிக்ஸார் தொடரை பார்த்தவுடன் இன்னும் ஆசை அதிகமானது. ஆனால் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை ஆகிவிடக்கூடாது என்பதாலேயே வெகு நாட்களாக என்ன எழுதுவது என்று குழம்பி கொண்டிருந்தேன். இந்த தொடரை கூட முதலில் இப்படி எழுதவேண்டும் என்ற திட்டமில்லை. ஒரு சில நண்பர்கள் இதை புத்தக வடிவில் கொண்டு வரலாம் என்று கூறினார்கள். ஆனால் அந்த அளவுக்கு இந்த தொடர் தரமானதா என்று தெரியவில்லை. மேலும் இதை மெருகேற்ற இன்னும் கடுமையான அளவு உழைக்கவேண்டும். படங்களுக்கு, காப்பிரைட் பிரச்சனையும் வரும். எனவே மின் புத்தகமாக ஒரே வீச்சில் எளிதாக படிக்கும் விதமாக வேண்டுமானால் கொண்டு வர முயற்சி செய்கிறேன். ஒரு மாபெரும் சரித்திர வெற்றியை, ஒரு சரித்திர தோல்வி அடைந்த தருணத்தில் எழுதுவது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் இதெல்லாம் எனக்கு புதிதில்லை. இது போல பல தோல்விகளை பார்த்திருக்கிறேன். முன்பெல்லாம் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இப்போது அப்படி இல்லை. 

டிஸ்க்: இது மிக நீளமான பதிவு.... 

சரித்திரம் திரும்புகிறது..,



இந்த முறை உலககோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியா, பாகிஸ்தான், இலங்கையுடன் சேர்த்து முதல்முறையாக பங்களாதேசும் பெற்றது. ஆனால் 2009இல் இலங்கை வீரர்கள் பயணித்த பேருந்தில் நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் நீக்கப்பட்டு, லாகூரில் அமையவிருந்த உலகக்கோப்பை தலைமை அலுவலகம், மும்பைக்கு மாற்றப்பட்டது. முந்தைய உலகக்கோப்பைகளைப்போல் இல்லாமல் 1996ஆம் ஆண்டைப்போல இரண்டே பிரிவுகள், ஒவ்வொன்றிலும் தலா ஏழு அணிகள். மேலும் சூப்பர் சிக்ஸ் அல்லது சூப்பர் எயிட் சுற்றுக்களாக இல்லாமல், காலிறுதி போட்டிகள் என்று சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும் . இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றது. இதே பிரிவில் பலம் வாய்ந்த அணிகளாக தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து மட்டுமே இருந்தன. மற்றவை எல்லாம் சிறிய அணிகள்தான். ஆனால் 2007ஆம் ஆண்டு அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து பீதியை கிளப்பியது.  


தொடக்க விழா பங்களாதேசில் நடைபெற்றது. வித்தியாசமாக ஒவ்வொரு அணியின் கேப்டன்களும் சைக்கிள் ரிக்சாக்களில் அழைத்து வரப்பட்டார்கள். இந்த தொடரில் பங்களாதேஷ் அணி தான் ஆடிய எல்லா போட்டிகளையுமே சொந்த மண்ணிலேயே ஆடியது. அதே போல இந்திய அணி ஒரு போட்டியும், இலங்கை இரண்டு போட்டிகள் மட்டும் அந்நிய மண்ணில் ஆடின . மற்ற எல்லா போட்டிகளுமே சொந்த மண்ணிலேயே ஆடின. இந்த முறை ஒளிபரப்பு உரிமை இ‌எஸ்‌பி‌என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர்களும் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல், மிக தரமாக போட்டிகளை ஒளிபரப்பினார்கள். அதிக விளம்பரங்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். உலகக்கோப்பைக்கென சங்கர்-எசன்-லாய் குழுவினர் இசையமைத்து பாடிய பாடல் இந்தியா முழுக்க புகழ் பெற்றது.


இந்திய அணிக்கு முதல் போட்டி பங்களாதேசுடன். இதற்கு முந்தைய ஆண்டுகளில் பெற்ற அதிர்ச்சி தோல்விகள் காரணமாகவோ என்னவோ முதல் அடியே மரணஅடியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியா களமிறங்கியது. அடியை ஆரம்பித்து வைத்தவர் அதிரடி மன்னன் சேவாக். இவர் எடுத்தது 175 ரன்கள்.  இவரோடு ஜோடி சேர்ந்து தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற விராட் கோஹ்லி, முதல் போட்டியிலேயே சதமடித்தார்.  இந்திய அணி எடுத்தது 370 ரன்கள். பின்னர் ஆடத்தொடங்கிய பங்களாதேஷ், நிதானமாக ஆடி 283 எடுத்தது. இந்த போட்டியில் இந்தியா வென்றாலும், இந்திய பந்துவீச்சு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. ஜாகீர் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். ஸ்ரீசாந்த் 5 ஓவரில் ஐம்பது ரன்களை வாரி வழங்கினார். இதற்கு அடுத்ததாக, மிக முக்கியமான போட்டியாக கருத்தப்பட்ட இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு உலகக்கோப்பை வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டது. ஷேன் வார்னே மட்டும், "இந்த போட்டி டிராவில் முடியும்." என்று கூறி ஆச்சர்ய பட வைத்தார். 


இந்த போட்டியில் இந்திய வீரர்கள் விளாசி தள்ளினார்கள். இங்கிலாந்தின் நம்பிக்கை வீரராக இருந்த ஆண்டர்சன் 91 ரன்களை விட்டுக்கொடுத்தார். சச்சின் சதமடித்து, மறுபடியும் தனக்கு வயதாகி விடவில்லை என்று நிரூபித்தார். இந்தியா எடுத்தது 338. இதை துரத்திய இங்கிலாந்து வீரர்கள் பதிலுக்கு இந்திய பவுலர்களை புரட்டி எடுத்தனர். கேப்டன் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் 158 ரன் குவித்தார். கடைசிநேரத்தில் டென்சனை கிளப்பி 338 ரன் எடுக்க, ஷேன் வார்னே சொன்னது போலவே ஆட்டம் டிரா ஆனது. இந்திய பவுலிங் மிக மோசமாக இருந்ததற்கு இது ஒரு சான்று. இந்த போட்டியில் இந்தியாவுக்கு இங்கிலாந்து அடுத்தடுத்த சுற்றுகளில் சவால் விடும் என்று தெரிந்து போனது. இதற்கு அடுத்த படியாக அயர்லாந்து, மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முன்னேறியது இந்தியா. அயர்லாந்துடன் ஆடிய ஆட்டத்தில் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் கொஞ்சம் சொதப்பலாக இருந்தது. "அய்யய்யோ பேட்டிங்கை நம்பித்தானே இருந்தோம். அதுவும் மோசமடைந்து வருகிறதே?" என்ற கவலை தொற்றிக்கொண்டது. 


அடுத்த போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்தித்தது. உலகக்கோப்பைக்கு முந்தைய தொடரில் வாங்கிய அடிக்கு பழிவாங்கும் விதமாக இந்திய வீரர்கள் வெளுத்து வாங்கினார்கள். சச்சின் சதமடிக்க, 40 ஓவர்களில் இந்திய அணி 263 குவித்தது. ஆனால் அடுத்த பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்களின் கேவலமான ஆட்டத்தால் 296க்குள் சுருண்டது. இந்திய பவுலர்களால் தென்னாபிரிக்க வீரர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. எளிதில் வென்றார்கள். "இந்திய அணி 350 ரன்னுக்கு மேல் எடுத்தால் மட்டுமே வெல்ல முடியும் போலிருக்கிறது. பவுலிங் அவ்வளவு கேவலமாக இருக்கிறது." என்று குறைபட்டுக் கொண்டோம். காலிறுதிக்கு தகுதி பெரும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா. காலிறுதிப்போட்டிக்கு வழக்கம்போல எட்டு பெரிய அணிகளும் தகுதி பெற்று விட்டன. முதல் சுற்று போட்டிகளில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை.  


கென்யாவுடன் நடந்த ஆட்டத்தில் 8 ஓவர்களில் 72 ரன் எடுத்து ஆட்டத்தை வென்றது நியூசிலாந்து. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா 34 ஓவரில் 207  எடுத்து நியூசிலாந்தை வீழ்த்தி பீதியை கிளப்பியது. முக்கியமான போட்டியில் பலம் வாய்ந்த இலங்கையை, குறைத்து மதிப்பிடப்பட்ட பாகிஸ்தான் வீழ்த்தி, உலகக்கோப்பை ரேஸில் இணைந்து கொண்டது. அதுவரை பாகிஸ்தானை யாரும் நெருக்கடி தரும் அணியாக நினைக்கவில்லை. மேலும் பாகிஸ்தான் இன்னொரு போட்டியில் ஆஸ்திரேலியாவை படுதோல்வி அடைய செய்தது. அந்த போட்டியில் அவர்கள் எடுத்தது வெறும் 176 ரன் மட்டுமே. அதே போல பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 47 ஓவருக்கு 250 ரன் எடுத்த நியூசிலாந்து அடுத்த 3 ஓவரில் 52 ரன் குவித்தது. இதை நிகழ்த்தி காட்டியவர் நியூசிலாந்தின் வீரர் டெய்லர். இப்படி ஏ பிரிவில் ஒவ்வொருவரும் மாறி மாறி ஜெயித்துக்கொண்டிருந்தார்கள். பி பிரிவில் நடந்த ஒரு போட்டியை பற்றி குறிப்பிட்டாக வேண்டும். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டி அது.


இந்தியாவுடன் ஆட்டத்தை டிரா செய்த உற்சாகத்துடன் முதலில் ஆடிய இங்கிலாந்து 327 எடுத்தது. பின்னர் ஆடத்தொடங்கிய அயர்லாந்து 25 ஓவரில் 111 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்து விட்டது என்று எல்லோரும் நினைக்கையில், களமிறங்கிய கெவின் ஓ பிரயன், சூறாவளியாக மாறினார். 50 பந்துகளில் சதமடித்த அவர், கண நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். ஒரு சுமாரான ஆட்டத்தை காண வந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது இந்த ஆட்டம். உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு பெரிய அணிக்கு மீண்டும் ஒரு முறை அயர்லாந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. உலகக்கோப்பை போட்டிகளின் சிறப்பான ஆட்டங்களின் பட்டியலில் இந்த ஆட்டமும் சேர்ந்து கொண்டது. 


காலிறுதி போட்டிகளில் வெஸ்ட் இண்டீசை பாகிஸ்தானும், இங்கிலாந்தை இலங்கையும் துவம்சம் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டன. இரு அணிகளுமே விக்கெட் இழப்பின்றி வென்றது குறிப்பிடத்தக்கது. முக்கியமான் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கவும், நியூசிலாந்தும் மோதின. என்ன நடந்திருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. 221 என்ற எளிய இலக்கை துரத்திய தென்னாபிரிக்கா, நாக் அவுட் ஜுரத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து, 173 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தது. "அப்பாடா, இங்கிலாந்து, மற்றும் தென்னாபிரிக்கா என்று இரண்டு தொல்லைகள் இனி இல்லை." என்று நான் நிம்மதி அடைந்தேன். ஆனால் காலிறுதியிலேயே பெரிய சோதனை காத்திருந்தது. ஆம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை சுவைத்த ஆஸ்திரேலியா என்ற சிங்கத்திடம், மோத வேண்டும். "அதற்கு முன் எப்படி ஆடி இருந்தாலும், உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியர்களில் ஆட்டமே வேறு. ஆகவே இந்தியர்கள் இதை கடந்து விட்டாலே பெரிய அதிசயம்." என்று கூறப்பட்டது. 


அதுவரை களமிறங்காமல் இருந்த அஷ்வின் களமிறக்கபட்டார். ஆஸ்திரேலியர்களை வீழ்த்த இந்திய சுழற்பந்துவீச்சை பெரிதும் நம்பி இருந்தார் தோனி. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆஸ்திரேலியா 260 மட்டுமே எடுத்தது. அதிலும் பாண்டிங் மட்டும் சதமடித்தார். அவர் சதமடித்த போது, 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நினைவுக்கு வந்தது. ஆனால்  அஷ்வின் சாமர்தியமாக அவரை வீழ்த்தி விட்டார். ஆஸ்திரேலியர்களின் பவுலிங்கை குறைத்து மதிப்பிட முடியாது. எனவே மிக எச்சரிக்கையாக ஆடியது இந்திய அணி. 187 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்ந்தபோது என் நம்பிக்கை லேசாக ஆட்டம் காண ஆரம்பித்தது. ஆனால் ரெய்னாவும், யுவராஜும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்கள். ஒரு சரித்திர நிகழ்வு அங்கே நடந்தேறியது. ஆம் கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளாக தன் அசுரப்பிடியில் வைத்திருந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி பறிகொடுத்தது.


"இது பொதும்டா. இனி ஜெயிக்காட்டியும் கவலை இல்லை." என்று எண்ணம் தலை தூக்கியது. ஆனால் 2003 நினைவுக்கு வர, "வேகம் குறையக்கூடாது. இறுதி வரை முயற்சியை கைவிடக்கூடாது." என்று எண்ணிக்கொண்டேன். அரையிறுதியில் நியூசிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை. மறுபுறம் இன்னொரு சரித்திரப்போட்டி. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி என்றாலே அது பரபரப்புதான். அதுவே உலகக்கோப்பை அரையிறுதியாக இருந்தால் கேட்கவா வேண்டும்? பல்வேறு அரசியல் தலைவர்கள், குறிப்பாக இரு நாட்டு பிரதமர்கள் என்று அரங்கமே நிறைந்துவிட்டது. என்னதான் இந்தியா சிறப்பாக ஆடினாலும் அடி வயிற்றில் புளியை கரைத்தது உண்மைதான். முதலில் ஆடிய இந்தியா 260 ரன் எடுத்தது. இது குறைவான ஸ்கோர்தான் என்றாலும், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால், நிதானமாக ஆடியும் தோல்வியையே தழுவியது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய அப்ரிடி, இந்த போட்டியில் சரியாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.


இலங்கை அணி இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடி இருந்தது. ஆனால் அவை உள்ளூர் போட்டிகள் என்பதும், இறுதி போட்டி இந்தியாவில் என்பதும் ஒரு சவால். மேலும் இலங்கையின் பெரும்பாலான ஆட்டங்களில் முதலில் ஆடிய தில்ஷான், சங்கக்காரா, தரங்கா ஆகியோர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதால், பின் வரிசை வீரர்கள், மிக சொற்ப ரன்களையே இந்த தொடரில் எடுத்திருந்தார்கள். மேலும் இந்திய அணி பல கடினமான படிகளை தாண்டி வந்திருந்ததால் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தது. இந்தியாவுக்கு எதிராக, இந்திய ஆடுகளங்களில், முரளீதரன், மலிங்கா ஆகியோரின் பந்துவீச்சு பெரும்பாலும் எடுபட்டதில்லை. இப்படிப்பட்ட செய்திகள் இலங்கை கோப்பை வேல்வதற்கான வாய்ப்புகள் குறைவே என்று நினைக்க வைத்தன. ஆனால் அவை அனைத்தையும் தவிடு பொடி ஆக்கும் வகையில் இலங்கையின் ஆட்டம் அமைந்தது. இலங்கை அணி 276 ரன் குவித்தது. ஜெயவர்தனே சதமடித்து இறுதிபோட்டிகளில் சதமடித்தோர் பட்டியலில் இணைந்தார். 2003 போலவே இறுதி போட்டியில் இந்திய பவுலிங் சொதப்பலாக அமைந்தது. எனக்கு அதுவரை 100% இருந்த நம்பிக்கை 50% ஆக குறைந்தது. 


இந்தியா ஆடத்தொடங்கிய இரண்டாவது பந்திலேயே சேவாக் டக் அடிக்க, சச்சினும் உடனே நடையை கட்ட, 6 ஓவரில் 31 ரன்னுக்கு இரண்டு விக்கெட். என் நம்பிக்கை 20% ஆனது. "அட போங்கடா...." என்றும் தோன்றியது. விராட் கொஹ்லி மிக நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். அவரும் அவுட் ஆக, யுவராஜுக்கு முன்ன்தாக களமிறங்கினார் தோனி. அவரும் கம்பீரும் கவனமாக அதேநேரம் விரைவாக ரன் சேர்க்க தொடங்கினார்கள். இந்த தொடர் முழுக்க சிறப்பாக ஆடத்தவறிய இந்த இரண்டு வீரர்களும், இந்த முக்கிய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் சதமடிக்கும் முன் அவசரப்பட்டு கம்பீர் அவுட் ஆகும்போது ஸ்கோர் 41 ஓவரில் 221. ஆட்டம் சம நிலையில். ஆனால் களமிறங்கியது யுவராஜ். அப்போதே தெரிந்து விட்டது. இலங்கைக்கு காலம் கடந்து விட்டது. கம்பீரை இன்னும் விரைவாக வெளியேற்றி இருக்க வேண்டும். 45வது ஓவரில் பவர் பிளே எடுத்ததும் ஆட்டம் ஜெட் வேகம் பிடித்தது. 47ஆவது ஓவரை குலசேகரா வீச, 27 பந்துகளில் 24 ரன் எடுக்க வேண்டும். அந்த ஓவரில் தோனி இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 


இப்போது 18 பந்துகளில் 16 ரன் எடுக்கவேண்டும். இந்த ஓவர் தொடங்கும்போதே யுவராஜ் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். 48வது ஓவரை வீச அழைக்கப்பட்டவர் மலிங்கா. இந்த ஓவர்தான் இலங்கையின் உலகக்கோப்பையின் கடைசி நம்பிக்கை. ஏனென்றால், இந்த மாதிரி பல நெருக்கடியான நேரங்களில் அற்புதம் நிகழ்த்தக்கூடிய ஒரு வீரர் மலிங்கா.ஆனால் தோனி இந்த ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் விளாச, கடைசி நம்பிக்கையும் தவிடுபொடி ஆனது. 12 பந்துகளில் 5 ரன் எடுக்க வேண்டும். முதல் பந்தில் யுவராஜ் 1 ரன் எடுக்க, 11 பந்துகளில் 4 ரன் எடுக்க வேண்டும். குலசேகரா வீசிய அந்த பந்தை சிக்சருக்கு விரட்டினார் தோனி. ஏற்கனவே கையில் பட்டாசோடு நின்றிருந்த நான், அதை பற்ற வைக்க, எங்கள் ஊரின் முதல் சரவெடி என் வீட்டின் முன் கேட்டது. பிறகு, ஊரெங்கும் கேட்கதொடங்கியது. 


என் மனதில் மகிழ்ச்சி பேரு வெள்ளம் கரைபுரண்டோடியது. ஒவ்வொரு வீரனின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர். களத்தினுள் சச்சின் ஓடி வந்ததும் அரங்கமே அதிர்ந்தது. அவரை தூக்கிக்கொண்டு ஆனந்த கூத்தாடினார்கள் இந்திய வீரர்கள். இது வரை இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரனுக்கு, கோப்பையை வென்றதன் மூலம் மேலும் ஒரு பெருமையை சேர்த்த பெருமிதம் அவர்களின் கண்களில். ஆம் உலகமே சச்சினை புகழ்ந்தாலும், உலகக்கோப்பையை வென்ற அணியில் சச்சின் இல்லை என்பது அதுவரை ஒரு குறையாகவே இருந்தது.  தான் உலகக்கோப்பை ஆடுவது ஒரு நபருக்காக என்று அதுவரை சொல்லி வந்த யுவராஜ், அந்த நபர் சச்சின்தான் என்று அன்று கூறினார். 


































இந்த உலகக்கோப்பை வெற்றி ஒருவரால் வந்ததல்ல. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் சிறப்பாக ஆடினார்கள். ஆனால் யுவராஜ் மற்றும் ஜாகீர்கானின் பங்களிப்பு சிறப்பானது. தொடர்ந்து, பயிற்சியாளரையும் தோளில் சுமந்து மைதானத்தை வலம்வந்தனர் இளம் வீரர்கள். இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த கணத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் போதவில்லை. சரித்திரம் திரும்பியது. என் கனவும் நனவானது...... 

இப்படிக்கு
ஒரு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகன். 


படங்கள் நன்றி : cricinfo
செய்திகள் நன்றி: cricinfo, wikipedia

பிற் சேர்க்கை:

அதெப்படி அவ்வளவு சீக்கிரம் முடித்து விடுவோமா? இதன் நீட்சி தொடரத்தான் போகிறது. ஒவ்வொரு அணியிலும் கடந்த இருபது ஆண்டுகளாக என் மனம் கவர்ந்த வீரர்கள் பலர் ஆடி இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி ஓரிரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டால் எப்படி? ஆகவே இன்னும் ஓரிரு பதிவுகளில் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

August 19, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 19

2010 ஆம் ஆண்டு பிப்ரவரியில் எழுத தொடங்கி கிட்டத்தட்ட ஒண்ணறை வருடங்கள் எழுதி வருகிறேன். எப்போதும் ஹிட்ஸ் பற்றியோ, ஓட்டுகள் பற்றியோ சிந்தித்ததில்லை. அதிலும் தமிழ் மணத்தில் இணைப்பதற்கு இப்போதும் ஆர்வம் இல்லை. ஒரு வேளை இணைத்திருந்தால் இன்னும் பல பேருக்கு பதிவுகள் சென்றடைந்திருக்குமோ என்னவோ. இது என்னுடைய 150 ஆவது பதிவு. இப்போது ஹிட்ஸ் ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. அதிலும் கிரிக்கெட் பற்றி எழுத தொடங்கிய பிறகு, மூன்று மாதங்களில் 25000 ஹிட்ஸ் வந்துள்ளது. பின் தொடர்பவர்களும் 200ஐ நெருங்கி விட்டது. கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் தொடர்ந்து ஆதரவு தருபவர்களுக்கு என் நன்றி. 

உருவாகிறது உலகக்கோப்பைக்கான அணி




இந்திய அணியில் 2002ஆம் ஆண்டுக்கு பிறகு மறுபடியும் ஒரு உத்வேகம் தோன்றி என்னால் இருப்பதை உணர முடிந்தது. எல்லா வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். நான், "போங்கடா இப்படித்தான் இருப்பீங்க. கடைசியில உலகக்கோப்பையில் போய் செம உதை வாங்குவீங்க." என்று நினைத்துக்கொண்டேன். இது முந்தைய உலகக்கோப்பைகளில், குறிப்பாக 2003இல் பெற்ற காயம். இருந்தாலும் மனதில் உலகக்கோப்பையை வாங்கி விடலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்தது. கங்குலி மட்டுமல்லாது பல இந்திய வீரர்களிடம் எதிர்ப்பை சம்பாதித்த கிரெக் சாப்பல் காலம் முடிந்து விட, இந்திய அணிக்கு புதிய பயிற்ச்சியாளராக பொறுப்பேற்றார் கேரி கிறிஸ்டன். தென்னாப்பிரிக்காவின் தலை சிறந்த ஒப்பனராக விளங்கிய கிறிஸ்டன் எப்படி பயிற்சியாளராக செயல்படப்போகிறார்? என்பது சந்தேகமாக இருந்தது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், கிறிஸ்டன் சச்சினுக்கு அப்புறம் கிரிக்கெட் ஆட வந்தவர். ஆனால் இன்னும் சச்சின் ஆடிக்கொண்டிருக்கும் போது, அவருக்கு பயிற்சியாளராக வந்ததை பார்த்ததும் எனக்கு சுந்தரகாண்டம் படத்தில் வரும் ஒரு வசனம் ஞாபகம் வரும். "டேய் ஷண்முகமணி, என் கூட படிச்சு எனக்கே வாத்தியாரா வந்துட்டடா " என்று ஒருவர் பாக்கியராஜை பார்த்து சொல்வார். இதே வசனம் ஜெயசூர்யா ஆடிக்கொண்டிருக்கும்போது அம்பயராக நிற்கும் தர்மசேனாவை பார்க்கும்போதும் ஞாபகம் வரும். தர்மசேனா ஜெயசூர்யாவுக்கு அப்புறம் 6 வருடங்கள் கழித்து ஆட வந்தவர்.


என் சந்தேகங்களை தவிடுபொடியாக்கும் வகையில் முதல் தொடரிலேயே ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்து, கிறிஸ்டன் தன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தினார். 2009 ஆண்டில் இந்தியா பங்கேற்றது இரண்டே இரண்டு டெஸ்ட் தொடர்களில்தான். முன்னதாக 2008 அக்டோபரில் நடந்த ஆஸ்திரேலியாவுடன் நடந்த தொடரில் அடுத்தடுத்து கங்குலியும், கும்ப்ளேவும் தாங்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். இவ்விருவரின் இழப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல, என்னைபோன்ற ரசிகர்களுக்கும் பேரிழப்புதான். ஆனால் காலத்தின் கட்டாயம். இந்த தொடரின் இந்த இருவருவருமே சிறப்பாக ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் தலைசிறந்த பவுலர்களின் பட்டியலை எடுத்தால், அதில் முரளீதரன், வார்னே மற்றும் கும்ப்ளேவை தவிர்க்க இயலாது. அதிலும் மற்ற இருவரும் பந்தை அதிகமாக சுழற்றும்போது, பந்தை அதிகமாக சுழல வைக்காமலேயே பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். இவரை நாங்கள் "மீடியம் பாஸ்ட் பவுலர்" என்றே கிண்டல் செய்வோம்.


சரியான தூரத்தில் பந்தை தரையில் குத்தி, விருட்டென எழும்பும் வகையில் இவர் வீசும் பந்துகள், எப்பேற்பட்ட பேட்ஸ்மேனையும் திணறடிக்கும். சில வீரர்கள் அவசரப்பட்டு ஸ்வீப் செய்ய முயன்று, முகத்தில் அடிபட்டுக்கொண்டதும் உண்டு. பல நேரம் அது விக்கெட் கீப்பர்களையும் விட்டு வைத்ததில்லை. இவர் பந்துவீச்சில் முகத்தில் அடிவாங்காத விக்கெட் கீப்பரே இல்லை எனலாம். அதிலும் சபா கரீம் வலது கண்ணில் அடிவாங்கி, அவர் பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டு, அதுவே அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியானது. இப்போதும் சபா கரீம் டிவியில் பேசும்போது உற்று கவனித்தால், அவரது வலது கண்ணில் உள்ள மாறுபாடு தெரியும். கும்ப்ளேவுக்கு பிறகு அதே தொடரிலேயே கேப்டன் பொறுப்பேற்ற தோனி அணியை வெற்றி பாதையில் அழைத்து செல்கிறார். இன்று வரை தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. அந்த குறையை போக்குவது போலவே, தற்போது இங்கிலாந்துடன் படுதோல்வி அடைந்திருக்கிறது இந்திய அணி.

கும்ப்ளே வீழ்த்திய விக்கெட் கீப்பர் சபா கரீம்


2009இல் இந்திய அணி இரண்டே டெஸ்ட் தொடர்களில் மட்டுமே பங்கேற்றது. காரணம் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள். ஆனால் நிறைய ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது. 2009 இல் இந்தியா பல அபார வெற்றிகளை குவித்தது. அந்த ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு தொடர் என்று இரண்டில் மட்டுமே தோல்வி அடைந்தது. அந்த வருடம் சாம்பியன்ஸ் டிராபியை வென்று ஆஸ்திரேலியா நாங்கள் இன்னும் தரம் தாழ்ந்துவிடவில்லை என்று ஞாபகப்படுத்தியது. இத்தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வாட்சன் அதிரடியாக ஆடி வயிற்றில் புளியை கரைத்தார். மேலும் அந்த ஆண்டு நடந்த டுவென்டி20 உலகக்கோப்பையில் இந்தியா மண்ணை கவ்வியது. 2007இல் தவறவிட்ட கோப்பையை, அப்ரிடியின் சிறப்பான ஆட்டம் மூலம் வென்று காட்டியது பாகிஸ்தான். ஒரு சில போட்டிகள் தவிர இந்திய அணி ஆட்டங்களை பொறுத்தவரை சிறப்பாகவே செயல்பட்டு வந்தது. 2009 டிசம்பரில் இலங்கைக்கு எதிரான ஒரு தொடரில் இந்தியா விளையாடியது. 


இந்த தொடரையும் இந்தியாவே கைப்பற்றியது. இதில் முதல் போட்டி மிக சுவாரசியமானது. அதாவது முதலில் ஆடிய இந்தியா 414 ரன் எடுத்தது. சும்மாவே அசமந்தமாக ஆடும் நம்ம வீரர்களுக்கு குளிர் விட்டு போக, இலங்கை தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை வெற்றி பெரும் நிலை வந்துவிட, அப்போதுதான் இந்திய வீரர்கள் சுதாரித்துக்கொண்டார்கள். தில்ஷான் எடுத்த 160 ரன்களும், சங்ககாராவின் 90 ரன்களும் இலங்கை 400 ரன்களை எட்ட உதவியது. கடைசி ஓவரில் 11 ரன் தேவை. பந்தை நெஹ்ரா வீச ஆட்டம் பரபரப்பானது. இரண்டு பந்துகளில் 6 ரன் தேவை என்ற நிலையில் இலங்கை 2 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 400 ரன்களுக்கு மேல் இரண்டு முறை எடுத்த அணிகளின் பட்டியலில் தென்னாப்பிரிக்காவுடன், இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து கொண்டன. முன்னதாக நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை 443 எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


அதே போல அந்த ஆண்டு ஹாமில்டனில் நடந்த ஒரு போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 270 ரன் எடுத்தது. மழையால் ஆட்டம் தடைபட இந்தியா 283 எடுக்க்வெண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. பத்து ஓவரில் 83 ரன் எடுத்தபோது மறுபடியும் மழை 43 ஓவரில் 243 எடுக்கவேண்டும் என்று மாற்றப்பட்டது. களத்தில் நின்ற சேவாக்கும் கம்பீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு, 23 ஓவரில் 197 ரன் எடுக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அப்போது இந்தியா 201 ரன் எடுத்திருந்ததால், ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. சேவாக் 60 பந்துகளில் சதமடித்தார். இந்த மாதிரி மரண அடியை பார்க்காத வெட்டோரி, ஆட்டம் எப்போது முடியும் என்றாகி விட்டது என்றார்.


பிப்ரவரி 24, 2010 தேதியை சச்சினின் வரலாற்றில் மட்டுமல்ல, கிரிக்கெட் வரலாற்றிலேயே மறக்க முடியாது. அன்றுதான் நாற்பது வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் பலர் முயற்சி செய்து எட்ட முடியாத 200 ரன்னை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எட்டி, சச்சின் புதிய சாதனை படைத்தார். மேலும் அந்த போட்டியில் இந்தியா 400 ரன்களை கடந்து, மூன்று முறை 400 ரன்களை கடந்த ஒரே நாடு என்ற பெருமையை பெற்றது. தென்னாபிரிக்கா இரண்டு முறை 400 ரன்னுக்கு மேலும், ஒரு முறை 399 ரன்னும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சினுக்கு அடுத்த படியாக 194 ரன்களை பாகிஸ்தானின் அன்வரும், ஜிம்பாப்வேயின் கோவேண்ட்ரியும் எடுத்துள்ளார்கள். அதிலும் கோவேண்ட்ரிக்கு கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடைசிவரை 194 ரன்னிலேயே அவுட் ஆகாமல் இருந்துவிட்டார். அப்போது அவருக்கு அது ஒரு உலகசாதனை என்பது கூட தெரியாது என்பதுதான் வேடிக்கை.


இந்த மாதிரியான பல சந்தோஷ நிகழ்வுகள், இந்த முறை இந்தியர்களின் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டாகிவிட்டது. முன்னெப்போதும் போல இல்லாமல் இந்திய வீரர்களின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது. எந்த ஒரு ஆட்டத்திலும் அவர்கள் ஏமாற்றம் அளிக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா மிகுந்த தடுமாற்றத்துடன் ஆடியது. குறிப்பாக மூன்று தொடர்களில், இறுதிப்போட்டியில் இலங்கையுடன் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது. இந்திய பேட்டிங்கை குறை சொல்ல முடியாது. ஆனால் பந்து வீச்சின் தரம் குறையதொடங்கியதால் வந்த வினை. கும்ப்ளே இல்லாத இடத்தை நிரப்ப, ஓஜா, மிஸ்ரா மற்றும் அஸ்வின் முயன்று கொண்டிருந்தார்கள். ஆனால் 2010இன் இறுதியில் 5 - 0  என்ற கணக்கில் நியூசிலாந்தை வென்றது. இருபது ஓவர் போட்டிகளில் அந்த ஆண்டு இங்கிலாந்து உலகசாம்பியன் ஆனது. ஆனால் இதை பற்றி எல்லாம் இந்தியர்கள் கவலைப்படவே இல்லை.


2010 இறுதியில் தென்னாபிரிக்கா பயணமான இந்திய அணி டெஸ்ட் தொடரை டிரா செய்தாலும், 2011 ஆரம்பத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது. இந்த தொடருக்கு அடுத்தபடியாக இந்தியா நேரடியாக 2011 உலகக்கோப்பையில் தான் விளையாடவேண்டும். "இதென்னடா சோதனை" என்றாகி விட்டது. 2009 முதல் 2010 வரையிலான கிரிக்கெட் போட்டிகளை பார்த்தபோது தெளிவாக தெரிந்த விஷயம் ஒன்று, ஆஸ்திரேலியா பலவீனமாக இருந்தாலும், தோற்பது கடினம். தென்னாபிரிக்காவும் இலங்கையும் வழக்கம்போல முஷ்டியை மடக்கிக்கொண்டு நிற்கின்றன. அவர்களை வீழ்த்துவது அவர்களின் கையிலேயேதான் இருக்கிறது. போட்டி நடக்கும் அன்று அவர்களின் ஆட்டமே அதை நிர்ணயிக்கும். மற்றபடி, இங்கிலாந்து ஸ்ட்ராஸ் தலைமையில் நல்ல போட்டியினை அளிக்கலாம். ஆனால் வெல்வது கடினம். வெஸ்ட் இண்டீஸ் மறுபடியும் வேஸ்ட் இண்டீஸ்தான். பாகிஸ்தானும், நியூசிலாந்தும் புரியாத புதிர். எப்போது எப்படி விளையாடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இதை விட ஒரு நல்ல வாய்ப்பு இந்திய அணிக்கு எப்போது அமையும்?


இந்திய பேட்டிங் வரிசையை அசைக்கவே முடியாது, கம்பீர், சேவாக், ரெய்னா, யுவராஜ், தோனி, விராட் கொஹ்லி, யூசுஃப் பதான் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின். இவர்களின் பீல்டிங்கும் மிக அருமை. வழக்கம்போல பவுலிங்தான் கொஞ்சம் நெருடல். இருந்தாலும் ஜாகீர்கான், அஷ்வின், ஹர்பஜன், முனாஃப் பட்டேல் ஆகியோர் நம்பிக்கை அளித்தனர். கடைசி நேரத்தில் பிரவீன் குமார் காயமடைய ஸ்ரீசாந்த் அணிக்குள் வந்தார். ஆனால் எல்லோருக்குமே கேள்வியை எழுப்பிய ஒரு விஷயம், பியூஸ் சாவ்லாவை அணிக்குள் சேர்த்ததுதான். இது இந்திய ரசிகர்களுக்குள்ளேயே அதிருப்தியை உண்டாக்கியது.


சரித்திரம் திரும்பியது - இறுதி அத்தியாயம்.... 
அடுத்த பதிவில்..... 


உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

August 16, 2011

என் கிரிக்கெட் கிரிக்கெட் வரலாறு - 18

நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சிவாதிகள் என்றும், கம்யுனிஸ்டுகள் என்றும் தன்னை அழைத்துக்கொண்டு, மக்களிடையே வகுப்புவாதத்தை வேறுவிதத்தில் தூண்டிவிட்டு, அதில் ஆதாயம் தேடும் பல போலி கம்யூனிஸ்ட் ஈனப்பிறவிகளுக்கு, "எந்த கொம்பனாலும் எம்மை ஒன்றும் செய்துவிட முடியாது!" என்று அனைத்து மத சகோதரர்கள் சார்பிலும் கூறிக்கொள்கிறேன்.  பணி நிமித்தமாக கேரளா சென்று விட்டதால், சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. ஆகவே மறுபடியும் ஒரு சிறிய இடைவெளி விழுந்துவிட்டது. 


முன்குறிப்பு: இதுவரை மிக நிதானமாக சென்றுகொண்டிருந்த இந்த தொடர் 2007 உலகக்கோப்பைக்கு பிறகு நடந்த நிகழ்வுகள் அநேகம் பேருக்கு பரிச்சயம் என்பதால், வெகு வேகமாக செல்லும் என்று கூறிக்கொள்கிறேன். 


முடிகிறது ஆஸ்திரேலியர்களின் ஆதிக்கம்... 


இந்த தொடரின் முந்தைய பகுதிகளைப்படிக்க...

மில்லேனியத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு அசுர பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது. போகப்போக அதன் பலம் குறந்துவிடும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, அதன் பலம் அதிகரித்துக்கொண்டே போனது. இதற்கு ஒரு முடிவே கிடையாதா? என்ற ஏக்கம் போய், விரக்தியே ஏற்பட்டு விட்டது. ஆஸ்திரேலிய அணி பெரும் அரிய தோல்விகள் பெரிய அளவில் பேசப்பட்டன. என்னதான் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு என்பது உண்டுதானே? 2007 உலகக்கோப்பையை வென்று அசைக்கமுடியாத ஒரு அணியாக தன்னை நிலைநிறுத்தியது ஆஸ்திரேலியா. ஆனால் கடந்த பத்தாண்டுகளில், ஆஸ்திரேலியா பல வெற்றிகளை ஒரு முழு அணியாக பெற்றாலும், அதற்கு ஆணிவேறாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் ஷேன்வார்னே, மற்றொருவர் மெக்ராத். ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இனி குறையும் வாய்ப்பு என்று ஒன்று இருக்கிறதென்றால், அது இவ்விருவரின் ஓய்வுக்கு பிறகு ஏற்படப்போகும் வெற்றிடத்தால்தான் உண்டாக்க முடியும். அதற்குள் வேறு ஒரு மாற்று வீரர்களை அவர்கள் உருவாக்கி விட்டால் அதுவும் நடக்காமல் போகும் வாய்ப்புகள் உண்டு. இது கிரிக்கெட் ரசிகர்களிடயே பரவலாக பேசப்பட்ட விஷ்யம்.


இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்துவிட்டு, தலையை தொங்கப்போட்டுக்கொண்டு நாடு திரும்பியது. எல்லா மீடியாக்களும் அலறின. அடுத்த கேப்டன் யார்? என்று மறுபடியும் ஒரு கேள்வி எழுந்தது. மாறாக அடுத்து வந்த ஒரு சில தொடர்களுக்கு டிராவிட்டே கேப்டனாக தொடர்ந்தார். அடுத்த இரண்டு மாதங்களில் இந்திய அணி சரிசம அளவில் வெற்றி தோல்விகளை பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்திடம், டெஸ்ட் தொடரை வென்றாலும், ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது. அந்த நேரத்தில் திடீர் திருப்பமாக, டிராவிட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அத்தனை காலம் டிராவிட் அணித்தலைமையில் நீடித்ததன் காரணம், தகுதியான கேப்டனாக யாரை தேர்ந்தெடுப்பது? என்ற குழப்பமே. இறுதியாக, டெஸ்ட் அணிக்கு அனில் கும்ப்ளேவை விட்டால் ஆளில்லை என்ற நிலையில் அவரை கேப்டன் ஆக்கினார்கள். தோனியை நம்பி டெஸ்ட் அணியை ஒப்படைக்க இந்தியா நிர்வாகிகளுக்கு அப்போது துணிச்சல் இல்லை. மேலும் கும்ப்ளேவே, "என்னை கேப்டனாக நியமித்தால், சிறப்பாக செயல்படுவேன்." என்று வெளிப்படையாகவே தான் கருத்தை வெளியிட்டார். 


ஆனால் ஒருநாள் தொடருக்கு யாரை கேப்டன் ஆக்குவது என்ற குழப்பம் இருந்தது. இதற்கு இடையே கிரிக்கெட்டின் புதிய பரிணாமமான இருபது ஓவர் போட்டிகள் பிரபலமடைந்து வந்தன. 2005 ஆம் ஆண்டில் இருந்தே ஆடப்பட்டு வந்தாலும், 2007இல் தான் பரவலாக பேசப்பட்டது. இருபது ஓவர் போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில், இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் ஒன்றை தென்னாப்பிரிக்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில் பங்கேற்கும் இந்தியா அணிக்கு கேப்டனாக தோனியை நியமிக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. முழுக்க முழுக்க இளைஞர்களை மட்டுமே கொண்ட ஒரு சோதனை முயற்சி அணி தென்னாபிரிக்கா சென்றது. இருபது ஓவர் போட்டிகளைபொருத்தவரை, எல்லா அணிகளுமே கொஞ்சம் தடுமாறித்தான் போயின. புதிய ஆட்ட முறைகளை கற்றுக்கொள்ள சிரமப்பட்டன. இதில் ஆஸ்திரேலியாவும் அடக்கம். கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமைந்த இந்த தொடரில் இந்திய அணி மிக நேர்த்தியாக ஆடியது. குறிப்பாக, ஆஸ்திரேயாவுடனும், இங்கிலாந்துடனும் இந்தியா ஆடிய ஆட்டங்கள் மிகசிறப்பானவை. 


இங்கிலாந்துடன் நடந்த ஆட்டத்தில் பிளிண்ட் ஆப், யுவராஜூடன் வாக்கு வாதத்தில் ஈடுபட, இடையில் சிக்கி பிராட் பலிகடா ஆகினார். அவரது ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையை படைத்ததோடு, 12 பந்துகளில் 50 ரன் சேர்த்து இன்னொரு சாதனையையும் படைத்தார் யுவராஜ். இது பிராட் வாழ்க்கையில் கரும்புள்ளியாகவே அமைந்து விட்டது. இப்போது யாராவது பிராடை பற்றி பேசினால், ஆஷஸில் அவர் செய்த சாதனைகளை பற்றி பேச மறந்தாலும், இந்த சிக்சர்களை பற்றி பேச மறப்பதில்லை. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, கடைசி நேரத்தில் மிஸ்பா உல் ஹக் கொடுத்த சிறிய டென்சனையும் மீறி கோப்பையை கைப்பற்றியது. தோனி இந்தியாவின் புதிய ஹீரோ ஆனார்.



கோப்பையுடன் நாடு திரும்பிய இந்த அணிக்கு, உற்சாக வரவற்பு அளிக்கப்பட்டது. அடுத்ததாக தொடங்க இருந்த ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடருக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஆணிவேர்களான, ஷேன்வார்ன், மற்றும் மெக்ராத் இல்லாத அணி பலவீனமாக காட்சி அளித்தது. ஆனால் புதிய பவுலர்களான ஜான்சன், கிளார்க் ஆகியோர் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தனர். தொடரில் இரு அணிகளும் சமமாகவே ஆடின. இந்த காலகட்டத்தில் இந்திய அணி எதிர் அணிகளுக்கு பெரிய சவாலாகவே விளங்கியது . 2008 தொடக்கத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தொடரில் பங்கேற்றது. 


அதுவரை வெளியூர் தொடர்களில் தோற்றாலும், உள்ளூரில் அசைக்க முடியாத சக்தியாக ஆஸ்திரேலியா இருந்தது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றினாலும் அதன் வெற்றி கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதற்கு காரணம் ஜனவரி 2 ஆம் தேதி சிட்னியில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டி. இப்போட்டியில், "அம்பயர்களின் தவறான தீர்ப்புகளே இந்தியா அணி தோல்விக்கு காரணம்." என்று சொல்லப்பட்டது. இரு இன்னிங்ஸ்களிலுமே ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் 4 முறை அம்பயர்களால் காப்பாற்றப்பட்டார். மேலும் பல ஆஸ்திரேலிய வீரர்கள் தவறான தீர்ப்புகளால் காப்பாற்றப்பட்டார்கள். இந்தியா வீரர்களோ, தவறாக அவுட் கொடுக்கப்பட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லாமே அவுட் இல்லை என்று தெளிவாக தெரிந்தவையே. அதிலும் கங்குலிக்கு கிளார்க் பிடித்த ஒரு கேட்ச் தரையில் பட்டு வந்தது தெளிவாக தெரிந்தாலும், அம்பயர் பாண்டிங்கிடம் கருத்து கேட்க, அவர் அவுட் என்று சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட 12 முறை இந்தியர்களுக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டது. இதற்கு மேலும் இந்த போட்டியில் ஜெயிக்க எப்படி முடியும்?


இந்த போட்டியில் ஆஸ்திரேலியர்களில் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. "அதுவரை தோல்வியையே பார்க்காத காரணத்தால் ஒரு கட்டத்தில் தங்களின் நேர்மையை கூட வெற்றிக்காக அடகுவைக்க ஆஸ்திரேலியர்கள் தயாராகி விட்டார்கள்." என்று கூறினார்கள். இதே தொடரில், ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸும், இந்தியாவின் ஹர்பஜனும் கடுமையாக மோதிக்கொண்டார்கள். "தன்னை குரங்கு என்று திட்டினார்" என்று இவர் சொல்ல, "நிற வெறியோடு நடக்கிறார்" என்று அவர் சொல்ல, மிக மிக சர்ச்சைக்குரிய தொடராக அமைந்தது இந்த தொடர். தாங்கள் தோல்வி அடையப்போகிறோம் என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஆஸ்திரேலியாவின் சுய ரூபம் அங்கே பல்லிளித்தது. தொடர்ந்து வந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி உத்வேகத்துடன் ஆடியது. ஒவ்வொரு போட்டியிலும் கடுமையான நெருக்கடியை அளித்தது. இலங்கையும் தன் பங்குக்கு ஆடினாலும் அதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. 


பெரும்பாலும் இறுதிப்போட்டி என்று வந்து விட்டால் ஆஸ்திரேலியர்களின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் இந்த முறை மூன்று இறுதிப்போட்டிகளில் முதல் இரண்டில் இந்தியா அணி வென்று மூன்றாவது போட்டிக்கு தேவையே இல்லாமல் செய்து விட்டது. இது வரை ஆஸ்திரேலியாவே இப்படி செய்யும். ஆனால் முதல்முறையாக இந்தியா அதை அணி நிகழ்த்திக்காட்டியது. இளைஞர் படைக்கு மறுபடியும் ஒரு மாபெரும் வெற்றி. இந்த வெற்றி அப்போது உலகக்கோப்பை வெற்றிக்கு சமமாக போற்றப்பட்டது. இத்தொடரில் புதிய வீரராக களமிறங்கியவர் இஷாந்த் சர்மா. தொடர் முழுக்க பாண்டிங்கை வீழ்த்துவதையே முழு குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தார். டெஸ்ட் தொடரில் தன் பெயரை நாறடித்துக்கொண்ட ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரில் கவனமாக ஆடியது. இருந்தாலும் அதன் உண்மை முகம் அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அவர்கள் அணியின் ஒரே ஜென்டில்மேனாக கில்க்றிஸ்ட் மட்டுமே வருணிக்கப்பட்டார். ஒரு போட்டியில் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்த பின்னரும் தானாகவே வெளியேறி, தன்னை பற்றிய வருணனைகளை உண்மை என்று நிரூபித்தார். ஒரு பத்திரிக்கை ஒரு படி மேலே போய், "ஆஸ்திரேலியர்கள் தாமாகவே களத்தை விட்டு வெளியேறுவது, அவர்கள் அணியின் பெயரை கில்க்றிஸ்ட் என்று மாற்றினால் மட்டுமே சாத்தியம்." என்று கூறியது. 


இந்த தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் ஒருமைப்பாடு நிலைகுலையத்தொடங்கியது. தோல்வி அடையவில்லை என்றாலும், அவர்களால் வெற்றி பெற போராட வேண்டி இருந்தது. மறுபுறம் இந்தியாவோ, வெற்றிகளை வாரிக்குவிக்க தொடங்கியது. முழுமையான ஆதிக்கம் செலுத்த வில்லை என்றாலும், தேவையான வெற்றிகளை அடைந்து வந்தது. 2008 ஆம் ஆண்டு முழுக்க இந்தியா அணியில் மட்டுமல்ல, தோனி காட்டிலும் மழைதான். சென்ற தொடர்களில் எல்லாம் வெற்றி. ஒருபுறம் கும்ப்ளே தலைமையில், டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொண்டிருக்க, தோனி தலைமையில் மறுபுறம் ஒருநாள் போட்டிகளை வென்று கொண்டிருந்தது. குறிப்பாக 2008 இறுதியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு தொடர். எழு போட்டிகள் கொண்ட அந்த ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும்போது இந்திய அணிதான் வெல்லும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் இங்கிலாந்து படுதோல்வி அடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் ஐந்து போட்டிகளில் இந்தியா வென்று விட, அந்த நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் ஆறு  இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளால் தொடரை பாதியிலேயே கைவிட்டுவிட்டு நாடு திரும்பியது இங்கிலாந்து. 


இந்திய அணிக்குள் இடம்பெற்ற ரெய்னா, யுவ்ராஜ், சேவாக் என்று எல்லா வீரர்களுமே மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார்கள். இந்திய பவுலர்களும் சிறப்பாக பந்து வீச தொடங்கி இருந்தார்கள். என்னதான் இந்தியா சிறப்பாக ஆடத்தொடங்கி இருந்தாலும் அப்போதைக்கு எனக்கு உலகக்கோப்பை மீது நாட்டம் உண்டாகவில்லை. காரணம் இந்தியாவின் பழைய உலகக்கோப்பை தோல்விகளாகவும் இருக்கலாம். மேலும் அந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ஐபிஎல் என்ற உள்ளூர் கிரிக்கெட் அமைப்பு, கிரிக்கெட்டை ஒரு மசாலா சினிமாவாக மாற்றி அதன் தரத்தை குறைக்கத்தொடங்கி இருந்தது. ஆட்டங்கள் முதலில் சுவாரசியமாக இருந்தாலும் போகப்போக போராடிக்கத்தொடங்கின. ஆட்டங்களின் சுவாரசியங்களை கூட்ட, நிறைய நடிகைகள், கவர்ச்சி, சண்டை சச்சரவு, என்று மசாலாவை அதிக்கப்படுத்த, அது மாறாக வெறுப்பையே உண்டாக்கியது. ஆனால் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் பண மழையில் நனையத் தொடங்கினார்கள். இந்தியா வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்களும் இதனால் ஈர்க்கப்பட்டார்கள். இது ஐ‌சி‌சிக்கு பல சங்கடங்களை உண்டாக்கியது. இந்த காலகட்டத்தில் உலகின் மிகப்புகழ் பெற்ற வீரராக உருவானார் இந்தியா கேப்டன் தோனி. விளம்பரங்களின் மூலம் பெரும் ஆண்டு வருமானத்தில் அதுவரை முதலிடத்தில் இருந்த சச்சினை பின்னுக்குத்தள்ளினார். எல்லாமே இந்திய அணிக்கு சாதகமாகவே சென்று கொண்டிருந்தது..... 


உருவாகிறது உலகக்கோப்பைக்கான அணி.... அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....



முழுவதும் படிக்க >>

August 9, 2011

என் கிரிக்கெட் வரலாறு - 17

கரிபியன் மண்ணில் பூசிக்கொண்ட கரி 



கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கிரிக்கெட்டின் ஆர்வம் சிறிது குறைந்தாலும் முற்றிலுமாக அது நீங்கவில்லை. பதினைந்து வருடமாக அல்லவா கிரிக்கெட் பார்த்து வருகிறேன்? அவ்வளவு சீக்கிரம் மனதில் இருந்து நீங்கி விடுமா என்ன? ஆனால் ஒரு நெருடல் இருக்கவே செய்தது. கேப்டனாக இல்லாமல் அணியில் ஒரு சாதாரண வீரனாக கங்குலி விளையாடுவது எனக்கு பிடிக்கவில்லை. நான் கூட நினைத்திருக்கிறேன். "இப்படி விளையாடுவதற்கு பேசாமல் ஓய்வு அறிவித்து விடலாம்." என்று. ஆனால் கங்குலிக்கு கிரிக்கெட் மீதான தீராத காதலே அவரை தொடர்ந்து கிரிக்கெட் ஆட செய்கிறது என்பது பிறகே புரிந்து கொண்டேன். 


2006 ஆம் ஆண்டில், இந்திய அணி டிராவிட் தலைமையில் சிறப்பாகவே ஆடியது. எல்லா அணிகளுமே ஆட்ட நுணுக்கங்களுள் புதிவித யுத்திகளை பயின்று 2007 உலககோப்பை போட்டிகளுக்கு தங்களை தயார் செய்து கொண்டிருந்தன. இந்தியாவும்தான். ஆனால் இந்த காலகட்டத்தில், பாகிஸ்தான் அணியில் மட்டும் பல குழப்பங்கள் நிலவி வந்தன. கேப்டன்கள் திடீர் திடீர் என்று மாற்றப்பட்டார்கள். சில வீரர்கள் போதை மருந்து, விபசார வழக்கு போன்றவற்றுள் சிக்கினார்கள். அவ்வப்போது சூதாட்ட புகாரிலும் மாட்டினார்கள். இதனால் பாகிஸ்தான் அணி ஒரு நிலையான அணியாக இல்லாமல் தடுமாறியது. ஒரு சில நல்ல வீரர்கள் கூட இந்த மாதிரி வழக்குகளில் சிக்கி காணாமல் போனார்கள். நான் முன்பே சொன்னது போல இந்திய அணிக்கு ஒரு குணம் உண்டு. உலகக்கோப்பையில் மண்ணை கவ்விய பிறகு அடுத்த மூன்றாண்டுகளுக்கு அசுர வேக வளர்ச்சி அடையும். எல்லாம் சிறப்பாக போய்க்கொண்டிருக்கும்போது, சரியாக உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கும் சில மாதங்களுக்கு முன்பாக எல்லா வீரர்களுக்கு அவுட் ஆஃப் ஃபார்ம் ஆகி பரிதாபமாக நிற்பார்கள். 


2006 இறுதியில் தென்னாபிரிக்கா சென்ற இந்திய அணி தர்ம அடி வாங்கி திரும்பியது. டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் பரிதாபமாக இழந்து நாடு திரும்பியது. மறுபடியும் தென்னாபிரிக்கா, உலகக்கோப்பை வாங்கும் தகுதி எங்களுக்கு இருக்கிறது என்று நிரூபித்தார்கள். 434 ரன்களை துரத்தி வென்ற பிறகு, அப்படித்தான் நினைக்கத்தோன்றியது. இந்திய அணி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் இலங்கையோடு சிறிய தொடர்களில் உள்நாட்டில் ஆடி கோப்பையை வென்ற பின் ஓரளவுக்கு நம்பிக்கையோடு வெஸ்ட் இண்டீஸ் நோக்கி பயணமானார்கள். இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தோடு சொன்னது ஆஸ்திரேலியாவை மட்டும்தான். தென்னாபிரிக்கா ஓரளவுக்கு பலத்துடன் இருந்தாலும் கடந்த கால நினைவுகள் அவர்களின் மீது ஒருவித அவநம்பிக்கையையே உண்டு பண்ணியது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா இருந்தாலும், அதற்கடுத்த படியாக அணிவரும் எதிர்பார்த்தது, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளைத்தான்.



2003 இல் ஜெயசூரியாவுக்கு அடுத்த படியாக பதவியேற்ற அட்டப்பட்டு ஓரளவுக்கே ஜொலிக்க முடிந்தது. அதன் பின் இளைஞரான ஜெயவர்தனே தலைமையில் படு வேகமாக முன்னேறியது இலங்கை. முழுக்க முழுக்க இளைஞர்களைக்கொண்டு ஒரு துடிப்பான அணியாக விளங்கியது இலங்கை. எல்லா அணிகளுமே முன்னோக்கி சென்று கொண்டிருக்கையில், தன் ஆரம்பகால நிலையில் கூட இல்லாமல், படு வேகமாக பின்னோக்கி சென்று கொண்டிருந்தது ஜிம்பாப்வே அணி. அவர்களின் நட்சத்திர வீரர்களான, பிளவர் சகோதரர்கள், ஹீத் ஸ்ட்ரீக், ஆகியோர் இல்லாமல், ஒரு தரமற்ற அணியாகவே விளங்கியது. மாறாக கடந்த காலங்களில் தடுமாறி வந்த பங்களாதேஷ் திறமையாக ஆடத்தொடங்கியது. இப்படி பட்ட நிலையில், "உலகக்கோப்பையை வெல்வது அப்புறம் இருக்கட்டும், முதலில் அரையிறுதிவரை செல்லலாம்." என்ற அரைகுறை நம்பிக்கையோடே 2007 உலகக்கோப்பையை எதிர்கொண்டேன். 


இந்த தொடரை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சுவாரசியம் இல்லாமல் போனதன் காரணம், கங்குலியின் தலைமை இல்லாதது மற்றும் போட்டிகள் நடப்பது மேற்கிந்திய தீவுகளில். அங்கே எப்போதுமே காலநிலை மோசமானதாகவே இருக்கும். கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலும் மழை பெய்யும். மேலும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு மேலேதான் ஆட்டங்கள் தொடங்கும். ஆகவே விடிய விடிய உட்கார்ந்து ஆட்டங்களை பார்ப்பது சாத்தியமில்லை. இவ்வாறு பல காரணங்கள் இந்த போட்டிகளில் உள்ள ஈடுபாட்டை குறைத்தது. வழக்கம்போல கோலாகலமாக தொடங்கியது 2007 உலகக்கோப்பை போட்டிகள். போட்டிக்கான ஏற்பாடுகள் மிகவும் ஆடம்பரமாக இல்லாமல் எளிமையாகவே இருந்தன . பி‌சி‌சி‌ஐ போல ஒரு பணக்கார அமைப்பு கிடையாது என்பதால், டபில்யு‌ஐ‌சி‌பி அரைகுறையாகத்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தன. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? அணி வீரர்களுக்கு கூட சரியாக ஊதியம் வழங்க முடியவில்லை. இது பல வீரர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. இந்த உலகக்கோப்பை போட்டியை நடத்தி சரியான லாபம் சம்பாதித்து விடலாம் என்று அவர்கள் போட்ட கணக்கு தப்பாகப்போனது. 


நான்கு பிரிவாக பிரிக்கப்பட்ட அணிகளில், ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு பெரிய அணிகள் இருந்தன. இந்திய அணி இருந்த பிரிவில், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பெர்முடா ஆகிய அணிகள் இருந்தன. அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் ஒரே பிரிவில். அதனோடு இரண்டு சின்ன அணிகள். சிங்கம் மற்றும் புலி ஆகிய விலங்குகளோடு இரண்டு சுண்டெலிகளும் ஒரே அறையில் மாட்டிக்கொண்டதைப்போல இருந்தது. மரண அடி. நெதர்லாந்துக்கு எதிராக நடந்த போட்டியின் 30ஆவது ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து உலகசாதனை புரிந்தார் கிப்ஸ். இந்த போட்டியில் தென்னாபிரிக்கா 40 ஓவரில் 353 ரன் எடுத்தது. மழை பெய்திருக்காவிட்டால் 500 ரன் எடுத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த பிரிவில் கடைசியில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதிய போட்டியில் 377 எடுத்த தான் உலகச்சம்பியன்தான் என்று நிரூபித்தது ஆஸ்திரேலியா.இருந்தாலும் தொடர்ந்து வந்து 294 எடுத்தது தென்னாபிரிக்கா. 


இந்திய அணிக்கு முதல் போட்டி பங்களாதேசுடன். அசால்டாக களமிறங்கிய இந்திய அணியை கலங்கடித்தது பங்களாதேஷ். இந்திய அணி முக்கி முக்கி 192 எடுத்தது. நிதானமாக அதை துரத்தி வென்றது பங்களாதேஷ் அணி. முதல் போட்டியிலேயே செருப்படி. அடுத்த போட்டியில் பெர்முடாவை எதிர்கொண்ட இந்திய அணி, முதலாளி மீதுள்ள கோபத்தை, அப்பாவி மனைவி மீது காட்டும் வீரம் மிக்க கணவன் போல, பெர்முடாவை துவைத்து எடுத்தது. முதல் முறையாக 400 ரன்களை கடந்து சாதனை படைத்தது. மேலும் ஒரே போட்டியில் 18 சிக்சர்களுக்கு மேலே அடித்தும் சாதனை படைத்தது. ஆனால் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இலங்கையுடனான போட்டியில் வென்று விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கையில், அதற்கும் ஆப்பு வைத்தது இலங்கை. தற்போது இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு பெர்முடா கையில். அதாவது, அடுத்து நடக்கவிருக்கும், பங்களாதேஷ் உடனான போட்டியில் பெர்முடா வென்று விட்டால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு சென்று விடும். நம் நிலைமையை பார்த்து வெட்கமாக இருந்தது. பெர்முடவால் என்ன செய்ய முடியும்? இந்திய ரசிகர்களை பொறுத்தவரை முதல் சுற்றோடு இந்த உலகக்கோப்பை முடிந்து போனது. 


இதே அணிதான் 2003 உலகக்கோப்பையிலும் ஆடியது. ஒன்றிரண்டு வீரர்கள் தவிர அனைவரும் அதே வீரர்கள்தான். ஆனாலும் இந்திய அணி வரலாறு காணாத அளவில் முதல் சுற்றிலேயே படுதோல்வி அடைந்து வெளியேறி விட்டது. ஒரு பக்கம் வருத்தம். மறுபக்கம், இப்போது தெரிந்திருக்கும் கங்குலியின் அருமை என்று ஒரு எண்ணம். கிட்டத்தட்ட என் உலகக்கோப்பை கனவு வடிந்தே போய் விட்டது. "போங்கடா, நீங்களும் உங்க கிரிக்கெட்டும்!" என்று கூட தோன்றி விட்டது. மீதி உலகக்கோப்பை போட்டிகளை அனைத்தையுமே பேப்பரில் படித்தே தெரிந்து கொண்டேன். நமக்குத்தான் இப்படி என்றால் டி பிரிவில் இன்னும் பெரிய அதிர்ச்சி. இக்கட்டான சூழ்நிலையில் அயர்லாந்தை சந்தித்த பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே ஜிம்பாப்வே உடன் ஒரு போட்டி டிரா ஆனதால், அடுத்த சுற்றுக்கு அயர்லாந்து தகுதி பெற, வெளியேறியது பாகிஸ்தான். மறுநாள் செய்தித்தாளில் வந்த செய்தி கிரிக்கெட் உலகையே கதி கலங்க செய்தது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் இறந்து விட்டார். அது தற்கொலையா அல்லது கொலையா என்று தற்போதும் சர்ச்சைகள் நிலவுகின்றன. சூதாட்ட ஏஜெண்டுகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 


சூப்பர் 8 சுற்றுக்கு வந்த எட்டு அணிகளில் இரண்டு அணிகள் சிறிய அணிகள். அதிலும் அயர்லாந்துக்கு இது முதல் தொடர். அயர்லாந்து அணியை பொறுத்தவரை, ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. அதே போல பங்களாதேஷ் அணியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அவர்களின் பயிற்சியாளர் வாட்மோர். இவர் 1996இல் இலங்கை உலகக்கோப்பை வெல்வதற்கு பெரும்பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் சொதப்ப, அதை மற்ற அணிகள் பயன்படுத்திக்கொண்டன. ஒரு வழியாக அரையிறுதிக்கு இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றன. மண்ணின் மைந்தர்கள் என்பதை தவிர எந்த தகுதியுமே இல்லாத வெஸ்ட் இண்டீஸ் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்தது. 


நியூசிலாந்தை எளிதாக வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை. மறுபக்கம் ஆஸ்திரேலியாவை சந்தித்தது தென்னாபிரிக்கா. ஆஸ்திரேலியாவை வெளியேற்றும் வல்லமை படைத்தது என்று எல்லோராலும் நம்பப்பட்ட தென்னாபிரிக்கா, பியூஸ் போன பல்ப் மாதிரி ஆடியது. நாக் அவுட் என்றால் தென்னாபிரிக்கா எப்படி ஆடும், ஆஸ்திரேலியா எப்படி ஆடும் என்று தெரிந்தும் தென்னாப்பிரிக்காவை நம்பியது நம் தவறுதான். இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா.  கிட்டத்தட்ட எல்லோருக்கும் இறுதிப்போட்டியின் முடிவு தெரிந்து போனது. ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று அடித்து சொன்னார்கள். ஏனென்றால் இந்த தொடர் முழுக்க, ஆஸ்திரேலியா தான் ஆடிய எல்லா போட்டிகளிலுமே முதலில் ஆடினால் 300க்கு மேலும், இரண்டாவதாக ஆடியிருந்தால் ரன்ரேட்டை 6க்கு மேலும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மழையால் குறைக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 38 ஓவர்களில் 281 ரன்களை குவித்தது. கில்க்றிஸ்ட் தன் வாழ்நாளின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கையின் பந்து வீச்சை சிதறடித்த இவர் 104 பந்துகளில் 149 குவித்தார். பிறகு களமிறங்கிய இலங்கையும் சிறப்பாகவே ஆடியது. 1999இல் பாகிஸ்தான் போலவோ, 2003இல் இந்தியா போலவோ, அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்து விடமாட்டோம் என்று ஆடினார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவின் இமாலய ஸ்கோரை அவர்களால் எட்ட முடியவில்லை. 36 ஓவரில் 215 எடுத்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால், இரு கேப்டன்களின் ஒப்புதலோடு ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா மூன்றாவது முறையாக உலகச்சம்பியன் பட்டம் வென்றது.  இலங்கை கில்க்றிஸ்டை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்தி இருந்தால், கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கும். 


இந்த உலகக்கோப்பையில் சுவாரசியமான விஷயங்களும் இருக்கத்தான் செய்தன. பெர்முடாவின் 130 கிலோ லேவேராக், இந்தியாவின் உத்தப்பாவுக்கு பிடித்த அபாரமான கேட்ச் மிகப்பிரபலம். மேலும் தென்னாப்பிரிக்கா, இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் கையில் 5 விக்கெட்டுகள் இருக்க, வெற்றி பெற நான்கே ரன்கள் தேவை என்ற வலுவான நிலையில், இலங்கையின் மலிங்கா தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பிறகு தட்டு தடுமாறி, ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் வைத்து தென்னாபிரிக்கா ஜெயித்தது வேறு விஷயம். அதேபோல இறுதி போட்டியில் கில்க்றிஸ்ட் தனது கையுறைக்குள் ஸ்குவாஷ் பந்துகளை வைத்துக்கொண்டு விளையாடினார். பிடிமானத்துக்காக இதை பயன் படுத்தியதாக அவர் கூறினார். இந்த விஷயம் பல விவாதங்களை கிளப்பி பின்னர் அடங்கியது. 

முழுக்க முழுக்க ஆஸ்திரேலியர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்த உலகக்கோப்பை தொடர், இதுவரை நடந்த தொடர்களிலேயே, சுவாரசியமில்லாத ஒரு உலகக்கோப்பை தொடர் என்று எல்லோராலும் வருணிக்கப்பட்டது. இதன் பின்னர், ஒரு சில விவாதங்களில், இனிமேல் ஆஸ்திரேலியாவை உலகக்கோப்பை போட்டிக்குள் அனுமதிக்க கூடாது. அதற்கு பதிலாக மற்ற நாடுகளுக்குள் போட்டி வைத்து, அவர்களுள் ஒரு சாம்பியனை தேர்ந்தெடுத்து, அவர்களோடு ஆஸ்திரேலியா மோதலாம் என்று கேனைத்தனமான கருத்துக்களும் உலாவந்தன. இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை, இந்த உலகக்கோப்பை தொடர் என்பது ஒரு கெட்ட கனவு. அதை அனைவரும் மறக்கவே விரும்புகின்றனர். நானும்தான்.


முடிகிறது ஆஸ்திரேலியர்களின் ஆட்சி, கரை சேர்க்க வந்த தோ(ணி)னி... 

அடுத்த பதிவில்....

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...