தயவு செய்து என்னை யாரும் புரட்சிக்காரன் என்று சொல்லாதீர்கள். நான் ஒரு புரட்டுக்காரன்.
எனக்கு கம்யுனிசம் பிடிக்கும். கம்யுனிஸ்டுகளை பிடிக்காது. நண்பர்களை பிடிக்கும். தோழர்களை பிடிக்காது. கடவுள் நம்பிக்கை உண்டு. மத நம்பிக்கை கிடையாது. இவை எல்லாமே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள். காலநிலை, மனநிலை பொறுத்து இவை மாறும். ஆகவே நான் ஒரு புரட்டுக்காரன். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் மாறியதே இல்லை. அது என் பண்பு. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அயோக்கியனாக இருந்தாலும் அவனும் ஒரு மனிதன்தான். அவனை இழித்துக்கூறவும், பழித்துககூறவும் ஆயிரம் காரணம் இருந்தாலும், இவற்றை செய்யாமல் இருக்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது நான் கற்ற பண்பு.
மேலே சொன்ன பிடிக்காதுகள் எல்லாம் கொஞ்ச நாளாகத்தான் பிடிக்காதுகள் ஆகி இருக்கிறது. பதிவுகள் படிக்க ஆரம்பித்ததில் இருந்து. காரணம் கொஞ்சம் எழுத்து திறமையும், நாலு பேரின் ஆதரவும் இருந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற செய்கைகள். முதலில் சமூகத்தில் பிரபலமாக உள்ள ஒருவரின் மீது காரித்துப்புவது. அது அவர் முகத்தில் படாது என்பது வேறு விஷயம். ஏன் என்றால் அவ்வளவு உயரத்துக்கு அண்ணாந்து துப்பினால் அது எங்கே விழும் என்று தெரிந்ததே. ஆனாலும் அந்த பிரபலத்தின் அபிமானிகள் கோபம் கொண்டு ஏதாவது சொல்லிவிட்டால், "ஆஹா சிக்கிட்டாண்டா அடிமை!!" என்று சுற்றி நின்று கொண்டு துப்புவது.
"அட ஏன்டா துப்புர?" என்று இன்னொருவன் அவனுக்கும் அதுவே பரிசு. வெளிப்படையாவே சொல்கிறேன். ஒரு நடிகனுக்கோ, கிரிக்கெட் வீரனுக்கோ ரசிகனாக இருப்பது தவறில்லை. அவனுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிப்பது, அவனை கடவுளாக கொண்டாடுவது தவறுதான். இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பது நோக்கம் என்றால் நேரடியாக எழுதி விட்டால் முடிந்தது. அதை விடுத்தது, ரஜினி வயசென்ன, அவன் அப்பன் வயசென்ன என்றெல்லாம் எழுதுவது உங்கள் நோக்கம் ரசிகனை திருத்துவதல்ல. எல்லோரும் கொண்டாடும் ஒருவரை வசை பாடி உங்கள் வக்கிரத்தை காட்டுவது என்பதை தெளிவு படுத்துகிறது. ஒரு பதிவில் கருத்துரையிட்ட ஒரு நண்பர் காந்தியையும் ஸ்டாலினையும் ஒப்பிட்டு கூறினார். உடனே வெகுண்டெழுந்த தோழர், ஸ்டாலின் பக்கத்தில் நிற்க கூட தகுதி இல்லாதவன் இந்த காந்தி, துரோகி நாய் என்று ஆரம்பித்து விட்டார். ஏனென்றால் ஸ்டாலின் ஒரு மகாத்மா. ஸ்டாலின் மகாத்மாவாகவே இருந்து விட்டு போகட்டும். காந்தி என்ன நாயை விட கேவலமாக போய் விட்டாரா.
இன்னும் கொஞ்சநாள் போனால், சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ரஜினியையும், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஏ ஆர் ரகுமானையும், பாலச்சந்தர் என்ற பார்ப்பனர், பாட்டாளி வார்க்கத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கினர் என்று கூட சொல்வார்கள். அதாவது எங்கே ஒடுக்கப்பட்டவர்கள் மீண்டேளுந்து விடுவார்களோ என்று அஞ்சிய பார்ப்பன சக்தியான ரஜினி , ரகுமான் போன்றோர் திட்டமிட்டு திரைத்துறைக்கு வந்து, பொது மக்களின் மூளைகளை மழுங்கடித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள். முடிந்த வரை காரி துப்பியாகி விட்டது. எவனாவது வந்து நாங்கள் எல்லாம் அப்படி இல்லை என்று சொன்னால், நான் உன்னை சொல்லவில்லை. உன் தலைவனையும் சொல்லவில்லை. முட்டாள் ரசிகனைப்பார்த்துதான் சொன்னேன் என்பார்கள்.
எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. யாரை பற்றியும் தெரியாது. பதிவுலகத்துக்கு வருமுன் ஒரு சில விஷயங்களின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். இப்போது அது சுத்தமாக போய் விட்டது. அவற்றில் ஒன்று கம்யுனிசம். அதற்க்கு காரணம் முதலாளிகள் அல்ல. கம்யுனிசம் பிடித்துவிட்டால் காந்தியை திட்ட வேண்டுமா என்ன? கடவுள் ஒரு மது போதையாம். தோழர் சொல்கிறார். சரிதான். கடவுளையும் மதுவையும் ஒரே தட்டில் வைக்கும் போதே தெரிந்து விடுகிறது உங்களின் தரம். கம்யுனிசத்தை மறுப்பவன் கண்டிப்பாக நமிதாவின் தொப்புளுக்கு அடிமையாகத்தான் இருப்பானாம். என்ன கீழ்த்தரமான எண்ணம். இதை உங்களுக்கு கற்றுக்கொடுத்தது கம்யுனிசமா இல்லை உங்கள் கண்ணியமான தோழர்களா?
ஒன்று மட்டும் புரிகிறது, கம்யுனிசவாதியோ, முதலாளியோ, ஆத்திகனோ, நாத்திகனோ தான் வைப்பதுதான் சட்டம். தன் சித்தாந்தம் தான் சரி என்று நினைக்கிறான். அது பதிவுலகத்திலும்தான்
. கம்யுனிசத்தை எதிர்ப்பவர்கள் தங்களின் சூ..க்குள் தலையை நுழைத்துகொண்டவர்கள் என்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு தோழர் ஒருவர் புரட்சி மன்னிக்கவும், கடமையை செய்திருக்கிறார். அதாவது அவருக்கு புரட்சி என்பது பெரிய வார்த்தை. இதை கண்டதும் எழுந்த ஆதங்கத்திலேயே இந்த பதிவு எழுதி இருக்கிறேன்.
பி. கு. இதற்கு வரும் பின்னூட்டங்களில் ஆமாம் காந்தி நாய்தான், காரி துப்ப முடியாத அளவுக்கு ரஜினி என்ன அவ்வளவு உயரமா? ஈழத்தில் தமிழன் துன்புறுகிறான், போபால் பிரச்சனை சாதாரணமானதா போன்ற பின்னூட்டங்கள் வரும் என எதிர் பார்க்கிறேன்.. இந்த பதிவின் இறுதியில் தனி மனித தாக்குதலும் இருக்கிறது. அதையும் ஒப்புக்கொள்கிறேன்.