விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 27, 2010

சச்சினை எனக்கு பிடிக்காது ... தொடர்ச்சி.



எனக்கு பிடிக்காத எதுவும் விரைவில் மக்களிடம் புகழ் பெற்று விடுகிறது. நான் விரும்பும் எதுவும் தோல்வி அடைந்து விடுகிறது. இதற்கு நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். கார் ரேசில் ஹக்கினன், டென்னிசில் ஹிங்கிஸ், புட்பாலில் பிரான்ஸ் அணி, குறிப்பாக ஜுடேன், மைக் டைசன் என்று எனக்கு பிடித்தவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் அனைவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. அது ஆக்ரோசம். எனக்கு எப்போதுமே ஆக்ரோசமாக விளையாடினால் பிடிக்கும். அதாவது அதிரடி இல்லை. செயல்பாடுகளில் ஆக்ரோசம். இது பலபேருக்கு எரிச்சலை வரவழைத்து விடுகிறது. ஆனால் எனக்கு இது பிடிக்கிறது. இதனால்தான் எனக்கு ரோஜர் பெடரரை பிடிக்கும். சொல்லி வாயை மூடவில்லை அடுத்தடுத்து நடாலுடன் தோல்வி அடைந்தார். இதே போல தன் ஆக்ரோசத்தாலேயே பிறருக்கு பிடிக்காமல் போன ஒரு கிரிக்கெட் வீரரை பற்றித்தான் சொல்ல போகிறேன் (கண்டிப்பாக ஸ்ரீசாந்த் அல்ல).


சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று அடித்துக்கொள்பவர்கள் நிறையபேர் உண்டு. இதில் என்ன ஒரு சிறப்பு என்றால், ரஜினியை மட்டும் அப்போதைக்கு பிரபலமாக இருக்கும் எல்லா நடிகர்களிடமும் ஒப்பிட்டு சண்டையிடுவர். இது மோகன் காலத்தில் இருந்து, சிம்பு வரை தொடர்கிறது. அவர்கள் கேட்கும் ஒரு கேள்வி, இவன் என்ன பெரிய ரஜினியா? இதே மாதிரி ஒரு விஷயம் கிரிக்கெட்டிலும் நடந்து வருகிறது. அந்த மனிதர் சச்சின் டெண்டுல்கர். நீண்ட காலம் விளையாடுவதாலோ என்னவோ, காம்ப்ளி முதல், விராட் கொஹ்லி வரை அனைவரையும் சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். கடைசியில் இவன் சச்சினுக்கு இணை இல்லை என்று முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் வயது அடிப்படையில் சச்சினுடன் அதிகம் ஒப்பிடப்பட்டவர் ஒரே ஒருவர் மட்டும் தான். அவர்தான் சவுரவ் கங்குலி.


இவர்கள் இருவரால் எங்கள் நண்பர் குழுவில் பெரிய அடிதடியே நடந்திருக்கிறது. என்ன நீங்களும் வரிந்து கட்டிக்கொண்டு ரெடியாகி விட்டீர்களா? மன்னிக்கவும் இப்போது இந்த இருவரையும் ஒப்பிட்டு நான் பதிவிட போவதில்லை. எனக்கு ஏன் கங்குலி பிடிக்கும், ஏன் டெண்டுல்கர் பிடிக்காது என்றே சொல்ல போகிறேன். கங்குலி முதன் முதலில் களமிறங்கியது 1992 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மைதானத்தில். அந்த ஆட்டத்தில் அவர் எடுத்தது வெறும் மூன்று ரன்கள் மட்டும்தான். பின் தடாலடியாக நீக்கப்பட்டார். இதற்கு காரணம் வீரர்களுக்கு குளிர்பானம் சுமக்க மாட்டேன் என்று சொன்னார் என்று கூறப்படுகிறது. கங்குலி இதை திட்டவட்டமாக மறுத்தார். பின் நான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது 1996 இல் இங்கிலாந்தில் களமிறங்கினார். நான்கு ஆண்டுகளாக சேர்த்து வைத்த வைராக்கியம் மட்டையின் மூலமாக வெளியானது. அடுத்தடுத்து இரண்டு சதங்கள். அவருக்கு ஒரு நிலையான ஒரு இடம் அணியில் கிடைத்தது. பின் தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மடமடவென அணியில் நட்சத்திர வீரர் ஆனார். பின் 2000 ஆம் ஆண்டு கிளம்பிய சூதாட்ட புகார், சச்சினின் உடல் நிலை மற்றும் சரியில்லாத அணித்தலைமை எல்லாம் சேர்ந்து வேறு வழி இல்லாமல் கங்குலியை அணித்தலைவர் ஆக்கியது. அப்போது கடும் விமர்சனம் எழுந்தது. முதலில் குரல் எழுப்பியவர் யாராக இருப்பார்? வழக்கம் போல நம்ம கவாஸ்கர் தான் துவக்கி வைத்தார். அவருக்கு டெண்டுல்கரை தவிர வேறு யாரையும் அணித்தலைவராக நினைக்க முடியவில்லை. இருந்தாலும் கொல்கத்தா வீரர் என்ற வகையில் அமைதியாய் இருந்துவிட்டார் (கவாஸ்கரும் கொல்கத்தாதான்).



இந்த காலகட்டத்தில் அசாரைப்போலவே அணியில் நிறைய புதுமுகங்கள் தென்பட்டன. சேவாக், ஜாகிர்கான், யுவராஜ், ஹர்பஜன் என்று நிறைய மாற்றங்கள். இவர்களை நேர்த்தியாக கையாண்டு ஒரு வலிமையான அணியாக உருவாக்கினார். இப்போதுள்ள இந்திய அணியின் முன்னோடியான ஒரு அணியாக அவர் உருவாக்கிய அணி விளங்கியது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டம் வரை சென்றது பரபரப்பாக பேசப்பட்டது. எவ்வளவுக்கெவ்வளவு வெற்றி வந்ததோ அவ்வளவு விமர்சனங்களும் எழுந்தன. பின் கிரிக்கெட் போர்ட் கை மாறியது, பவார் தலைவர் ஆனார். மும்பை கை ஓங்கியது. விளைவு கங்குலி தூக்கி அடிக்கப்பட்டார்.


கங்குலி பற்றி சில சுவாரசியமான தகவல்கள்...


வெகு நாட்களாக ஒரு இடது கை பேட்ஸ்மேன் இல்லாத அணியாக இருந்த இந்திய அணியில் தலை சிறந்த இடது கை வீரராக திகழ்ந்தார். இவரது கவர் டிரைவ் மிக பிரசித்தம் பெற்றது. வர்ணனையாளர்கள் கங்குலிக்கு ஆப் சைடில் எத்தனை வீரர்களை நிறுத்தினாலும் அவர் பவுண்டரி அடிப்பதை தடுக்க முடியாது என்று கூறுவார்கள். அது பலமுறை நிரூபிக்க பட்டுள்ளது. அதே போல கங்குலி அடிக்கும் சிக்சர்கள். என்னதான் சச்சின் வேகமாக ரன் குவித்தாலும் அவரால் தொடர்ச்சியாக சிக்சர்கள் அடிக்க முடியவில்லை. கங்குலியை விட நூறு போட்டிகளில் அதிகமாக விளையாடியும் இன்னும் கங்குலியை சச்சின் சிக்சர்களில் முந்தவில்லை. அதுவும் சிக்சர் என்றால் சாதாரணமாக அல்ல. மரண அடி. மைதானத்துக்கு வெளியே தான் போய் விழும். அவர் 1996 இல் ஆடிய ஒருநாள் போட்டிகளில் இருந்து கவனித்து வருகிறேன். கங்குலிக்கு ஸ்பின்னர்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. குஷி ஆகி விடுவார். இரட்டை இரட்டையாக சிக்சர் அடிப்பது அவருக்கு பிடிக்கும். 


பிரைன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ், ஜெயசூரியா, கில்க்ரிஸ்ட் முதலானவர்களை Unstoppables என்பார்கள். அதாவது இவர்களை இருபது பந்துகளுக்குள் அவுட் ஆக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் கதை முடிந்தது. அவர்களாக நினைத்தால்தான் அவுட் ஆவார்கள். இதில் கங்குலியும் அடங்குவார். நிலைத்துவிட்டால் அவுட் ஆக்குவது கடினம். சளைக்காமல் விளையாடுவார். பந்து வீச்சிலும் ஓரளவிற்கு நம்பிக்கைக்குரிய வீரராக திகழ்ந்துள்ளார். டொராண்டோவில் நடந்த சஹாரா கோப்பையில், திறமையாக பந்து வீசி நம் வெற்றிக்கு வழிவகுத்தார். அசாருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் தலை சிறந்த கேப்டனாக விளங்கி உள்ளார். தன்னிடம் இருந்த ஆக்ரோசத்தை அப்படியே தன் அணியிடம் வர செய்தவர். அதற்க்கு முன் அடுத்தவர் என்ன சொன்னாலும் தலை குனிந்து செல்லும் பழக்கம் உடைய இந்திய வீரர்கள் முதல் முறையாக நிமிர்ந்து பார்க்க தொடங்கினார்கள். இங்கிலாந்தின் பிளின்ட் ஆப் ஒரு முறை இந்திய அணியினரை கேலி செய்வதற்காக தன் சட்டையை கழற்றி மைதானத்தில் சுற்றிக்கொண்டே ஓடினார். இது நடந்தது இந்தியாவில். அதற்க்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் கங்குலி இப்படி செய்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 


அசாருக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்த வீரர் கங்குலி. சச்சின் ரசிகர்களால், அசாரை விட பலமடங்கு அர்ச்சனை வாங்கியவர். இதற்க்கு முக்கிய காரணம் அவரது இயற்கையான ஆளுமை திறன். இதனால் சில விரும்பத்தகாத செயல்களை செய்து அதிருப்தியை சம்பாதித்து கொண்டார். தன்னால் ஏன் சச்சினின் இடத்தை பிடிக்க முடியாது? என்று கருதினார். ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். அவர் அப்படி நினைத்ததில் தவறில்லை. ஆனால் அவர் நடந்து கொண்ட விதம்தான் தவறானது. என்னை பொறுத்தவரை இருவருமே சமமான பலம் பொருந்திய திறமைசாலிகள். என் தம்பிக்கு கங்குலியை பிடிக்காது. அதை விட சச்சின் பிடிக்கும் என்பதே சரி. கொல்கத்தா அணி தோல்வி அடையும் தருவாயில் இருக்கும் போது, "கங்குலி தோற்கவேண்டும், கங்குலி தோற்கவேண்டும் , திறமையே இல்லாத இவனெல்லாம் சச்சினுக்கு நிகராக வரமுடியுமா? இவன் தோற்கவேண்டும், அணியில் இருந்து துரத்தப்பட வேண்டும்" என்று ஏக வசனத்தில் திட்டினான். எனக்கு கோபம் வந்து விட்டது. உண்மையிலேயே கங்குலி திறமையானவர் இல்லையா என்று தேடியதில் கிடைத்ததே கீழே காணும் தகவல். இருவரும் ஓரளவிற்கு ஒரே மாதிரியாகத்தான் விளையாடி இருக்கிறார்கள்.


                                                   
Player
SC Ganguly (India)
SR Tendulkar (India)
Mat
311
442
Inns
300
431
NO
23
41
Runs
11363
17598
HS
183
200*
Ave
41.02
45.12
100
22
46
50
72
93
4s
1122
1927
6s
190
185


(நன்றி cricinfo)



சச்சின் சிறந்த வீரர்தான் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரை ஆதரிக்கிறேன் என்று இன்னொருவரை தூற்றுவது சச்சின் மீது வெறுப்பையே உருவாக்குகிறது. இதற்க்கு சச்சின் எந்த வகையிலும் காரணம் இல்லை. "இந்த ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டியில், முழுக்க முழுக்க மும்பை அணிக்கே ஆதரவு இருந்தது. எங்களை பொறுத்தவரை சென்னைக்கு ஆதரவு நாங்கள் மட்டும்தான். ஒவ்வொரு வீரனுக்கும் மற்ற பத்து பேர் ஆதரவு" என்று டோனி கூறியுள்ளார். இதே போல இரண்டாண்டுகளுக்கு முன் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தின் இறுதியில் யுவராஜ் கோபமாக "நாங்களும் இந்திய அணியில்தான் விளையாடுகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்" என்று கூறினார். சச்சினுக்கு நிகர் யாரும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே போல சச்சின் என்ற சூரியனின் ஒளியால் மற்ற நட்சத்திரங்கள் நம் கண்ணுக்கு தெரியால் போய் விடுகிறது என்பதும் உண்மை. எனக்கு சச்சினின் திறமை மீது எந்த விதமான மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் சச்சின் என்று வந்துவிட்டால் மற்ற வீரர்கள் தாறுமாறாக திட்டப்படுகிறார்களே என்பதுதான் என் கோபம். சச்சின் மீது ஈடுபாடு இல்லாமல் போனதற்கு இதுதான் காரணம். 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

April 26, 2010

சச்சினை எனக்கு பிடிக்காது...


வரலாறு என்பது நம் நாகரிகத்தின் வளர்ச்சியை மட்டுமல்ல, நம் பரிமாண வளர்ச்சியையும் பதிவு செய்யும் ஒரு பெட்டகம். வரலாறு நமக்கு பல பாடங்களை கற்று கொடுக்கிறது. நம்மால் அனுபவித்து பெற இயலாத விஷயங்களை மற்றவர்களின் வாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொள்ள உதவுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல பேரரசர்களையும், தத்துவ ஞானிகளையும், அரசியல்வாதிகளையும், விளையாட்டு வீரகளையும் பற்றி நாம் அறிந்து கொள்ள உதவுகிறது. நன்றாக கவனியுங்கள், வெற்றி பெற்றவர்களை.பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையையே பதிவு செய்கிறார்கள். நாமும் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையையே படிக்க விரும்புகிறோம். தன் வாழ்க்கையில் எவ்வளவோ பெரும் வெற்றிகள் பெற்று,ஒரு சில தவறுகளுக்காக மறக்கப்பட்டவர்கள் சரித்திரத்தில் ஏராளம். 



சரி ஏன் இந்த நீண்ட லெக்சர்? சும்மா ஒரு பில்டப்புக்குத்தான். எனக்கு நிறைய நேரங்களில் ஒரு சந்தேகம் வரும். அது என்னவென்றால் நம் ரசனை சரி இல்லையோ என்று. ஏன் என்றால் நான் நல்லா இருக்கு என்று சொன்ன எதுவும் பெரும்பாலான மக்களுக்கு பிடிப்பதில்லை. நான் பிடிக்கவில்லை என்று சொன்னவைகளை மற்றவர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். என்ன நம்ப முடியவில்லையா? எனக்கு பிடிக்காத இரண்டு படங்கள், விண்ணைத் தாண்டி வருவாயா?, காதலுக்கு மரியாதை. இப்போது புரிகிறதா? இது மாதிரிதான். பல விஷயங்கள் உள்ளன. அது கிரிக்கெட்டிலும் உண்டு. உண்மையை சொல்லப்போனால் ஒரு காலத்தில் எனக்கு சச்சின் பிடிக்காது. அதற்கு காரணம் உண்டு. பிறகு சொல்கிறேன். என் நண்பர்கள் வட்டத்தில் எல்லோருக்கும் சச்சின் பிடிக்கும். ஆனால் எனக்கு பிடிக்காது. பிடிக்காது என்பதை விட ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்னடா இவன், முந்தாநாள் எல்லோரையும் முந்திக்கொண்டு சச்சினின் பிறந்தநாள் வாழ்த்து பதிவை போட்டுவிட்டு இப்படி சொல்கிறானே என்று நினைக்கிறீர்களா? இந்த பதிவு அதைப்பற்றித்தான். எனக்கு மிகவும் பிடித்து மற்றவர்களால் ஒதுக்கப்பட்ட இரண்டு கிரிக்கெட் வீரர்கள் பற்றியது. (சில கருத்துக்கள் ஒருதலை பட்சமாக இருக்கலாம். அது என் சொந்த கருத்துக்கள்தான்)


நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கிய ஆண்டு 1991. அப்போது இந்திய அணி ஒரு மொக்கை அணியாக இருந்தது. அப்போது அணியின் தலைவராக இருந்தவர் நம்ம ஸ்ரீகாந்த் அவர்கள். அவரின் தலைமை அவ்வளவாக சரியில்லாததால் பெரும் பரபரப்புக்கிடையே கேப்டன் ஆனவர் நம்ம அசாருதீன். இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு, 1984 ஆம் ஆண்டு இந்திய அணியில் நுழைந்து, பதினைந்து ஆண்டுகள் விளையாடியவர். கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றவர். 


தொடர்ந்து பழைய பெருமைகள், கிழ சிங்கங்கள், அரசியல்வாதிகள் நிறைந்திருந்த ஒரு அணியை சுத்தமாக கழுவ வேண்டிய கால கட்டத்தில் இந்திய அணியின் தலைவர் ஆனவர் அசார். அப்போதெல்லாம் சச்சின் அவ்வளவாக பிரபலம் இல்லை. இப்போது ரைனா இருக்கிறாரே அதே போல் தான் சச்சின் அப்போது இருந்தார். துளியும் அச்சமும் கவலையும் இல்லாத ஒரு வீரராக இருந்தார். மற்றபடி அணியில் இருப்பவர்கள் எல்லாம் பெரிய தலைகள், கபில்தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த், கிரண் மோர், சித்து, உள்ளிட்டவர்கள். சொல்லவே வேண்டாம் எவ்வளவு குழப்பம் இருந்திருக்கும் என்று ஆனால் வேறு வழி இல்லை. அனைவரும் ஓய்வு பெரும் நிலையில் இருந்ததால் அசார் காப்டன் ஆனார். பின் உலக கோப்பை போட்டிக்கு புறப்பட்ட இந்திய அணியில் இளைஞர்கள், அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் இருந்தனர். இதனால் உலக கோப்பையில் இந்தியா படு தோல்வி அடைந்தது. இவ்வாறு, தான் காப்டன் ஆனதில் இருந்து சோதனை மேல் சோதனை பல கண்டவர் அசார். இருந்தாலும் தளராத மன உறுதியுடன் அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றார். 



அணியில் சேரும்போது அனைவரும் சொங்கி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அதிரடியாக ஆடி எல்லோரையும் தன் பக்கம் திருப்பியவர் அவர். பின் காப்டன் ஆனதும் தன் பாணியை மாற்றி நிதானமாக ஆட தொடங்கினார். இதைத்தான் நம் டோனி பின்பற்றினார். அதே போல தேவை இல்லாமல் வாய் சவடால் விடுவது, அடுத்தவர்களை விமர்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாத காப்டன். பெரும்பாலும் மௌனமாகவே காட்சியளிப்பார். இன்றும் இந்தியா அசார் தலைமையில்தான் அதிக கோப்பை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


அசார் பற்றி சில சுவாரசியமான செய்திகள்...


கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு வீரர் முன்னுதாரணமாக இருப்பார். அதே போல் அசார் என்றல் ஞாபகம் வருவது அவரின் மணிக்கட்டு சுழற்சி. ஆசிய வீரர்களுக்கே உரிய இந்த ஆட்டத்தின் முன்னோடி அசார்தான். பின்னாளில் லட்சுமண் ஓரளவிற்கு இதை பின்பற்றினாலும், இன்றும் இவரது மணிக்கட்டை சுழற்றி மட்டையை வீசும் வேகம் யாருக்கும் வாய்க்கவில்லை. அதே போல, அந்த காலகட்டங்களில் இவரின் டைரக்ட் ஹிட் பிரசித்தம். பந்தை பறந்து தடுப்பது, டைரக்ட் ஹிட் போன்றவை முதலில் அசாருக்கு சொந்தமாக இருந்தது, பின் ஜாண்டி ரோட்ஸ் அவரின் இடத்தை பறித்துக்கொண்டார். இந்திய வீரர்களுக்கே உரிய ரெகார்ட் பட்டியல் இவருக்கும் உண்டு. இந்தியாவுக்கு அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்தவர் என்ற சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.


இந்திய அணிக்கே உரிய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், இவர் காப்டனாக பதவி வகித்த காலகட்டத்தில் இந்திய அணியில் பல மாற்றங்கள் உருவானது மட்டும் உண்மை. சச்சின் என்னும் மாபெரும் சகாப்தம் உருவானது இவர் காப்டனாக இருந்த பத்து ஆண்டுகளில் தான் (இவர்தான் அதிக நாள் காப்டனாக இருந்தவர்). அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், கங்குலி, திராவிட், லட்சுமண், ராபின் சிங் என இந்திய அணி நல்ல வீரர்களை உருவாக்கியதும் இவர் தலைமையில் தான். இந்திய அணி முதன் முதலில் 300 என்ற இலக்கை தொட்டதும் இவர் காப்டனாக இருந்த ஆட்டத்தில் தான். அந்த ஆட்டத்தில் இந்தியா 306 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில், அசார் அடித்த 24 ரன்கள்தான் இந்தியா 300 ஐ கடக்க உதவியது. வழக்கமாக எல்லா காப்டன்கள் மீதும் சுமத்தப்படும் அதே குற்றச்சாட்டு இவர் மீதும் வந்தது. மற்ற வீரர்களை மதிப்பதில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று. மற்ற வீரர்கள் என்று சொன்னது சச்சினை மட்டும்தான். ஆனால் சச்சினை அசார் எப்போதுமே கீழ்த்தரமாக நடத்தியது இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் தன்னுடைய படைக்கு சச்சின் அர்ஜுனன் மாதிரி என்று அவருக்கு நன்றாக தெரியும். அசார் பெரும்பாலும் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில்லை. மெளனமாக இருந்து விட்டார். சச்சினும் வழக்கம்போல் மௌனம் சாதிக்க, சொல்வதெல்லாம் உண்மை என்பது போல ஆகி விட்டது. இதில் அசாரின் அதிருப்தியாளர்களான கவாஸ்கர், ஸ்ரீகாந்த் போன்றோர் இன்னும் கொளுத்திப்போட்டனர். விளைவு கங்குலிக்கும் சச்சினுக்கும் இடையே உருவான அதே இடைவெளி அசாருக்கும் சச்சினுக்கும் இடையே விழுந்து விட்டது. இன்னும் இந்த தொழிலை நம் கவாஸ்கர் திறம்பட செய்து வருகிறார்.



மேற்கிந்திய, ஆஸ்திரேலிய வேகங்கள் மிரட்டிய அந்த கால கட்டங்களில், ஹெல்மெட் இல்லாமல் அவர்கள் பந்தை எதிர் கொண்டவர். கணநேரத்தில் ப்ரண்ட் புட், மற்றும் பேக் புட் இரண்டையும் மாற்றி விளையாடுவதில் வல்லவர். சோர்வடையாமல் விளையாடுவது எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ளலாம். நான்கு, நான்கு ரன்களாக ஓடி எடுத்தாலும் அசராமல் விளையாடுவார். இப்படி சென்று கொண்டிருந்த அசார் வாழ்கையில் கரும்புள்ளியாக அமைந்தது மாட்ச் பிக்சிங் புகார். இதில் அசார் ஈடுபட்டதாக குரோனியே சொல்ல அசார் ஒப்புக்கொண்டார். இதனால் ஆயுள் தடை விதிக்கப்பட்டு, பின் நீக்கப்பட்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள அசாரின் கடைசி சில ஆண்டுகளை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பானதாகவே இருந்துள்ளது. 


என்னை முதன் முதலில் கவர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது அசார்தான். நான் சிறுவனாக இருந்த கால கட்டத்தில் அசாரின் பேட்டிங் ஸ்டைல், மேனரிசங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி. நான் விளையாடும்போது கூட அசார் மாதிரியான ஸ்டைலையே பின்பற்றுவேன். என் காலகட்டத்தில் சச்சினை பின்பற்றாத ஒருவன் நானாகத்தான் இருக்கும். பீல்டிங்கிலும், அசார் மாதிரியே பந்தை மிதித்து மேலெழுப்பி பிடிப்பது, பந்தை உதைத்து ரன் அவுட் ஆக்குவது என்று அசாரின் ஸ்டைலை பின்பற்றுகிறேன் பேர்வழி என்று வாங்கி கட்டிக்கொண்டதுண்டு. சச்சினை ஆதரிப்பதாக சொல்லிக்கொண்டு அசாருதீனை வசை பாடியவர்கள் ஏராளம். என்னதான் சச்சின் ஒரு சாம்பியன் ஆட்டக்காரர் என்றாலும், அசாரை குறை சொல்ல முடியாது அல்லவா? இத்தனைக்கும் அவர் மீது எந்த பிக்சிங் புகாரும் வந்திருக்கவில்லை. இதனால் சச்சின் மீது ஒரு வகையான வெறுப்பு உருவாகிவிட்டது. இது நானாக வளர்த்துக்கொண்டதல்ல, மற்றவர்களின் செயலால் உருவானது. இதனால்தான் இன்றுவரை சச்சினை இந்திய அணியின் ஒரு வீரராக பார்க்க முடிகிறதே தவிர ஒரு ஆதர்ச நாயகனாக பார்க்க முடியவில்லை. ஆனால் இதில் பெரிய காமெடி என்னவென்றால், சச்சின் மீது என்று வெறுப்பு வர தொடங்கியதோ அன்றில் இருந்து அவர் புகழ் மட மட வென உயர தொடங்கியது. அசார் காணாமல் போனார். மறுபடியும் இரண்டாவது பத்தியை படியுங்கள். இருந்தாலும் அசார் மீது இருக்கும் அபிமானம் கொஞ்சம் கூட குறையவில்லை..



அந்த இரண்டாவது வீரர் யாரென்று ஓரளவிற்கு கணித்திருப்பீர்கள், அவர் யார் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்...


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

April 24, 2010

கிரிக்கெட்டுக்கு இன்று பிறந்த நாள்...


நடிப்பு என்றால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஞாபகம் வருவது சிவாஜி. கிரிக்கெட் என்றால் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஞாபகம் வருவது சச்சின் டெண்டுல்கர்தான். கிரிக்கெட் விளையாட தொடங்கும் ஒவ்வொரு சிறுவனும் முதலில் நினைப்பது டெண்டுல்கரைத்தான். கிரிக்கெட்டை பொழுதுபோக்காக கொண்டவர் பலர். தொழிலாக கொண்டவர் பலர். வாழ்க்கையாக கொண்டவர் சிலர். கிரிக்கெட்டை உயிர் மூச்சாக கொண்டவர் ஒரே ஒருவர்தான். அவர் பெயர் சச்சின் டெண்டுல்கர். இன்று தன்னுடைய 37 ஆவது வயதை பூர்த்தி செய்திருக்கும் சச்சின் அவர்களை நினைத்து பார்க்கும் பொது சில வார்த்தைகள் தோன்றின. கவிதை என்று சொல்ல முடியாது. வசனம் என்றும் சொல்ல முடியாது. என் மனதில் தோன்றியவை அவ்வளவுதான்.




சாதனைகள் படைக்க ஒவ்வொரு வீரனும் விரும்புவான்.
இன்று நீ படைக்க சாதனைகள் விரும்புகின்றன...
எல்லோருக்கும் வயதை ஏறு முகத்தில் படைத்த கடவுள், 
உனக்கு மட்டும் இறங்கு முகத்தில் அமைத்து விட்டானோ. 
வெற்றிகளை நீ துரத்துவதில்லை, வெற்றிகள் தான் உன்னை துரத்துகிறது.
புகழை நீ சுமப்பதில்லை, புகழ் உன்னை சுமக்கிறது,
உன்னிடம் கனமான மட்டை உண்டு, கனமாக மண்டை இல்லை.
மரம் பேசுமா? உன் கையில் இருந்தால் பேசுகிறதே?
விமர்சனங்களுக்கு நீயா பதில் சொல்கிறாய்? உன் மட்டைதானே சொல்கிறது?


சச்சினை பற்றி மற்ற கிரிக்கெட் வீரர்கள் சொன்னவை........




சச்சினுடன் தோற்ப்பது கூட வெற்றிதான் - ஸ்டீவ் வாக் 

சச்சினுக்கு ஹெல்மெட் அணிந்துதான் பந்து வீசுவேன் - லில்லி 

சச்சின் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே எனக்கு பெருமை - அக்ரம்

சச்சினின் சாதனைகள் எழுதப்பட்ட விதி. மாற்ற இயலாது - பேரி ரிச்சர்ட்ஸ் 

நான் கடவுளை பார்த்திருக்கிறேன். அவர் இந்திய அணியில் விளையாடுகிறார் - ஹெய்டன் 

சச்சின் அடுத்து இறங்குகிறார் என்றால், ஒரு விக்கெட் விழுவதை கூட இந்தியர்கள் கண்டுகொள்வதில்லை - ஷேன் வார்னே 

நீங்கள் நன்றாக பந்து வீசினால் அவர் போர் அடிப்பார், மோசமாக வீசினால் சிக்சர் அடிப்பார் - ஷேன் வார்னே



எனக்கு மிகவும் பிடித்த எதிரி சச்சின் - ஆலன் டொனால்ட் 

அவர் ஒரு சரித்திரம், இத்தனை வருடங்களில் அவரின் வேகம் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை - கங்குலி 

இவரைப்போல கொஞ்சம் கூட தலைகனம் இல்லாத வீரரை நான் பார்த்ததே இல்லை - இன்சமாம் உல் ஹக்.

அவர் கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்கை கொடுத்தால் கூட அடிப்பார் - வக்கார் யூனிஸ் 






இவ்வாறு எல்லோரும் அவரை புகழ்ந்து தள்ளி விட்டார்கள். நான் என்ன சொல்ல, சச்சின் அவர்களே

என்றும் மாறாத 
உடல் ஆரோக்கியத்துடன், 
மன அமைதியுடன், 
இன்று போல் என்றும் வாழ்க!!!!















பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க....


முழுவதும் படிக்க >>

April 22, 2010

ரஜினி செய்த துரோகம் ... டவுசர் கிழிந்த தமிழன்?


அப்பாடா ஒரு வழியா நம்ம நித்யாவை பிடித்து விட்டார்கள். இமாச்சல் பிரதேஷில் ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த அவரை எதிர்பாராத விதமாக கைது செய்து விட்டார்கள். இனி என்ன நடக்கும்? அவர் மீது தினம், தினம் புது புது வழக்குகள் பதிவு செய்யப்படும். தினம் நாளிதழ்களில் அவர் பெயர் இடம் பெரும். சி பி ஐ சோதனை, ஆபாச சீடிக்கள், சரோஜா தேவி புத்தகங்கள் என்று ஏதாவது ஒன்று அவரின் ஆசிரமத்தில் இருந்து கண்டெடுக்கப்படும். இப்போதும் இவை எல்லாம் நடந்து கொண்டுதானிருக்கிறது. அப்புறம் என்ன? அவர் சிறையில் குப்புற படுத்தார், மல்லாக்க படுத்தார், குறட்டை விட்டார் என்று ஏதாவது செய்தி போடுவார்கள். பின் ஏதாவது பிரச்சனை வந்தால், (கவலைப்படாதீர்கள் காவிரி பிரச்சனை Coming soon..) அதை தூக்கி போட்டு விட்டு, நாம் போராட கொடி பிடிக்க, உச்சுக்கொட்ட போய் விடுவோம். அதற்குள் நம்ம கடமை வீரர்கள் நித்யாவிடம் பேரத்தை முடித்து கொண்டு அவர் மீது உள்ள வழக்குகளை உப்பு சப்பில்லாமல் ஆக்கி விடுவார்கள். இதெல்லாம் நம் கண்ணுக்கு தெரியாது. காவிரி போராட்டத்துக்கு ரஜினி வந்தாரா, அஜித் வந்தாரா, அவர்கள் ஆயா வந்தாரா என்று ஆராய சென்று விடுவோம். 



எனக்கு தெரிந்த ஒரு விஷயத்தை சொல்கிறேன். இதை யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. திரை உலக நட்சத்திரங்கள் பலரையும் ஐபிஎல் போட்டிகளில் காண முடிகிறது. சில நாட்களுக்கு முன்னால், திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்திருந்தார். எந்த ஆட்டம் என்று சரியாக ஞாபகம் இல்லை. சரி அவர் எந்த அணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? சென்னை அணிக்கு? இல்லை.சரி பெங்களூரு அணிக்கு? இல்லவே இல்லை. மும்பை அணிக்குதான் ஆதரவு அளித்தார். இதில் உள்ள உள் நோக்கம் தெரிகிறதா? ரஜினி அடிப்படையில் மராட்டியர். அதனால்தான் அவர் மும்பைக்கு ஆதரவு தெரிவித்தார். தொடங்கட்டும், தூக்கி விட்ட தமிழகத்துக்கு துரோகம் இழைத்த ரஜினிக்கு எதிராக நடிகர் சங்கத்தில் தீர்மானம் கொண்டு வரட்டும். எங்கே நம் சத்யராஜ், சீமான் எல்லாம்? உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை? தொடங்குங்கள் உங்கள் வசை பாடுகளை. அவர் மும்பைக்கு ஆதரவு தெரிவித்தது தெரிந்தால் கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும். எனவே முதல் வேலையாக இதை அவர்களுக்கு தெரிவித்து விடுங்கள். கொஞ்ச நாள் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் பலருக்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுத்த புண்ணியம் உங்களை சேரும்.



நமது தல தன் வாழ்நாள் லட்சியமான கார் பந்தயங்களில் தன் ஆட்டத்தை தொடங்கி விட்டார். முதலில் சோபிக்க தவறினாலும், முடிவில் 18வது இடத்தை பிடித்து அசத்தினார். தீவிர பயிற்சி, விடா முயற்சி(இது அவருக்கு யாரும் சொல்லிதர வேண்டியதில்லை) இருந்தால் இன்னும் பல உயரங்களை அடையலாம். அவரை பிடிக்காது என்ற ஒரே காரணத்துக்காக அவர் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் நபர்கள், இந்த விஷயத்தில் அவரை பாராட்டா விட்டாலும் மட்டம் தட்டாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவர் இப்போது ஈடுபட்டிருப்பது நடிப்பு அல்ல. நம் நாட்டின் ஒரு பிரதிநிதியாக அந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் தல....அப்படியே எங்களையும் கொஞ்சம் கவனிங்க. வருஷத்துக்கு ஒரு படம் கூட இல்லனா எப்படி?



சில விஷயங்கள் கேட்ட மாத்திரத்திலேயே குபீர் சிரிப்பை வரவழைத்து விடும். அப்படி ஒரு செய்தி சில நாட்களுக்கு முன் கேள்வி பட்டேன். அதாவது தென்னிந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று அழைக்கப்படும் திரு ராம நாராயணன் அவர்கள் குட்டி பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார். இது பற்றி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறிய வார்த்தைகள் "குட்டி பிசாசு என்ற படம் புதுமையிலும், தொழில் நுட்பத்திலும் அவதார், 2012 ஆகிய படங்களை மிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது". இதை கேட்டவுடன் ஜேம்ஸ் கேமரூன்(நிஜமான) அவர்கள் இனி தான் திரைப்படங்களை இயக்க போவதில்லை. ராமநாராயணன் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர போகிறேன் என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குட்டி பிசாசு படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது நமக்கும் அதுதான் தோன்றுகிறது. இந்த மாதிரி ஒரு படத்தை இயக்க நம்ம ராமநாராயணன் அவர்களால் மட்டுமே முடியும். அவருக்கு கொடுக்க ஆஸ்கர் அவார்டுக்கு மேலே ஏதாவது அவார்ட் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அய்யா ராமநாராயணன் அவர்களே, உங்களுக்குத்தான் கழகத்தின் அமோக ஆதரவினால் எல்லா திரைத்துறை சம்பந்தமான விழாக்களுக்கும் அழைப்பு, பஞ்சாயத்து, தலைவருக்கு பாராட்டு விழா என்று ஏகப்பட்ட வேலை இருக்கிறதே, இதற்கிடையே படம் வேறு இயக்கி ஏன் உங்களையும் மற்றவர்களையும் கொடுமை படுத்துகிறீர்கள்?


தமிழர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள், எதிரியாக இருந்தாலும் பரிவு காட்டுபவர்கள், வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு என்றெல்லாம் நான் சிறுவயதில் இருந்தே படித்து வந்திருக்கிறேன். ஆனால் பிரபாகரனின் தாயார் விஷயத்தில் பதிவர்கள் எல்லாம், தமிழனின் மானத்தை கிழி கிழி என்று கிழித்து ஒவ்வொரு தமிழனின் டவுசரையும் கழற்றி காற்றில் வீசி விட்டார்கள். இப்போது நடுத்தெருவில் நிர்வாணமாக நிற்பதாக உணர்கிறேன். அவமானத்தில் கூனி குறுகி நிற்கிறேன். ஆனால் என்னை காப்பாற்ற எங்கள் இன காவலர் இருக்கிறார். அவருக்கு அம்மையார் தமிழகம் வருவதே தெரியாதாம்? அப்புறம் எப்படி அவர் இதற்கு காரணமாக இருக்க முடியும்? அவருக்கு ஐபிஎல், பொன்னர் சங்கர், அடுத்து என்ன பாராட்டு விழா நடத்துவது? எதை இலவசமாக கொடுப்பது? அஞ்சா நெஞ்சனா? தளபதியா? என்று ஆயிரம் வேலைகள் இருக்கிறது. அம்மையார் வருவது மட்டும் தெரிந்திருந்தால், அவரை விமான நிலையத்திலேயே இருக்க வைத்து விட்டு, உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று டெல்லிக்கு கடிதம் அனுப்பி இருப்பார். இல்லை உடன் பிறப்புகளை விட்டு லட்சம் தந்திகளை அனுப்ப சொல்லி இருப்பார். எப்படியாவது ஒரு மாதத்திற்குள் அனுமதிக்க முடியுமா முடியாதா என்று சொல்லி இருப்பார். அதுவரை அம்மையார் விமான நிலையத்திலேயே இருந்திருக்கலாம். என்ன செய்வது, இது பற்றி ஒரு பயலும் வாயை திறக்கவில்லையே? எங்களை கேட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார். கேட்டால் சொல்லி இருப்பாரே எப்படி அம்மையாரை துரத்தி இருக்க வேண்டும், அதற்கு எப்படி சப்பை கட்டு கட்ட வேண்டும் என்று. சரி அவர்கள் எதைத்தான் கேட்டு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் கேட்டு செய்யுங்கள் என்று வலியுறுத்தி கடிதம் ஒன்று எழுதி விட்டால் போகிறது. ஒன்று தெரியுமா? பிரதமர் அலுவலகத்தில், தபால் பெட்டி இருக்கும் இடத்தில் ஒரு குப்பை கூடைதான் உள்ளதாம். எல்லாம் நமக்கான ஏற்பாடுதான். பின்னே? தபால் பெட்டியில் இருந்து எடுத்து குப்பை கூடையில் போட நேரமாகுமில்லையா?. அதை குறைக்கவே இந்த ஏற்பாடு.


எது எப்படியோ பதிவு போட தினம் ஏதாவது மொக்கை செய்தி கிடைத்து விடுகிறது 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

April 21, 2010

மோடி விளையாடு - ஒரு மோசடியின் கதை



ஒரு குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய மனிதராக உருவாகி இருக்கும் லலித் மோடி அவர்களுக்கு இது போதாத காலம். மோசடி, பொய், பித்தலாட்டங்களால் அதி விரைவில் உச்சாணி கொம்பில் போய் அமர்ந்த அவர் அதை விட அதி வேகத்தில் கீழே விழுந்து கொண்டிருக்கிறார். கிரிக்கெட் பாஷையில் சொல்வதாக இருந்தால், ஒரு பந்து எவ்வளவு வேகமாக மேலே செல்கிறதோ அதை விட வேகமாக கீழே இறங்கும். இப்போது கிரிக்கெட் தெரிந்த அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் விவகாரம் லலித் மோடி மற்றும் சசி தரூர் பற்றியதுதான். வெகு நாட்களாகவே யார் இந்த லலித் மோடி? இவரின் பின் புலம் என்ன? என்று செய்திகளை சேகரித்து வெளியிடலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் நம்ம நம்பர் ஒன் நாளிதழ் தினகரன் முந்தி கொண்டு விட்டது. இருந்தாலும் விடலாமா? எனக்கு தெரிந்த சில கருத்துக்களை சொல்லியே ஆக வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டேன். அதன் விளைவே இந்த பதிவு.


சரி யார் இந்த லலித் மோடி? உங்களில் பெரும்பாலனவர்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியாது. நம் நாட்டில் வெகு காலத்துக்கு முன்பிருந்தே மல்டி லெவல் மார்கெட்டிங் என்று ஒரு விஷயம் ஜரூராக நடை பெற்றது. எனக்கு விவரம் தெரிந்து இதில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒரு நிறுவனம், ஆம்வே என்னும் அமெரிக்க நிறுவனம்தான். அதே காலகட்டத்தில் அதற்கு நிகரான ஒரு நிறுவனமும் அதே வேலையே செய்து வந்தது. அதுதான் மோடிகேர் (MODICARE) நிறுவனம். இந்த நிறுவனத்தை தொடங்கியவர் நம்ம லலித் மோடியின் தாத்தா. வியாபார ரத்தம் ஓடும் பரம்பரையில் இருந்து வந்ததாலோ என்னவோ லலித் மோடியும் இயல்பாகவே தேர்ந்த வியாபாரியாக இருந்துள்ளார். அமெரிக்காவில் டியுக் பல்கலை கழகத்தில் படித்து வந்த அவர் அங்கேயே ஒரு சிகரெட் கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அப்போதே அவர் மீது போதை மருந்து வைத்திருந்தது, ஆள் கடத்தல், கொலை முயற்சி போன்ற புகார்கள் எழுந்துள்ளன. இவற்றை மோடி ஒப்புக்கொண்டதால் கடும் தண்டனையிலிருந்து தப்பி உள்ளார். அப்போது அவருக்கு வயது 22 தான். படித்து முடித்த பின் உடல் நிலை சரியில்லை என்று (பொய்?)காரணம் கூறி இந்தியா திரும்பி உள்ளார்.


பின் இந்தியாவில் இரண்டாவது பெரிய சிகரெட் நிறுவனமான காட்பரே பிலிப்ஸ் நிறுவனத்தில் ஒரு உயர்ந்த பொறுப்பில் வேலை பார்த்துள்ளார். இதுதான் உலக தரம் மிக்க போர் ஸ்கொயர் போன்ற சிகரெட்டுகளை தயாரிக்கும் நிறுவனம். பின் இந்தியாவில் பேஷன் டிவியை ஒளிபரப்பும் ஏஜென்டாக பொறுப்பேற்றார். கூடவே இஎஸ்பிஏன் (ESPN) சேனலுக்கும் ஏஜென்ட் ஆனார். இது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பலர் இவருக்கு அறிமுகம் ஆனார்கள். ஒரு தேர்ந்த வியாபாரி பணம் கொழிக்கும் ஒரு நிறுவனத்தில் நுழைந்தால் என்ன நடக்கும்? ஒட்டகம் கூடாரத்துக்குள் தலையை விட்டால் என்ன ஆகுமோ அதுதான் நடக்கும்? கிரிக்கெட்டில் இருபது ஓவர் போட்டிகளை பிரபலபடுத்த முயன்றிருக்கிறார். ஆனால் அவருக்கு தெரியவில்லை. இந்த கிரிக்கெட் வாரியத்துக்குள் ஏற்கனவே நிறைய ஒட்டகங்கள் முதல் டைனோசர்கள் வரை உள்ளன என்று. பின் ஒருவாறாக உட்கார்ந்து யோசித்து, கிரிக்கெட் மைதானமே இல்லாத இமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் சங்க உறுப்பினர் ஆனார். சென்ம புத்தி போகுமா. அங்கேயும் தன் ஒட்டக வேலையை காட்ட, ஆட்சி மாறியதும் தூக்கி எறியப்பட்டார்.


ஒரு வியாபாரி எப்போதுமே தனக்கு விழுந்த அடியினால் வீழ்ந்து விடுவதில்லை. மோடி தன் வித்தையை ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் காட்டினார். விளைவு, அதன் தலைவர் ஆனார். முறைப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) உறுப்பினர் ஆகி விட்டார். ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். பிசிசிஐ டால்மியாவா, பவாரா?, மும்பையா, கொல்கட்டாவா? என்று மோதிக்கொண்டிருந்த பொது, நடுவில் டெல்லி இருப்பதை மறந்து விட்டீர்கள் என்று குழம்பிய குட்டையில், இருந்து பிசிசிஐ துணை தலைவர் பதவி என்ற திமிங்கலத்தையே பிடித்துவிட்டார். வந்ததும் மிக திறமையாக செயல் பட்டு, அதிரடி திட்டங்களை வகுத்து, தன் கிரிமினல் மூளையையும் பயன் படுத்தி, பிசிசிஐக்கு இதுவரை அவர்கள் பார்த்திராத அளவுக்கு லாபங்களை ஈட்டி தந்தார். ஆகா ஒரு திறமையான நபரை இவ்வளவு நாள் கண்டுக்காமல் விட்டு விட்டோமே என்று அனைவரும் வருத்தப்பட்டார்கள். மறுபடி இருபது ஓவர் போட்டிகள் குறித்த பேச்சை எடுத்தார்கள். இந்த நேரத்தில்தான் கபில்தேவ் கோபித்துக்கொண்டு தனிக்குடித்தனம் போனார். அவர் இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற அமைப்பை தொடங்க, மீண்டும் குட்டை குழம்ப தொடங்கியது. இதுதான் தருணம் என்று தன் அத்தனை திறமைகளையும் பயன் படுத்தி ஐபிஎல் என்ற அமைப்பு உருவாக காரணமாக இருந்தார். அதன் தலைவராக அவரே பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின் கிரிக்கெட் சிறப்பு பரிசு போட்டிகள், நடன மங்கைகள், அதிரடி இசை, பாலிவுட் நட்சத்திரங்கள், மது என்று கமர்சியல் வண்ணம் பூசிக்கொண்டது. 


இவரது வளர்ச்சி மும்பை நிழல் உலக தாதாக்களை கூட திரும்பி பார்க்க வைத்துள்ளது. சோட்டா சகீலால் பலமுறை மிரட்டப்பட்டிருக்கிறார்.(சோட்டா சகீல் என்பவர் தாவுத் இப்ராஹிமின் அடியாள். தளபதி படத்தில் ரஜினி, மம்முட்டிக்கு எப்படியோ அப்படி. இப்போது இப்ராஹிமின் இந்திய சந்தையை கவனித்து வருகிறார்). மோடி தன் சாம்ராஜ்யத்துக்குள் ஒருவரும் நுழைந்து விட முடியாத படிக்கு, எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார், கடத்தல் அடிதடி உள்பட. கொச்சி அணியை தோற்கடித்து, அகமதாபாத்தை ஐபிஎல்லில் நுழைக்க பெரும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் முடியவில்லை. இதில் கொச்சி அணி மீது அவருக்கு காழ்புணர்ச்சி அதிகரித்துள்ளது. இந்நேரம் பார்த்து சசி தரூர் தனக்கு தெரிந்த நடிகை ஒருவருக்கு கொச்சி அணி ஏலத்தில் தலையிட்டு உதவி புரிந்திருக்கிறார் என்ற விவகாரம் விவகாரம் வெளிவர கெட்டியாக பிடித்துக்கொண்டார். விளைவு சசி தரூர் பதவி விலகல்.


தான் ஐபிஎல்லின் தலைவர்தான், நாட்டின் தலைவர் அல்ல என்று புரிந்து கொள்ள வில்லை மோடி. விளைவு, சட்டம் தன் கடமையை செய்து விட்டது. 

மோடி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள், 
மோடி ரகசியமாக கொல்கட்டா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளின் உரிமையாளராக இருந்துள்ளார். 
தன் குடும்பத்தினர் பலர் ஐபிஎல் அணிகளின் பங்குகளை வாங்க உதவி செய்துள்ளார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின் போது கிரிக்கெட் சூதாட்டம், மற்றும் மேட்ச் பிக்சிங் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். 



இது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். இது தவிர, நடிகைகள், கொலை மிரட்டல், கடத்தல், போதை பொருள் போன்ற பிரச்சனைகளும் வரலாம். ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று சொன்னதில் இருந்தே காங்கிரஸ் மீது ஏகப்பட்ட கடுப்பு. அதனால் தான் சசி தரூர் பிரச்சனையில் இவ்வளவு ஆர்வம் காட்டினார் மோடி. ஆனால் அவருக்கு தெரியாது வியாபாரியை விட அரசியல்வாதி மோசமானவன் என்று. இதுவரை பதவி விலக மாட்டேன், குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன் என்று சொன்ன மோடி, வரும் 25 ஆம் தேதிக்கு பின், அதாவது ஐபிஎல் முடிந்தவுடன் பதவி விலகுவார் என்று தெரிகிறது. 


இதில் மேலும் ஒரு திருப்பமாக மத்திய அமைச்சர் சரத் பவார் மோடி பக்கம் உள்ளார். எனவே காங்கிரஸ் இதை கவனமாகத்தான் கையாளும் என்று சொல்கிறார்கள். மோடிக்கு ஆதரவாக, பட்டோடி, ரவி சாஸ்த்ரி, கவாஸ்கர் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். என்ன பயன், நினைத்ததை நடத்தி முடிப்பதில் காங்கிரசார் கில்லாடி என்று இலங்கை, குவாட்ரோச்சி பிரச்சனையிலே பார்த்தோமே. விளையாட்டு பற்றிய கட்டுரையில் அதிகமாக அரசியல் தான் எழுதி இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் முன்பு சொன்ன சொற்கள் ஞாபகம் வருகிறது "எங்கே பணம் நிறைய இருக்கிறதோ, அங்கே அரசியல் இருக்கும்". இது எவ்வளவு உண்மை. 


பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க..

முழுவதும் படிக்க >>

April 20, 2010

அடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்



நான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்துள்ளேன். தலைப்பை பார்த்தவுடன் எந்த மாதிரி படங்கள் பற்றி எழுத போகிறேன் என்று தெரிந்திருக்கும். நான் மிகவும் விரும்பிய இரண்டு ஹாரர் வகை படங்கள் பற்றிதான் சொல்ல போகிறேன். இரண்டுமே இருவேறு வகையான ட்ரீட்மென்ட் கொடுத்தவை. 

ஒரு ஹாரர் படத்துக்கு என்ன தேவை என்று கேட்டால் நம்மில் பலரும் சொல்லும் விஷயம் அதிரடியான காட்சி அமைப்புகள், திடுக்கிட வைக்கும் இசை மற்றும் பயமுறுத்தும் மேக்கப்புகள். இவை இல்லாமல் திகில் படம் எடுக்க முடியுமா? முடியும் என்று நிருபித்துள்ளார் படத்தின் இயக்குனர்.

மேலே சொன்ன விஷயங்கள் நான் சொல்லப்போகும் முதலாவது படத்தை பற்றியது. இந்த படம் வெளிவந்த போது அவ்வளவாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் இதனுடன் வெளிவந்த படம் 2012. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றுவிட்டது. 


படத்தின் கதை என்னவென்றால், கேட்டி மற்றும் மைக்கா என்ற தம்பதிகள் புதிதாக ஒரு வீட்டில் வந்து தங்குகிறார்கள். கேட்டி தன்னை சிறு வயது முதல் பேய்கள் துரத்துகின்றன. அவை இங்கும் வந்துவிடும் என்று கூறுகிறாள். நிபுணர் ஒருவரை வைத்து அவளை சோதித்ததில் அவளை துரத்துவது பேய் அல்ல துர்தேவதை அல்லது பிசாசு(Demon) என்று தெரிகிறது. அது அவள் எங்கே சென்றாலும் விடாது. அதனை எந்த விதத்திலும் தொடர்புகொள்ளவோ, தொந்தரவு தரவோ கூடாது. இதற்க்கு வேறு ஒரு நிபுணரை பாருங்கள் என்று சொல்கிறார். ஆனால் மைக்கா நடப்பவை அனைத்தையும் காமிராவில் படம் பிடிப்பது, பிசாசுடன் தொடர்பு கொள்வது என்று அதனை தொந்தரவு செய்ய தொடங்குகிறான். நாளுக்கு நாள் அதன் நடமாட்டம் அதிகரிக்கிறது. பின் அது இவர்கள் இருவரையும் தொந்தரவு செய்ய தொடங்குகிறது. இறுதியில் என்ன நடந்தது என்று நம் இதய துடிப்பை எகிற வைத்து சொல்கிறது இந்த படம். 


இப்படி ஒரு சப்பை கதையை வைத்துக்கொண்டு நிறைய ஹாரர் படங்கள் வந்துள்ளன. ஆனால் இந்த படத்தின் சிறப்பே கதையை சொன்ன விதம்தான். அதாவது போலீஸ் ஒரு வீட்டில் இருந்து ஒரு வீடியோ டேப்பை எடுக்கிறார்கள். அதில் பதிவாகி இருக்கும் காட்சிகளே படமாக விரிகிறது. அதாவது படம் முழுவதும் சாதாரண ஹேண்டி காமிராவில் எடுக்க பட்டிருக்கும். டிஸ்கவரி, நேசனல் கியாக்ரபி உள்ளிட்ட சேனல்களில் காட்டுவார்களே, அதேபோல ஒழுங்கில்லாத கோணத்தில் யாரோ படம் எடுக்கதேரியாத ஒருத்தர் எடுத்தது போலவே இருக்கும். காமிரா அசைவில் இருக்கும் போது இருவரில் ஒருவர் மட்டுமே காமிராவில் தெரிவர் (அதாவது மற்றொருவர் படம் பிடித்து கொண்டிருப்பதாக அர்த்தம்). இருவரும் காமிராவில் தெரிந்தால் காமிரா ஸ்டாண்டில் மாட்டி வைக்கைப்பட்டுள்ளது என்று அர்த்தம். சரி சரி மொக்கை போதும். இப்படி ஹேண்டி காமிராவில் எடுத்திருப்பதனால், ஏதோ உண்மையிலேயே நடந்த காட்சிகளை படம் பிடித்தது போன்ற ஒரு கலக்கத்தை படம் ஏற்ப்படுத்தி விடுகிறது.


பெரும்பாலான காட்சிகளில் இருவரும் தூங்கி கொண்டே இருக்கிறார்கள். காமிரா அந்த அறையை படம் பிடித்துக்கொண்டே இருக்கும். நம் இதயம் எப்போது என்ன நடக்குமோ என்று துடிக்கும். இந்த படத்தை கேள்விப்பட்டு தரவிறக்கம் செய்து நான் பார்த்து என் நண்பன் ஒருவனுக்கு சிபாரிசு செய்தேன். அவன் தன் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் இந்த படம் நல்லா இருக்கும் பாருங்கள் என்று சொல்லி இருக்கிறான் கதையை சொல்லாமலே. அவர்களும் லேப்டாப் முன்னால் அமர்ந்து பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். முதலில் ஒன்றும் தெரியவில்லை. பின் வீட்டில் அனைவரும் தூங்கியபின், நடு இரவின் அமானுஷ்யத்தில் படம் பார்ப்பதை உணர்ந்து இருக்கிறார்கள். படத்தை முழுவதும் பார்க்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். இது எனக்கும் ஏற்பட்டது.

படத்தின் சுவாரசியங்கள் சில...

படத்தில் பின்னணி இசை என்று எதுவும் கிடையாது. வசனம் மட்டுமே. அதுவும் ஆன் தி ஸ்பாட் ரெகார்டிங் போல ஒழுங்கற்றதாக இருக்கும். எனவே படம் முழுவதும் ஒரு அமானுஷ்ய அமைதி இருக்கும்.

படத்தில் கடைசி வரை பேயை காட்டவே மாட்டார்கள். 

படத்தின் பட்ஜெட் நம்பினால் நம்புங்கள் வெறும் 15000 டாலர். வசூல் 100 மில்லியன் டாலர். 

படத்திற்கு இரண்டுக்கும் மேற்பட்ட கிளைமாக்ஸ் காட்சிகள். ஒவ்வொரு வெர்சனிலும் ஒரு மாதிரி. எல்லாமே கலங்கடிப்பவைதான்.


படத்தின் இயக்குனர் ஓரேன் பெலி ஒரு உலகமகா பயந்தாங்கொள்ளியாம். அதை உருப்படியாக பயன் படுத்த இந்த படத்தை எடுத்தாராம். ஒவ்வொரு மனிதனும் உச்ச கட்டமாக பயப்படுவது தான் தூங்கிய பிறகு தன் அறையில் என்ன நடக்கிறது என்று தெரியாததால்தான். அதை திரையில் பார்க்கும் போது நம் அறையில் கூட இப்படித்தான் நடக்குமோ என்றே அஞ்சுகிறார்கள். இதுதான் படத்தின் வெற்றி. 

நேரமிருந்தால் பாருங்கள். 

இரண்டாவது படம்:


முதல் படத்தை பார்க்க துணிச்சல் வேண்டும். நான் சொல்லப்போகும் இரண்டாவது படத்தை பார்க்க மிகுந்த நெஞ்சுரம் வேண்டும். அதாவது கல் நெஞ்சக்காரர்கள் மட்டுமே பார்க்க முடியும். இந்த படத்தை பற்றி நிறையபேர் எழுதி இருக்கிறார்கள். என்னால் இந்த படத்தை மறக்கவே முடியாது. எங்கள் ஊரில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆங்கில படம் தமிழில் வந்தது. அதன் பெயர் 'ஆதிவாசிகளும், அபாய அழகிகளும்'. பெரியதாக 'A' வேறு போட்டிருந்தார்கள். ஆகா என்று சப்புக்கொட்டிக்கொண்டே தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். என்னைப்போல் பலரும் வந்தார்கள். கூட்டம் அள்ளியது. படம் தொடங்கியது. இடைவேளை முடிவதற்குள் பாதி கூட்டத்தை காணவில்லை. என்னைப்போல் சில அசகாய சூரர்கள் மட்டுமே முழுவதும் பார்த்தார்கள். இந்த படத்தை பார்த்ததற்கு அப்புறம் தான் தெரிந்தது இது அந்த படத்தின் அப்பனுக்கெல்லாம் அப்பன் என்று. 


படத்தின் கதை ஒன்றும் புதியதல்ல. அமேசான் காட்டுக்குள் ஆதிவாசிகளை ஆராய்ச்சி செய்ய சென்ற ஒரு குழு காணாமல் போகிறது. அவர்களை கண்டுபிடிக்க செல்லும் டாக்டர் மன்றோ குழுவினரிடம் ஒரு வீடியோ டேப் சிக்குகிறது. அதில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று அப்பட்டமாக படமாக்க பட்டிருக்கிறது.

படத்தின் பாதி பகுதி நல்ல காமிராவிலும், பாதி பகுதி சாதாரண வீடியோ காமிராவிலும் படமாக்கப்பட்டது போல காட்டியிருப்பார்கள். அதாவது படத்தின் இரண்டாவது பாதி முழுவதும் காட்டில் நடந்ததை அவர்களே படமாக்கி இருப்பதை போல காட்டி இருப்பார்கள். பொதுவாக ஹன்னிபல் (நர மாமிசம் உண்பவர்கள்) பற்றிய படம் என்றால் அவர்களை கொடூரமாகவும், நம்மவர்களை நல்லவர்கள் போலவும் காட்டுவார்கள். ஆனால் இதில், தலைகீழாக காட்டி இருப்பார்கள். ஆராய்ச்சி செய்ய போனவர்கள் தங்கள் டாகுமெண்டரி நன்றாக வரவேண்டும் என்று வேண்டுமென்றே ஹன்னிபல்களை துன்புறுத்தி அதனை படம் பிடித்து கொள்வார்கள். ஒரு கட்டத்தில் ஆதிவாசி பெண் ஒருவரை அவர்கள் கற்பழித்து விட பழி வாங்கும் நடவடிக்கையாக ஹன்னிபல்கள் இவர்களை வேட்டை ஆடுகிறார்கள். அதில் தனக்கு டாகுமெண்டரி நன்றாக வரவேண்டும் என்று கருதும் ஒரு ஆராய்ச்சியாளர், தன் நண்பர்களை ஹன்னிபல்கள் வேட்டை ஆடுவதை கூட வீடியோ எடுக்கிறார். முடிவில் அவரும் இறக்கிறார். 

படம் முழுவதும் வன்முறைக்காட்சிகள். எந்த காட்சியையும் இலை மறை காய் மறையாக காட்டுவதில்லை. ஆற அமர காட்டுகிறார்கள். முதலில் ஆராய்ச்சியாளர்கள் ஹன்னிபல்களை கொளுத்துவது, வெட்டுவது, துப்பாக்கியால் சுடுவது என்று கொடூரமான காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள் என்றால், இறுதி காட்சியில் ஹன்னிபல்கள் இவர்களை துரத்தி துரத்தி கொல்வது கொடூரத்தின் உச்சம். இந்த மாதிரி நேரங்களில் ஏற்படும் கூச்சல், குழப்பம், மரண ஓலம் அனைத்தும் ஆச்சு பிசகாமல் அப்படியே படம் பிடித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர் ஒருவரை ஈட்டியால் குத்தி அவர் உடலை உண்ணும் காட்சியை ஏதோ மறைந்திருந்து நிஜமாகவே படமெடுத்திருப்பது போல காட்டியிருப்பார்கள். படத்தில் மனிதனை தவிர மற்ற உயிரினங்களை உண்மையிலேயே கொன்றிருக்கிறார்கள். இந்த படத்தைப்பார்த்து நீங்கள் உண்மையிலேயே வாந்தி எடுக்கவில்லை என்றால் நீங்கள் பெரிய ஆள்தான் (நான் எடுக்கவில்லை).


படத்தின் அடிப்படை மெசேஜ் என்னவென்றால், படித்த நாகரிகமுள்ள நாம் எவ்வாறு காட்டு மிராண்டிகளை விட கேவலமாக நடந்து கொள்கிறோம் என்பதே ஆகும். 

படத்தின் சுவாரசியங்கள் சில...

படம் வெளி வந்த ஆண்டு 1980. இந்த படம் பெரும் அதிர்வை ஏற்ப்படுத்தியது என்பதை சொல்லவும் வேண்டுமா.


இந்த படத்தின் இயக்குனர் ருக்கேரோ டியோடேடோ. Snuff படம் எடுக்கிறார் என்று இவரை பிடித்து கொண்டு போய் கோர்ட்டில் நிறுத்தி விட்டார்கள். Snuff படம் என்றால் ஒருவரை உண்மையிலேயே கொன்று அதனை படம் பிடிப்பது. பின் தான் நிரபராதி என்று நிருபித்து இவர் வெளி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இந்த படத்தை தடை செய்து விட்டார்கள் . இந்த படம் பின்னாளில் வந்த நிறைய படங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்துள்ளது.

தில் இருந்தா பாருங்க. தயவு செய்து குழந்தைகள் பெண்களை பார்க்க அனுமதிக்க வேண்டாம்..


பிடிச்சிருந்த ஒட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...