தீபாவளிக்கு வந்த மூன்று படங்களையும் பார்த்து பெரும் குழப்பம் ஏற்பட்டு, "எந்த படம் நல்ல படம்?", என்று தெரியாமல் கன்பியூஸ் ஆகி, இப்போதுதான் தெளிந்திருக்கிறேன். மேலும் பதிவெழுத ஒரு மேட்டரும் சிக்கவில்லை. ஆதலால், வெகு நாட்களுக்கு பிறகு திரை விமர்சனம் ஒன்றை எழுதப்போகிறேன். நடு நிலையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நடு நிலை விமர்சனம் #1
தீபாவளிக்கு முன்பு நிலைமை எப்படி இருந்ததோ, தீபாவளிக்கப்புறம் அப்படியே தலை கீழாக இருக்கிறது. ஏழாம் அறிவு மண்ணை கவ்வ, லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடும், கோடிக்கணக்கான மக்களின் ரசனையோடும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது வேலாயுதம். கதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆகவே நான் ரசித்ததை மட்டும் சொல்கிறேன். முன்னெப்போதும் விட விஜய் மிக இளமையாக இருக்கிறார். அதிலும் மாயம் செய்தாயா பாடலில் செமே கியூட். சிக்ஸ் பேக் சூர்யாவிடம் இல்லாத வசீகரம் இவரிடம் உள்ளது. இது வரை மிக சீரியஸான அண்ணன் தங்கை பாசத்தை இப்படியும் காட்டலாம் என்று நிரூபித்திருக்கிறார்கள். பாசமிக்க அண்ணனாக சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய். கிராமத்தில் அவர் அடிக்கும் லூட்டியாகட்டும், அவரைப்பற்றிய பில்டப் வசனங்களுக்கு அப்பாவியாக ரீயாக்ஷன் கொடுப்பதாகட்டும் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
ஆக்சன் காட்சிகளில் முன்னெப்போதும் இல்லாத வேகம். அதிலும் அந்த ரயில் காட்சி, மிக சிறப்பானதாக அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸில் வரும் மோதலில் அனல் பறக்கிறது. எல்லாம் செய்துவிட்டு அமைதியாக செல்லும் இடத்தில் விஜய் மனதை அள்ளுகிறார். விஜய் மீது எல்லோரும் வைக்கும் குற்றச்சாட்டு அவர் ஒரே மாதிரி நடிக்கிறார் என்று. ஒரு மாஸ் படம் இதை விட சிறப்பாக எப்படி இருந்து விட முடியும் என்று தெரியவில்லை. விஜய்க்கு அடுத்த படியாக படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஜெனிலியா. இதுவரை லூசுப்பெண்ணாகவே பார்த்து வந்த இவர் இந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி போகிறார். விஜய் மீது காதல் கொள்வதாகட்டும், பின்னர் அதை மனதில் மறைப்பதாகட்டும், ஜெனிலியா நெஞ்சை கொள்ளை கொள்கிறார்.
ஹன்ஸிகா, சந்தானம் சொல்வது போல வெண்ணையில் செய்த சிலை போல இருக்கிறார். அப்பாவி கிராமத்து பெண் கேரெக்டரை அருமையாக செய்திருக்கிறார். இன்னும் ஒரு வருடத்துக்கு இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கப்போவது உறுதி. சந்தானம் கிடைக்கும் கேப்பில் எல்லாம் சிக்சர் அடிக்கிறார். முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் தியேட்டரே சிரிப்பலையில் மிதந்தது. படத்தின் பெரும் பலங்கள் , கேமரா மற்றும் பின்னணி இசை. கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. அந்த ரயில் காட்சியில் எங்கெல்லாம் கேமரா வைத்திருந்தார்கள் என்றே தெரியவில்லை. அதே போல விஜய் ஆண்டனி, ஒரு கமர்ஷியல் படத்துக்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார். பாடல்கள் ஆடியோவிலேயே மிகப்பெரிய ஹிட். படத்தில் பார்க்கும்போது மிக அருமை. ஜில்லாக்ஸ் பாடலுக்கு கால்கள் தாளம்போடுவதை தடுக்க முடியவில்லை.
கடந்த நான்கு நாட்களில் சென்னையில் மட்டுமே 7 கோடி வசூல் ஆகி உள்ளதாம். இது வேலாயுதத்தை விட அதிகமான திரை அரங்குகளில் வெளியான எந்திரனுக்கு இணையானது. மேலும் இது போட்டியே இல்லாமல் வந்த மங்காத்தாவின் பத்து நாள் வசூல் என்பதை மனதில் கொள்க. இனி மாஸ் ஓப்பனிங் யாருக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். சிகரெட் பிடிக்கவில்லை, தண்ணி அடிக்கவில்லை, கெட்ட வார்த்தை பேசவில்லை. ஆனாலும் தன் அப்பாவித்தனத்தாலேயே மாஸ் காட்டுகிறார் விஜய். எம்ஜியாருக்கு அப்புறம் சம காலத்தில் யாராலுமே இதை செய்ய முடியாது என்பது உறுதி.
வேலாயுதம் - 1000வாலா பட்டாசு
நடுநிலை விமர்சனம் #2
கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாதாம் சரி. லாஜிக் பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை.
"கெமிக்கல் பேக்டரிக்குள் செல்லும் தண்டவாளம் நேராக விஷ வாயு கண்டெய்னரில் சென்று ஏன் முடிகிறது?" என்று நான் கேட்கபோவதில்லை. "அந்த பார்வை தெரியாத பெண் கத்தியவுடன், அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் அனைவரும் அமைதி ஆவது எப்படி?" என்று நான் கேட்கப்போவதில்லை. ஜெனிலியா ஏதோ ஒரு டிவி சேனலில் வேலை பார்க்கிறார். "ஆனால் அங்கே எப்போதுமே ஜெயா டிவியே ஓடிக்கொண்டிருப்பதை ஏன்?" என்று நான் கேட்கப்போவதில்லை. "கதாநாயகனுக்கு இருக்கும் முறைபெண்கள் எல்லோருமே சேட்டு வீட்டு பெண்கள் போலவும், லூசாகவும் இருப்பது ஏன்?" என்று கேட்கப்போவதில்லை. "இறுதிக்காட்சியில் இருவரும் அந்த சின்ன கேமராவின் பிரேமுக்குள்ளேயே சண்டை போடுவது ஏன்?" என்று கேட்கபோவதில்லை. கிளைமாக்ஸில், "அவ்வளவு நேரம் அந்த அண்டர் கிரவுண்ட் சண்டை லைவ் ரிலே ஓடிக்கொண்டிருக்கும் வரை காவல் துறையும் அதை பார்த்து ரசித்துக்கொண்டே இருந்ததா?" என்றும் கேட்கபோவதில்லை. ஒரு உள்துறை அமைச்சர் ஒரு வார்டு கவுன்சிலர் ரேஞ்சுக்கு இறங்கி வேலை செய்வதை பற்றியும் நான் கேட்கபோவதில்லை.
சிங் இஸ் கிங் (Singh is King) படத்தில் வரும் கோழி பிடிக்கும் சீனை அப்படியே ஆட்டைய போட்டிருக்கிறார்கள். மிக மிக நல்லவராக வரும் விஜய், பெண்களின் சேலையை உருவுவதும், ஜெனிலியாவின் டிக்கியில் தட்டுவதும், ஜெனிலியாவை உடை மாற்றும் அறையில் பார்த்ததும், தானும் பதிலுக்கு திறந்து காட்டுவதும் அப்பாவித்தனமாம். விஜய்க்கு நடிக்க தெரியாது என்ற பேச்சு பரவலாக இருக்கிறதல்லவா, ஆகவே பெரும்பாலான காட்சிகளில் முகத்தை அஷ்ட கோணலாக வைத்து நடிக்க முயன்று கடுப்பேற்றுகிறார்.
ரயில் விபத்தை அடிப்படையாகக்கொண்ட அன்ஸ்டாப்பாபுள் (Unstoppable) படத்தை ஐந்து நிமிடத்துக்குள் எடுத்து, அதில் சூப்பர் ஹீரோவை நுழைத்த உத்தி ராஜாவுக்கு மட்டுமே கை வந்த கலை. அந்த படத்தின் இயக்குனர் இதை பார்த்தார் என்றால், ஏதோ ஸ்பூஃப் என்று நினைத்துக்கொள்வார். ஜெனிலியா மிக வறட்சியாக இருக்கிறார். அதற்கெல்லாம் சேர்த்து ஹன்ஸிகா மிக செழிப்பாக இருக்கிறார். பலான படத்தில் பிட்டு போடுவார்களே அதே போல இந்த படத்தில் இரண்டு பிட்டுகளில் சாரி காட்சிகளில் பயன்பட்டிருக்கிறார். எம்எஸ் பாஸ்கர் மாதிரி ஒரு "மாமா" அமையமாட்டாரா என்று எல்லோரும் நிச்சயம் ஏங்குவார்கள். இந்த படத்துக்கு சந்தானம் பிளஸ் பாயிண்டா இல்லை மைனஸ் பாயிண்டா என்று தெரியவில்லை.
நீங்கள் தியேட்டருக்கு நிறைய பஞ்சு எடுத்து சென்றாலும், உங்கள் காது ஜவ்வு கிழிவதை யாராலும் தடுக்க முடியாது. ரீரிக்கார்டிங்கும் வேலாயுதமாக மாறி காதை படம் பார்க்கிறது. விஜய் ஆண்டனி தான் ஆட்டைய போட்ட பழைய மெட்டுக்களையே திரும்ப டின்கரிங் செய்து கொடுத்திருக்கிறார். ஜில்லாக்ஸ் பாடல், சுக்ரன் படத்தில் வரும் சாத்திக்கடி போத்திக்கடி பாடலை நினைவூட்டுகிறது. இறுதிக்காட்சியில் சாமர்த்தியமாக தன் கட்சி கொடியை இணைத்து விட்டு அதுவும் பொய் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார்கள். தல வந்தாச்சு என்று சொன்னவுடன், மிரண்டு ஓடுவது போல நடித்திருக்கிறார் விஜய். கலாய்ச்சிட்டாராமாம்...
இதையும் ரத்தத்தின் ரத்தங்கள் காவலன் மாதிரியே கொஞ்ச நாளைக்கு கொண்டாடுவார்கள். அப்புறம் மறந்து விடுவார்கள். வேலாயுதம் விஜய்யின், வில்லு, குருவி, வேட்டைக்காரன், ஆகிய வெற்றிப்படங்களின் வரிசையில் இணைகிறது. இதுக்குமேல முடியல....
வேலாயுதம் - என்னத்த சொல்ல...
நடுநிலை விமர்சனம் #3
அடப்போங்கப்பா... நானும் எத்தனை நடுநிலை விமர்சனம்தான் எழுதுறது? அப்படியே எழுதினாலும் ஒத்துக்கவா போறீங்க. அப்படி எழுதினா விசிலடிச்சான் குஞ்சுன்னு சொல்லுவீங்க. இப்படி எழுதினா சைக்கோன்னு சொல்வீங்க. எதுக்கு வம்பு? அதனாலதான்தான் இப்படி ஒரு சைக்கோ விசிலச்சான் குஞ்சாக மாறிட்டேன். உங்களுக்கு எந்த விமர்சனம் பிடிச்சிருக்கோ அதை படிச்சு சந்தோசப்பட்டுக்கோங்க . ஏன்னா விமர்சனத்தை படிச்சுட்டு படம் பாக்கிறவுங்க ரொம்ப கம்மி. சந்தோசத்துக்குதானே விமர்சனம் படிக்கிறீங்க. அதை நான் ஏன் கெடுக்கணும். அதுக்காக மாத்திப்படிச்சு கடுப்பானா நான் பொறுப்பு கிடையாது. இதுக்கு நீங்க போட போற கமெண்ட்ஸ் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னா நமக்கு ஹிட்ஸ்தான் முக்கியம். தளபதி பற்றி எழுதினால் நிறைய ஹிட்ஸ் கிடைக்குமாம். சொன்னாங்க.
பி கு: இந்த படத்தில் வேலாயுதம் என்ற வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு ஒரு பரிசும் கிடையாது. அவ்வளவு உன்னிப்பாக படத்தை பார்த்ததே பெரிய பரிசுதான்.
உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>