விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 21, 2013

கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1



செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். 

வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் மொக்கையாகவே எழுதிக் கொண்டிருப்பது? இந்த முறை உண்மையிலேயே கொஞ்சம் சீரியஸான விஷயம் எழுதப் போகிறேன். இது ஒன்றிரண்டு கட்டுரையோடோ, அல்லது அதற்கு மேலாகவோ தொடரலாம். நான் கண்ட கேட்ட சில தகவல்களை வைத்து இந்த கட்டுரையை எழுத முடிவு செய்து இருக்கிறேன். இதில் பகிரப்படும் சில தகவல்கள் உங்களை திடுக்கிட செய்யலாம். என் நோக்கம் குறிப்பிட்டு யாரையும் தாக்குவதோ, இழிவு படுத்துவதோ அல்ல. தங்கள் குழந்தை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, பெயருக்கு பின்னால் பிஇ என்ற இரண்டு எழுத்துக்கள் போட்டுக்கொண்டாலே அவர்கள் வாழ்க்கை உருப்பட்டுவிடும் என்று குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெற்றோர்களில் ஒரே ஒருவருக்கு கூட இந்த கட்டுரை விழிப்புணர்வை ஏற்படுத்துமானால், அதுவே எனக்கு போதும். 


இந்த கட்டுரை கல்வித்தந்தைகள் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட ஒரு சிலரின் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டப்போகிறது. கல்விப் பணிக்கேன்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு சில விஷக்கிருமிகள் பற்றியே இந்த கட்டுரைத்தொடர். அதற்கு முன், பொறியியல் கல்லூரிகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள் பற்றி கூறி விடுகிறேன்.

ஒரு கல்லூரி தொடங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதற்குரிய நிலத்தை வாங்குவதில் இருந்து, கல்லூரி அட்மிஷன் வரை ஆயிரம் கடல், ஆயிரம் மலைகளை தாண்டி குதிக்கவேண்டும். ஒரே ஒரு வீட்டை கட்டி அதில் குடி புகுவதற்குள் எத்தனை அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது? அப்படி இருக்க, பல நூறு ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு கல்லூரி என்றால் சும்மாவா? குடிநீர், மின்சாரம், பஞ்சாயத்து யூனியன், சுகாதாரம், என்று அரசுத்துறையின் சுமார் ஆறு டசன் துறை அதிகாரிகளிடம் இருந்து அப்ரூவல் வாங்க வேண்டும். சிவாஜி படத்தில் வருவது போல, இதற்குள்ளாகவே நமது பாதி முதலீடு, அதிகாரிகளின் பாக்கெட்டுக்கு சென்று விடும். சரி இவ்வளவு கஷ்டப்பட்டு ஆயிரம் கடல் மலைகளை தாண்டி எதற்கு இந்த நவீன சிந்துபாத்கள் செல்கிறார்கள்? அங்கே குவிந்து கிடக்கும் கரன்சி என்னும் பேரழகியை சந்திப்பதற்கே. 


 சரி கட்டிடம் கட்டியாகி விட்டது. அடுத்தது என்ன? கட்டிடத்தை கல்வி நிறுவனம் என்று கூற வேண்டும் அல்லவா? இங்கேதான் வருகிறது கல்வித்துறை. இந்தியாவில் பள்ளிக்கல்வியில் மட்டும் குழப்பம் இல்லை. கல்லூரிக்கல்வியிலும் குழப்பம் உள்ளது. ஒரு கல்லூரிக்கு உரிமம் வழங்கும் உரிமை இரண்டு அமைப்புகளிடம் உண்டு. ஒன்று UGC என்று அழைக்கப்படும் யூனிவெர்சிடி கிராண்ட் கமிஷன். மற்றொன்று  AICTE என்று அழைக்கப்படும் ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேசன். இதில் முதலாமவர் கொஞ்சம் இளகிய மனதுக்காரர். கேட்டவுடன் அனுமதி கொடுத்து விடுவார். பொறியியல் கல்வி தொடங்க வேண்டுமானால் ஸ்ட்ரிக்ட் ஆபீசரான AICTE அப்ரூவல் இல்லாமல் முடியாது. இதற்கும் நிறைய ஏஜெண்டுகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் இருக்கிறார்கள். எப்படி வண்டியே ஒட்டத்தெரியாமல் ஏஜெண்டுகள் மூலம் லைசென்ஸ் வாங்கி விட முடியுமோ? அதே போல, கட்டிடமே இல்லாமல் AICTE அப்ரூவல் வாங்கி விட முடியும். கொஞ்சம் செலவாகும் (கொஞ்சம் என்றால் பல லட்சங்களில்) அவ்வளவே. முதலில் AICTE அனுமதி பெற்று நிறுவனத்தை தொடங்கி விட்டு, பிறகு  AICTE அனுமதி  இல்லாமல் UGC அனுமதி மட்டும் பெற்றுக்கொண்டு மேலும் சில கோர்ஸ்களை கல்லூரியில் இணைத்து விட முடியும். இத்தகைய கோர்ஸ்களில் படித்து வெளி வரும் மாணவர்களின் சான்றிதழ்கள் AICTE படி செல்லாது, ஆனால் UGC படி செல்லும். இந்த குழப்பத்தால், பல மாணவர்களை நிறுவனங்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. இந்த AICTE, UGC குழப்பம் நன்கு படித்தவர்களுக்கே புரியாது. பாமர மக்கள் எம்மாத்திரம்?  பல லட்சம் பணம் கட்டி படித்து வாங்கிய சான்றிதழ் செல்லாது என்ற இடி கடைசியிலேயே இவர்களுக்கு தெரியவரும். அதற்க்கப்புறம் புலம்புவதை தவிர வேறு வழியில்லை.  


சரி AICTE அனுமதி வாங்கியாச்சு. கல்லூரி தொடங்கி விடலாமா? முடியாது. சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி ஒரு பல்கலைகழகத்தோடு இணைந்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை வேறு வழியே இல்லை. பெரியண்ணன் அண்ணா பல்கலைக்கழகத்தோடு நம்மை இணைத்துக் கொண்டேயாக வேண்டும். அவரும் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்தான். அவ்வளவு சீக்கிரம் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டார்.  இதற்கு ஏஜெண்டுகள் இருந்தாலும், அரசியல் காற்றும் சாதகமாக நம் பக்கம் வீசவேண்டும். இல்லை என்றால் அனுமதி கிடைக்காது. மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே கட்டி முடிக்கப்பட்டு இன்னும் தொடங்காமல் இருக்கும் தயா பொறியியல் கல்லூரி இதற்கு ஒரு சான்று. இதை கட்டியவர் துரை தயாநிதி அழகிரி. கல்லூரி கட்டி முடித்துவிட்ட நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.  விளைவு கல்லூரி பாழடைந்த பங்களாவாக மாறி வருகிறது. 


இத்தனை அப்ரூவல்களையும் வாங்கிய பிறகே ஒரு பொறியியல் கல்லூரியால் அட்மிஷன் தொடங்க முடியும். முதல் முறை அப்ரூவல் வாங்குவது மட்டுமே சிரமமான காரியம். அதன் பிறகு எல்லாம் எளிதாக நடந்துவிடும். ஆண்டுக்கொரு முறை, AICTEயில் இருந்தும் , அண்ணா பல்கலைகழகத்தில் இருந்தும் வல்லுனர்கள் கல்லூரியை பார்வையிட வருவார்கள். அவர்களை சரிக்கட்டினால் போதும். 

உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் சுமார் 3350 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 65% கல்லூரிகள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ளன. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 570. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

-ஆதங்கம் தொடரும் 

உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க..... 

பிகு: நண்பர்களே கல்வித்தந்தைகள் குறித்து உங்களுக்கு தெரிந்த தகவல்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தால் கட்டுரையில் அதிக தகவல்கள் தர உதவியாக இருக்கும். நன்றி 
முழுவதும் படிக்க >>

April 29, 2013

சினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு


வணக்கம் நண்பர்களே,


ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் பிஸியாகி விட்டதால் பதிவுலக ஜோதியில் கலக்க முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் நண்பர்கள் எழுதிய நிறைய விஷயங்களை படிக்க முடியாமல் போய் விட்டது. குறைந்தது இன்னும் இரண்டு மாதங்களுக்காவது தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். அதென்ன இரண்டு மாதங்கள்? என்று நினைக்கிறீர்களா? அதன் பிறகு பொறுப்புள்ள அப்பாவாக எனக்கு ப்ரோமோஷன் கிடைக்கப்போவதால் கொஞ்சம் எழுத தடைபடலாம். எல்லாம் தற்காலிகம்தான். பதிவுலகம் தரும் உற்சாகம் என்னை மீண்டும் இங்கேயே இழுத்து வந்து விடும். கோடை விடுமுறைக்கு சென்று விட்டு அடுத்த வகுப்பில் முதல் நாள் வந்து அமர்ந்திருக்கும் மாணவர் போல உணர்கிறேன். மொக்கை போதும் இனி பதிவுக்குள் செல்லலாம். சொல்லப்போனால் இனிமேல்தான் சூர மொக்கை ஆரம்பம் ஆகப்போகிறது. எடுத்த எடுப்பிலேயே சீரியஸ் பதிவுகள் வேண்டாம் என்று நினைத்ததால் இந்த பதிவு. 

பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு ஒரு கட்டத்தில் தானும் ஒரு பதிவர் ஆகிவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் எதை எழுத என்று தெரியாது. என்னைபோன்ற அரைவேக்காடுகள், கவிதை, கட்டுரை என்று விஷப்பரீட்சையில் இறங்கினால் இரண்டே பதிவுகளில் கடையை மூடி விட்டு செல்ல வேண்டியதுதான். இதற்காகத்தான் இருக்கவே இருக்கிறது சினிமா விமர்சனப்பதிவுகள். தமிழர்கள் எதில் சோடை போனாலும், தான் பார்த்த படத்தை பற்றி அடுத்தவர்களோடு அரட்டை அடிப்பதில் சோடை போவதே இல்லை. ஆகவே எதைப்பற்றி எழுதுவது? என்ன எழுதுவது? என்று எதுவுமே (என்னே எழுத்து நடை? இதையும் சேர்த்து தொடர்ந்து எட்டு  'எ' வார்த்தைகள், ஹி ஹி)   தெரியாமல் எழுத தொடங்குபவர்களுக்கு அரிய வரப்பிரசாதம்தான் இந்த திரை விமர்சனப்பதிவுகள். திரை விமர்சனம் எழுதுவது என்று முடிவு கட்டியாகிவிட்டது. அதை எப்படி எழுதுவது? கவலையை விடுங்கள். பதிவுலகில் நான்கு ஆண்டுகள் கொட்டிய குப்பையை கிளறி உங்களுக்கு சில ஐடியாக்கள் கொடுக்கிறேன்.


விமர்சனங்கள் பலவகைப்படும். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

உலகத்தர விமர்சனம் 
இந்த வகை விமர்சனங்கள் உங்களை பதிவர்கள் மத்தியில் அறிவு ஜீவி என்ற இமேஜை ஏற்படுத்தும். பதிவுலக கமலஹாசன், மணிரத்னம் என்ற அடைமொழிகள் கூட கிடைக்கலாம். உலகத்தர விமர்சனங்கள் எழுத உங்களுக்கு தேவையான தகுதி, நீங்கள் தமிழ் படங்களை அறவே வெறுப்பவராகவோ அல்லது வேறு மொழி படங்களை மட்டும் பார்ப்பவராகவோ இருக்க வண்டும். குறிப்பாக ஐரோப்பிய படங்களை பார்க்க வேண்டும். எனக்கு வேறு மொழி படங்கள் எல்லாம் புரியாதே? என்று நினைக்கிறீர்களா? கவலையை விடுங்கள். நீங்கள் எழுதும் விமர்சனத்தை படித்துவிட்டு, அந்த படங்களை தேடிப்பிடித்து பார்ப்பவர்கள் 1 சதவீதம் கூட கிடையாது. ஆகவே நாம் சொல்வதுதான் கதை. நாம் சொல்வதுதான் கருத்து. அது சரி? அத்தகைய படங்களை எங்கே சென்று தேடுவது? இருக்கவே இருக்கிறது Imdb தளம். அங்கே ஒரே ஒரு படத்தை வைத்து வரிசையாக நூல் பிடித்து பல படங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். கதையை படிக்க விக்கிபீடியா இருக்கிறது. இந்த வகை படங்கள் பெரும்பாலும் பலான படங்களாகவே இருப்பதால் நமக்கு இரட்டை லாபம். "வேலைக்கு வேலையும் ஆச்சு, அலமாரியும் வெள்ளை ஆச்சு, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!", என்று  காதலா காதலா படத்தில் கமலாஹாசன் சொல்வது போல, உங்களை பிட்டுப்பட ரசிகன் என்று யாரும் கலாய்க்கவும் மாட்டார்கள், மாறாக உங்களை மிகவும் மதிக்கவும் தொடங்குவார்கள். இந்த வகை விமர்சனங்களில் உள்ள ஒரே ரிஸ்க், பின்னூட்டங்களில் யாராவது படத்தை பற்றி விவாதிக்க தொடங்கினால் போச்சு, குட்டு வெளிப்பட்டு விடும். ஆகவே, கூடியமட்டும் பின்னூட்டங்களில் படத்தை பற்றி விவாதிக்காமல் திசை திருப்பி விடுங்கள்.


நடுத்தர விமர்சனம்
இவை மிகவும் சாஃப்ட் ரக விமர்சனங்கள். இதில் பெரும்பாலும் தாய்மொழி படங்களும், அவ்வப்போது பிறமொழி படங்களும் இடம்பெறும். இதற்கு பெரிய அனுபவ அறிவு எல்லாம் தேவை இல்லை. மேலும் படத்தில் பணியாற்றி இருப்பவர்கள் மீது சாஃப்ட் கார்னர் இருக்கும் யாரும் இவ்வகை விமர்சனங்கள் எழுதலாம். பத்து நிறைகள் என்றால் இரண்டே இரண்டு குறைகள் என்ற விகிதத்தில் எழுதவேண்டும். டீசண்டான ஸ்டில்கள் மட்டுமே பதிவில் இடவேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்தபின் தியேட்டருக்கு சென்ற பயணக்கட்டுரை, இடைவேளையில் நீங்கள் சாப்பிட்ட பாப்கார்ன், கோன் ஐஸ், உங்கள் குழந்தைகள் செய்த அடம்,  ஆகியவற்றை இணைக்க மறக்காதீர்கள். பாசிடிவ் விமர்சனம் என்பதால் இந்த வகை விமர்சனங்களில் ரிஸ்க் மிக குறைவு. ஆனால் இதை விரும்பி படிப்பவர்களும் குறைவு. 

கட்டாந்தர விமர்சனம் (அ) தரை டிக்கெட் விமர்சனம்  
இது மிகவும் எளிது. படத்தை பற்றி எழுதாமல், ஹீரோவில் தொடங்கி, லைட்மேன் வரை அனைவரையும் கலாய்த்து எழுதவேண்டும். நடுநடுவே ...த்தா, ....ம்மா ,தக்காளி, பப்பாளி போன்ற வார்த்தைகளை சென்சார் இல்லாமல் சேர்க்க வேண்டும். இவை எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லையாம். வட்டார வழக்குகளாம். பதிவுலக தமிழறிஞர் ஒருவர் கூறினார். ஆகவே பயப்பட வேண்டாம். படம் பார்க்க வீட்டில் இருந்து பைக்கில் கிளம்பியது முதல், நடுவே டிராஃபிக் போலீஸிடம் திட்டு வாங்கியது, டாஸ்மாக்கில் சரக்கடித்தது, டிக்கெட் கவுண்ட்டரில் பான்பராக் போட்டு துப்பியது, டைட்டில் போட்டதும் தூங்கியது, நடுவே இண்டர்வெலில் கழிப்பறை சென்றது என்று விடாமல் எழுதவேண்டும். ஆனால் படத்தை பற்றி மட்டும் எழுதக்கூடாது. டீசண்டான ஸ்டில்களை எக்காரணம் கொண்டும் போடக்கூடாது. படத்தில் நடித்த நடிகைகளின் கவர்ச்சி ஸ்டில்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். இதில் உள்ள ரிஸ்க், உங்கள் பதிவை படிக்காமலேயே, ஸ்டில்களை மட்டும் பார்த்து பின்னூட்டம் இடுபவர்கள்தான் அதிகம். ஆகவே, "கஷ்டப்பட்டு நாம் எழுதியதை படிக்கவில்லையே?", என்று நீங்கள் வருத்தப்படக்கூடாது. "இந்த மாதிரி அசிங்கமான படங்களை வெளியிடுகிறாயே?", என்று யாராவது கேள்வி கேட்டால், நீங்கள் அளிக்க வேண்டிய பின்னூட்டம் "ஹி ஹி....", அவ்வளவுதான்.  

நடுநிலை விமர்சனம் 
இது அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் எதிர் நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமே எழுத வேண்டும். இரண்டுக்கும் தேவை ஒரே திறமைதான். நம்மாள் நடித்தால் அதை தாறுமாறாக புகழ தெரிந்திருக்க வேண்டும். எதிரி நடித்திருந்தால் தாறுமாறாக கலாய்க்க தெரிந்திருக்க வேண்டும். இவ்வகை படங்களுக்கு விமர்சனங்கள் ஒரே பதிவோடு முடிவதில்லை. உங்கள் நாயகனை உயர்த்தி நீங்கள் பதிவிட்டால், அவரை கலாய்த்து வேறொருவர் பதிவெழுதி இருப்பார். அதற்கு எதிர்வினையாக இன்னொரு பதிவு எழுதவேண்டும். இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வகை விமர்சனங்களில் உள்ள இன்னொரு அம்சம், உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆடிட்டர் திறமை வெளிப்பட சிறந்த வாய்ப்பாக அமையும். படத்தின் தினசரி கலெக்சன், வார கலெக்சன், ஏரியா வாரியாக கலெக்சன் என்று அள்ளி விடவேண்டும். எந்த ஆடிட்டர் ஒழுங்காக கணக்கு காட்டி இருக்கிறார்? ஆகவே நீங்களும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கூடவே சில வலைதளங்களையும் உதவிக்கு சேர்த்து கொள்ளலாம். 

சரி இனி விமர்சனம் எழுதும் முறையை பற்றி பார்க்கலாம். 

ஒரு விமர்சனம் சரியாக மக்களை சென்றடைய முதலில் தேவையானது சரியான தலைப்பு. உதாரணமாக, 'பரதேசி -திரை விமர்சனம்' என்று தலைப்பிட்டால் ஒரு பயல் எட்டிப்பார்க்க மாட்டான், மாறாக, 'பரதேசி, படத்துக்கு போகும் முன் நீ யோசி', என்று டைட்டில் வைத்தால் சூப்பராக இருக்கும். 

முதல் பத்தி விமர்சனத்தின் முன்னுரை. இதிலேயே விமர்சனத்தை தொடங்கி விடக்கூடாது. இது படத்தின் இயக்குனரையோ, நாயகனையோ அல்லது வேறு ஒருவரையோ குறிப்பிட்டு இருக்கவேண்டும். உதாரணமாக, "பொதுவாக நான் பாலா படங்களை பார்ப்பதில்லை." என்று தொடங்க வேண்டும். இல்லை, "ஆயுத எழுத்து படத்தோடு மணிரத்னம் படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.", என்று கூறவேண்டும். மணிரத்னம் மற்றும் பாலாவின் ஒவ்வொரு படங்களுக்கும் இப்படித்தான் நாம் எழுதி இருப்போம் என்பதெல்லாம் இங்கே மறந்து விடவேண்டும்.  இந்தப்படத்தை பார்த்த காரணத்தை விதியின் மீதோ அல்லது நண்பர்கள் மீதோ போட்டு விடவேண்டும். 

அடுத்த பத்தியில் படத்தின் முழுகதையையும் கூறி விடவேண்டும். படத்தின் முக்கிய டுவிஸ்டை இங்கே சொல்லி விடக்கூடாது. படம் பார்க்கும் போது சுவாரசியம் கெட்டுவிடும் என்ற நல்லெண்ணத்தில் அல்ல. தொடர்ந்து பதிவை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக. கதையை எழுதும் போது மேலே நான் கூறிய வகைகளில் எந்த வகையில் எழுத விரும்புகிறோமோ அதற்கெற்றார் போல எழுத்து நடை அமையை வேண்டும். உதாரணமாக, தரை டிக்கட் வகையில் விமர்சனம் எழுத வேண்டுமானால், கெட்ட வார்த்தைகளை, சாரி வட்டார வார்த்தைகளை தாராளமாக கலந்து விட வேண்டும். 

 அடுத்த பத்திகளில்,  நாயகனில் தொடங்கி, இயக்குனர், இசையமைப்பாளர், என்று எல்லோரையும் துவைத்து எடுக்கும் இடம் இதுதான். ஈவு இறக்கம் எல்லாம் காட்டக்கூடாது. கதாநாயகிக்கு என்று தனிபத்தி ஒதுக்க வேண்டும். படத்தில்தான் கதாநாயகிக்கு சரியான அங்கீகாரம் கிடக்கவில்லை என்பதற்காக நாமும் அதையே செய்யலாமா? விமர்சனத்திலாவது அங்கீகாரம்  கொடுப்பது நம் கடமை அல்லவா? 

அடுத்த பத்திகளில் படத்தின் லாஜிக் ஓட்டைகளை கண்டு பிடித்து பட்டியலிட்டு காட்ட வேண்டும். இந்த இடத்தில்தான் படத்தின் முக்கிய டுவிஸ்டுகள் அனைத்தையும் கூறிவிட வேண்டும். யாராவது கேட்டால், "நான் என் கடமையைதான் செய்தேன்?", என்று கூலாக கேள்வி கேட்கலாம்.

இறுதி பத்தி. இதுதான் மிக முக்கியமானது. இந்த பத்தியை படித்து விட்டுத்தான்  உங்களை பின்னூட்டத்தில் கடித்து குதறப்போகிறார்கள். படத்தை பற்றி நாலே வரிகளில் கூறவேண்டும். பார்க்கலாமா, வேண்டாமா, யார் பார்க்கலாம், பார்த்தே ஆகவேண்டுமா, என்றெல்லாம் நீங்கள் கருத்து கூறும் இடம் இதுதான். 

இறுதி பஞ்ச்: படத்தை பற்றி நச்சென்று ஒரு பஞ்ச் வைக்கும் இடம். இது படத்தின் சம்பந்தப்பட்டவரை நருக்கென்று குட்டு வைப்பது போல இருக்க வேண்டும். உதாரணமாக "அலெக்ஸ் பாண்டியன் : தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டும்...." 

என்ன நண்பர்களே, நீங்களும் சினிமா விமர்சனம் எழுத கற்றுக் கொண்டீர்களா? உங்களுக்கு இதில் வேறேதும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். தெரிந்தால் சொல்கிறேன்.  

பிகு: ஒருவழியாக டாக்குடர் அவர்களை இழுக்காமல் ஒரு பதிவு எழுதி விட்டேன். அய்யயோ பிகுவில் அவரது பெயரை பயன்படுத்தி விட்டேனே? ஹி ஹி.....

உங்க கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்..... 

முழுவதும் படிக்க >>

February 11, 2013

விஸ்வரூபம் போன்ற படங்களை என்ன செய்யலாம்?

; நான் விஸ்வரூபம் படத்தை பார்த்து விட்டேன். "படம் வெளிநாடுகளில் பட்டையை கிளப்பி வருகிறது", என்று எல்லோரும் கூறினாலும் எங்கள் ஊரில் தியேட்டர்கள் காத்தாடுகிறது என்பதே உண்மை.(ஒருவேளை வெளிநாடுகளில் படத்தின் நிலைமை என்னவென்று நமக்கு தெரியாது என்பதால் புருடா விடுகிறார்களோ?) என் உறவினர் ஒருவர் தீவிர கமல் பக்தர். அவரிடம் அவரது நண்பர் வழக்கமாக ஒவ்வொரு கமல் படம் வெளிவரும்போது கேட்கும் அதே கேள்வியைத்தான் இப்போதும் கேட்டார். "உங்க ஆளுக்கு புரியுர மாதிரி படம் எடுக்கவே தெரியாதா?" என்பதுதான் அவர் வழக்கமாக கேட்கும் கேள்வி. பூஜா குமார் கமலை பின்தொடர்ந்து ஒரு டிடெக்டிவை ஏன் அனுப்புகிறார் என்பதையே நான் அரைமணி நேரம் அவருக்கு(கமல் பக்தருக்கு) விளக்கினேன். இது இப்படி இருக்க, தாலிபான், ஒசாமா, எஃப்‌பி‌ஐ, சீசியம் என்று நான் இறங்க அவர் சொன்னது, "கிழிஞ்சது போ.... ". இதுவே ஒரு C சென்டர் ரசிகனின் ஒற்றைவரி விமர்சனம்.&nbsp


சரி அதை விடுங்கள். "அதென்னமோ இந்தப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தி எடுத்திருக்கிறார்கள் என்று கூறினார்களே? அதைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன்?" என்று கூறுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நான் ஒரு கருத்தை சொல்லப்போக, கடந்த ஒரு மாதகாலமாக பல தளங்களில் வந்த அதே செட்ஆஃப் கருத்துகளை மறுபடியும் ஒரு முறை என் தளத்தில் வந்து பகிருவார்கள். இசுலாமிய கருத்துரையாளர்களுக்கு மாலேகான், மோடி, காஷ்மீர் என்று ஒரு அஜெண்டா. இந்து கருத்துரையாளர்களுக்கு, நபி, பர்தா, மலாலா என்று இன்னொரு அஜெண்டா. இவை இரண்டையும் தாண்டி இருவருமே வெளி வர விரும்ப மாட்டார்கள். ஆகவே அதை பற்றி பேசி இங்கே நேரத்தை வீணடிக்க வேண்டாம். 


ஒரு இந்துவாக என் கருத்து ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எல்லா இசுலாமியர்களும், தீவிரவாதிகளோ, கொடிய எண்ணம் கொண்டவர்களோ அல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு, எல்லா இந்துக்களும், இந்துத்வாவாதிகளோ, ஆர்‌எஸ்‌எஸ்காரர்களோ, இசுலாமியர்களை விரோதிகளாக எண்ணுபவர்களோ அல்ல. தங்களது கடவுள்கள் குழுவில் அல்லா சாமியையும், ஏசப்பாவையும்  சேர்த்துக் கொண்டவர்களே அநேகம். சரி இதைப்பற்றி இன்னொரு நாள் இன்னும் விலாவாரியாக எழுதுகிறேன். 

நான் இந்த பதிவில் சொல்லவேண்டியதை விட்டுவிட்டு வேறு எங்கோ சென்று விட்டேன். பார்த்தீர்களா? இப்படித்தான் எல்லா விவாதங்களும் சென்று விடுகின்றன. சரி விஷயத்துக்கு வருவோம். விஸ்வரூபம் என்ற ஒரு படம் இல்லை. பொதுவாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து சில விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை சொன்னவுடன் உங்களுக்கு ஒரு உருவம் ஞாபகத்துக்கு வரும். அது நம் தமிழ் சினிமா உருவாக்கி வைத்துள்ள பிம்பம்.  அதையே இங்கே பட்டியலிட போகிறேன்.  இதே மேட்டரை பலபேர் ஏற்கனவே பட்டியலிட்டு விட்டாலும் மீண்டும் ஒருமுறை உங்களுக்காக. 

படத்தில் வரும் பாத்திரங்களை சில பிரிவுகளாக பிரித்துள்ளேன்.

துணை பாத்திரங்கள் 

தீவிரவாதி - பாகிஸ்தானை சேர்ந்த ஒரு முஸ்லீம்

போலி சாமியார் - ஒரு இந்து சாமியார் (பெயர் ஏதோ ஒரு ஆனந்தாவாக இருக்கும்)

அம்மு குட்டி (அ) ஓமண குட்டி - கேரளாவை சேர்ந்த ஒரு பெண். இவளுக்கு எப்போதுமே தமிழ் ஆண்கள் மீது ஒரு கண் உண்டு. ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ஹி ஹி...  

நாயர் - இவர் அம்முகுட்டியை கல்யாணம் செய்த அப்பாவி. டீக்கடை நடத்துபவர்

மடிசார் மாமி - இவர் அம்முகுட்டியின் தமிழ் சாரி ஆரிய வெர்ஷன். இவரது ஆத்துக்காரர் யாரென்பது தெரியவே இல்லை

கிளப்பில் நடனம் ஆடுபவள் -  கிறித்துவ பெண் 

விபசாரம் செய்பவள்#1 - வாழ்க்கை இழந்த (வில்லனால் கெடுக்கப்பட்ட) தாழ்ந்த சாதி பெண்

விபசாரம் செய்பவள்#2 - ஆடம்பரத்தை விரும்பும் பணக்கார கிறித்துவ பெண்

விபசார விடுதி நடத்தும் பெண் - வாயில் வெற்றிலை போட்டுக்கொண்டு தெலுங்கு பேசுபவள் 

சேட் - மக்களை ஏமாற்றும் வட்டிதொழில் செய்யும் முட்டாள் வட இந்தியர் 

ரொம்ப நல்ல பெரியவர் - வயதான பள்ளி ஆசிரியர் அல்லது சுதந்திர போராட்ட தியாகி

போலீஸ் கமிஷனர் - வில்லனுக்கு துணை போய், அவனிடம் அறை வாங்கும் அளவுக்கு கேவலமான மாமா

பட்லீ அல்லது செட் அப் - நுனி நாக்கில் தமிழ் பேசும் ஆங்கிலோ இந்திய பெண் 

கறிக்கடை பாய் - பத்து இந்துக்கள் கடை வைத்திருக்கும் இடத்தில் மத நல்லிணத்துக்காகவே கசாப்பு கடை வைத்திருக்கும் ஒரு முஸ்லீம். 

ஃபாதர் - அதே தெருவில், அதே காரணத்துக்காக அங்கியை மாட்டிக்கொண்டு குறுக்கா மறுக்கா நடக்கும் கிறித்துவர்


குருக்கள் - ஒரு சண்டை காட்சிக்கு லீடாக ரவுடிகளால் கலாய்க்கப்படும் ஒரு அப்பாவி. மற்ற நேரங்களில் நாயகன் அல்லது காமெடியன்களால் கலாய்க்கப்படுபவர்

 நர்ஸ் - நகைச்சுவை நடிகர்களால் கையை பிடித்து இழுக்கபடுபவர் 

வில்லன் மனைவி - கணவனுக்காக கோயில் கோயிலாக சுற்றும் தீவிர இந்து பக்தை. 

பத்திரிக்கை நிருபர் - தாடி வைத்தவர். வில்லனால் கொல்லப்படுபவர் 

திருநங்கை - காமெடி காட்சியில் கதாநாயகனை துரத்துபவர் அல்லது பாடல் காட்சியில் நகைச்சுவை நடிகரை சுற்றி ஆடுபவர். 

வில்லன்கள் 

லோக்கல் ரவுடி வில்லன் - தீவிர இந்து. குறிப்பாக முருகன், சிவன், முனியசாமி ஆகியோரை கும்பிடுபவன். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்த தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் 

ரெட்டி - படிக்காத ஆந்திர அரசியல்வாதி. பெண் பித்து பிடித்த கொலைகார வில்லன் 

பீகாரி - படிக்காத வட இந்திய தாதா. பெண் பித்து பிடிக்காத கொடூர கொலைகார வில்லன். 

அமெரிக்க ஐரோப்பிய வில்லன் - போதைக்கும் பெண்ணுக்கும் அடிமையான ஒரு கிறித்துவன் 

தேசத்தை அச்சுறுத்தும் தீவிரவாத வில்லன் - முதலில் தாடி வைத்து, பிறகு அதை மழித்து கொண்டு சுற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் 

கெட்ட சைக்கோ கொலைகாரன் - ஒரு கிறித்துவன்


பெண்களை கடத்துபவன் - கிறித்துவன்

கடத்த பட்ட பெண்களை ஏலம் எடுப்பவன் - துபாய் ஷேக் அல்லது முஸ்லீம் 

வில்லனின் முக்கிய அடியாள் - முஸ்லீம். திருந்தும் நேரத்தில் வில்லனால் கொல்லப்படுபவன் 


கதாநாயகன் மற்றும் கதாநாயகி
ஏழை கிறித்துவன் - மீன் பிடிப்பவன், சாராயம் குடிப்பவன். கேரஜ் வைத்து மெக்கானிக்காக இருப்பவன்

பணக்கார கிறித்துவன் - அடிப்படையில் நல்லவன் ஆனால் கடத்தல் தொழில் செய்பவன். விஸ்கி குடிப்பவன்.  (இந்துவாக பிறந்தவன்)


ஏழை இசுலாமியன் - இப்படி ஒரு பாத்திரம் மிக அபூர்வம். அப்படியே இருந்தாலும் தாதா வில்லனின் அடியாள் (இந்துவாக பிறந்தவன்)

பணக்கார இசுலாமியன் - மிக மிக அபூர்வம். அப்படியே இருந்தாலும் லோக்கல் தாதா (இந்துவாக பிறந்தவன்)

தலித் (அ) தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் - அநாதை, சேரியில் வளர்ந்தவன்.(உயர்ந்த சாதியில் பிறந்தவன்)

தமிழ் பட கதாநாயகன் (90%) - வேறு சாதியில்(தாழ்த்தப்பட்ட சாதியில் அல்ல) பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிராமணன் ஆக வாழ்பவன் அல்லது பிராமணனாக பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரியில் வாழ்பவன்  

பணக்கார கதாநாயகி - மாடர்ன் டிரெஸ் போட்ட, படித்த திமிர் பிடித்த வெகுளியான லூசுப்பெண்


ஏழை கதாநாயகி - தாவணி காட்டிய, படிக்காத வெகுளியான லூசுப்பெண்

மிடில் கிளாஸ் நாயகி - சுடிதார் போட்ட  காலேஜ் போகும் வெகுளியான லூசுப்பெண் 

புதுமைப்பெண் கதாநாயகி - பேண்ட் ஷர்ட் போட்டவள்,  நாயகனை மணக்கும் வரையில் பெண்ணுரிமை பேசுபவள் அதன் பிறகு லூசுப்பெண்  

 இப்போவே கண்ணை கட்டுது. இதுக்குமேல நம்மால் முடியாது. விட்டுப்போனவைகளை பின்னூட்டத்தில் கூறுங்கள். 

இது ஒரு தவறான பிம்பம் என்றாலும்  இதை உருவாக்கிய பெருமை (அ) சிறுமை திரை துறையையே சாரும். இது மாற வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் மாறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. யாரும் தட்டிக்கேட்கவும் போவதில்லை. அப்படியே கேட்டாலும், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று பதில் வரும். 

உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க. 
முழுவதும் படிக்க >>

January 21, 2013

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.....



பொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழுமையான பதிவல்ல. டக்கென்று நினைவுக்கு வந்தவையை பற்றி எழுதி இருக்கிறேன். தமிழ் சினிமாவிற்கு இன்ப அதிர்ச்சி தந்தவர்கள் ஏராளம். ஒரு புதிய டிரெண்டையே உருவாக்கிய திரைப்படங்கள் எண்ணிலடங்கா. அந்த வகையில் திரை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஒரு சில இயக்குனர்கள் தாங்கள் சம்பாதித்த பெயரை தாங்களாகவே கெடுத்துக்கொண்டதும் உண்டு. அதன் சிறு உதாரணப்பட்டியலே இந்த பதிவு.

சுரேஷ் கிருஷ்ணா...

இவர் சிறந்த இயக்குனரா இல்லையா என்பதே எனக்கு சந்தேகமான விஷயம்தான். பல மொழிகளில் நிறைய படங்கள் இவர் இயக்கியிருந்தாலும் இவரது பெரும்பாலான அதிரடி ஹிட்டுக்கள் மாஸ் ஹீரோ படங்களின் மூலமே வந்திருக்கின்றன. இவரது பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது அண்ணாமலையும், பாட்ஷாவும்தான். இந்த இரண்டு படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்தது இந்த படங்களுக்கு அப்புறம்தான். சுரேஷ் கிருஷ்ணாவின் படங்கள் அந்தந்த மொழியில் உள்ள மாஸ் ஹீரோக்களின் ஸ்டார் வேல்யூவில் ஓடின என்று கூறப்பட்டாலும், பாட்ஷா படத்தின் இம்பாக்ட் இவரை பெரிய இயக்குனர்கள் வரிசையில் போய் அமர்த்தியது. ஆனால் அதை சரிவர பயன்படுத்தாத இவர் சொல்லி சொல்லி அட்டர் பிளாப் படங்களை இயக்கினார்.

மாற்று மொழிகளில் ஹிட் படங்களை அவ்வப்போது கொடுத்து வந்த இவரால் தமிழ் படங்களில் ஆவரேஜ் படத்தை கூட தர இயலவில்லை. ரஜினியின் வீரா படத்துக்கப்புறம் தமிழில் இவர் கொடுத்த ஒரே ஆவரேஜ் படம் பாபாதான். அட்டர் பிளாப் ஆகவேண்டிய இந்த படத்தை ரஜினியின் பிம்பம் காப்பாற்றியது சிலர் பாபாவை ரஜினியின் தோல்விப்படம் என்றே இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக பார்த்தால் இது ஆவரேஜ் படம்தான். ஆனால் ரஜினி படம் என்பதால் இதை தோல்வி கணக்கில் சேர்க்கிறார்கள். எப்படி சச்சின் 50 ரன் எடுத்தாலும் சரியாக ஆடவில்லை என்று சொல்கிறார்களோ அதே போல.

தமிழில் இவர் கொடுத்த அட்டர் பிளாப்புகளின் பட்டியல்

சிவசக்தி- சத்யராஜ் பிரபு நடித்து மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம்

ஆஹா -டீவி சீரியல் மாதிரி எடுக்கப்பட்டு அடிக்கடி கே டிவியில் ஒளிபரப்பபடும் இந்த படம், வெளிவந்த நேரத்தில் அட்டர் பிளாப்.

சங்கமம் -வெளியான ஒரே வாரத்தில் டிவியில் ஒளிபரப்பட்ட முதல் படம்

ஆளவந்தான் - மிகுந்த பொருட்செலவில் கமல் பின்னனியில் இருந்து
இயக்கப்பட்டு தாணுவை அழிக்க வந்தான்.

கஜேந்திரா-ராஜமௌலியின் சிம்மாத்ரி படத்தின் தமிழ் ரீமேக். இன்றும் விஜயகாந்தை கலாய்த்து யூ டியூபிள் பகிரப்படும் பல விடியோக்கள் இந்த படக்காட்சிகளே. உதாரணமாக விஜயகாந்த் தன்னுடைய ரத்தத்தில் சிகரெட் பற்ற வைப்பது போன்ற காட்சிகள் ஏராளம்.

பரட்டை என்கிற அழகு சுந்தரம் - இந்த படத்தில் நடித்ததை தனுஷே மறந்திருப்பார்

இளைஞன் - கலைஞரின் கை வண்ணத்தில் வந்த தாய்க்காவியம்.

ஆறுமுகம் -அண்ணாமலையின் கொடூர அன் அபீசியல் ரீமேக்.

மற்ற மொழிகளில் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒருமுறை இவர் ஹிட் கொடுத்து வந்தாலும் தமிழை பொறுத்தவரை ஹிட் என்பது இவருக்கு எட்டாக்கனிதான்.


அகத்தியன்...

இந்த பெயருக்கு பத்தாண்டுகளுக்கு முன் திரை உலகினர் மத்தியில் பெரிய  மரியாதை உண்டு. வித்தியாசமான கதைகளை கண்ணியமான முறையில் படமாக்கி வெற்றி பெற்றவர். இவரது படங்கள் மிக மெதுவாக நகர்பவை. ஆனால் கதையின் அழுத்தம் அதை மறக்கடித்து விடும். முதலில் ஜாலியாக மதுமதி, வான்மதி போன்ற மெல்லிய நகைச்சுவை படங்களை இயக்கிய இவர், தமிழ் சினிமாவில் ஒரு புது காதல் டிரெண்டை உருவாக்கிய காதல் கோட்டை என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்துக்கு சென்றார். அந்த காலத்தில் எல்லோராலும் மதிக்கப்பட ஒரு காதல் படம் இது. இதன் விளைவாக நிறைய காதல் படங்கள் இதே சாயலில் வரத்தொடங்கின. இதற்கு அடுத்த படம் இவர் மீதான மதிப்பை இன்னுமும் உயர்த்தியது. அந்தப்படம்தான் கோகுலத்தில் சீதை. நவரச நாயகன் கார்த்திக் எவ்வளவு சிறந்த நடிகர் என்பதற்கு இந்த ஒரு படமே உதாரணம். இதற்கடுத்து வெளிவந்த விடுகதை வித்தியாசமான படம் என்றாலும் இதுதான் இவரது சறுக்கலுக்கு ஆரம்பம். அடுத்து வெளியான காதல் கவிதை படமும் மண்ணைக்கவ்வியது

நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவந்த ராமகிருஷ்ணா என்ற படத்தை முதலில் நான் பார்த்தபோது இந்த படத்தை எந்த மொக்கை இயக்குனர் எடுத்திருப்பார்? என்றே நினைத்தேன். அகத்தியன் என்று தெரிந்தவுடன் எனக்கு தூக்கி வாரி போட்டது. படு குப்பை. அதே போல காதல் சாம்ராஜ்யம் என்ற குப்பை படத்தையும் பல ஆண்டுகளாக எடுத்து இழுத்து பறித்து  வெளியிட்டார்கள். இதற்கப்புரம் இவர் படம் இயக்கவே இல்லை. மீண்டும் வந்து முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

எஸ் ஜே சூர்யா...

இவர் மீது இன்னமும் எனக்கு ஆதங்கம் உண்டு. இவர் ஒரு சிறந்த கதாசிரியர் மற்றும் இயக்குனர். அப்படியே இருந்திருந்தால் இந்த பட்டியலில் இவர் சேர்ந்திருக்க மாட்டார். இவர் சொல்லும் விஷயங்கள் ஆபாசமாக இருந்தாலும் இவரது படங்களின் கரு உளவியல் ரீதியான விஷயங்கள் பற்றியதாக இருக்கும். தலயை முதன் முதலில் வாயை பிளந்து ரசிக்க வைத்த இயக்குனர். முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை அழுத்தமாக பதித்த இவரது பாதிப்பு இன்னுமும் போகவில்லை. நடிகர் விஜய் தோல்வியால் துவண்டு கிடந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக தூக்கிவிட்டு வழி காட்டியவர். பின்னர் அடுத்தடுத்த வந்த நியூ, அ....ஆ படங்களில் சொல்ல வந்த கருத்தை விட அதை மார்க்கெட்டிங் செய்ய ஆபாச ஜிகினாவை அளவுக்கு அதிகமாக சேர்த்து அ..ஆ என்ற அவரேஜ் படத்தில் வந்து நிற்கிறார். கடைசியாக இவர் தெலுங்கில் இயக்கிய கோமரம் புலி மரண அடி வாங்கியது. தற்போது இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராக வேறு அவதாரம் எடுத்திருக்கிறார். பயமாக இருக்கிறது.

பேரரசு...

நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவர் வாழ்வில் மறக்கவே முடியாத இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். திருப்பாச்சி, மற்றும் சிவகாசி என்ற இரண்டு படங்களும் தமிழ் திரைப்படங்களை மறுபடியும் எண்பதுகள் நோக்கி இழுத்து சென்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள். ஆனால் அதே இரண்டு படங்கள்தாம் விஜய் தன்னை ரஜினியை தாண்டி எம்‌ஜி‌ஆர் என்று நினைக்க வைத்தது. முதல் இரண்டு படங்கள் கொடுத்த மார்க்கெட்டை வைத்து வரிசையாக பிளாப் படங்களை இறங்கு வரிசையில் கொடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் பேரரசு. திருப்பதி, பழனி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருத்தணி என்று இப்போதும் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறார். இதில் திருப்பதி படத்துக்கு சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு அரசு மாநில விருது பெற்றது ஆச்சர்யம். தமிழகத்தை கலக்கிய இவர், தற்போது மலையாளக்கரையோரம் பட்டையை கிளப்ப தயாராகி வருகிறார்.

சக்தி சிதம்பரம்...

இவர் குறித்து எனக்கு பல வருத்தங்கள் உண்டு. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சாத்துரே இவரது சொந்த ஊர். இவரது தம்பி மகன் எனக்கு நெருங்கிய நண்பர். இவரது முதல் மூன்று படங்களான என்னம்மா கண்ணு, லவ்லி  மற்றும் சார்லி சாப்ளின் ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. இதற்கடுத்து இவர் எடுத்தவை எல்லாமே கர்ண கொடூரங்கள். கதையம்சம், நகைச்சுவை ஆகியவைக்கு முக்கியத்துவம் தராமல், இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி என்று இறங்கு முகத்தில் செல்கிறார். இவரது இறங்கு முகத்தையும், நமீதாவின் பரிணாம(!) வளர்ச்சியையும் ஒரே தராசில் வைக்கலாம்.

காதல் கிறுக்கன் என்ற அட்டர் பிளாப் படத்தை கொடுத்த கையோடு, மகா நடிகனை வெளியிட்டார். படத்தில் பிற படங்களை கிண்டல் செய்து வைத்த காட்சிகளும், நமீதாவின் பங்களிப்பும் கொஞ்சம் வெற்றியை தர, அடுத்தடுத்து  வெறும் இரட்டை அர்த்த வசனங்களையும், நமீதாவையுமே நம்பி மகா மட்டமான படங்களை வெளியிட்டார். இங்கிலீஷ்காரன் ஹிட் அடிக்க, அடுத்து வந்த கோவை பிரதர்ஸ், வியாபாரி, சண்டை, ராஜாதி ராஜா எல்லாம் பிளாப் ஆனது. தொடர்ந்து வந்த குரு சிஷ்யன் என்ற படம் வந்த சுவடே தெரியவில்லை. அடுத்து வெளிவரவிருக்கும் மச்சான்  படத்தில் விவேக் நடிக்கிறார் என்பது இந்த படமும்எப்படி இருக்கும் என்பதற்கு பெரிய சான்று.

சேரன்...

இவர் மீதும் ஒரு காலத்தில் பெரிய மேதை என்ற மாயை இருந்தது. இவரது படங்கள் அனைத்தும் மிக மெதுவாக, ஆனால் கனமான கதையம்சத்தோடு நகர்பவை. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிகொடிக்கட்டு போன்ற படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள். பாண்டவர் பூமி அவரேஜ் என்றாலும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பல நடிகர்களை அணுகி கடைசியில் வெறுத்துபோய் இவரே கதாநாயகனாக நடித்த இவரது ஆட்டோகிராப் படம் ஒரு புதிய டிரெண்டை அமைத்தது. அதற்கடுத்து வந்த தவமாய் தவமிருந்து யாரும் சொல்லாத தந்தை மகன் பாசத்தை சொல்லி வெற்றி பெற்றது. சேரன் படம் என்றாலே எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாகவே தியேட்டரை விட்டு வெளியே வருவார்கள். அந்த அளவுக்கு உணர்ச்சிகாரமான படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றவர்.

இதன் பின் இவர் இயக்குவதை விட, நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். மற்ற இயக்குனர்களை மாதிரி நிறைய அட்டர் பிளாப் படங்களை இவர் கொடுத்ததில்லை. சொல்லப்போனால் கடந்த ஆறு வருடங்களில் இவர் இயக்கியது இரண்டே இரண்டு படங்கள். ஒன்று மாயக்கண்ணாடி மற்றொன்று பொக்கிஷம். இரண்டுமே சூர மொக்கை படங்கள். சேரன் மீது வைத்த அபிமானத்துக்காக மூன்று மணிநேரம் கழுத்தறுபட்டு வர முடியுமா? போதாதற்கு எப்போதுமே ஒரே மாதிரி ரியாக்சன் கொடுக்கும் அவரேதான் படத்தின் நாயகன்.  தியேட்டர் பக்கம் யாருமே எட்டிப்பார்க்கவில்லை. இதில் நொந்து போன அவர் ரசிக்க தெரியவில்லை என்று மக்களை திட்டினார். இனி வரும் காலங்களில் சேரனின் படங்கள் எப்படி இருக்க போகின்றன என்று தெரியவில்லை.

சுராஜ்...

இவர் மற்ற இயக்குனர்கள் மாதிரி நிறைய ஹிட் கொடுத்தவர் அல்ல. சொல்லபோனால் இவர் படங்கள் அனைத்தும் அவரேஜ் ரேஞ்சை கூட தாண்டியதில்லை. தன்னுடைய முதல் படமான மூவேந்தர், சூர்யவம்சம் வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் அதே சரத்குமார், தேவயானி ஜோடி நடித்து வெளிவந்தது. இந்த ஜோடிக்கு சூர்யவம்சம் கொடுத்த அபிமானத்தில் மூவேந்தரை தேத்தி விடலாம் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படம் அட்டர் பிளாப். பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளி. முதன்முதலாக இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க, தலைநகரம் என்ற படத்தை இவர் இயக்கினார். படத்தை ஒற்றை ஆளாக தாங்கி நின்றவர் வடிவேலு. இன்றும் நாய் சேகராக வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சிகள் அதிகமாக டிவியில் ஒளிபரப்பபடுகின்றன. இதற்கடுத்து இவர் இயக்கி வெளிவந்த மருதமலை மீண்டும், வடிவேலு என்ற ஒரே நடிகருக்காக ஓடியது. இதைத்தான் இந்த இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு விட்டார்.  அடுத்தடுத்து வந்த படங்களுள் படத்துக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் காமெடி காட்சிகள் இருந்தால் படத்தை ஒட்டி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்.

விளைவு, வரிசையாக மரணமொக்கை படங்கள். படிக்காதவன் சன் பிக்சர்ஸ் வெற்றி என்று சொல்லிக்கொண்டது எல்லோரும் நம்பினார்கள். மாப்பிள்ளை மறுபடியும் சன் பிக்சர்ஸ் வெற்றி என்று சொல்லியது. யாருமே நம்பவில்லை. ஏனென்றால் படம் அப்படி. தற்போது அலெக்ஸ் பாண்டியன். சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்கே அச்சமாக இருக்கிறது.

இந்த பட்டியல் நிறைவானதல்ல. எனக்கு தெரிந்த ஒரு சில இயக்குனர்களை மட்டுமே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

இந்த பட்டியலில் கூடிய விரைவில் இன்னும் சில இயக்குனர்கள் சேரும் வாய்ப்பு இருக்கிறது அவர்களின் பட்டியல் இதோ

கவுதம் மேனன்
பாலா
செல்வராகவன்
மிஷ்கின்

உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க....
முழுவதும் படிக்க >>

January 3, 2013

விவாதம் செய்ய கற்றுக்கொள்வோமா?

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகியவையே இந்த சின்ன இடைவெளிக்கு காரணம். இந்த குறுகிய இடைவெளியில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன. ரஜினி பிறந்தநாள்+திட்டுகள், சச்சின் ஓய்வு+கருத்துக்கள், மோடி வெற்றி+புலம்பல்கள், பாலியல் பலாத்கார விஷயம் என்று. இவற்றைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன். "வருட தொடக்கத்தில் ஏதாவது நல்ல விஷயம் சொல்லலாமே?", என்று யோசித்ததன் பலனாகவே இந்த பதிவை எழுத நினைத்தேன்.

மு.கு.: இந்த பதிவினுள் பாசிடிவ் மற்றும் நெகட்டிவ்(சிகப்பில்) கருத்துக்கள் கலந்தே இருக்கின்றன. இரண்டை பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டுமென்றே எழுதினேன். அதே போல ஒன்றிரண்டு தனிமனித உதாரணங்களும் தவிர்க்க முடியாததாகி விட்டது. கருத்துக்கள் அனைத்தும் என் சொந்தக்கருத்துக்களே. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.


விவாதம் என்பது ஆண்டாண்டு காலமாக மனிதர்களுக்குள் நடந்து வரும் ஒரு நிகழ்வு. இங்கே விவாதம் என்பது மனிதன் தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள மொழியை கண்டுபிடித்த பிறகு நடப்பவைகளையே குறிக்கும். சரி பண்டைய கால, விவாதங்களைப்பற்றி, அதன் வரலாற்றைபற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டாம். சம காலத்தில் விவாதம் செய்வது எப்படி?, உண்மையில் அது எப்படி நடக்கிறது?, நம்மோடு விவாதம் செய்பவரை எப்படி எதிர்கொள்வது?, அவர்களை எப்படி வெற்றி கொள்வது? என்பதை பற்றி பார்ப்போம்.

விவாதம் மற்றும் விதண்டாவாதம்

மாற்றுக்கருத்து உடையவர்கள், அல்லது எதிரிகள் மட்டுமே விவாதத்தில் ஈடுபடவேண்டும் என்பதல்ல. தனக்கு தெரிந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வது, தெரியாத கருத்துக்கள் வந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு வைக்கப்படும் சான்றுகளைப் பொறுத்து, ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது, ஆகியவையே விவாதத்தின் பலன்கள் ஆகும். ஒரு புத்தகத்தில் நாம் படித்த அல்லது புரிந்து கொண்ட (நம் பாயிண்ட் ஆப் வியூவில்) விஷயங்களை பிறருடன் விவாதிப்பதன் மூலம், நம் புரிதலில் உள்ள குறைபாடுகளை களையவும், அல்லது புதிய விழிப்புணர்வுகளை பெறவும் முடியும்.

விதண்டாவாதம் என்பது, எதிராளி என்ன கருத்து சொன்னாலும், அதில் உள்ள பொருளை எடுத்துக்கொள்ளாமல், நாம் சொல்வதையே திரும்ப திரும்ப சொல்வது, அல்லது அவரை எப்படியாவது வீழ்த்துவதிலேயே குறியாக இருப்பது. இத்தகைய விதண்டாவாதத்தின் மூலம் நன்மை எதுவும் நிகழ்ந்து விடப்போவதில்லை.

விவாதம் செய்வது எப்படி?

இதில் அடிப்படையான விஷயம் நீங்கள் யாருடன் விவாதம் செய்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் விவாதம் செய்பவர்களின் தராதரத்தை பொறுத்து உங்களின் வார்த்தை பிறையோகங்கள் இருக்கவேண்டும். உதாரணமாக இளைஞர்கள் அல்லது மாணவ சமூகத்தோடு பேசுகையில், சமகால, மிகவும் எளிய பதங்களை பயன்படுத்துவது நல்லது. மாறாக, மிக கடினமான, தத்துவார்த்தமான வார்த்தைகளை பயன்படுத்தினால் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டாகும். அதே போல கல்வி அறிவு இல்லாத மக்களிடம் பேசுகையில், ஹிக்ஸ் போசான், ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் என்று அடுக்கினீர்கள் என்றால், உங்கள் விவாதம் தோல்வியில் முடிந்து விடும். "நல்ல கருத்து செறிவுள்ள பதிவுகளை இங்கே யாரும் படிப்பதில்லை". இதுதான் பெரும்பாலான நல்ல பதிவர்களின் மன வருத்தமாக உள்ளது. இங்கே பதிவுகளை படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பொழுது போக்கிற்காக படிக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு நம் கருத்து போய் சென்றடைய வேண்டுமானால், நாம் வளைந்து போய்த்தான் ஆகவேண்டும். அதற்காக தரம் தாழ்ந்து எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை.


நம் பதிவுகள் அல்லது விவாதங்களின் உண்மைத்தன்மை மிகவும் முக்கியம். அதிக தகவல்கள் மற்றும் சான்றுகள் உள்ள விவாதங்களை எதிர்கொள்வது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம்தான். ஆகவே ஒரு செய்தி பற்றி விவாதிப்பதற்கு முன் அதற்கான அடிப்படைத்தகவல்கள், அல்லது சான்றுகளோடு களத்தில் இறங்குவது சிறந்தது. சான்றுகளின் நம்பகத்தன்மையும் மிக முக்கியம்.

ஆனால் நடப்பது என்ன?

சத்தியமாக சொல்கிறேன் நீயா? நானா? போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடப்பது விவாதமே அல்ல. அது ஒரு நாகரிகமான சண்டை அவ்வளவுதான். சில நேரங்களின் அந்த நாகரிகமும் மீறப்பட்டு விடுகிறது. இதே நிலைமைதான் எல்லா இடங்களிலுமே. முன்கூட்டியே ஒரு முடிவோடுதான் விவாத களத்திலேயே இறங்குகிறோம். விவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஈகோ இருக்க கூடாது என்பது என் கருத்து. ஈகோ இருந்தால் அடுத்தவர்களின் பேச்சு நம் மண்டையில் ஏறாது.  ஆனால் இங்கே விவாதத்தில் ஈடுபடுவதே நம் ஈகோவிற்கு தீனி போடவேண்டும் என்ற நோக்கத்தில்தான். 

விவாதத்தில் ஈடுபடுபவர்கள் முக்கியமாக கவனிக்கவேண்டியது, கருத்து மோதல்களில் தனிமனித அடையாளங்கள் இருக்க கூடாது. அதாவது கருத்தோடு மோத வேண்டுமே தவிர தன்னுடைய அடையாளத்தை அதற்கு பயன்படுத்த கூடாது. "நான் யார் தெரியுமா?", "என்னிடமே இப்படி பேசுகிறாயா?"  போன்ற வார்த்தைகளை பயன்படுத்துபவர் விவாதம் செய்ய வரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல தனிமனித தாக்குதல்களை தவிர்க்க வேண்டும். பதிவுலகில் பெரும்பாலும் விவாதங்கள் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களே நடக்கின்றன.  சில பதிவர்களுடன் நான் விவாதத்தில் ஈடுபடுவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன். காரணம் என்னவென்றால், எடுத்த எடுப்பிலேயே நம் கருத்தை எதிர்க்காமல், நம்மை தாக்க தொடங்கி விடுவார்கள். உதாரணமாக, தீவிர கமல் பக்தரான பதிவர் ஒருவர், தன்னுடைய பதிவிற்கு யாராவது எதிர் கருத்து தெரிவித்து விட்டால், உடனே பயன் படுத்தும் வார்த்தை, "டேய் மெண்டல் நடிகரின் ரசிகனே!!". இதற்குமேல் அவரிடம் என்ன பேசினாலும், அது எடுபடாது.


ஆத்திக, நாத்திக, இடது, வலது, நட்ட நடு, என்று வித்தியாசமே இல்லாமல், நேரிடையாக தனிமனித தாக்குதல்களில் ஈடுபடும் பதிவர்களை தவிர்ப்பதே நல்லது. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், சத்தமே இல்லாமல் வேடிக்கை பார்த்துவிட்டு வாருங்கள். இல்லை கொஞ்சம் தூண்டி விட்டு அவர்கள் ஆடுவதை வேடிக்கை பாருங்கள். சில நேரங்களில் டாக்டர் ரசிகர்களை நான் இப்படி செய்ததுண்டு. இது நல்லதல்ல. 

விவாதங்களை எதிர்கொள்ளுவது எப்படி?

தன்னுடைய கருத்து பிறருக்கு போய் சேரவேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு பொறுமை மிக அவசியம். நம் மீதான விவாதங்களை எதிர்கொள்வதற்கு முதலில் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை அவசியம். எதிராளியை பேச விடுங்கள். அவர் பேசி தீர்க்கட்டும். இடையில் குறுக்கிடாதீர்கள். அறிவாளிகளின் அடையாளம், அமைதி அல்லது மவுனம். முட்டாள்களைக்கூட அறிவாளிகளைப்போல காட்டிவிடும் திறமை மவுனத்துக்கு உண்டு. அந்தோ பரிதாபம்! முட்டாள்கள் அமைதியாக இருப்பதில்லை. முதலில், வாதிடுபவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும். 

நான் முன்பே சொன்னது போல நம்மை தூண்டி விட்டு நாம் ஆடுவதை வேடிக்கை பார்க்க சிலர் ஆசைப்படுவார்கள். இல்லை, நம்மை தவறு செய்ய தூண்டுவதற்காக விதண்டாவாதம் செய்வார்கள். இந்த மாதிரியான நேரங்களில் அமைதி  ஒரு சிறந்த ஆயுதம். எந்த நேரத்திலும் நம் நிதானத்தை இழந்து விடாமல், அமைதியாக அதே நேரம் அவர்களுக்கு உறைக்கும் விதமாக பதில் கூறவேண்டும். இந்த விஷயத்தில் சகோதரர் சுவனப்பிரியன் அவர்களின் பொறுமை அசாத்தியமானது. அவரது கருத்துக்களோடு பல விதங்களில் நான் மாறுபட்டாலும், இந்த விஷயத்தில் அவரைபாராட்டியே ஆகவேண்டும். 

அதே போல ஒரு சிலரிடம் விவாதிக்க தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அது விதண்டாவாதம் என்று தெரிந்துவிடும். அப்படிபட்ட நேரங்களில் நாகரிகமாக அதை தெரிவித்து விட்டு, மேலும் விவாதத்தை வளர்க்காமல் விட்டுவிடலாம். குறைந்த பட்சம் கால விரையமாவது தவிர்க்கப்படும். இதை அப்படியே தலை கீழாகவும் புரட்டி பார்க்கலாம். நமக்கு தெரியாத தகவல்கள் அல்லது சான்றுகளை வைத்து ஒருவர் நம்மிடம் வாதம் செய்ய வருகிறார் என்றால், அதைப்பற்றி மூச்சு விடக்கூடாது. வாதத்தை வேறுபக்கம் திசை திருப்பி, இந்தப்பக்கம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நமக்கு தெரிந்த ஏரியாவில் ரவுண்டு கட்டி அடிக்கவேண்டும், தெரியாத ஏரியாவில் அண்டர் பிளே செய்வதே சிறந்தது. 

விவாதத்தில் வெற்றி பெறுவது எப்படி?

நாம் முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும். "Argument never Ends". விவாதங்கள் எந்த காலத்திலுமே முடிந்ததில்லை. அந்த விவாதத்தில் ஈடுபட்டதன் நோக்கம் எதுவோ அதைப்பொருத்தே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதுவும் சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். மற்றபடி கருத்துக்களை பரிமாறிக்கொண்டதோடு விவாதங்கள் முடிந்து விடுகின்றன. உங்களின் கருத்துக்களை நீங்கள் ஆணித்தரமாக நிறுவி விட்டதால் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டாதாகாது. அங்கே நடந்த விவாதம் இரு தரப்புக்கும் பயனளிக்கும் விதமாக இருந்தால் அது இருதரப்புக்கும் வெற்றி. இல்லை இருவருக்குமே தோல்வி அவ்வளவுதான். சரி கருத்துப்பரிமாற்றம் உங்கள் நோக்கம் இல்லையெனில்,


எதிராளிகளின் ரியாக்சன்களை  வைத்து உங்கள் வெற்றி தோல்விகளை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம். உதாரணமாக, "மதங்களின் மூட நம்பிக்கைகளை உடைக்கிறேன்", என்று சொல்லிக்கொண்டு, மதங்களை, கடவுள்களை தரக்குறைவாக திட்டுபவர்களின் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை புண்படுத்துவதே. சம்பந்தப்பட்டவர்கள் கொதித்தெழுந்து பதிலுக்கு வண்டை  வண்டையாக திட்ட தொடங்கினால் அது கட்டுரையாளரின் வெற்றி. "சாதிக்கெதிரான முழக்கம்", என்ற பெயரில் ஒரு சாதியை உயர்த்தி ஒரு சாதியை தாழ்த்தி எழுதிய கட்டுரையில், விவாதம் என்ற பெயரில், பல சாதிக்காரர்கள் அடித்துக் கொண்டால், அங்கே வெற்றி பெறுவது ஏதாவது ஒரு சாதி அல்ல. கட்டுரையாளரே. 

ஒரு முக்கிய விஷயம். நீங்கள் விவாதத்தில் ஈடுபடுவது, உங்கள் கருத்துக்களை பிறருக்கு எடுத்துரைப்பதற்காக அல்ல, பொழுது போகவேண்டும் அல்லது யாரையாவது காமெடி பீஸ் ஆக்கவேண்டும் என்று நினைத்தால், உங்களுக்கு தேவை அசாத்திய பொறுமை மற்றும், கொஞ்சம் நகைச்சுவை உணர்வு. பதிவுலகுக்கு வந்த புதிதில் பல நேரங்களில் பலரிடம் வெட்டியாக தூண்டி விட்டு, சண்டை போட்டு, பொழுது போக்கியதுண்டு. இப்போதும் சில நேரங்களில் அப்படி செய்வதுண்டு. இப்படிப்பட்ட விவாதங்களால் துளியளவும் பயனில்லை என்பதை புரிந்துகொண்டால் போதும். மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று மத உணர்வுகளை புண்படுத்துவதை விடவும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பிரபலங்களை வாய்க்கு வந்தபடி வசை பாடுவதை விடவும், என் கடவுளின் பெருமையை சொல்ல, அடுத்தவர் கடவுளை தூற்றுவதை விடவும், புரட்சி என்ற பெயரில் சாதிவெறியை, தீவிரவாதத்தை தூண்டுவதை விடவும்,  இப்படி வெட்டி அரட்டை அடிப்பதில் தவறே இல்லை. ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டால் போதுமானது.

நாம் ஒருவரின் கருத்துக்கு மட்டுமே எதிரியே ஒழிய, அவருக்கெ எதிரி அல்ல.

பி.கு: கூடிய மட்டும் வெட்டி அரட்டை அடிப்பதை தவிர்ப்பதே நல்லது.  ஹி ஹி 

உங்க கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...