விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 15, 2010

தோனிக்கு பிடித்த சனி..குஷ்புவுக்கு அடித்த யோகம்....






நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 191 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டுமானால் இந்த பெரிய இலக்கை எட்டவேண்டும். அதாவது இரண்டாவது பெரிய இலக்கு. இதற்கு முன் இலங்கை 195 எடுத்திருந்தது. எனவே கண்டிப்பாக ஆஸ்திரேலியா மண்ணை கவ்வும் என்று எதிர்பார்த்து உறங்க சென்றுவிட்டேன். காலையில் எழுந்து செய்திகளில் ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்று கேட்டு வியப்படைந்தேன். வெற்றிக்கு காரணம் நம்ம மைக்கேல் ஹஸ்ஸி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் சொதப்பு சொதப்பு என்று சொதப்பினாரே அவரே தான். இப்போது இறுதி போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் நல்ல பார்மில் இருப்பதால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது. பிற நாட்டு வீரர்களுக்கும் நம் வீரர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவர்கள் நாட்டுக்காக விளையாடும் போது காட்டும் வேகத்தை உள்ளூர் ஆட்டங்களில் வெளிப்படுத்துவதில்லை. நம்மாட்கள் உல்டாவாக உள்ளூர் ஆட்டங்களில் சிரத்தையோடு ஆடுகிறார்கள். இதற்கு உதாரணம் ஹஸ்ஸி மற்றும் இங்கிலாந்தின் மோர்கன். இருவரும் உள்ளூர் ஆட்டங்களைகாட்டிலும் சர்வதேச ஆட்டங்களில் சிறப்பாக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.




இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை பொறுத்தவரை அதிக விமர்சனத்துக்குள்ளாகும் இரண்டு பதவிகள் ஒன்று பிரதமர் பதவி மற்றொன்று கிரிக்கெட் அணி கேப்டன் பதவி. இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று விட்டாலே சனி பிடித்துவிட்டது என்று அர்த்தம். சிலருக்கு உடனே பிடித்துவிடும். உதாரணமாக சச்சின், ஸ்ரீகாந்த், டிராவிட். சிலருக்கு கொஞ்சநாள் கழித்து பிடிக்கும் அசார் மற்றும் கங்குலி மாதிரி. இப்போது தோனிக்கும் பிடித்துவிட்டது. முதலில் இருந்தே அவரை பிரச்சனைகள் விரட்டி வந்தன. லாவகமாக தப்பிய அவர், தற்போது தானாகவே மாட்டிகொண்டார். தமிழக அரசியல் நிலை என்ன? அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் என்று? கேட்டால் டக்கென்று பதில் வரும். ஒன்று திமுக இல்லை அதிமுக என்று. ஒருவர் ஆட்சியில் இருந்தால் கண்டிப்பாக இன்னொரு கட்சி நெருக்கடி கொடுக்கும். சரி, திடீரென்று ஒரு புது கட்சி, உதாரணமாக இளைய தளபதியின் கட்சி (தயவு செய்து சிரிக்காதீர்கள்) ஆட்சியை பிடித்தால் என்னவாகும்? இந்த இரு கட்சிகளின் நெருக்கடியையும் சேர்ந்தே சமாளிக்க வேண்டும். இது தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் நடந்து வருகிறது. அவர்களை பொறுத்தவரை கொல்கத்தா அல்லது மும்பை (இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள் என்பது வேறு விஷயம்). இது இல்லாமல் யாராவது கேப்டன் பொறுப்பேற்றால் கொஞ்சநாள் அமைதியாக இருப்பார்கள். அதாவது குழி தோண்டி கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். பின் ஈவு இரக்கமே இல்லாமல் தள்ளி விட்டு விடுவார்கள். 


சில நாட்களுக்கு முன் தோனி மூத்த வீரர் சேவாக்கை தரக்குறைவாக நடத்துகிறார், வீரர்களை மோசமாக திட்டுகிறார் என்று புகார் எழுந்ததே, அதுகூட இவர்கள் தோண்டிய குழி என்று கூறப்படுகிறது. பின் அது புஸ் ஆகிவிட்டது. இந்திய அணி தோற்றால் கூட அதை ஒரு காரணமாக கூறி பதவியில் இருந்து தூக்கி விடலாம். ஆனால் இந்திய அணி தோனி தலைமையில் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டது. எதுவுமே சிக்கவில்லையா? மக்கள் மத்தியில் ஒரு கசப்புணர்வு உருவானால் கண்டிப்பாக ஒரு சின்ன பிரச்னையை கூட பெரிதாக்கி விடலாம். ஆகவே கடைசியாக கையில் எடுப்பது சச்சின் பிரச்சனை. சச்சின் என்றால் நாடே கொதித்து விடும். ஆனால் தோனி அதில் இருந்தும் தப்பி விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்துவிட்டது ஒரு சாக்கு. ட்வென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி. வழக்கமான காரணங்கள் கூறாமல் தோனி கூறிய காரணம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. அதாவது ஐபிஎல் போட்டிகளின் போது இரவு நேரங்களில் பார்ட்டி என்ற பெயரில் நடந்த கூத்துக்கள்தான் காரணம் என்று கூறிவிட்டார். அதிகாலை நான்கு மணிவரை நடக்கும் இந்த பார்ட்டிகளில், எதுவும் கிடைக்கும், எத்தனை வேண்டுமானாலும் கிடைக்கும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது. பத்திரிக்கைகளும் எழுதி தள்ளி விட்டன. தோனி கூறியதில் உண்மை இருந்தாலும் அப்படி எல்லாம் நடக்கவில்லை என்று பிசிசிஐ கூறி உள்ளது. அவதூறான செய்திகளை கூறுகிறார் தோனி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. இதன் படி அவர் பதவி பறிக்கப்படும் என்றும் தெரிகிறது. நடிகர் சங்கமோ, கிரிக்கெட் வாரியமோ உண்மையை மட்டும் பேசிவிடக்கூடாது. இல்லாவிட்டால் ஒன்று கூடி தீர்மானம் போட்டு விடுவார்கள்.


தினகரன் நாளிதழ் படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும். தினகரன் வெளிவருவதன் நோக்கம் செய்திகள் வெளியிடுவதற்கு அல்ல, விளம்பரங்கள் வெளியிடுவதற்கு என்று. இன்று தினகரன் நாளிதழ் கிடைத்தால் பாருங்கள். பத்து பக்க பேப்பரில் அவர்கள் வெளியிட்டது இரண்டே பக்க செய்திகள். நேற்று நடந்த இரண்டு அதிமுக்கியமான செய்திகள். ஒன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் பற்றிய அலசல். இன்னொன்று நக்கத் (இந்த பெயர் ஞாபகம் இருக்கிறதா? அதாங்க நம்ம குஷ்பு) திமுகவில் இணைந்து விட்டார் என்ற முக்கியமான செய்தி. மற்றபடி எல்லாமே விளம்பரங்கள்தான். குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று வெறும் விளம்பரங்களை மட்டும் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழனை எந்தெந்த வகையில் எல்லாம் ஏமாற்றலாம் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.


நேற்று ஒரு பெரிய அரசியல் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. குஷ்பு திமுகவில் இணைந்துள்ளார். வெகு காலத்துக்கு முன்னாலேயே அவருக்கு ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்புகள் அதிகம் என்று கேள்விபட்டேன். முதலில் அவர்மீது இருக்கும் வழக்கு முடிவுக்கு வரும், பின் கட்சியில் உறுப்பினர், பின் எம் பி பதவி. நான் போட்ட கணக்கு படி சரியாக நடந்து வருகிறது. பார்க்கலாம், மக்களவையா? மாநிலங்கலவையா? சட்டப்பேரவையா? இல்லை மேலவையா? என்று. தமிழக பெண்களின் கற்புக்கு கன்செசன் வாங்கி கொடுத்தவர், குறைந்த துணியில் ஜாக்கெட் அணிவது எப்படி என்று பாடம் நடத்தியவர், அவைக்கு எப்படி செல்வார் என்று நினைத்தால் பயமாக உள்ளது. அம்மணிக்கு திமுகவில் இடம் கிடைத்ததன் காரணம் என்னவாக இருக்கும். தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் என்று இரண்டு உண்டு. மூன்றாவது ஒரு தமிழ் உண்டு. அது கொடூரதமிழ். அதை பேசுபவர்களுக்கே தமிழ் நாட்டில் முன்னுரிமை. குஷ்பு பேசுவது இவ்வகை தமிழ்தான். 


தமிழின தலைவர் என்றால் எல்லா தமிழையும் வாழ வைக்க வேண்டுமே. அநேகமாக கொடூர தமிழுக்கும் முன்னுரிமை அளித்த தலைவருக்கு பாராட்டு விழா நடந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை. செம்மொழி மாநாட்டுக்கு ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்த பாடல் வெளியீட்டு விழா மற்றும் ரகுமானுக்கு பாராட்டு விழா இரண்டும் நடக்க போவதாக செய்தி வெளிவந்துள்ளது. கண்டிப்பாக விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் ரகுமானை விட்டுவிட்டு, தலைவரின் வாள்வீசும் வசனத்துக்கு முன்பு ரகுமானின் இசை சும்மா என்று ஏதாவது சொல்வார்கள். சங்கடத்தில் நெளிய போவது என்னவோ ரகுமான்தான். 


கொஞ்சம் சீரியசான விஷயம். மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று நடந்தால் கண்டிப்பாக அது தண்ணீருக்காகத்தான் என்று சுற்றுசூழல் நிபுணர்கள் கூறி உள்ளார்கள். சுற்று சூழல் மாறி வருவதற்கு காடுகளை கன்னா பின்னா என்று அழிப்பதே காரணம். வெப்பநிலை உயர்வர்தற்கு கார்பன் டை ஆக்சைட் காற்றில் அதிகரித்துள்ளதே காரணம். காற்றில் ஆக்சிஜன் அதிகம் இருந்தால் குளுமை இருக்கும். நான் கேள்விப்பட்ட சில செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு மரம் ஒரு வருடம் வெளியிடும் ஆக்சிஜனை வைத்து பத்து பேர் உயிர் வாழலாம். அப்படியானால் ஒரு மரத்தை வெட்டினால் அது பத்து கொலைகளுக்கு சமம்தானே? ஒரு ஏக்கர் மரங்கள் உள்ளிழுக்கும் கார்பன் டை ஆக்சைட் என்பது ஒரு காரை சுமார் 26000 மைல்கள் ஓட்டினால் வெளிவரும் புகைக்கு சமம். இவை எல்லாம் சில்லறை கணக்குகள். நம்மால் ஆக்சிஜனை செயற்கையாக உருவாக்க முடியும். கொஞ்சம் செலவாகும். அதாவது உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதங்கள் ஆக்சிஜன் சப்ளை செய்யவேண்டுமானால் 350 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி ) டாலர் செலவாகுமாம். ஆனால் மரம் வளர்க்க அவ்வளவு செலவாகாது. எல்லாவற்றையும் காசாக பார்க்கும் உலகத்தில் இதையும் காசை வைத்தே சொல்ல வேண்டி இருக்கிறது. இந்த கட்டுரை உங்கள் மனதை தொட்டிருந்தால் இனி போகிற போக்கில் ஒரு இலையை கூட பிய்த்து போட உங்களுக்கு மனம் வராது. சிறுவயதில் படித்ததை ஞாபகபடுத்துகிறேன். 




மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், மண்வளம் காப்போம்.





பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..
உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...

5 comments:

SShathiesh-சதீஷ். said...

தோணி பற்றிய உங்கள் பார்வை பிடித்திருந்தது. தோனியை தலைமை பதவியில் இருந்து நீக்குவதில் இது மாறப்போவதில்லை. காரணம் தோல்விக்கு தோணி மட்டுமே காரணம் அல்ல. வீரர்கள் எல்லோருமே காரணம். எல்லோருக்கும் தகுந்த சாட்டை அடி கொடுத்தால் தான் அணி உருப்படும்.

Ahamed irshad said...

அருமையான இடுகை நண்பா...

ஆனாலும் அந்த "குஷ்பூ" ஃபோட்டோ..... ????!!!!!!!

பாலா said...

@SShathiesh
வாங்க வாங்க வருகைக்கு நன்றி..

@அஹமது இர்ஷாத்
எனக்கே கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. தூக்கிவிட்டேன் நண்பா...
கருத்துக்கு நன்றி..

Yoganathan.N said...

புள்ளி விவரத்துடன் எழுதியிருக்கும் சுற்று சூழல் விசயம் நன்றாக உள்ளது. என்னால் முடிந்தவரை, செடி கொடிகளைப் பாதுகாத்து கொண்டு தான் இருக்கிறேன்.

//எனக்கே கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. தூக்கிவிட்டேன் நண்பா...
கருத்துக்கு நன்றி..//

நான் ஏதாவது மிஸ் பண்ணிட்டேனோ... ஹிஹி

ப்ரியா said...

//இந்த கட்டுரை உங்கள் மனதை தொட்டிருந்தால் இனி போகிற போக்கில் ஒரு இலையை கூட பிய்த்து போட உங்களுக்கு மனம் வராது//

கண்டிப்பாக நண்பரே என்னால் முடிந்த அளவுக்கு நீங்கள் துல்லியமாக சொல்லியிருக்கிற மரங்களை பற்றிய கருத்துக்களை அனைவருக்கும் எடுத்து சொல்லி மர வளத்தை காக்க முயற்சி செய்கிறேன் ..
//உதாரணமாக இளைய தளபதியின் கட்சி (தயவு செய்து சிரிக்காதீர்கள்) ஆட்சியை பிடித்தால் என்னவாகும்? //

நிஜமாக சிரித்தேன் ...

Related Posts Plugin for WordPress, Blogger...