விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 30, 2012

பள்ளிக்கால நினைவுகள்......

நண்பர் நம்பிக்கைப்பாண்டியன் அவர்கள் என்னை வெகு நாட்களுக்கு முன்பு இந்த தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அவரே என்னை அழைத்ததை மறந்து போயிருக்கலாம். இவ்வளவு தாமதமாக எழுதினால் யாருக்குத்தான் மறக்காது? எப்படியோ அவரது வேண்டுகோளை நிறைவேற்றி வார்த்தையை காப்பாற்றி விட்டேன். கடந்த காலத்தை நினைத்து பார்ப்பதே ஒரு இனிய அனுபவம்தானே.



கல்வியை பொறுத்தவரை அது எனக்கு பாரமாகவே இருந்ததில்லை. ஏனென்றால் அதை எப்போதுமே ஒரு கடமையாக நான் நினைத்ததில்லை. "புரிந்தால் படி. இல்லையேல் புரிந்துகொள்ள முயற்சி செய். முடியவில்லையா? விட்டுத்தள்ளு. புரிந்தவரை போதும்." இதனால் எதுவுமே கடினமாக தெரியவில்லை. என் குடும்பத்தையே பொறுத்தவரை நான் கொடுத்து வைத்தவன். குடும்பமே வறுமையில் இருந்தபோது கூட என் படிப்பிற்கு எந்த பங்கமும் வந்துவிடவில்லை. எப்பாடு பட்டாவது என்னை படிக்க வைத்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆகவே என் சகோதரர்களுக்கு கிட்டாத பல வாய்ப்புகள் எனக்கு மட்டுமே கிடைத்தது. என் இன்றைய நிலைக்கு அதுவே காரணம். என்றும் அவர்களுக்கு நான் கடமைப்பட்டவன். நான் படிக்க தொடங்கிய காலத்தில் எல்‌கே‌ஜி, யு‌கே‌ஜி எல்லாம் பணக்காரர்கள் படிப்பு. ஆகவே பெரும்பாலானவர்களை போல நேரடியாக முதல் வகுப்புதான். அதற்கு முன்பாக அரைக்கிளாஸ் என்று வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒருவரிடம் ஒரு வருடம் படித்ததாக ஞாபகம். என் அம்மா மாதம் 5ரூபாய் பீஸ் கட்டி அவரிடம் சேர்த்து விட்டார். கண்டிப்புக்கு பெயர் போன அந்தப் பெண்மணிதான் என் மீது உளியை வைத்த முதல் சிற்பி.

அதன் பிறகு எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சுப்பிரமணிய வித்தியாசாலை என்ற தொடக்க பள்ளியில் சேர்த்து விட்டார்கள். அரைக்கிளாஸ் சேர்ந்தபோதும் சரி, முதல் வகுப்பு சேர்ந்தபோதும் சரி, நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்வேன் என்று நினைத்த என் அம்மா ஏமாந்து போய் விட்டாராம். கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. ஒரு ஏக்க பார்வை? ம்ஹீம். சரியான கல்லுளி மங்கன் என்று இப்போது கூட சொல்வார். ஒன்னாம்கிளாஸ், இப்போதும் என்னுடன் நெருங்கிய நண்பனாக இருக்கும் ஒருவனை அறிமுகப்படுத்தியது. மற்றபடி பாடத்தோடு தினமும் மாலையில் கேளிக்கை விளையாட்டு என்று மிக ஜாலியாக சென்றது. "படிப்பு என்றால் இதுதானா? இவ்வளவு ஈசியாக இருக்கிறதே?" என்று நினைப்பதற்குள் முடிந்து விட்டது. அந்த ஆண்டில் மறக்க முடியாத நிகழ்வு  என்றால் , காலாண்டு பரீட்சை தினம். காலையில் ஒரு மணிநேரத்தில் பரிட்சை முடிந்து விட, இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த அரைமணி நேரத்தை பயனுள்ளதாக கழிக்க எண்ணி, எல்லோரும் அருகில் காலியாக இருந்த ஒரு வகுப்பில் போய் கூத்தாடினோம். எல்லோரும் உற்சாக மிகுதியில் இருக்க, திடீரென்று தலையில் நங்கென்று இடி இறங்கியதை போன்ற ஒரு உணர்வு. பரவச நிலையை அடைந்த நண்பன் ஒருவன், வகுப்புக்கு வெளியே பள்ளியில் மணி அடிப்பதற்காக வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து என் தலையில் மணி அடித்து விட்டான். அப்புறம் என்ன? உச்சந்தலையில் வெட்டி ரத்தம் வர இன்றும் ஆழமாக இருக்கும் அந்த வடுவை இதை டைப் செய்யும் வேளையில் தொட்டுப்பார்க்கிறேன்.  

இரண்டாம் வகுப்பு என்றாலே எனக்கு கிளாஸ் எடுத்த சொர்ணமுத்து வாத்தியார்தான் ஞாபகத்துக்கு வருகிறார். தினமும் காலையில் அரைமணி நேரம், மதியம் அரைமணி நேரம் மட்டுமே வகுப்பெடுப்பார். பின் இருக்கையில் இருந்தபடியே குறட்டை விட்டு தூங்குவார். அவர் இல்லாதபோது அவர் மாதிரியே தூங்கி காட்டுவோம்.

மூன்றாம் வகுப்பு, படிப்பு என்பது என்ன என்பதை நான் புரிந்துகொள்ள தொடங்கி இருந்தேன். புதிதாக ஆங்கிலம் என்ற ஒன்றை சொல்லிக்கொடுத்தார்கள், அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதுவரை தமிழ், கணக்கு, சூழ்நிலையியல், வாழ்க்கை கல்வி என்று நான்கு சப்ஜெக்ட் மட்டுமே படித்து வந்த எனக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என்று புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.  ஆனால் படித்ததது எல்லாமே மிக எளிதாக இருந்ததால் ஒரு பிரச்சனையும் தெரியவில்லை. எப்போதுமே முதல் ரேங்க் அல்லது இரண்டாவது ரேங்க் மட்டுமே எடுப்பேன், ரேங்க் என்றால் என்ன என்றே தெரியாமலேயே.

நான்காம் வகுப்பு, அந்த பள்ளியிலேயே வாட்டசாட்டமாக இருந்த நரசிம்மன் என்ற ஆசிரியர்தான் எனக்கு வகுப்பாசிரியர். கண்டிப்புக்கு பெயர் போனவர். ஜாலியாக பேசுவார் ஆனால் கோபம் வந்தால் அடி பின்னி விடுவார். மாணவர்கள் அனைவரும் நடுங்குவார்கள். ஆங்கிலத்தின் அடுத்த படியான உச்சரிப்புகள், வார்த்தைகள் அமைப்பதற்கு முன்னேறினோம். நரசிம்மன் வாத்தியார் சிகப்பு சட்டை போட்டு வந்தால் அன்றைக்கு எல்லோருக்கும் அடி விழும் என்பது எங்களுக்குள் பரவலாக இருந்த மூட நம்பிக்கை. என்னதான் படிப்பில் சிறந்து விளங்கினாலும், என் கையெழுத்தை யாராலும் சீரமைக்க முடியவில்லை. கண்டிப்புக்கு பெயர் போன நரசிம்மன் ஆசிரியராலேயே சீரமைக்க முடியவில்லை. ஒரு முறை என் அம்மாவை பள்ளிக்கு அழைத்து, தாறுமாறாக திட்டி, நான் எழுதிய நோட்டை விசிறி அடித்ததை மறக்க முடியாது.

ஐந்தாம் வகுப்பு,அதுதான் அந்த பள்ளியில் மிக உயர்ந்த வகுப்பு. நாங்கள்தான் பள்ளியின் சீனியர். தலைமை ஆசிரியர்தான் எங்கள் வகுப்பாசிரியர். அவர் பெயர் கந்தசாமி. அவர் அடிப்பதை பார்ப்பதற்கு  WWF மேட்ச் பார்ப்பது போலவே இருக்கும். தூக்கி போட்டு, உருட்டி புரட்டி அடிப்பார். டெய்லி ஒரு மாணவர் வகுப்பில் சிறுநீர் கழித்து விடுவான். அவர் அடியில் இருந்து தப்பி வந்த  மாணவர்களுள் நானும் ஒருவன். ஒரே ஒருமுறை கணிதத்தில் மார்க் குறைந்து விட, குனியவைத்து முதுகில் கொத்து பரோட்டா போட்டு விட்டார். அப்போது எங்கள் முன் ஒரு இலக்கு வைக்கப்பட்டது. இந்த வகுப்பில் நான்கு படித்து நிறைய மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், ஆறாம் வகுப்பில் ஆங்கில மீடியத்தில் சேர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதுதான் அது. அப்படி சேர்க்கப்பட்ட  மாணவர்களுள் நானும் ஒருவன். ஐந்தாம் வகுப்பு பாதியில் நான் எப்போதும் ரேங்கிற்கு போட்டி போட்டு தோற்கும் விஜயகுமார் என்ற மாணவனை அவன் தாயார் சென்னைக்கு வேலைக்கு அனுப்ப போவதாக சொல்லி கூட்டி போய் விட்டார். அப்போது என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்த நான் அவனை திரும்ப சந்திக்கவே இல்லை.  

ஆறாம் வகுப்பின் தமிழ் மீடியம் வகுப்புகள் நடுநிலைப்பள்ளிகளில் ஊருக்குள் இருக்கும். ஆங்கில மீடிய வகுப்புகள், ஊருக்கு வெளியே தூரத்தில் இருக்கும் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும். ஆகவே ஏதோ ஒரு மேல்படிப்பு படிக்கப்போவதைப்போல உணர்ந்தேன். அதுவரை நடந்தே பள்ளிக்கு சென்று வந்த எனக்கு சைக்கிளும், நிறைய அறிவுரைகளும் வழங்கப்பட்டன. ஆறாம் வகுப்பில் என்னைப்போல பல பள்ளிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வந்திருந்தார்கள். நிறைய புதுமுகங்கள். புதிதாக டைம் டேபிள் என்று ஒன்றை கொடுத்தார்கள். ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் ஒரு ஆசிரியர் என்று எல்லாமே புதிதாக இருந்தது.  பாடம் நடத்த தொடங்கிய பிறகுதான் எல்லோர் முகத்திலும் மரண பீதி உண்டானது. இதுவரை ஒரே ஒரு சப்ஜெக்ட்டாக படித்த ஆங்கிலம் இப்போது எல்லா சப்ஜெக்ட்டிலும். இருந்தாலும் விடாமல் படித்து ஒரு கை பார்த்து விடுவது என்று களமிறங்கினேன். என் ஆசிரியர் ஒரு மாதம் பாடம் நடத்துவதை கைவிட்டு, எங்களுக்கு ஆங்கில கூட்டெழுத்து, கையெழுத்து மற்றும் இலக்கணம் நடத்தினார். இலக்கணமும் கூட்டெழுத்தும் கை கூடிய எனக்கு, கையெழுத்து மட்டும் மோசமாகவே இருந்தது. கிரிக்கெட் எங்களை முழுமையாக ஆக்கிரமித்தது அப்போதுதான். 1996 உலகக்கோப்பை போட்டிகள் நடந்த சமயம் அது.

ஏழாம் வகுப்பு, கொஞ்சம் குளிர் விட்டுப்போனது. வெறும் ஆண்கள் மட்டுமே படித்த நூற்றாண்டு பழமையான பள்ளி என்பதால் அங்கே கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. நிறைய 'விஷயங்கள்' கற்றுக்கொண்டு, குழந்தை பருவத்தில் இருந்து வெளிவரத் தொடங்கினேன். படிப்பு பல்லிளிக்க தொடங்கியது. கணிதத்தில் புதிதாக நெகட்டிவ் எண்கள் என்று ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். எனக்கு அது புரியவே இல்லை. ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுத்த அனைத்து கணக்குகளுமே தப்பாக போட்டுவிட்டேன். அந்த தினத்தை என்னால் மறக்கவே முடியாது. என்னை அடி விளாசிய அவர், வகுப்பு மாணவர்கள் முன்னால் என்னை நிற்க வைத்தார். தலைகுனிந்து அழுது கொண்டிருந்த என் தலையை நிமிர்த்தி, எல்லா மாணவர்களுக்கும் என் மூஞ்சை காட்டினார். நான் கூனிக்குறுகிபோனேன். அன்றில் இருந்து அந்த ஆசிரியர் எனக்கு எதிரி ஆனார். கணிதம் எனக்கு ஜென்ம எதிரி ஆனது. 

எட்டாம் வகுப்பு, எங்கள் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடத்தில் தனியாக அமைந்திருக்கும். ஆகவே கேள்வி கேட்க யாருமில்லை. வகுப்பில் எல்லோருமே ஓரளவுக்கு நன்கு படிப்பவர்கள் என்பதால் படிப்பை பற்றி கவலை கொள்ளாமல், விளையாட்டு, சினிமா என்று கவனம் வேறுபக்கம் திரும்பியது. அப்போதே பல புத்தகங்களை குறுகிய நேரத்தில் படித்து விடுவேன் என்பதால், நான் பேசும் விஷயங்களை கேட்க எப்போதுமே கூட்டம் கூடிவிடும். அந்த காலத்தில்தான் செக்ஸ் புத்தகங்கள் பரவலாக மாணவர்கள் மத்தியில் புரள தொடங்கியது. முழுவதும் ஆண்கள் மட்டுமே படித்த பள்ளி என்பதால் எதிலுமே ஒழிவு மறைவு கிடையாது. 

ஒன்பதாம் வகுப்பு, நடுநிலைப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்த  மாணவர்களும் எங்கள் பள்ளியில் வந்து இணைந்து கொள்வார்கள். இரண்டே இரண்டு ஆங்கில மீடிய வகுப்புகள், மிச்ச பத்தும் தமிழ் மீடிய வகுப்புகள். எங்கள் ஊரில் இருக்கும் அனைத்து ஆண்  மாணவர்களும் படிக்கும் ஒரே இடம் என்பதால் இவ்வளவு கூட்டம். இதில் பலர் சரியாக படிக்காமல் பெயில் ஆவது, வறுமை காரணமாக படிப்பை பாதியில் விடுவது என்று போய் விடுவார்கள். ஆகவே பத்தாம் வகுப்பு செல்லும்போது வகுப்புகளின் எண்ணிக்கை குறைந்து விடும். கண்மண் தெரியாமல் விஷமம் செய்வது என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்ட பருவம் அது. நாங்கள் செய்த குறும்புகள் அனைத்தையும் மறைத்து, எங்களை தலைமை ஆசிரியரிடம் இருந்து காப்பாற்றியவர் எங்கள் வகுப்பாசிரியர்தான். அதற்கு முந்தைய் ஆண்டுதான் எங்கள் பள்ளி மாணவர் ஒருவர் மாநிலத்தில் முதல் மாணவராக ரேங்க் வாங்கினார். ஆகவே நாங்களும் அதே உத்வேகத்தோடு படிக்க தூண்டப்பட்டோம். ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் பெற்று பதினொன்றாம் வகுப்புக்கு முன்னேறினோம். 

பதினொன்று மற்றும் பன்னிரண்டு வகுப்புகள் மிக ஜாலியானவை. ஆசிரியர்கள் அடிப்பதில்லை. எல்லா  மாணவர்களுமே விடலைப் பருவத்தினர். நிறைய காதல் கதைகள், கில்மாகதைகள் என்று பேசும் வாய்ப்பு உண்டு. மானவர்களுக்கு மத்தியில் ஜாதி ஒரு குறியீடாக வர ஆரம்பித்தது. அது மட்டுமில்லாமல் அடிதடி வன்முறைகள் எல்லாம் நடக்கும். ஒன்றிற்கும் குறைவில்லை. ஆனால் என் படிப்புதான் அதல பாதாளத்துக்கு போய் விட்டது. ஒரு கட்டத்தில் கணிதத்தில் பாஸ் ஆகவே முடியாத நிலைக்கு போய் விட்டேன்.  அப்புறம் எப்படியோ தட்டு தடுமாறி பாஸ் ஆகிவிட்டேன். மிகக்குறைவான மதிப்பெண் எடுத்து. என் வாழ்க்கையில் படிப்பை நினைத்து கவலைப்பட்ட ஒரே தருணம் அது மட்டும்தான். அதன் பின் வாழ்க்கை எந்தப்பக்கம் சுழலப்போகிறது என்று தெரியாமல் குழம்பி தவித்தேன். நல்ல வேளையாக எனக்கு சாதகமாகவே சுழன்றது. 

சுயபுராணம் போதும் என்று நினைக்கிறேன்.... 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க. 

38 comments:

r.v.saravanan said...

பள்ளி நினைவுகளை பற்றிய நினைவுகள் எப்போதுமே ரம்யமானவை தான்

r.v.saravanan said...

அப்போதே பல புத்தகங்களை குறுகிய நேரத்தில் படித்து விடுவேன் என்பதால், நான் பேசும் விஷயங்களை கேட்க எப்போதுமே கூட்டம் கூடிவிடும்.

இப்போது தாங்கள் எழுதும் விஷயங்கள் படிப்பது very interest பாலா

r.v.saravanan said...

நல்ல வேளையாக எனக்கு சாதகமாகவே சுழன்றது.

வாழ்த்துக்கள் பாலா

இராஜராஜேஸ்வரி said...

சாதகமாக சுழன்ற
வாழ்க்கை !
வாழ்த்துகள்!!!

sontha sarakku said...

நெறைய விஷயங்கள் உங்களுக்கும் எனக்கும் ஒத்துபோகுது... வயது, படிப்பு, கிரிக்கெட்... :)

Unknown said...

ஒவ்வொரு வகுப்பு படித்ததையும் எப்படி ஞாபகமாக வைத்திருக்கிறீர்கள் பாலா? உங்களது அனுபங்கள் பல எனக்கும் உண்டு, தொடர்பதிவை இத்துடன் நிறுத்தி விட்டீர்க, யாரையும் அழைக்க வில்லையா???

NKS.ஹாஜா மைதீன் said...

#நிறைய காதல் கதைகள், கில்மாகதைகள் என்று பேசும் வாய்ப்பு உண்டு.#

இறந்தகாலத்துக்கு ஏது சார் வாய்ப்பு...!பேசி இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்...படிக்க சுவாரஸ்யமாக இருந்தது...

Madhavan Srinivasagopalan said...

ம்ம்.. அனுபவம் பேசுகிறது..!!

MANO நாஞ்சில் மனோ said...

அனுபவம் நல்லா சுகம் சுகம்.....!!!

பாலா said...

@r.v.saravanan

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

நன்றிங்க

பாலா said...

@sontha sarakku

அப்படியா? :)

மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பரே

பாலா said...

@இரவு வானம்

விட்டா பெரிய புத்தகமே போட்டிருவேன். அவ்ளோ கதை இருக்கு. நன்றி நண்பரே

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பரே. வாய்ப்பு இருந்தது என்று எழுதுவதாக நினைத்துக்கொண்டு எழுதி விட்டேன்.

பாலா said...

@Madhavan Srinivasagopalan

நன்றி நண்பரே

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

வருகைக்கு நன்றி நண்பரே

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

நரசிம்மன் மாதிரியே, எனக்கும் ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் பாடம் நடத்தும் போது, ஒருவர் தவறு செய்தால், எல்லோருக்கும் அடி விழும். அவர் வகுப்பிற்குள் நுழைந்தாலே, எல்லோரும் பெட்டிப்பாம்பு. அவர் அடிக்கும் போது இந்த வார்த்தையைத் தான் சொல்வார்.`தமிழர்களா நீங்கள்? பண்பாடு இல்லை, பண்பாடு இல்லை’.. நானும் பின்னோக்கிச்சென்று விட்டேன். :)

சென்னை பித்தன் said...

துள்ளித்திரிந்த பள்ளிப்பருவத்தை நினைத்துப்பார்ப்பதே சுகம்தான்.நன்று.

ராஜி said...

பள்ளிப்பருவத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

ராஜி said...

த ம 2

Unknown said...

என்னே ஒரு ஞாபக சக்தி மாப்ள உங்களுக்கு...நினைவுகள் அந்த மணி அடிக்கும் உளி போல இறங்கி இருக்கு போல..நம்மள தான் யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க ஹாஹா!

ஆத்மா said...

கண்டிப்புக்கு பெயர் போன அந்தப் பெண்மணிதான் என் மீது உளியை வைத்த முதல் சிற்பி.//

உண்மையில் இவரை விட சிறந்த சிற்பி யாரும் உலகினில் இல்லை

ஆத்மா said...

நல்ல பதிவு நல்ல ஞாபக சக்தி....

Unknown said...

சூப்பரு

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

Unknown said...

சூப்பரு

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

selvasankar said...

nalla thodakkam...innum niraya varumnu ethir pakkirom

vimalanperali said...

புத்தகங்கள் நிரம்பிய மஞ்சள் பையும்,பின்பக்கம் ஒட்டுப்போட்ட ட்ரவுசரும்,கை புஜத்தினருகில் இழிந்து தொங்கும் சட்டையுமாய் திரிந்த நாட்களை நினைவு கூறிச்செல்கிறது,நினவுப் புரட்டல்களும் ஒருவித இளைப்பாறல்தானே?நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

பாலா said...

@இரவு வானம்

அவர் அழைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால், இனி அழைத்து என்ன ஆகப்போகிறதென்று விட்டு விட்டேன்

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

ஹா ஹா ரொம்ப நன்றிங்க

பாலா said...

@சென்னை பித்தன்

நன்றி சார்

பாலா said...

@ராஜி

கருத்துக்கும் ஓட்டுக்கும் ரொம்ப நன்றிங்க

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள

பாலா said...

@சிட்டுக்குருவி

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@sathish krish

வருகைக்கு நன்றி நண்பரே. கண்டிப்பா பார்க்கிறேன்.

பாலா said...

@selvasankar

வருகைக்கு நன்றி நண்பரே

பாலா said...

@விமலன்

உண்மைதான் சார். நினைவுகளை அசைபோடுவதே சுகம்தான். நன்றி சார்

கலாகுமரன் said...

பள்ளி நாட்கள் எல்லோருக்கும் ரம்யமானது தான். நிறையபேருக்கு எல்லாமும் ஞாபகம் இருக்காது சிற்சில சம்பவங்கள் மட்டுமே ஞாபகம் இருக்கும். எனக்கெல்லாம் பெயர்கள் மறந்துவிட்டது சம்பவங்கள் மட்டுமே யோசிக்க முடிகிறது. அத்துணையும் ஞாபகம் இருப்பது உங்களைப்போல சிலருக்குத்தான்.

பாலா said...

@EniyavaiKooral

எனக்கே நிறைய விஷயங்கள் மறந்து விட்டன நண்பரே, ஏதோ ஞாபகம் இருப்பதை வைத்து எழுதி இருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...