இது கண்டிப்பாக காதல் சம்பந்தமான பதிவு அல்ல. சொல்லப்போனால் அதற்கு எதிரான பதிவு. நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் உண்டு. அதாவது நம்மிடம் இல்லாத ஒரு நல்ல விஷயத்தை அடுத்தவரிடம் எதிர்பார்ப்போம். சிலருக்கு நம்மிடம் அந்த குணாம்சம் இல்லை என்றே தெரியாது. பலருக்கு தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல், அடுத்தவரை கடிந்து கொள்வோம். சமீபத்தில் படித்த ஒரு பொன்மொழி, "நம்முடைய தவறுகளுக்கு நாமே வக்கீல் ஆகிறோம், அடுத்தவரின் தவறுகளுக்கு நாமே நீதிபதி ஆகிறோம்." இதுதான் எல்லா இடத்திலும் நடக்கிறது. இதில் ஒரே ஒரு குணாம்சத்தை பற்றி மட்டும் எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அது நேரம் தவறாமை. எல்லோரிடமும் இருக்கவேண்டிய, பலரிடம் இல்லாத இந்த குணம்தான் என்னை பொறுத்தவரை ஒருவரிடம் இருக்கவேண்டிய தலையாய குணம்.
தனக்கு வந்தால்தான் தெரியும்....
சந்திப்புகள், நிகழ்வுகள், விழாக்கள் ஆகிய பல இடங்களுக்கு நான் செல்வதுண்டு. அப்படி செல்லும்போது தவறாமல் நடக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அந்த இடத்தில் நான்தான் முதல் ஆளாக இருந்திருக்கிறேன். குறித்த நேரத்திற்கு சுமார் 5 நிமிடம் முன்னமே சென்று விடுவதால், பத்தில் இருந்து 30 நிமிடம் வரை காத்திருந்த அனுபவம் எனக்கு அதிகம் உண்டு. நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் உண்டு. லேட்டாக வந்தவர்கள், "உன்னுடைய கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?" என்று நக்கல் விட்டதும் உண்டு. காத்திருத்தல் என்பது எவ்வளவு கடுப்பை கிளப்பும் என்பதை நீங்கள் உணர வேண்டுமானால், ஒரு முறை ஏதாவது செல்போன் சேவையின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு பஸ்ஸோ, ட்ரெயினோ குறித்த நேரத்தில் வரவில்லை என்றால், அந்த வண்டியை ஓட்டுபவரில் இருந்து, அந்த துறை மந்திரி வரை கிழித்தெடுப்போம். காலையில் மனைவி டிபன் ரெடி பண்ண கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டால் அவளோடு சேர்த்து அவளின் பெற்றோரையும் தாளிப்போம். காத்திருத்தலின் அவஸ்தையை உணரும் நாம், அடுத்தவரை காக்க வைக்கும்போது உணர்வதில்லை. அதுதான் இங்கே பிரச்சனை. கீழே இருக்கும் படத்தை பார்த்தாலே சாஃப்ட்வேர் துறையில் இருக்கும் பலருக்கு பீபி எகிறும். அது போலத்தானே அடுத்தவருக்கும் இருக்கும்?
கால தாமதம் ஏன்?
என் நண்பர் ஒருவர் பின்லாந்து சென்ற அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். வெள்ளைக்காரனுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி கூறினார். வெள்ளைக்காரன் இந்த வேலையை நம்மால் குறித்த நேரத்துக்குள் முடிக்க முடியாது என்று நினைத்தால், ஒன்று மறுத்து விடுவான் இல்லை அதற்கான காரணங்களை கூறுவான். நம்மாட்கள் ஒன்றுமே பேசாமல் அதை வாங்கி கொண்டு, பின்னர் தலையை சொறிந்து கொண்டு நிற்பார்கள். "எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்",னு வடிவேலு காமெடியா சொன்னாலும், அதுதான் உண்மை. தவறான திட்டமிடல்களே கால தாமதத்தின் முக்கிய காரணி. ஒரு செயலை செய்வதற்கு முன்னரே, அதற்கான காலக்கெடு, தேவையான ஆதாரங்கள் ஆகியவை பற்றிய தெளிவான திட்டமிடல் வேண்டும். சரியாக திட்டமிட்டு, அதற்கெற்றார்போல சமயோஜித செயல்பாடுகளால் ஒரு செயலை வெற்றிகரமாக குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க முடியும்.
கால தாமதத்தின் இன்னொரு காரணம் அலட்சியம். ?கொஞ்சம் லேட்டானா என்ன குடியா முழுகி போயிடும்?", என்ற எண்ணம் பலருக்கு உண்டு. இது பெரும்பாலும் அந்த செயல்களில் சம்பந்தம் இல்லாதவர்களுக்கே வரும். அரசு அலுவலர்கள், உயரதிகாரிகல் ஆகியோர் இந்த மனப்பான்மையோடு செயல் படுவதே எந்த வேலையும் கால தாமதமாக நடப்பதின் முதல் காரணம். இந்த கால தாமதத்தால் தனக்கு எந்த பாதிப்பும் கிடையாது எனும்போது அவர்களுக்கு ஒருவித அலட்சிய மனப்பான்மை உண்டாகிறது. சரியான திட்டமிடல் இல்லாமல் உண்டாகும் கால தாமதம் கூட ஒருவருக்கு மிகச்சிறந்த அனுபவ பாடத்தை கொடுக்கும். ஆகவே அவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் அலட்சியத்தால் கால தாமதம் செய்பவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை. ஒரு நாள் அதே அலட்சியம் அவர்களை நோக்கி திரும்பும் வரை....
காலம் தவறாமல் இருப்பது எப்படி?
என்னை பொறுத்தவரை காலம் தவறாமை என்பது தலைமை பண்புகளில் மிக முக்கியமானது. ஒரு இடத்துக்கு தலைவன் சரியான நேரத்துக்கு வந்தால்தான், அவனுக்கு கீழே இருப்பவர்களும் வருவார்கள். காலம் தவறாமை என்பது ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இருக்கும் ஈடுபாட்டின் அளவுகோல். ஆகவே உங்களுக்கு கீழே இருப்பவர்களிடம் சரியாக வேலை வாங்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் காலம் தவறாமல் இருக்க பழகி கொள்ளவேண்டும். பிரச்சனை இந்த இடத்தில் இருந்தே தொடங்குவதால், இதை சரி செய்துவிட்டாலே எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெறும்.
முக்கியமாக சரியான திட்டமிடல் வேண்டும். அதற்கு கொஞ்சம் காமன் சென்ஸூம், கொஞ்சம் அனுபவ அறிவும் இருந்தாலே போதும். ஆறு மணி வண்டிக்கு, போன தடவை ஐந்து மணிக்கு கிளம்பியதால், வண்டியை தவறவிட்டோம் என்று தெரிகிறது. இந்த முறை கொஞ்சம் முன்கூட்டியே கிளம்ப வேண்டும் என்று உணர்வதற்கு குறந்த பட்ச காமன் சென்ஸ் போதும்.
காலம் தவறாமைக்கு மற்றொரு முக்கிய எதிரி ஒத்தி போடுதல். எந்த ஒரு செயலையுமே தள்ளி போட்டால், கண்டிப்பாக அது காலதாமதத்தில் கொண்டு சேர்த்து விடும். என் நண்பன் கரெக்டாக வண்டிக்கு கிளம்பும்போதுதான், செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணனும் என்று சொல்வான். அந்த அவசரத்தில் ரீசார்ஜ் கடையை தேடி அலைந்து, டென்ஷன் ஆவது வேறு கதை. குறைந்த பட்சம் கிளம்பும் முன்னரே ரீசார்ஜ் செய்திருக்கலாம். இதுபோல டாகுமெண்ட் ஜெராக்ஸ் எடுப்பது, சட்டை இஸ்திரி செய்வது என்று சின்ன சின்ன வேலைகளை நாம் ஒத்திப்போடுவதால், அவை எல்லாம் கடைசி நேரத்தில் கியூவில் நின்று நம்மை பயமுறுத்தும்.
அடுத்தவர் இடத்தில் நம்மை பொருத்தி பார்த்தல், ஆங்கிலத்தில் Standing on Others Shoes என்று சொல்வார்களே. இதற்கு பெரிய மனது வேண்டும். ஆனால் இந்த பண்பு வந்து விட்டால் கண்டிப்பாக காலம் தாழ்த்த மாட்டோம். ஒட்டு மொத்தத்தில் சுறுசுறுப்பு என்கிற மருந்தே தாமதம் என்ற வியாதியை வரவிடாமல் தடுக்கும் தடுப்பூசி. என்னை பொறுத்தவரை நோய்க்கு மருந்து உண்பதை காட்டிலும், தடுப்பூசி போடுவதே புத்திசாலித்தனம்.
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க.....
முழுவதும் படிக்க >>
























