விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

July 30, 2011

தமிழில் படம் எடுப்பது எப்படி?



ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த "எப்படி" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். "முதலில் பதிவு எழுதுவது எப்படி என்று கற்றுக்கொண்டு வா அப்புறம் எழுதலாம்." என்று சொல்கிறீர்களா? ஏற்கனவே அதை யோசித்து வைத்துவிட்டேன். அதாவது "பதிவு எழுதுவது எப்படி?" என்று ஒரு பதிவை இன்னொருநாள் எழுதலாம் என்று யோசித்து வைத்திருக்கிறேன். அதற்கு முன் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ஒரு விஷயத்தை பற்றி சொல்வதற்கு, அதில் கரை கண்டிருக்கவேண்டும் என்று ஒன்றும் கட்டாயம் இல்லை. அப்படி பார்த்தால் பதிவுல்கில் ஒருவர் கூட திரைவிமர்சனம் எழுதக்கூடாது, யாரையும் கிண்டல் பண்ண கூடாது. ஆனால் அப்படியா நடக்கிறது? ஆகவே, "முதலில் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு." என்று கேபிள் அண்ணன் தளத்தில் கமெண்ட் போடுவதை போல இங்கே கமெண்ட் போடவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 100 மார்க் எடுக்க சொல்லும் ஆசிரியரிடம், "நீ 100 மார்க் எடுத்துக்காட்டு!" என்று என்னைக்காவது சொல்லி இருக்கோமா? கிடையாது. ஏனென்றால் அது முடியாது என்று நமக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். 


டிஸ்க் 1: இந்த பதிவில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் என் சொந்த கருத்துக்கள். ஒரு வார்த்தை கூட யாரையும் புண்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதல்ல. 

டிஸ்க் 2: இந்த பதிவை படிக்கும்போது உங்களுக்கு ஏதாவது தமிழ் படத்தின் ஞாபகம் வந்தால். நான் பொறுப்பல்ல

டிஸ்க் 3: இது மிக........ நீளமான பதிவு. இதன் சுவையை அனுபவிக்க வேண்டுமானால், முழுவதும் படிப்பதை தவிர வேறு வழி இல்லை. 





பதிவிற்குள் போகும்முன் ஒரு சின்ன புதிர் போட்டி. 

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களுக்குமிடையே குறைந்தபட்சம் 7 வித்தியாசங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு, அகில உலக சூப்பர் ஸ்டார் டாக்டர் குஜய் நடித்த சூலாயுதம் திரைப்படத்தின் திருட்டு டிவிடி வழங்கப்படும். 





தமிழ்நாட்டில் பிறந்த பலருக்கு, தான் நடிகனாக வேண்டும் என்று வாழ்க்கையில் ஒரு கணமாவது தோன்றி இருக்கும். பின் படிப்பு ஏற, ஏற, அந்த எண்ணம் மாறி, நடிகரை விட இயக்குனரே திறமைசாலி என்று புரிந்ததும், கவனம் இயக்கம் பக்கம் திரும்பும். நினைத்து விடுவார்களே ஒழிய, எப்படி இதை சாதிப்பது என்று தெரியவே தெரியாது. அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு ஒரு வரப்பிரசாதம். கொஞ்சம் நீளமாக இருந்தாலும், உங்களுக்கு தேவையான பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சகலகலா இயக்குனர் ஆக வேண்டுமானால் முழுப்பதிவையும் படித்துதான் ஆகவேண்டும். 

திரைப்படம் எடுப்பது எப்படி?



இதற்கு முதலில் நீங்கள் ஒரு இயக்குனரிடம் பணியாற்றி இருக்கவேண்டும். அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்தாலும், எப்பேற்பட்ட கேவலமான வேலையாக இருந்தாலும் அதனை செய்து பழக வேண்டும். படப்பிடிப்பில் என்னென்ன நடக்கிறது, அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டால் மிக வசதி. மேலும் இயக்குனரை பார்க்க வருபவர்களிடம் நன்கு நெருங்கி பழகி அவர்களின் பரிச்சயத்தை பெறவேண்டும். திரைப்படம் எடுக்க ஆள்பழக்கம் என்பது மிக முக்கியம். ஒரு கட்டத்தில் அவர்களை வைத்தே யாராவது தயாரிப்பாளரை பிடித்துக்கொள்ளலாம். அவரிடம் கதை சொல்லி ஓகே வாங்குவது எல்லாம் பிற்பாடுதான். அது சரி கதை எப்படி சொல்வது? அதற்குத்தான் நீங்கள் வேலை பார்த்த இயக்குனரின் படப்பிடிப்பில் என்னென்ன வார்த்தைகள் உபயோகிக்கிறார்கள் என்று கவனித்தீர்கள் அல்லவா, அவற்றை பேசும்போது ஆங்காங்கே தூவ வேண்டும். 

ஆக்சன் படம் எடுப்பது எப்படி?


இருப்பதிலேயே சுலபமான வேலை இதுதான். கதை ஒன்றும் பெரிதாக தேவை இல்லை. ஹீரோ அப்பாவியானவன். அவன் வாழ்க்கையில் வில்லன் குறுக்கிடுகிறான். வில்லன் ஊரிலேயே பெரிய ரவுடி. அவனைப்பார்த்தால் போலீசே நடுங்கும். அந்த ஊரிலேயே அவன்தான் பெரிய ஆள். ஆனால் அப்படிப்பட்டவன் அந்த ஊரில் இருக்கிறான் என்றே அதுவரை ஹீரோவுக்கே தெரிந்திருக்க கூடாது. ஹீரோவுக்கு தங்கையோ, அல்லது நண்பனோ இருப்பது மிக முக்கியம். ஒரு கட்டத்தில் அதாவது இண்டர்வலுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால், நண்பனாக இருந்தால் கொல்லப்படவேண்டும், தங்கையாக இருந்தால் கற்பழித்து கொல்லப்படவேண்டும். அதுவரை அப்பாவியாக இருந்த ஹீரோ வீரனாக மாறிவிடவேண்டும். அது சரி அப்போ இண்டர்வலுக்கு முன்னால் என்ன நடக்கும்? ஹீரோ அறிமுகக்காட்சி. அதாவது ஹீரோ ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் அவன் மார்க்கெட்டில் நடனமாடினால் அனைவரும் கூட நடனமாட வேண்டும். கூடவே ஹீரோ பல தத்துவ கருத்துக்களை உதிர்க்கவேண்டும். குறிப்பாக தாய்மையை போற்றும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பிறகு வில்லன் அறிமுகக்காட்சி. இது டைட்டிலுக்கு முன்னால் வந்தால் இன்னும் சிறப்பு. நடு ரோட்டில் ஒருவரை வெட்டி கொன்று விட்டு அவன் மனைவி கையை பிடித்து தரதரவென இழுத்து வருவதாக காட்டினால்தான் அவன் கொடூரமானவன் என்று அர்த்தம். ஹீரோ அறிமுகமானவுடன், அடுத்த காட்சியில் ஹீரோவின் அம்மா அவனை திருமணத்துக்கு வற்புறுத்தவேண்டும். அப்போது ஹீரோ, "எனக்குன்னு ஒருத்தி போறந்திருப்பா!!" அப்படின்னு சொன்ன உடனே........... கரெக்டா சொன்னீங்க. ஹீரோயின் அறிமுக காட்சி. நடு மார்க்கெட்டில் குட்டை பாவாடையோடு ஹீரோயின் காரை விட்டு இறங்க வேண்டும். மார்க்கெட்டில் உள்ள எல்லோரும் அவளிட்ம் ஜொள்ளுவிட, ஹீரோ அவளை கண்டுகொள்ள மாட்டான். ஆனால் அவளோ இவனை பார்த்து ஜொள்ளு விட, குறிப்பிட்ட இடைவெளியில், இரண்டு பாட்டு. அப்புறம் என்ன? இண்டர்வல் வந்துவிடும்.


இண்டர்வல்லுக்கு அப்புறம் என்ன செய்வது? ரொம்ப சிம்பிள். ஒரு நூறு சுமோ, 500 அருவாள், ஆயிரம் துப்பாக்கி எல்லாம் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளுங்கள். பிறகு ஊருக்கு ஒதுக்கு புறமாக சென்று, சுமோவில் ஆட்களை ஏற்றி அதை குறுக்கா மறுக்கா ஒட்டி படம்பிடித்து கொள்ளுங்கள். பிறகு ஒரு நாலு பைட் வைத்து ஹீரோ எல்லோரையும் போட்டு தள்ளுமாறு காட்டுங்கள். வில்லன் முதலிலேய ஹீரோ கையில் மாட்டினாலும் அவனை கொல்ல கூடாது. ஏனென்றால் இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது. அது செம குத்து பாடலாக இருக்க வேண்டியது அவசியம்.  இந்த பாடல்தான் அவ்வளவு நேரம் தூங்கி கொண்டிருந்தவர்களை எல்லாம் எழுப்ப போகிறது. இன்னும் பத்து நிமிடத்தில் படம் முடியப்போகிறதென்று எல்லோருக்கும் உணர்த்தி விடும். பிறகென்ன பைட். ஒன்று வில்லனை ஹீரோ கொல்லவேண்டும், அல்லது வெறுயாராவது கொல்லவேண்டும். அது வில்லனின் மனைவியோ, அல்லது போலீஸாகவோ இருந்தால் நல்லது.  சுபம். 

சமுதாயப்படம் எடுப்பது எப்படி?

இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று கமர்ஷியல் இன்னொன்று அவார்டு படம். இரண்டுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, இரண்டின் கதையையுமே நீங்கள் பர்மா பஜார் உதவியுடன் உருவாக்க முடியும். நம்நாட்டில் 90 சதவீத மக்கள் வெளிநாட்டு படங்கள் பார்ப்பதில்லை என்பதால் உங்களுக்கு கவலை இல்லை. அப்படியே தெரிந்தாலும் மக்கள், "அட நம்மாள் அந்த படம் கணக்காவே எடுத்திருக்கானே?" என்று பாராட்டவே செய்வார்கள்.

கமர்ஷியல் சமுதாயப்படம்.



இதில் ஹீரோ ஒரு அப்பாவி. ஒரு வாத்தியாராகவோ, மெக்கானிக்காகவோ இருக்கவேண்டும். ஆனால் அவன் வீட்டுக்கு பின்னால் பெரிய அறையில் கலர் கலராக லைட் வைத்து நிறைய கம்பியூட்டர்கள் இருக்கும். அதில் ஒன்றை தட்டினால் சிலபேரின் படங்கள் வரும். பிறகென்ன? அவர்களை எல்லாம் ஒவ்வொருத்தராக ஹீரோ கடத்தவோ, கொல்லவோ செய்வான். எப்படி கொல்வது?, எப்படி கடத்துவது? என்று குழம்பவேண்டாம். இந்த இடத்தில்தான் உங்களுக்கு பர்மா பஜார் உதவப்போகிறது. ஏதாவது ஒரு உலகப்படத்தில் இருந்து ஒரு காட்சியை இன்ஸ்பயர் ஆகி ஆட்டைய போட்டுவிடலாம். கடத்தப்பட்டவர்கள் எல்லாம் சமூகத்தில் பெரிய ஆட்கள். இந்தியாவே ஸ்தம்பிக்கிறது. இந்தியா முழுவதும் போலீஸ் தேடினாலும் ஹீரோ இருக்கும் இடம் தெரியாது. இப்போது இண்டர்வல். இண்டர்வல் முடிந்தவுடன், போலீசாலேயே கண்டுபிடிக்க முடியாத ஹீரோவின் இடத்தை ஹீரோயின் கண்டுபிடித்து விடுவாள். ஹீரோ அவளிடம் கதை சொல்ல தொடங்குவான். பிளாஷ்பேக்கில் ஒரு சோக சம்பவம் நடந்திருக்க வேண்டும். ஹீரோவின் குடும்பமோ, காதலியோ, ஒரு சமூக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு செத்திருப்பார்கள். அன்றில் இருந்து சமுதாயத்தை திருத்த ஹீரோ புறப்படுவார். கிளைமாக்சுக்கு முன்னால் ஹீரோ போலீசில் பிடிபடுவார். இறுதிக்காட்சியில் கோர்ட்டில் ஆவேசமாக வசனம் பேசுவார். நாடே அவருக்காக அழும். கோர்ட்டில் ஜட்ஜ் அழுவதும் ரொம்ப முக்கியம்.  கடைசியில் சில வருடங்களுக்கு பிறகு என்று போட்டு, ஹீரோ ஜெயிலில் இருந்து வருவதாக காட்டலாம். சுபம். 



அவார்ட் சமுதாயப்படம்

இதில் முக்கியம் இசை இருக்கவே கூடாது. நடிகர்கள் யாரும் மேக்கப் போடக்கூடாது. கதாநாயகி விபச்சாரியாக இருக்கவேண்டும். ஹீரோ ஒரு போறம்போக்காகவோ அல்லது மனநலம் குன்றியவராகவோ இருக்கவேண்டும். படம் முழுவதும் எல்லோரும் கெட்டவார்த்தை பேசவேண்டும். அடிக்கடி வாழ்க்கையின் தத்துவத்தை யாராவது உதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். ஹீரோ, ஹீரோயின் வாழ்க்கையில் நல்லதே நடக்க கூடாது. இறுதியில் அனைவரும் செத்து விடவேண்டும். மற்றபடி இந்த வகை படத்திற்கான கதை, கொரியா அல்லாத ஃபிரெஞ்சு படங்களில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். 


காதல் படம் எடுப்பது எப்படி?


இந்த வகை படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும். படத்தில் சோகப்பாடலே இருக்க கூடாது. படம் முழுவதையுமே ஊட்டி மாதிரி ஒரு இடத்தில் இருக்கும் கல்லூரியிலேயே எடுக்கவேண்டும். முதல் காட்சியிலேயே ஹீரோ ஹீரோயின் இருவருக்கும் காதல் வந்துவிடவேண்டும். பிறகு பிரிவார்கள், சேர்வார்கள், பிரிவார்கள், சேர்வார்கள். மாறி மாறி காட்சிகள் வந்துகொண்டே இருக்க வேண்டும். ஹீரோ ஏழையாக இருந்தாலும் பைக், ரெபான்  கிளாஸ் இல்லாமல் காலேஜ் வரமாட்டான். காதலுக்கு பெற்றோரை எதிரி ஆக்குவதெல்லாம் அந்தக்காலம். இப்போது காதலுக்கு அவர்களேதான் எதிரி. படத்தில் லிப் டு லிப் கிஸ் மிக முக்கியம். ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு கேன்சர் இருப்பது நல்லது. அதே போல கிளைமாக்ஸ் காட்சி ரயில் நிலையத்திலோ, ஏர்போர்ட்டிலோ நடக்கவேண்டியது மிக முக்கியம். இந்த வகை படங்களுக்கான கதையை ஹிந்தி திரைப்படங்களில் இருந்து சுடுவது நல்லது.

திகில்படம் அல்லது பக்திபடம் எடுப்பது எப்படி?

இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை, இரண்டுமே தொழில்நுட்பத்தில் முன்னேறிய படங்கள். படத்தின் உயிர்நாடியே கிராபிக்ஸ்தான்.


திகில் படத்தை பொறுத்தவரை ஒரே கதைதான். ஒரு பங்களா. அது நடுக்காட்டுக்குள் இருக்கிறது. யாருமே வராத அந்த இடத்துக்கு, ஒரு ஐந்து பேர் கொண்ட குழு, மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள்(டவுசர் மற்றும் பனியனுடன்) வந்து தங்குவார்கள். அங்கே ஏதோ ஒன்று இருக்கிறது. அப்பப்போ வந்து அனைவரையும் பயமுறுத்துகிறது. பின்னர் ஒவ்வொருவராக கொல்கிறது. ஒரே ஒருவர் மட்டும் தப்பிப்பார். பிறகு அவர் ஒரு சாமியாரிடம் செல்வார். சாமியார் உதவியுடன் பேயிடம் விசாரித்தால் அது தன் கதையை சொல்லும். அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெண் இதே பங்களாவில் வைத்து கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பாள். அதற்கு இந்த ஐந்து பெரும் உடந்தை. பிறகென்ன, மிச்சமிருக்கும் அந்த ஒருவனையும் கொன்றுவிட்டு பேய் சாந்தி அடையும். படத்தில் பேயை விட, அதில் வரும் சாமியார், வேலைக்காரி ஆகியோர் மிக டெரராக இருக்கவேண்டும். பேயாக வருபவர் கவர்ச்சி நடிகையாக இருப்பது மிகமுக்கியம். பெரும்பாலும் படத்துக்கு வருபவர்கள் அந்த கற்பழிப்பு காட்சிக்காகத்தான் வருகிறார்கள் என்பதை நினைவில் கொள்க.

பக்தி படத்தில் ஒரு மந்திரவாதி. அவன் தான் விரும்பும் சக்தியை அடைய வேண்டுமானால் அதற்கு ஒரு குழந்தையை கொல்லவேண்டும். அது அம்மனின் தீவிர பக்தையான கதாநாயகியின் குழந்தை. ஆகவே அவர்களை நெருங்க விடாமல் அம்மன் காப்பாற்றுகிறார். பெரிய சைஸ், தேள், பாம்பு என்று எதை அனுப்பியும் பிரயோசனம் இல்லை. ஒரு கட்டத்தில் கதாநாயகிக்கும் அம்மனுக்கும் லடாய் ஆகி விட, அம்மன் மன்மோஹன்சிங் ஆகி விடுகிறது. அதன்பின் படம் முழுவதும் மந்திரவாதி அவர்களையும், நம்மையும் டார்ச்சர் செய்கிறார். கிளைமாக்ஸில் டார்ச்சர் தாங்காமல் அம்மனே டான்ஸ் ஆடிக்கொண்டே வந்து மந்திரவாதியை கொன்று அவர்களையும், நம்மையும் கிராபிக்ஸ் உதவியுடன் காப்பாற்றுகிறார். படத்தில் உடுக்கை சத்தமும், குலவை சத்தமும் மிக முக்கியம். இந்த மாதிரி படங்களில் கதாநாயகனுக்கு வேலையே இல்லை. பிரபு, கரன், ராம்கி ஆகியோர் பொருத்தமாக இருப்பர்.  

இன்னும் ஃபீல் குட்படம் எடுப்பது எப்படி?, பிட்டு படம் எடுப்பது எப்படி?, காமெடி படம் எடுப்பது எப்படி? என்று கைவசம் நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. இப்போதே இந்த பதிவை படித்து பலபேர் பீதி ஆகி இருப்பதால், அவற்றை இன்னொருநாள் சொல்கிறேன்.  அப்புறம் புதிருக்கு விடை சொல்ல மறக்காதீங்க. 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....


40 comments:

இராஜராஜேஸ்வரி said...

படித்தாகிவிட்டது. படம் எடுக்கும் எண்ணமில்லை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

முத்துசிவா said...

ஹாஹாஹாஹாஹாஹாஹா... சூப்பர்.. மிகவும் ரசித்து படித்தேன்.. என்னை உங்ககிட்ட அசிஸ்டண்டா சேத்துக்குங்க.....:)

முத்துசிவா said...

//கதாநாயகிக்கும் அம்மனுக்கும் லடாய் ஆகி விட, அம்மன் மன்மோஹன்சிங் ஆகி விடுகிறது. // தாறு மாறு தல :)

Unknown said...

மத்த விசயங்களுக்காக ஓட்டு போடுறன்...விஜய்யை தாக்கி பேசியதற்கு கண்டனம்!!இயக்குனர்கள் தான் முதலில் கதையை தேர்ந்தேடுக்கிறனர்!

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

வருகைக்கு நன்றிங்க...

பாலா said...

@முத்துசிவா

கண்டிப்பா தல. நீங்க இல்லாமலா? மிக்க நன்றி.

shanmugavel said...

ஹாஹாஹா ரொம்ப யோசிக்கிறீங்க! வாழ்த்துக்கள்.

பாலா said...

@மைந்தன் சிவா

ஐய்யயோ இதில் விஜய் எங்கே வருகிறார் நண்பா? இந்த பதிவு முழுக்க இயக்குனர்களை நோக்கி எழுதப்பட்டது. நீங்கள் விஜய்யை தாக்குவதாக நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்?

கில்லி படம் போட்டிருப்பதால் அப்படி சொல்கிறீர்களா? அந்த படங்கள் எல்லாம் அந்தந்த பிரிவில் பட்டைய கிளப்பிய படங்கள். மற்றபடி நான் யாரையும் தாக்கவில்லை.

பாலா said...

@shanmugavel

மிக்க நன்றி நண்பரே...

Mathuran said...

//கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களுக்குமிடையே குறைந்தபட்சம் 7 வித்தியாசங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு, அகில உலக சூப்பர் ஸ்டார் டாக்டர் குஜய் நடித்த சூலாயுதம் திரைப்படத்தின் திருட்டு டிவிடி வழங்கப்படும். //

நண்பரே முதல்முதல் தங்கள் தளத்திற்கு கருத்திட வருகிறேன்.....
ஆனால் ஆரம்பத்திலேயே என்னை சீண்டி விட்டீர்களே... புதியவன் என்பதால் வெறும் கண்டனத்தை மட்டும் தெரிவிக்கிறேன்...

Mathuran said...

ஏனைய விடயங்கள் அருமையாக உள்ளது

Mathuran said...

//அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெண் இதே பங்களாவில் வைத்து கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பாள். அதற்கு இந்த ஐந்து பெரும் உடந்தை. பிறகென்ன, மிச்சமிருக்கும் அந்த ஒருவனையும் கொன்றுவிட்டு பேய் சாந்தி அடையும்.///

ஹா ஹா....தமிழ் பேய் படங்கள நல்லாத்தான் நாடி பிடிச்சிருக்கிறீங்க...

Mathuran said...

//இன்னும் ஃபீல் குட்படம் எடுப்பது எப்படி?, பிட்டு படம் எடுப்பது எப்படி?, காமெடி படம் எடுப்பது எப்படி? என்று கைவசம் நிறைய ஐடியாக்கள் இருக்கிறது.//

வெயிட்டிங்

Rathnavel Natarajan said...

அருமை.

பாலா said...

@மதுரன்

வாங்க வாங்க.. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. கலாய்ப்பது என்று வந்துவிட்டால் யாரையும் விட்டு வைக்க கூடாது. படம் வரட்டும். அவர் படம் நல்லா ஓடி, மீண்டும் அவர் புகழ்பெற்றால் சந்தோஷம்தான்.

பாலா said...

@Rathnavel

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.

செங்கோவி said...

அட்டகாசம் பண்ணியிருக்கீங்களே பாலா..ஆக்சன் படமும் சமுதாயப் படமும் தூள்.

அடுத்து பிட்டுப் படம் எடுக்க ஒரு ஆண்ட்டியும் அவருக்கு வயதான கணவன் + இளம் வயது பக்கத்துவீட்டுப் பையன்.......இது போதும்ல பாஸ்?

பாலா said...

@செங்கோவி

தல எங்கேயோ போய்ட்டீங்க...

அந்நியன் 2 said...

படம் எப்படி எடுப்பது என்று அழகாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் சகோ.

Anonymous said...

நல்ல படப்பிடிப்பு. பிட்டு படத்துக்கு விமர்சனம் செய்வது? அப்படின்னும் ஒரு பதிவ போட்டு என்னை(எண்ணை அல்ல!)பேமஸ் ஆக்குங்கள் சகோதரம்!!!

baleno said...

மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

M (Real Santhanam Fanz) said...

காமெடி படம் எடுப்பது எப்படி? சீக்கிரம் போடுங்க


மங்காத்தாவிற்கு பிறகு வெங்கட்பிரபு? சந்தானம்+பிரேம்ஜி+சிவா காமெடி தர்பார்?

Unknown said...

உங்கள் இருப்பிடத்தின் நுழைவாயிலில், அனைவரையும் கவரும் விதத்தில், தமிழ் சினிமா ரெடிமேட் கதாசிரியர் என்ற விளம்பரப் பலகையைத் தவறாமல் மாட்டி வைக்கவும். நிச்சயமாக ஒரு தயாரிப்பாளர் வருவார். அவர் விரும்பும் வண்ணம் கதை எழுதும் செய்தியினையும் பதிவிடுக.

Unknown said...

உங்கள் இருப்பிடத்தின் நுழைவாயிலில், அனைவரையும் கவரும் விதத்தில், தமிழ் சினிமா ரெடிமேட் கதாசிரியர் என்ற விளம்பரப் பலகையைத் தவறாமல் மாட்டி வைக்கவும். நிச்சயமாக ஒரு தயாரிப்பாளர் வருவார். அவர் விரும்பும் வண்ணம் கதை எழுதும் செய்தியினையும் பதிவிடுக.

மாய உலகம் said...

ஆஹா படம் எடுக்கிற ஆசையே கொன்னுபுட்டீங்களே நண்பா...ஹி ஹி..சூப்பரா சொன்னீங்க வாழ்த்துக்கள்

பாலா said...

@அந்நியன் 2

கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@பெயரில்லா

செஞ்சுட்டா போச்சு. உங்க பேரு என்னன்னு சொல்லவே இல்லையே?

பாலா said...

@baleno

ரொம்ப நன்றிங்க

பாலா said...

@சீராசை சேதுபாலா

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

பாலா said...

@மாய உலகம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

K.s.s.Rajh said...

ஆகா அற்புதம்,அதிலும் அக்சன் படம் எடுப்பது எப்படி ரொம்ப சூப்பர்

சுதா SJ said...

ஹி ஹி

செமயாய்த்தான் இருக்கு

சூப்பர் சூப்பர்

பாலா said...

@Kss.Rajh
மிக்க நன்றி நண்பரே.

பாலா said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.

அம்பாளடியாள் said...

நல்ல படைப்பு பாராட்டுகள் சகோ.நன்றி பகிர்வுக்கு...........

அபிமன்யு said...

மிக அருமையான கருத்தாழம் மிக்க , நியாயமான வாதங்கள் நிறைந்த பதிவு நண்பா.. கலக்குங்க..வாழ்த்துக்கள்..

RAM said...

super sir,

Unknown said...

Haha

Unknown said...

நல்ல பதிவு சாா்

Unknown said...

நல்ல பதிவு சாா்

Related Posts Plugin for WordPress, Blogger...