விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

April 16, 2011

என் கிரிக்கெட் வரலாறு...


பகுதி 1- வெங்க்சார்கரும் இன்ன பிற வீரர்களும். 

முதன் முறையாக நீ...ண்ட பதிவு ஒன்றை எழுத போகிறேன். படிப்பவர்களின் வசதிக்காக மூன்று நான்காக உடைத்து வெளியிடுகிறேன். இது முழுவதும் சுய சரித்திரம் (எத்தனை நாளைக்குத்தான் புராணம்னு சொல்றது) மற்றும் என் பார்வையில் கிரிக்கெட். போராடித்தாலும் படித்து விடுங்கள். 



வருடம் 1989. தென் தமிழகத்தின் பல வீடுகளில் தொலைக்காட்சி ஒரு ஆடம்பரப்பொருளாக இருந்தது. எங்கள் வீட்டில் அப்போது ஷட்டர் வைத்த பழைய கருப்பு வெள்ளை சாலிடர் டிவி இருந்தது. கிரிக்கெட் மிக பிரபலமாவதற்கு முக்கிய கருவி டிவி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்போது சாட்டிலைட் டிவி எல்லாம் தமிழகத்தில் வந்திருக்கவில்லை. எப்போதாவது ஒரு தடவை தூர்தர்ஷனில் கிரிக்கெட் ஒளிபரப்புவார்கள். முதன்முதலாக இந்த விளையாட்டை பார்க்கிறேன். ஒரு வீரர் அரைசதமோ அல்லது சதமோ அடித்துவிட்டு மட்டையை உயர்த்துகிறார். என் அண்ணனிடம் "இவர் யார்?" என்று கேட்டேன். "இவர்தான் வெங்க்சார்கர்.  சூப்பரா அடிப்பாரு." என்று சொன்னார். ஆக நான் முதன்முதலாக பார்த்த கிரிக்கெட் வீரர் அவர்தான். தொடர்ச்சியாக அந்த ஆட்டத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. விதிமுறை எதுவும் அப்போது தெரியாது. என் தெருவில் ஒரே ஒரு வீட்டில் மட்டும் கலர் டிவி உண்டு. அப்போதெல்லாம் கலர் டிவி என்பது கார் வைத்திருப்பது மாதிரி. ரொம்ப பந்தா பண்ணுவார்கள். அவர்கள் வீட்டுக்குள் சென்று முதன் முறையாக கலர் டிவியில் கிரிக்கெட் பார்க்கிறேன். என்னுள் பரவசம் கலந்த அதிர்ச்சி. ஏன் என்றால் அதுவரை எனக்கு மைதானம் என்றால் செம்மண் அல்லது கரிசல் மண் பொட்டல் காடுதான் அறிமுகம். கருப்பு வெள்ளை டிவியில் பார்க்கும்போது கூட மைதானம் இந்த நிறத்தில்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பச்சை பசேல் என்ற கிரவுண்டை நான் எதிர்பார்க்கவே இல்லை.


பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சில பல வீரர்களின் பெயர்களை அறிந்துகொண்டேன். கபில்தேவ், மனோஜ் பிரபாகர், கிரண் மொரே , சிக்சர் சித்து (1987 உலகக்கோப்பையில் இவர் அடித்த சிக்ஸர்கள் 29 ) என்று அப்போதைய அணியில் சில அதி முக்கியமான வீரர்களையும் தெரிந்து கொண்டேன். மிக முக்கியமாக ஸ்ரீகாந்த் மற்றும் அசாருதீன். இருவரும் அதிரடி மன்னர்கள் என்று என் அண்ணன் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் இந்தியா அல்லாத அணிகளில், அம்ப்ரோஸ், டேவிட் பூன், டீன் ஜோன்ஸ், கிரஹாம் கூச், ஜாவிட் மியந்தத் ஆகியோர் மிகவும் ஆபத்தானவர்கள் என்று கூறினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக கிரிக்கெட் மேட்ச்கள் பார்த்து வந்தேன். இந்திய அணியில் சில பல புதுமுகங்கள் தெரிய ஆரம்பித்தன.


வந்தது 1992


இந்த உலகக்கோப்பையின்போது எனக்கு ஓரளவிற்கு கிரிக்கெட் விதிமுறைகள் புரிய ஆரம்பித்தது. இந்த உலகக்கோப்பையில் நிறைய தொழில்நுட்பங்களை புகுத்தி இருந்தார்கள். நிறைய இரவு ஆட்டங்கள், மூன்றாவது அம்பயர், ஸ்டம்ப் முதல் விளக்குகள் வரை நிறைய கேமராக்கள், அதி நவீன தொழில்நுட்பம் என்று பார்ப்பதற்கு குளுமையாக இருந்தது. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை ஆட்டங்கள் அதிகாலையிலேயே தொடங்கி விடும். இந்த தொடரில் பெரும்பாலான ஆட்டங்களை நான் பார்க்கவில்லை. சொல்லப்போனால் நான் பார்த்தது ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா ஆடிய ஆட்டங்கள், அரையிறுதிகள் மற்றும் இறுதி போட்டி அவ்வளவுதான். ஆனால் நான் பார்த்த அனைத்து போட்டிகளுமே மிக சுவாரசியமானவை. இந்திய-ஆஸ்திரேலிய ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒரு ரன் வித்தியாச தோல்வி என்னை மிகவும் பாதித்தது.

அதிரடி அறிமுகம்


சில ஆபத்தான வீரர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்று சொன்னேன் அல்லவா? ஆனால் அப்படி ஆபத்தான வீரர்கள் நிறைந்த ஒரு அணியே இந்த உலகக்கோப்பையில் களமிறங்கியது. அதுதான் தென் ஆப்பிரிக்கா. இருபது வருடங்களாக தடை செய்யப்பட்ட அணி முற்றிலும் மாறுபட்ட ஒரு அணுகுமுறை. அவர்களின் ஆட்டமுறை எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ரோட்ஸ் பறந்து சென்று இன்சமாம் உல் ஹக்கை ரன் அவுட் செய்தது அடுத்த நாள் பத்திரிக்கையில் இது பறவையா இல்லை விமானமா என்ற அடைமொழியொடு வந்தது. ஆனால் அவர்களுக்கு ஆப்பு டக்வோர்த் லூயிஸ் மூலமாக வந்தது. மூன்று ஓவரில் 22 ரன் அடிக்கவேண்டும் என்ற நிலை மாறி, 1 பந்தில் 22 ரன் அடிக்க வேண்டும் என்ற பரிதாப நிலைக்கு சென்று வெளியேறியது தென் ஆப்பிரிக்கா. ஆனால் இந்த தோல்வியை எந்த கிரிக்கெட் ரசிகரும் ஏற்கவில்லை. மாறாக அவர்களின் திறமைக்கு சல்யூட் அடித்தனர்.


ஒரு புறம் இப்படி வருண பகவான் தயவில் பைனலில் நுழைந்தது இங்கிலாந்து. மறுபுறம் நியூசிலாந்தை அடித்து துவைத்துவிட்டு வந்தது பாகிஸ்தான். அந்த பாகிஸ்தான் அணியில் இளைஞர்கள் அதிகமாக இருந்தார்கள். துடிப்போடு விளையாடினார்கள். அதிலும் இன்சமாம் பட்டையை கிளப்பிய உலகக்கோப்பை அது. மேலும் அக்ரம் என்றொரு அசுர பலமான பவுலிங் வேறு. பாகிஸ்தானுக்குத்தான் கோப்பை என்று எழுதி வைத்ததை போல நடந்து விட்டது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் என் மனதில் ஹீரோக்களாக இடம்பிடித்தார்கள் (பெரும்பாலான வீரர்கள் ஹிந்தி நடிகர்கள் போல அழகாகவே இருந்தார்கள்). அந்த கோப்பையின் அழகை பார்த்ததில் இருந்து என்னுள் ஒரு ஏக்கம் உருவானது. இந்தியா அணிக்கும் இந்த கோப்பை கிடைக்குமா என்று. இந்த தொடரில் யாரும் கவனிக்காத இந்திய அணியில் ஒரு சிறுவன் அதிரடியாக ஆடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தான். அவன் பெயர் சச்சின் டெண்டுல்கர்.


1992 உலகக்கோப்பை தொடரை விடாமல் முழுவதும் பார்த்ததன் விளைவாக என் அண்ணன் 9ஆம் வகுப்பில் கோட்டடித்தார். எங்கள் வீட்டில் கிரிக்கெட்டுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின் வெகு காலத்துக்கு கிரிக்கெட் ஆட்டங்களை பார்க்க முடியவில்லை. எப்போதாவது ஒருமுறைதான் திருட்டுத்தனமாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி பார்த்த முக்கியமான ஒரு தொடர். தொண்ணூறுகளில் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு தொடர் அது.

ஹீரோ கோப்பையும், 1996 உலகக்கோப்பையும் அடுத்த பதிவில்....


 உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 

18 comments:

Unknown said...

உங்கள் கிரிக்கட் அறிவு வியக்க வைக்கிறது பாலா...
தொடர்ந்து எழுதுங்கள் இந்த தொடரை...
பல தெரியாத விடயங்கள் தெரிய வருகிறன!!
அந்த ஜோண்டி ரோட்ஸின் ரன் அவுட்...மறக்க முடியாதது!!

Unknown said...

உண்மைதான் நண்பா ஜாண்டி ரோட்சின் கேட்ச் எல்லாம் மறக்கமுடியுமா? பழைய மேட்சுகளை இப்பொழுது போட்டாலும் பார்க்க சூப்பராக இருக்கும், நல்ல தொடக்கம் கண்டினியூ பண்ணுங்க பாலா

Bala said...

@மைந்தன் சிவா

உண்மைதான் நண்பரே அந்த ரன் அவுட் அப்போது மிகப்பெரிய முறையில் பேசப்பட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Bala said...

@இரவு வானம்

முடிந்தவரை சுவாரசியமாக எழுத முயற்சி செய்கிறேன். நன்றி நண்பரே...

"ராஜா" said...

Kalakkal. Who can forget jhonthy rhode's runout. Nan cricket parkka arambiththathu 1992 ulakakoppaiyilthan athan piraku paththu varudangal sappattai vida crickethan periya visayam enakku. Pakaiya gnabakangalai thatti eluppi vittathu ungal pathivu.

சக்தி கல்வி மையம் said...

புதுமையான , பல தெரியாத தகவல்களை அருமையான கட்டுரையாக்கி தந்தமைக்கு நன்றிகள்..

இராஜராஜேஸ்வரி said...

கிரிக்கெட் பற்றிய நிறைய தகவல்கள் அறியத்தந்ததற்குப் பாராட்டுக்கள்.

பாலா said...

@"ராஜா"

கருத்துக்கு நன்றி தல

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி நண்பரே...

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

மிக்க நன்றிங்க

Anonymous said...

ஐ.பி.எல். மூலம் கிரிக்கெட் தன் புகழை இழந்து விடும் என்று தோன்றுகிறது..திகட்ட திகட்ட கிரிக்கெட். எல்லை மீறுகிறது.

பாலா said...

@! சிவகுமார் ! ஆமாம் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகிவிடும். இப்போது அந்த நிலை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டிருக்கிறது. நன்றி நண்பரே...

arasan said...

அசத்தலா எழுதி இருக்கீங்க நண்பரே ,.,...
உங்கள் நடை நல்லா இருக்கு ...
தொடருங்க ,.,.\
நாங்களும் தெரிஞ்சிக்கிறோம் ...

r.v.saravanan said...

கிரிக்கெட் பற்றிய தகவல்கள் அருமை
பாலா தொடர்ந்து எழுதுங்கள்

பாலா said...

@அரசன்

நன்றி நண்பரே. தொடர்ந்து எழுதுகிறேன்

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே...

Cricket Lover said...

indha article english la translate panni konjam en varalaaraiyum setthu english la ezhudi pottenga. Cricketer Aakash chopra nalla irukkunu paaratinaarunga. Andha perumai ungalaiye serum.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_14.html?showComment=1400071933383#c3693130298869983656

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Related Posts Plugin for WordPress, Blogger...