விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

September 12, 2011

பாலா வழங்கும் விருதுகள்....

நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? என்று திட்டுவது கேட்கிறது. நம்ம ஞாநி பூச்செண்டு, குட்டு, சொட்டு என்று கொடுப்பாரே அது போல. கடந்த சில தினங்கள் நான் பார்த்த நாட்டு நடப்பு விஷயங்களை வைத்து எனக்கு பிடித்தவர்களுக்கு இந்த விருதுகளை கொடுக்கிறேன். இதில் ஆட்சேபம் இருந்தால் சரியான நபர்களை நீங்களே பரிந்துரை செய்யலாம். 


சிறந்த அமைதியாளர் விருது
தமிழக எதிர்கட்சி தலைவர் கேப்டன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  புயலே அடித்தாலும் நான் அமைதி மட்டுமே காப்பேன் என்பதில் உறுதியாக இருப்பதால் இந்த விருது வழங்கப்படுகிறது 

சிறந்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் விருது
இவரைத்தவிர இந்த விருதை பெற இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும். அவர்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கே அல்வா கொடுத்து வருவதால் இந்த விருது அளிக்கப்படுகிறது 

 
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது
இன்னுமா நம்மை இந்த ஊர் நம்புது என்று எந்த கவலையுமே இல்லாமல் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் சு.சாமி அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதுவரை இதே விருதை இவர் நூறு தடவைக்கும் மேல் பெற்றிருப்பதால், இவருக்கு கூடிய விரைவில் வாழ்நாள் நகைச்சுவையாளர் விருது பெரும் வாய்ப்பு மிக அதிகம். 

சிறந்த குணசித்திர நடிகர் விருது
இந்த விருது அய்யப்பன் மற்றும் சக்ஸ்சேனா ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. நீதிபதியே கண்கலங்கும்படியான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. கிளைமாக்ஸில் மயங்கி விழும் காட்சியில் தத்ரூபமாக நடித்ததற்கு நடுவர் குழுவே எழுந்து கை தட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
சிறந்த வர்ணனையாளர் விருது
ஒவ்வொரு போட்டி முடிந்ததும், தாங்கள் எப்படி தோற்றோம் என்பதை விலாவாரியாக விவரிக்கும் கேப்டன் கூல் தோனிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் வெவ்வேறு வர்ணனைகளை பயன்படுத்துவது பாராட்டுக்குரியது. 


சிறந்த ஜேம்ஸ்பாண்ட் விருது 
உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜேம்ஸ்பாண்ட் படங்களை விட அதிகமாக குண்டு வெடித்த பிறகும், ஜேம்ஸ்பாண்ட் மாதிரி மிக அசால்டாக புன்னகையை வெளிப்படுத்துவதால் இந்த விருது.

சிறந்த துப்பாக்கி சுடும் விருது 
தமிழக காவல் துறைக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 

சிறந்த தலைமறைவாளர் விருது
வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளில் இருந்து இன்று வரை தான் எங்கிருக்கிறேன் என்று யாருக்கும் தெரியாமல் பாதுகாத்ததற்கு இந்த விருது வழங்கப்படுகிறது 

சிறந்த கதாசிரியர் விருது 
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பழைய கதையை, கலைஞர், கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்ட புதிய கதாப்பாத்திரங்களோடு, அம்மா மனம் குளிரும் வண்ணம் ரீமேக் செய்ததற்காக இந்த விருது கொடுக்கப்படுகிறது 

சிறந்த பத்த வச்சுட்டியே பரட்ட விருது 
இது முன்னாள் முதல்வர் கலைஞருக்கும், ஜான் பாண்டியன் அவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. காரணம் சொல்ல தேவை இல்லை.  

சிறந்த விசுவாசி விருது
இதற்கு போட்டியே இல்லாமல் அன் அப்போஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாரத பிரதமர் மன்மோஹன் சிங் 


சிறந்த எட்டப்பன் விருது
உள்ளே இருந்தபடி வரிசையாக பெயர்களை சொல்லி கிலி ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ராசாவுக்கு இந்த விருது ஏக மனதாக கொடுக்கப்படுகிறது. 

ஜெலூசில் வழங்கும் வயிற்றெரிச்சலுக்கான சிறப்பு விருது
இளையதளபதி ரசிகர்களுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. (அவர்களைப் பொறுத்தவரை) மொக்கை படமான மங்காத்தாவுக்கே இப்படி வயிறெரிந்து, பேதி ஆகும் நிலைக்கு வந்ததால் இந்த விருது .... 

புரட்சிக்கான சிறப்பு விருது
வினவு தோழர்களுக்கு வழங்கப்படுகிறது. நாட்டில் என்ன நடந்தாலும் அதில் (உயர்)சாதி பெயிண்ட் அடித்து, அதை ஏமாளியான பிற்படுத்தப்பட்ட மக்களிடம் விற்று, அவர்களை வெறியேற்றி அந்த நெருப்பில் குளிர்காய்ந்து கொண்டே புரட்சி செய்வதாக இத்தனை நாள் பொழப்பை ஒட்டி கொண்டிருப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க... 


முழுவதும் படிக்க >>

September 9, 2011

என் கிரிக்கெட் வீரர்கள் - 1


மறுபடியும் வேதாளம் கிரிக்கெட் மரத்தில் ஏறிவிடுகிறது. இதுவும் நல்லதுக்குத்தான். அப்புறம் நான் பாட்டுக்கு, பார்ப்பனியம், கம்யூனிசம் என்று வேறு மரத்தில் ஏற தொடங்கி விடுகிறேன். அதற்கு கிரிக்கெட் எவ்வளவோ தேவலாம். கிரிக்கெட் வரலாறு என்ற தொடர் எழுதிய பிறகுதான், பதிவுலகில் நிறைய பேருக்கு இந்த தளம் பரிச்சயம் ஆனது. அதே போல சமீபத்தில் ஒரு நண்பர், அதிக ஹிட் வாங்க வேண்டுமானால் விஜய் அவர்களை கலாய்த்து பதிவிடலாம் என்று கூறி இருந்தார். அந்த நோக்கத்தில் பதிவிடா விட்டாலும், என் முந்தைய பதிவான மங்காத்தா சம்பந்தமான பதிவுக்குத்தான் அதிக ஹிட்ஸ். அதே போல இதுவரை எனக்கு கமெண்ட்ஸ் 60ஐ தாண்டியதில்லை. இந்த பதிவிற்கு மட்டும் 98 கமெண்ட்ஸ். செஞ்சுரி ஜஸ்ட் மிஸ். கிரிக்கெட் தொடரை முடித்த பிறகு, கிரிக்கெட் பற்றி கொஞ்ச நாள் எழுதாமல் இருக்கலாம் என்றாலும், சில நண்பர்கள், இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடி வருவதை பற்றி கருத்து கேட்கிறார்கள். அவர்களுக்கு கவுண்டமணி பாணியில் சொல்வதானால் , "ஏம்பா நொந்து போயிருக்கிற நேரம் பார்த்து வந்து வம்பு பண்ற?" என்பதுதான் என் பதில். இப்போதைக்கு இந்த டூரை சீக்கிரம் முடித்து விட்டு திரும்பி வந்தாலே போதும். 


கிரிக்கெட் தொடரின் இறுதியில் சொன்னது மாதிரி, ஒவ்வொரு அணியிலும் பல வீரர்கள் என்னை கவர்ந்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அத்தொடரில் கூறி இருந்தால் இன்னும் நீளமாகி இருக்கும். ஆகவே அவர்களைப்பற்றி இந்த மினி தொடரில் கூறுகிறேன். கண்டிப்பாக இது மினி தொடர்தான். 

ஆஸ்திரேலியா

நான் கிரிக்கெட் பார்க்க தொடங்கியதில் இருந்து கொஞ்சம் கூட கம்பீரத்தை இழக்காத ஒரு அணி. தனது தேசிய விளையாட்டாக இருப்பதாலோ என்னவோ, மிக ஆக்ரோஷமாக ஆடி வருகிறார்கள். பொதுவாக ஆஸ்திரேலியர்களை எல்லோருக்கும் பிடிக்காது. காரணம் அவர்களோடு மோதினால் தோல்வி வாய்ப்பு அதிகம் என்பதால். எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் அதையும் மீறி, ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் என்னை கவர்ந்திருக்கின்றனர். 

டீன் ஜோன்ஸ்


மிகவும் ஸ்மார்ட் ஆன ஒரு வீரர். உயரமாக, நல்ல கட்டுடலுடன், ஆங்கில பட நடிகர் மாதிரியே இருப்பார். ஆஸ்திரேயர்களுக்கே உரிய அத்தனை தெனாவட்டும், இவருக்கு உண்டு. இங்கிலாந்தின் கோலிங்க்வுட் மாதிரி இவரையும் டிபெண்டபுள் (Dependable) என்று சொல்லலாம். இவர் களத்தில் நின்றால் வெற்றியை பற்றி கவலைப்படவேண்டியதில்லை. இவரை மிக குறைந்த போட்டிகளிலேயே பார்த்திருக்கிறேன். ஒரு போட்டியில் இவரும் டேவிட் பூனும் சேர்ந்து இந்திய அணியை புரட்டி எடுத்ததை மறக்கவே மாட்டேன். அது 92இல் நடந்த ஒரு தொடர். இவருக்குள்ள ஒரு குணம் என்னவென்றால், நிதானமாகவும் ஆடுவார், அதிரடியாகவும் ஆடுவார். அப்படி ஆடும் வீரர்களை வீழ்த்துவது மிகக்கடினம். 
 
கிளென் மெக்ராத்


ஆஸ்திரேலியா என்றாலே நினைவுக்கு வருபவர்களில் இவரும் ஒருவர். ஆஸ்திரேலியர்களை பிடிக்காவிட்டாலும், இவரை பிடிக்காதவர்கள் மிக கம்மி. ஒரு சராசரி பவுலராக இருந்ததில் இருந்து, இவரை பார்த்து வருகிறேன். தொண்ணூறுகளின் இறுதியில் புகழ்பெற தொடங்கிய இவர், 2000 ஆண்டுக்கு பிறகு, விஸ்வரூபம் எடுத்தார். இவரைப்பற்றி ஒரு சுவாரசியமான செய்தி உண்டு. ஆஸ்திரேலியாவுக்காக அதிக போட்டியில் ஆடி உள்ள இவர், முக்கால் வாசி போட்டிகளில் பேட்டிங் செய்ய களமிறங்கியதே கிடையாது. பேட்ஸ்மேன்களே பார்த்துக்கொள்ளும்போது, இவருக்கென்ன வேலை? 2003இல் இவர் எடுத்தது வரும் 19 ரன்களே.  இவரைப்பற்றி குறை என்றால், ஆஸ்திரேலியாவின் மோசமான பீல்டர்களில் இவரும் ஒருவர். இவரது காதல் மனைவி, 2008இல் கேன்சர் நோயால் இவரை விட்டு பிரிந்தார். 

ஷேன் வார்னே


கிரிக்கெட் என்றாலே ஒரு சிலபேர் நினைவுக்கு வருவார்கள். அப்படிப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். கடந்த பதினைந்து வருடங்களில் பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். இவர் பந்துவீசும்போது பந்து மெதுவாக காற்றில் மிதந்து வரும். இதை தப்பு கணக்கு போட்டு ஆவலோடு இறங்கி வந்து விளாச நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். பந்து தரையில் பட்டவுடன், அசுர வேகத்தில் திரும்பும். எந்த திசையில் திரும்பும் என்பது ஷேன் வார்னுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர், எதிரி முகாமில் இருந்தாலும் வெகுவாக ரசிக்கப்பட்டவர். 

மைக்கேல் பெவன் 


தொண்ணூறுகளில், ஆஸ்திரேலிய டெயில் எண்டர்கள் நிம்மதியாக பெவிலியனில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால், களத்தில் பெவன் நிற்கிறார் என்று அர்த்தம். அதற்கு மேல் விக்கெட் விழவே விழாது. இவர் ஆஸ்திரேலியாவின் டிராவிட். ஓட்டு மொத்த அணியும் வீழ்ந்து விட்டாலும், ஒற்றை ஆளாக நின்று பல முறை அணியை மீட்டிருக்கிறார். அதிலும், மிக வேகமாக நகர்ந்து ஆடுவதால், இவரை அவுட் செய்வது கடினமாக இருக்கும். எந்த நேரத்திலும் அவசரப்படவே மாட்டார். பதறாத காரியம் சிதறாது என்பதற்கு சிறந்த உதாரணம் இவர்தான். பவுலிங்கிலும் கொஞ்ச காலம் அசத்தினார். 

மார்க் வாக் 


எனக்கு தெரிந்து கிரிக்கெட்டின் மிக அழகான வீரர். அண்ணன் ஸ்டீவ் வாக் சாயலில் இருந்தாலும், அவரை விட மிக ஸ்மார்ட். தொண்ணூறுகளில் அதிரடி ஒப்பனர். அலட்டாமல் ஆடுவார். மிக கஷ்டப்பட்டு, எந்த ஷாட்டையும் அடிக்க மாட்டார். ஒரு காலத்தில் சச்சினுக்கு இணையாக செஞ்சுரிகளை குவித்து வந்தவர். பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டே இவர் பந்து வீசுவது மிக அழகாக இருக்கும். ஹெய்டன் வருவதற்கு முன், ஸ்லிப் பொசிசனில், டெய்லருக்கு அருகில் இவர்தான் நிற்பார். இந்த நிலையில் மெக்ராத், வார்னே ஆகியோரின் பந்து வீச்சை கணித்து, பேட்டின் விளிம்பில் பட்டு, ஜெட் வேகத்தில் வரும் பந்தை லபக்குவதில் வல்லவர். பல அபார கேட்ச்களுக்கு சொந்தக்காரர். இதற்காக, ஒரு சுவற்றுக்கு அருகில் 2 மீட்டர் தூரத்தில் நின்று கொண்டு, டென்னிஸ் பந்துகளை எறிந்து கேட்ச் பிடித்து பயிற்சி செய்வாராம்.  

கில்கிறிஸ்ட்


என்னை பொறுத்தவரை இவர் கிரிக்கெட்டின் ஜாக்கி சான். இவர் என்ன செய்தாலும் அது அழகாக இருக்கும். ரசிக்கக்கூடியதாக இருக்கும். கிரிக்கெட்டின் துறுதுறு வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஈவு இரக்கமற்றவர் என்று அம்பயர் ஸ்டீவ் பக்னர் கூறுகிறார். இங்கிலாந்து உடனான ஒரு டி20 போட்டியில், பேட்டிங் பிடிக்கும்போது, மைக்கில் பேசியபடியே ஆடி வந்தார். இரண்டு சிக்சர் அடித்ததும் வர்ணனையாளர், "மூன்றாவது சிக்சர் வேண்டும்" என்று சொன்னார். அடுத்த பந்தில் சிக்சர் அடித்து விட்டு, "கேட்டது கிடைத்ததா?" என்று கில்கிறிஸ்ட் கேட்டார். பாவம் பந்து வீச்சாளர் ஆண்டர்சன்.  கிரிக்கெட்டை மிக ரசிக்கக்கூடியதாக ஆக்கிய வீரர்களுள் இவரும் ஒருவர். இவர் இந்திய அணியுடன் ஆடும்போது, ஒவ்வொரு பந்தும் அடிவயிற்றில் பீதியை கிளப்பும். அதே போல உலகின் மிக சிறந்த விக்கெட் கீப்பர்களுள் ஒருவர். பல அபார கேட்ச்களை பிடித்தவர். இவரும், மெக்ராத்தும் சிறந்த பாட்னர்கள் போல செயல் படுவார்கள். முதுகுக்கு பின்னால் சென்ற பந்தை கங்குலி, சுழன்று அடிக்க, அதை பறந்து கேட்ச் பிடித்ததை என்னால் மறக்கவே முடியாது.  

ஜிம்பாப்வே 
கடந்த பத்தாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் ஒரு அணி. உள்நாட்டில் சில பிரச்சனைகள், அரசின் நிறவெறி கொள்கைகள், என்று கிரிக்கெட் அணியை சுத்தமாக உலுக்கி எடுத்து, அதனால் பல வீரர்கள் ரிட்டையர் ஆகி விட, மிக மட்டமான அணியாக மாறிவிட்டது ஜிம்பாப்வே. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள். ஆனால் 90களில் ஓரளவுக்கு விளையாடக்கூடிய அணியாகவே ஜிம்பாப்வே விளங்கியது. இந்த அணியிலும் சில வீரர்கள் என்னை கவர்ந்திருக்கிறார்கள். 

ஆண்டி பிளவர்


இவரை பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், இவர் மட்டும் வேறு அணியில் ஆடி இருந்தால் இந்நேரம், உலகப்புகழ் பெற்ற பேட்ஸ்மேனாக விளங்கி இருப்பார். ஜிம்பாப்வேயின் கிரிக்கெட் வரலாற்றை பற்றி எழுதினால், அதில் பாதிப்பக்கத்தை இவரைக்கொண்டுதான் நிரப்ப வேண்டும். உலகின் பெரிய பவுலர்களையே ஒரு கை பார்த்தவர். தொண்ணூறுகளில் பல போட்டிகளில் ஜிம்பாப்வே வெற்றி பெற காரணமாக இருந்தவர். இவரை அவுட் ஆக்கி விட்டால் ஆட்டம் முடிந்தது என்ற நிலைமையில், எப்போதுமே மிகுந்த பிரஸ்ஸரோடு ஆடியவர். அதே போல காயம் ஆகாமல் அதிக போட்டிகளில் ஆடுவது எப்படி என்ற வித்தையை இவரிடம் கற்றுக்கொள்ளலாம். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் ஆடும்போது, அவர்களுக்கே ஆட்டம் காட்டுவார். மொத்த அணியின் ஸ்கோர் 150 ஆக இருக்கும். அதில் ஆண்டி பிளவர் செஞ்சுரி அடித்திருப்பார். தற்போது இங்கிலாந்தின் பயிற்ச்சியாளராக இருக்கிறார். 
 
கீத் ஸ்ட்ரீக் 


இவரைப்பற்றி நினைக்கும்போதெல்லாம், 1996 உலகக்கோப்பையில், சச்சினின் ஆடும்போது, இரண்டு ஸ்டம்புகள் எகிறும் நிகழ்ச்சியே ஞாபகம் வருகிறது. மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவர். ஆனால் சரியான ஜோடி கிடைக்காததால், ஜொலிக்க முடியவில்லை. ஜிம்பாப்வேயின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு வேகப்பந்து வீச்சாளர். அவ்வப்போது பேட்டிங்கிலும் அசத்துவார். 

அலிஸ்டர் கேம்பல்


ஜிம்பாப்வே அணியில் ஆடிய அதிரடி வீரர்களில் இவரும் ஒருவர். அரசியல் புயலில் காணாமல் போனவர். இவரது தலைமையில் ஜிம்பாப்வே அணி பல வெற்றிகளை பெற்றது. ஜிம்பாப்வே அணிக்கு பல நிலைகளில் களமிறங்கி ஆடியவர். ஜிம்பாப்வேயின் சிறந்த பீல்டர்களில் இவரும் ஒருவர். 

தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து வீரர்கள்... அடுத்த பதிவில்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.....
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..... 

முழுவதும் படிக்க >>

September 7, 2011

மற்றவர்களை இம்ப்ரஸ் பண்ணனுமா?


"என் வழி தனி வழி, எனக்கு எதைப்பற்றியும் கவலை கிடையாது." என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது, "என் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாரையும் இம்ப்ரஸ் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. நான் இப்படித்தான். பிடித்தால் பேசு, இல்லாவிட்டால் ஓடிப்போ." என்று நிறையபேர் சொல்வார்கள். இப்படி இவர்கள் சொல்லிவிட்டாலும், எல்லா மனிதனின் உள் மனதிலும் அடுத்தவர்களை எப்படியாவது இம்ப்ரஸ் செய்து விட வேண்டும் என்ற ஒரு ஆவல் உண்டு என்பதே உண்மை. அது மனித இனத்துக்கே உரிய ஒரு குணம். தனது செயல்களுக்கு குறைந்த பட்சம் ஒரு பாராட்டாவது கிடைக்கவேண்டும் என்று எல்லோருமே விரும்புவர். அதன் அடிப்படை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்ற எண்ணம்தான். 


கீழே நான் கேட்டிருக்கும் சில கேள்விகளை உங்களை பார்த்து நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். 

  1. நிறைய நண்பர்கள் வேண்டும் என்று நினைத்ததுண்டா?
  2. நண்பர்கள் உங்களிடம் எல்லா பெர்சனல் விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்களா?
  3. ஒரு பொது இடத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கவேண்டும் என்று நினைத்ததுண்டா?
  4. உங்களுடைய வருகை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டா?
  5. எல்லோரும் உங்களை ஜெண்டில்மேன் அல்லது ஜெண்டில்வுமன் என்று சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 
  6. திருமணம் அல்லது ஏதாவது பொது நிகழ்ச்சியில், ஏதாவது ஒரு பெண்ணாவது/பையனாவது நம்மை திரும்பி பார்க்கவேண்டும் என்று நினைத்ததுண்டா? 
  7. மொத்தத்தில் எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 

இதற்கு பெரும்பாலான பதில்கள் ஆம் என்று இருந்தால் மட்டும் மேலும் தொடரலாம். 

பெரும்பாலானவர்களுக்கு மேலே நான் கேட்ட கேள்விகளுக்கு ஆம் என்றே சொல்ல தோன்றும். எல்லா மனிதர்களுமே அடுத்தவர்களை ஏதாவது ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்து விடவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கென வெகுவாக மெனக்கெடுகிறார்கள். தங்கள் உடை விஷயத்தில், பேச்சு, பாவனை ஆகியவற்றில் வலுக்கட்டாயமாக ஒரு நாகரிக தோரணையை பூசுகிறார்கள். நட்பு வட்டாரத்தில் ஒரு சென்டர் ஆப் அட்ராக்சன் அதாவது எல்லோருடைய கவனமும் நாம் மீதே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கவுதம் மேனன் ஸ்டைலில் சொன்னால், எங்கே போனாலும் அந்த இடத்தை ஆளனும் என்று நினைக்கிறார்கள். "அப்படியெல்லாம் கிடையாதப்பா, அடுத்தவங்களை இம்ப்ரஸ் பண்ணி நான் என்ன பண்ண போறேன்?" என்று சொல்பவர்கள் ஒன்று பொய் சொல்கிறார்கள் அல்லது தாழ்வு மனப்பான்மையில், பேசுகிறார்கள் என்று அர்த்தம். 


சரி இம்ப்ரஸ் பண்ணுவதற்கு ஆசை இருப்பது ஓகே. ஆனால் எப்படி செய்வது? இந்த குழப்பம் பலருக்கு உண்டு. தான் சரியாக செய்வதாக நினைத்துக்கொண்டே சொதப்பி, பல்பு வாங்குபவர்கள் உண்டு. கீழே நான் சொல்லி இருக்கும் சில வழிமுறைகள், நான் சொந்தமாக யோசித்தது கிடையாது. சில புத்தகங்களில் படித்தவையே. ஆனால் பெரும்பாலானவையை நானே பின்பற்றி இருக்கிறேன். 

எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது... 


மிகப்பெரிய கடினமான காரியம். இன்னும் சொல்லப்போனால் நடக்காத காரியம். எல்லோருக்கும் நல்லவனாக இருக்கவே முடியாது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நல்லவனாக இருக்க முடியும். மனிதர்களிடம் ஒரு ஈகோ உண்டு. அதாவது தன்னை பற்றி பெருமையாக எண்ணிக்கொள்வது. உதாரணமாக இரண்டு வேறு துறைகளில் இருப்பவர்கள் சந்தித்துக்கொண்டார்களானால், தத்தமது துறைகளை பற்றியே பேசுவார்கள். அது நிறையோ குறையோ எதுவானாலும், தன்னைப்பற்றி, தன்னை சார்ந்தவை பற்றி பேசுவதையே விரும்புவார்கள். அதே போல, எதிரே இருப்பவர்களின் சொந்த புராணத்தை கேட்க விரும்ப மாட்டார்கள். ஆகவே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், பேசுவதை விட்டு விட்டு கேட்க தொடங்குவது. யாரை சந்தித்தாலும் அவரைப்பற்றி விசாரித்து பேச்சை தொடங்குங்கள். உங்க வேலை எப்படி போகிறது? என்பதில் தொடங்கி, அவர்கள் தொழிலுக்கே உரிய சில நடைமுறைகளில் சந்தேகம் கேட்பது போல கேளுங்கள். உடனே அவர்கள் மட மடவென பேச தொடங்குவார்கள். நீங்கள் அசராமல் கேட்டுக்கொண்டே இருங்கள். (கொஞ்சம் கஷ்டம்தான்). இடையில் குறுக்கிடக்கூடாது. அவர் முடிக்கும்வரை காத்திருங்கள். முடிவில் உங்களைப்பற்றி விசாரிப்பார். பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்பார். பிறகு எங்கு பார்த்தாலும் உங்களை நலம் விசாரிப்பார். உங்களை பற்றி எல்லோரிடமும் நல்ல விதமாக சொல்வார். மாறாக எடுத்த எடுப்பிலேயே உங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தால், மனிதர் கடுப்பாகி விடுவார். 

கவனம்: புதியவர்களோடு பேசும்போது, பெர்சனல் கேள்விகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடும். கேள்விகள் அசட்டுத்தனமாக இருப்பதையும் தவிர்த்து விட வேண்டும்.
 

விசாரிப்பதோடு நின்றுவிடாமல், அவர் சொல்வதை ஆர்வமாக கேட்கவேண்டும். நம் முக பாவனைகள் அவருக்கு மேலும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கவேண்டும். அவர் வருத்தப்பட்டு பேசும்போது நாம் சிரித்து விடக்கூடாது. கேள்விகள் அக்கறையோடு கேட்பதாக இருக்கவேண்டும். ஏதோ சிபிஐ அதிகாரி மாதிரி கேட்க கூடாது.  எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம், அவரது மன நிலை தெரியாமல் தொண தொண என்று கேட்டு கொண்டிருக்க கூடாது. கொஞ்சம் கடினமான வழிமுறைதான் ஆனால் மிகவும் பலன் தரக்கூடியது. 

நட்பை பலப்படுத்துவது.... 


ஒருவரோடு ஏற்கனவே ஒன்றிரண்டு முறை பேசி இருப்போம். திடீரென்று ஒருநாள் சந்திக்கும் நிலை வரலாம். அப்போது டக்கென்று அவரது பெயரை சொன்னால் மனிதர் உச்சி குளிர்ந்து போவார். இருப்பதிலேயே மிகவும் கடினமான விஷயம் அடுத்தவர் பெயரை ஞாபகம் வைத்திருப்பது. அதே போல மிக மகிழ்ச்சி தரும் விஷயம் ஒருவர் நமது பெயரை ஞாபகம் வைத்து சொல்வது. இதற்கு முதலில் ஒருவரின் பெயரை கேட்டவுடன் ஒருமுறை நாமும் உச்சரிக்க வேண்டும். பிறகு அதை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். வெகு நாட்களுக்கு பிறகு அவரை சந்திக்கும்போது பெயரை சொல்லி, முதல் சந்திப்பில் நடந்த சுவாரசியமான விஷயத்தையும் கூறினால், பிறகு அவர் வாழ்நாள் முழுக்க உங்களை மறக்கவே மாட்டார். 


நாம் கலகலப்பாக பேசாவிட்டாலும், அடுத்தவர்களின் கலகலப்பை ரசிக்கத்தெரிய வேண்டும். சும்மா உம்மென்று இருந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள். நம் உள் உணர்வுகளை நண்பர்களிடம் வெளிக்காட்டுவதில் தவறே இல்லை. ஆனால் அது மிக நெருங்கிய நண்பர்களோடு மட்டும் என்பதில் நினைவில் கொள்க. நம்மோடு நெருங்கி பேசுபவர்கள் எல்லாம் நெருங்கிய நண்பர் ஆகிவிட மாட்டார்கள். உதாரணமாக உங்கள் அலுவலகத்தில் பணி புரிபவர் உங்களோடு நன்கு பழகுவார். ஒரு நாள் மேனேஜரை உங்கள் முன்னாலேயே திட்டுகிறார் என்றால், நீங்கள் அதற்கு பதிலாக ஒரு புன்னகை புரிந்து விட்டால் போதுமானது, அதை விட்டு விட்டு, நீங்களும் உங்கள் பங்குக்கு ஏதாவது சொல்லப்போக, அது நேரே மேனேஜர் காதுக்கு போகும் அபாயம் உண்டு. அலுவலகத்தில் இந்த மாதிரி போட்டு வாங்கும் பார்த்திபன்கள் அதிகம். எனவே இந்த மாதிரி நேரத்தில் நழுவுகிற மீனாக இருப்பதால் உங்கள் பெயர் கெட்டு விடாது. மாறாக நல்ல பெயரே கிடைக்கும். 

இளைஞர்களே.... 

வாலிப வயதினர், எதிர் பாலினத்தை இம்ப்ரஸ் செய்வதே முழு நேர தொழிலாக கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான். நாம் இயல்பாக இருப்பதே நல்லது. அதுதான் சவுகர்யமும் கூட. அநியாயத்துக்கு சீன் போட வேண்டிய அவசியம் இல்லை. பெண்களுக்கு ஜோக் அடிக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும், ஆனால் அதை விட ஜெண்டில்மென்களை அதிகம் பிடிக்கும். உங்களுக்கு ஜோக் வரவில்லை என்றால். மெனக்கெட்டு முயற்சிக்காதீர்கள். அதற்காக நரசிம்மராவ் மாதிரி உம்மென்றும் இருக்காதீர்கள். மெல்லிய புன்னகையை முகத்தில் தவழ விடுங்கள். பேசும்போது எக்ஸ்பிரேஸ்ஸிவாக பேசுங்கள். முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் பேசாதீர்கள். நாம் சொல்லும் விஷயத்தின் கருத்தை நாம் முகத்தின் பாவனையிலேயே காட்டி விடலாம். அப்படி பேசினால், எல்லோரும் உங்கள் முகத்தை ரசிப்பதை தடுக்க முடியாது. 


அதே போல எந்த ஒரு இளைஞனும், கலகலப்பான பெண்ணை விரும்புவான். ஆனால் அதை விட அதிகமாக சாந்தமான பெண்ணை விரும்புவான். மேக்கப் போடும் பெண்ணை முதலில் கவனிப்பான். ஆனால் இயல்பாக இருப்பவர்கள் மீதே இம்ப்ரஸ் ஆகிறான். வளவள என்று பேசும் பெண்ணுடன் பேச எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் நிதானமாக பேசும் பெண்ணோடுதான் நட்பு பாராட்டுவார்கள். 

உங்கள் நண்பர்கள் உங்களோடு பெர்சனல் விஷயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் இயல்பாக இருப்பதே நல்லது. அதே போல இன்னொருவரின் பெர்சனல் விஷயத்தை நண்பரிடம் சொன்னால், அது உங்கள் மீது அவ நம்பிக்கையை உருவாக்கி விடும். நம்முடைய விஷயத்தையும் இப்படித்தான் யாரிடமாவது சொல்லிவிடுவானோ? என்று நினைப்பார்கள். 

மேலே சொன்னவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று. எப்போதும் திறந்த மனதுடன், இயல்பான புன்னகையோடு நாம் நடந்து கொண்டால், எல்லோருமே நமது நடவடிக்கைகளில் இம்ப்ரஸ் ஆவார்கள். நமக்கு நிறைய உண்மையான நண்பர்கள் கிடைப்பார்கள். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

September 5, 2011

வெட்டி அரட்டை - தூக்கு, மங்காத்தா, தளபதி





தூக்கு.... 

பொதுவாக பதிவுலகில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு டாபிக் மிக பரபரப்பாக எல்லோராலும் பேசப்படும். என்னைபோன்ற சில ஜீவராசிகள் மட்டும் அவற்றை எல்லாம் கொஞ்சநாள் பேசாமல் இருப்போம். காரணம் அதில் உள்ள உண்மையான செய்திகள் தெரியாமல் இருப்பதால். பிறகு கட்டங்கடைசியாக நாங்களும் அதைப்பற்றி எழுதி ஜோதியில் ஐக்கியம் ஆகி விடுவோம்.  


மேலோட்டமாக பார்த்தால் எல்லோரும் சொல்வது, "தூக்கு தண்டனை சரிதான். பின்னே அவனும் ஒரு உயிரை கொன்றவன்தானே? அவன் கொல்லும்போதும் அந்த உயிர் படாதபாடு பட்டிருக்குமே?". சரிதான். ஆனால் ஒரு கொலைக்கு தண்டனை இன்னொரு கொலை ஆகாது என்பது என் கருத்து. என்னை பொறுத்தவரை சாதல் என்பது ஒரு தண்டனையே அல்ல. வாழ்வதுதான் பெரிய தண்டனை (அப்ப போயி சாக வேண்டியதுதானே... என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது). நேற்று உத்தமர் தங்கபாலு அவர்களின் மெகா டிவியில் இந்த தூக்கு தண்டனை பற்றி சில பிரபலங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த பதில் மிக மனவருத்தம் அளிக்க கூடியதாக இருந்தது. அவர்கள் சொன்னதின் சாராம்சம் "சட்டத்தை மதிப்பது நாம் கடமை. அதிலும் கொலை செய்தவனை எப்படி மன்னிக்கலாம்?". அப்போது எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. 


சில வருடங்களுக்கு முன்னாள் நொய்டாவில், ஒரு வீட்டின் சாக்கடையில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்டவர்களின் எலும்புகள் அள்ளப்பட்டனவே? அதில் கூட இப்போதும் உள்ளே வெளியே தானே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்? அதிலும் குற்றம் அந்த வீட்டின் வேலைக்காரன் மீதுதானே நிரூபணம் ஆனது, முதலாளி இன்னும் மாட்டவில்லையே? ஏன் அவர் காங்கிரஸ்காரார் என்பதாலா?  


நில அபகரிப்பு... 


இந்த வார்த்தையை கேட்டாலே ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு அடிவயிற்றில் பீதி கிளம்புகிறது. இப்போதெல்லாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஆனானப்பட்ட முன்னாள் அமைச்சர்களே என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும்போது நமக்கெதற்கு வம்பு என்று நிறைய பேர் நினைக்கத்தொடங்கி விட்டார்கள். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. கைது செய்யப்படுபவர்கள் எல்லோரும் 'முன்னாள்' களாகவே இருப்பதால்,  "அதிமுககாரர்கள் எல்லாம் ஒழுங்கா?" என்று கேட்க தோன்றினாலும், அந்த 'முன்னாள்'கள் எல்லாம் தவறு செய்யாதவர்கள் இல்லையே? பொது நிகழ்வுகளை டிவியிலோ, பேப்பரிலோ படிக்கும்போது நமக்கு இந்த மாதிரி பல கருத்துக்கள் தோன்றுவது இயல்புதான். 


ஆனால் நமக்கு நெருக்கமாக சில நிகழ்வுகள் நடக்கும்போதுதான், அதற்குள் அடங்கி இருக்கும் உண்மைகள் தெரியவருகின்றன. நண்பன் ஒருவனின் உறவினர் சமீபகாலமாக ரியல் எஸ்டேட் தொழிலில் அசுர வளர்ச்சி கண்டவர். ஊரில் உள்ள பெரிய மனிதர்கள், போலீஸ் அதிகாரிகள் எல்லோருமே நெருங்கிய நண்பர்கள். ஒன்றே ஒன்று இவர் எந்த அரசியல் கட்சியையுமே சாராதவர். குறிப்பிட்ட தினத்தில் இவரது அலுவலகத்துக்கு வந்த சில ஆளும் கட்சியினர், வளர்ச்சி நிதியாக, 5 லட்சம் கேட்டிருக்கிறார்கள். இவர் தர மறுத்து, "15ஆயிரம் வேண்டுமானால் தருகிறேன்." என்று கூறி இருக்கிறார். அவர்கள் கோபத்துடன் வெளியேறி விட்டனர். அடுத்த ஒரு வாரத்தில், அந்த பகுதியின் காவல் துறை ஆய்வாளர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு, புதியவர் அந்த இடத்துக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். இரண்டாவது நாள் இவர் மீது நில அபகரிப்பு வழக்கு பாய்ந்திருக்கிறது. இப்போது இவர் மீது புகார் கொடுத்தவரே வாபஸ் பெறுகிறேன் என்று சொன்னாலும், விடுவதாயில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சரவணா ஸ்டோர்ஸ் ரெய்டின் பின்னாடியும் இந்த மாதிரி ஒரு காரணம் இருக்கலாம் என்று சந்தேகம் இருக்கிறது. 

இந்திய அணி.... 


"ஜெயித்தாலும் இந்தியா மாதிரி ஜெயிக்க முடியாது, தோற்றாலும் இந்தியா மாதிரி தோற்க முடியாது." என்று நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வோம். அது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது. தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளை தோற்று வொயிட் வாஷ் ஆகி விட்டார்கள். எங்கள் ஊரில் ஒருவனை எல்லோரும் சேர்ந்து வெளுத்தெடுத்தால் அதற்கு "சுத்தி விட்டு சுண்ணாம்பு அடிப்பது" என்று சொல்வார்கள். என்ன பொருத்தம் பாருங்கள். தொடர்ச்சியாக டி20யும் அம்பேல். ஒருநாள் போட்டியில் ஓரளவுக்கு தடுமாறி 274 ரன் எடுத்தாலும். இந்தியா இன்னும் கடைசி ஓவர்களில் மண்ணை கவ்வுவதை தொடரவே செய்தது. இந்த போட்டியில் எளிதில் 300ஐ எட்டி இருக்கலாம். இங்கிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தவுடன், "அப்பாடா, இதிலாவது ஜெயித்து விடலாம்." என்று நினைத்தேன். மழை வந்து மண்ணை அள்ளி போட்டது. ஒருவேளை இந்த போட்டியில் இந்தியா தோல்வி கூட அடைந்திருக்கலாம். ஏன்னா நம்ம பவுலிங் அப்படி. இனி இந்த தொடரில் தோற்றாலும், "முதல் போட்டி ஜெயிக்க வேண்டியது, அது ஜெயித்திருந்தா வீரர்கள் உற்சாகத்தோடு விளையாடி கோப்பையை வென்றிருப்பார்கள்." என்று சால்ஜாப்பு சொல்லிக்கொள்ளலாம். ஆமா, டிராவிட்டுக்கு ஏன் அவுட் கொடுத்தார்கள்?


சமீபத்தில் படித்த ஜோக் ஒன்று. 
தோனி : "நாங்கள் அன்னாஹசாரேவுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். லோக்பால் மசோதா நிறைவேறும் வரை எந்த போட்டியிலும் ஜெயிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்." 

தலயும், தருதலையும்.... 

முன்குறிப்பு: இளையதளபதி ரசிகர்கள் இந்த பகுதியை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். படித்து விட்டு தேவை இல்லாமல் காண்டு ஆகாதீர்கள். இது கடுமையான தனி நபர் தாக்குதல்களை உள்ளடக்கியது. 

பொதுவாக நான் தமிழ் படங்களுக்கு விமர்சனங்கள் எழுதுவதில்லை. மேலும் பதிவுலகில் எழுதப்படுவதில் பெரும்பாலானவை விமர்சனமே அல்ல என்பதே என் கருத்து. அவை ஸ்பாய்லர்கள் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். அதாவது படங்கள் பற்றிய சொந்த கருத்து மட்டுமே. இன்னொரு விஷயம், பதிவுலகமே மொக்கை என்று ஒதுக்கிய பல படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. பதிவுலகமே சூப்பர் என்று சொன்ன படங்கள் எனக்கு சுத்தமாக பிடித்ததில்லை. மேலும் பல பதிவர்கள் அப்படியே கதையை எழுதி விடுவதால் படங்களை பார்த்த பிறகே விமர்சனங்களை படிப்பதை வழக்கமாக்கி வருகிறேன். 


அஜீத் நடித்த மங்காத்தா படத்தை கிட்டத்தட்ட எல்லோருமே நன்றாக இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள். முதல் நாள் முதல் ஷோ பார்த்து விட்டு வெளியே வரும்போது, தல ஏமாற்றவில்லை என்று தோன்றியது. அதே போல இன்னும் ஒரு முறை பார்க்கவேண்டும் என்று தோன்றியது. கண்டிப்பாக சொல்வேன் அஜித்தின் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று. மற்றபடி சொலவதற்கு ஒன்றும் இல்லை. எல்லோருமே எழுதி விட்டார்கள். என்னைப்போன்ற ரசிகர்களுக்கு ஒரு பழக்கம். படம் பார்த்து விட்டு வந்தவுடன், பதிவுலகில் எப்படி விமர்சித்திருக்கிறார்கள் என்று தேடுவோம். பிறகு இளையதளபதி ரசிகர்கள் எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று தேடுவோம். ஆனால் கடந்த நான்கு நாட்களாக எதுவுமே கண்ணில் படவில்லை. "ஒரு வேளை படம் நன்றாக இருப்பதால் காண்டாகி விட்டார்களா?" என்று தோன்றியது. அல்லது "எழுதுவதற்கு காரணம் தேடி கொண்டிருக்கிறார்களா?" என்றும் தோன்றியது. 


அவர்கள் தளபதி ரசிகர்கள் அல்லவா? ஆகவே இரண்டாவதுதான் நடந்திருக்கிறது, அவர் பதிவுலகில் மிக பிரபலம். தன்னை எப்போதுமே தளபதி ரசிகனாக, முன்னிறுத்துபவர். இவருக்கு நமக்கும் அடிக்கடி உரசல்கள் வந்தாலும் அதை லாவகமாக தளபதி ஸ்டைலில் "சகா, இது வேறு அது வேறு!" என்று சொல்லி வந்தார். இந்த ஒரு விஷயத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், மற்றபடி அவரது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். இவரது நண்பர்கள், சாரி சகாக்கள் இவரை 'பதிவுலகின் இளையதளபதி' என்று கூறி இவருக்கு அடிக்கடி சூடேற்றி கொண்டே வேறு இருந்தனர். நான் கூட ஆச்சர்யபட்டேன். பிறகுதான் அவரை எதற்கு பதிவுலகின் இளைய தளபதி என்று கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். 


உள்ளே வன்மத்தை வைத்துக்கொண்டு, வெளியே நல்லவனாக சீன் போடுவதில் இவர் அப்படியே இளைய தளபதிக்கு நிகர். ஆகவே தான் நண்பர்கள் பிறரை எச்சரிக்கும் விதமாக இப்படி கூறி உள்ளனர். இது எனக்கு பிறகுதான் புரிந்தது. ஏற்கனவே டாக்குடரின் பல மாஸ் படங்களை பார்த்து இடிந்து போய் இருக்கும் இவருக்கு, மங்காத்தாவின் மாஸ் ஓபனிங், எங்கேயே எரிச்சலை கிளப்பி இருக்கிறது. ஆகவே நான்கு நாட்களாக ரூம் போட்டு யோசித்து, ஒரு கேடு கேட்ட பதிவை போட்டிருக்கிறார். அதிலும், "எங்கே எவனாவது மானங்கெட்ட கேள்வி ஏதாவது கேட்டு விடுவானோ?" என்று பயந்து கமெண்ட் போடுவதை தடை செய்து விட்டார். தலைவன் எப்படியோ அப்படித்தானே தொண்டனும் இருப்பான்? இப்போது சொல்கிறேன் நீங்க மெய்யாலுமே பதிவுலக இளையதளபதிதான். அதுக்கு உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு. 


அது அவரது பிளாக். அவர் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அதை கேட்க நீ யார் என்று கேட்கிறீர்களா? அப்படியானால் இது என் பிளாக். நானும் எழுதலாம்தானே? இதில் பெரிய காமெடி என்னவென்றால் அஜித்தின் ஹேர்ஸ்டைலை பற்றி கிண்டல் செய்திருக்கிறார். அதை பற்றி பேச இவருக்கு தகுதி இருக்கிறதா என்று இவரது பிரோபைல் போட்டோ பார்த்தால் உங்களுக்கே புரியும். சகா... உங்களுக்கு தண்டனையை உங்கள் தளபதியே தீபாவளி அன்று தருவார். அப்போது நீங்கள் எழுதிய இந்த பதிவை படித்துப்பார்த்துக்கொள்ளுங்கள். டாக்குடர் ரசிகர் என்று தெரிந்தும் உங்களிடம் பண்பை எதிர்பார்த்தது என் தவறு. அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். Gimme more!!!! தளபதி அவர்களே உங்களுக்கு எதிரிகள் வேறு எங்கும் இல்லை. உங்கள் அருகிலேயேதான் இருக்கிறார்கள். வாழ்க தமிழத்தின் அண்ணா ஹசாரே விஜய் அவர்கள். 


பின்குறிப்பு: நான்தான் மொதல்லேயே சொன்னேன்ல. படிக்காதீங்கன்னு. அப்புறம் படிச்சு காண்டு ஆனா நானா பொறுப்பு? இந்த ஒரு பகுதி என் ஆத்திரத்தின் வெளிப்பாடுதான். அப்பா தளபதி ரசிகர்களே, என்னையும் இப்படி எழுத வைத்து விட்டீர்களே?. நான் எழுதியே மோசமான பதிவுகளில் இதுவும் ஒன்று என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இந்த வார்த்தைகளை நான் திரும்ப பெறப்போவதில்லை. 
 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

August 30, 2011

நீங்க பேயை பார்த்திருக்கிறீர்களா?

முன் குறிப்பு: இது ஒரு காமெடி பதிவா? இல்லை சீரியஸ் பதிவா? என்று தெரியவில்லை. அவரவருக்கு ஏற்ற மாதிரி எடுத்துக்கொள்ளுங்கள். எது எப்படியோ ஒரு மரண மொக்கை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.... 


நீங்க பேயை பார்த்திருக்கிறீர்களா? இந்த கேள்விக்கு காமெடியாக பதில் சொல்வதாக இருந்தால், எஸ்‌வி சேகர் ஒரு நாடகத்தில் சொல்வது போல, "அதிலென்ன சந்தேகம் 25 வருஷமா குடும்பமே நடத்திக்கிட்டு இருக்கேன்." என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சீரியசாக இந்த கேள்வியை யாரிடமாவது கேட்டால், "நான் பார்த்ததில்லை அவர் பார்த்ததாக சொன்னார் என்று என் பாட்டி சொன்னதாக மாமா கூறினார்." என்று சுற்றி வளைத்து சொல்வார்கள். ஆக பெரும்பாலான மக்கள் பேயை பார்த்ததில்லை. அவர்கள் அனைவரும் சொல்லக்கேட்டவர்களே. அப்படி யார் சொன்னார் என்று தேடிக்கண்டுபிடித்து போய் பேயை பார்த்தவரிடமே கேட்டால் அவர், "மங்கலாக ஒரு உருவம் பேய் மாதிரியே இருந்தது." என்று தான் பார்த்த திகில் படங்களுக்கேற்ப கூறுவார். இவர் இவ்வாறு கூறிய விஷயமே ஒவ்வொரு காதாக தாவும்போது கை கால் முளைத்து ஒரு கேரக்டராகவே ஆகி விடுகிறது. 

சரி அதை எல்லாம் விடுங்க. நான் கேட்க வந்த விஷயம் அதுவல்ல. நாம் சிறு வயதில் இருந்தே நிறைய பேய் கதைகளை கேட்டு வளர்ந்திருக்கிறோம். நிறைய திகில் படங்களை பார்த்திருக்கிறோம். என்னதான் நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும். நம் அடி மனதில் பேய் குறித்த பயம் இருக்கிறது என்று நம்பவே செய்கிறோம். பெரிய சூரப்புலிகள் என்றாலும் இந்த விஷயத்தில் கொஞ்சம் நடுங்கித்தான் போகிறோம். இதை நான் காஞ்சனா படம் பார்க்கும்போது தெரிந்து கொண்டேன். ஆக நாம் எல்லோருக்குள்ளும் பேய் என்றால் இப்படித்தான் இருக்கும், அதற்கு இந்த மாதிரி குணாதிசயங்கள் உண்டு என்றெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம் அல்லவா? அப்படிபட்ட விஷயங்களில் எனக்கு சில சந்தேகங்கள் வந்து விட்டன. முடிந்தால் கொஞ்சம் தீர்த்து வையுங்கள். 


சந்தேகம் #1 
பேய்களுக்கு கால்கள் உண்டா கிடையாதா? கால்கள் உண்டு என்று வைத்துக்கொண்டால் அவை நடக்குமா ஒடுமா? பேய்கள் திடீரென்று தோன்றுகின்றன, மறைகின்றன, வேறொரு இடத்தில் தோன்றுகின்றன. அவற்றுக்கு கால்கள் உண்டு என்றால் மறைய வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை அதிக தூரம் செல்லவேண்டுமானால் மறைந்தும், தூரம் குறைவாக இருந்தால் நடந்தும் செல்லுமோ? இல்லை உண்மையிலேயே பேய்களுக்கு கால்கள் கிடையாதா? 

சந்தேகம் #2 
பேய்கள் நேர்மையானவையா? பொதுவாக பேய்கள் அடாவடித்தனம் செய்பவையாகவே இருக்கின்றன. மரியாதை இல்லாமல் பேசுவது, அல்லது கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று. இவ்வாறு அடாவடியாக நடக்கும் பேய்களின் நேர்மை நம்பக்கூடியதுதானா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், ஒருவரை பேய் பிடித்து ஆட்டும்போது, பேய் ஓட்டுபவர், "நீ கேட்பதை நான் கொடுத்து விட்டால் இவரை விட்டு போய் விடுவாயா?" என்று கேட்டால், அதுவும் தான் பங்குக்கு ஆடு கோழி சாராயம் என்று ஏதாவது கேட்டு விட்டு, சொன்னபடியே போய் விடுகிறதே? ஆடு கோழிக்கு ஆசைப்பட்டு அடிக்கடி வருவதில்லையே? பேய்கள் கொடுத்த வாக்குக்கு அவ்வளவு மரியாதை கொடுக்குமா? 


சந்தேகம் #3 
இது முந்தைய சந்தேகத்தின் தொடர்ச்சி. பேய்கள் ஆடு கோழி என்று கேட்கிறதே அவற்றை பேய்களால் சாப்பிட முடியுமா? அப்படி சாப்பிட முடியும் என்றால், செரிமானம், வயிற்று உபாதைகள் இன்ன பிற சமாச்சாரங்களும் உண்டா? அதே போல சாராயம் கேட்கும் பேய்களுக்கு சரக்கடித்தால் போதை வருமா? அப்படி அடித்து மட்டையானால் பேயின் நிலைமை என்ன? யாராவது பிடித்து அடைத்து விட மாட்டார்கள்? இல்லை சரக்கடித்தாலும் போதை ஏறாது என்றால், பின்னே எதற்கு சாராயம் கேட்கவேண்டும்? மேலும் சைவ பேய்கள் எதை சாப்பிடும்? அவற்றால் மனிதர்களுக்கு பிரச்சனை கிடையாதோ? (சைவ டைனோசர்கள் போல)... 

சந்தேகம் #4 
பேய்களுக்கு செட் பிராப்பர்ட்டிகள் எங்கிருந்து கிடைக்கின்றன? உதாரணமாக அவை அணிந்திருக்கும் உடைகள், வெள்ளை சேலை, மல்லிகைப்பூ, கொலுசு போன்றவை? கிராமத்து பேய்கள் மல்லிகைப்பூ வைத்திருப்பது போல நகரத்து பேய்கள் பெர்பியூம் போட்டிருக்குமா? சந்தேகம் #1இன் படி பேய்களுக்கு கால்கள் கிடையாது என்றால், அவற்றால் கொலுசு எப்படி அணிய முடியும்? ஆண் பேய்கள் பேண்ட் எப்படி அணிய முடியும்? கால்கள் உண்டு என்றால் வெள்ளி கொலுசுகள் வாங்க காசு எங்கிருந்து வந்தது. ஆட்டைய போட்ட காசா?

சந்தேகம் #5 
இப்போது ஒருவருக்கு உடலில் குறைபாடு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக அவரால் பார்க்க முடியாது என்றால், அவர் இறந்து போன பிறகும் அந்த பேய்க்கும் பார்வை இருக்காதா? காது கேட்காத, வாய் பேசாத பேய்களும் உண்டா? சினிமாவில் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டால் அவரது பேய் காயங்களுடன் வருவது போல காட்டுகிறார்களே அப்படியானால் பிறவியிலேயே குறைபாடு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்தானே? மேலும் மன நலம் குன்றிய அல்லது அரவாணியாக இருக்கும் ஒருவர் இறந்து விட்டால் அவரது ஆவியும் அப்படி இருக்கும்தானே (உபயம் : காஞ்சனா). மன நலம் குன்றிய பேயால் எப்படி நன்றாக சிந்தித்து பழிவாங்க முடியும்? 

சந்தேகம் #6 
பேய்களின் நேர்மையை பற்றி பேசினோம் அல்லவா? பேய்களின் நடத்தை குறித்தும் பேச வேண்டி இருக்கிறது. ஒருவர் சாதுவாக இருப்பாரானால் அவரது ஆவியும் அப்படியே இருக்குமா அல்லது ஆக்ரோஷமாக மாறி விடுமா? சாதுவானவருக்கே இப்படி என்றால், மிக மோசமான ரவுடியாக இருக்கும் ஒருவர் பேயாக மாறினால் இன்னும் முரடனாக அல்லவா மாறி விடுவார்? இப்படி இருக்க, சாதுவான தன்னை ஒரு ரவுடி கொலை செய்து விட்டதால் அவனை பழிவாங்க எண்ணுகிறது ஒரு சாதுவான பேய். அவனை எப்படி தன்னை கொன்றான் என்பதை நன்றாக ஞாபகம் வைத்து அதே மாதிரி அந்த ரவுடியையும் துரத்தி துரத்தி கொல்கிறது. ஆக அவனும் பேய் ஆகிறான். இப்போது இந்த ரவுடி பேய் அந்த சாதுவான பேயை துன்புறுத்தாது என்பது என்ன நிச்சயம்? அதற்கு அவன் சாகாமல் இருப்பதே மேல் அல்லவா? எதற்கு தேவை இல்லாமல் அவனை கொன்று ஆப்பை தானே தேடி செல்லவேண்டும்? 


சந்தேகம் #7 
 பேய்கள் கோழைகளா? எதற்கு தனியாக வரும் ஆட்களிடம் அதுவும் அப்பாவிகளிடம் வந்து வாலாட்ட வேண்டும்? உண்மையிலேயே அவற்றுக்கு சக்தி உண்டு என்றால், பொதுமக்கள் ஒன்றாக கூடும் இடத்துக்கு வந்து அல்லவா எல்லோரையும் மிரட்ட வேண்டும்? 

சந்தேகம் #8 
பேய்கள் ஒரே இடத்தில் தங்கி இருக்குமா அல்லது ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு செல்லுமா? மேலும் வெளியூரில் இருந்து மொழி தெரியாத ஒருவர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவரை இந்த பேய் மிரட்டுவதால் என்ன பயன்? மனிதனாக இருக்கும்போதே மொழி தெரியாதவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது பத்தாதா? அவன் தன் தாய் மொழியில் திட்டினால் பேய்க்கு தெரியவா போகிறது? மேலும் பேய்கள் கார் ஒட்டுமா? சாகும் வரை கார் ஓட்ட தெரியாத ஒருவர் இறந்தவுடன் கார் ஓட்டுவது போல காட்டுகிறார்களே இது சாத்தியமா? பேய்களுக்கு நீச்சல் தெரியுமா? 


சந்தேகம் #9 
பேய்கள் பகல் நேரத்தில் எங்கே இருக்கும்? அவை சரியாக பன்னிரண்டு மணிக்கு வருவதன் நோக்கம் என்ன? ஒரு மணிக்கு வந்தால் யாரும் பயப்பட மாட்டார்களா? மனிதர்களைப்போல, ஆடு, மாடு, கோழி, நாய் ஆகிய உயிரனங்களும் பேயாக அலையுமா? அப்படியானால் சிங்கம் புலி ஆகிய பேய்கள் ஊருக்குள் வந்தால் நம்ம நிலைமை என்ன ஆகும்? 

சந்தேகம் #10 
ஆச்சாரமான பேய்கள், தாழ்த்தப்பட்ட மக்களை கொல்லுமா? அப்படி கொல்ல வேண்டுமானால் தொட வேண்டும். அது தீட்டாகாதா? அதே போல பகுத்தறிவு பேய்கள் சாமிகளை கண்டால் பயப்படுமா? அவை பார்ப்பனர்களை கொல்லாது என்பது என்ன நிச்சயம்? புரட்சிக்கார பேய்களும் உண்டா? அவை பேய்களுக்குள்ளேயே யூனியன் அமைத்து எட்டுமணிநேர பேயாட்டம், உண்ணாவிரதம், கொல்லாவிரதம் என்று ஈடுபடுமா? கம்யூனிஸ்ட் பேய்கள் சிகப்பாக இருக்குமா?
 
என்ன எல்லோரும் முடிய பிச்சுக்கிட்டீங்களா? நானும் ரொம்ப நாளா இப்படித்தான் இருக்கேன். இதுக்கு யாராவது ஒரு வழி சொல்லுங்க பிளீஸ்.... 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...