விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 27, 2012

வெட்டி அரட்டை, அறிவிப்பும், பெருமிதமும்....


ஒரு அறிவிப்பும், பெருமிதமும்.... 

தமிழ்மணம் திரட்டியில் இருந்து, மார்ச் 5 முதல் 12 வரையிலான வாரத்தில், நட்சத்திர பதிவராக இருந்து பதிவெழுதுமாறு கேட்டிருந்தார்கள். மிகப்பெரிய, பிரபலமான பதிவர்கள் நட்சத்திரமாக ஜொலித்த இடத்துக்கு என்னை அழைத்தபோது, உடனே சம்மதம் சொல்லி விட்டேன். அப்புறம்தான் உரைத்தது. அந்த வாரத்தில் குறைந்தது தினம் ஒரு பதிவாவது எழுதவேண்டுமே? இங்கே வாரம் ஒரு பதிவு எழுதுவதே பெரிய வேலையாக இருக்கிறதே? என்று. ஆகவே என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். என்ன இருந்தாலும் பேரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா? காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன். 



விமலன் அவர்கள் எனக்கு வெர்சடைல் ப்ளாகர் விருது வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறார். பல்துறைகளிலும் சிறந்து விளங்குபவர் என்ற இந்த விருதை பெறவேண்டுமானால், குறைந்தபட்சம் இரண்டு துறைகளாவது தெரிந்திருக்க வேண்டும். ஆனால் வெட்டி அரட்டை அடிப்பதை தவிர எதையும் எழுதி விடாத எனக்கு விருது அளித்திருப்பது, "இனிமேலாவது ஒழுங்காக எழுது..", என்று சொல்வதை போல இருக்கிறது. அந்த வகையில் இவ்விருதை, ஒரு அச்சாரமாகவே ஏற்றுக்கொள்கிறேன் நன்றிசார்..... 


உதை வாங்கிய இந்தியா... உதை கொடுத்த இந்தியா.... 

2000ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் செமத்தியாக உதை வாங்கி கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலிய, மற்றும் இலங்கை அணிகளை மிகப்பலம் பொருந்தியவை என்று கூறி விட முடியாது. முதலில் கொஞ்சம் சொதப்பிய இலங்கை அணி, அதன் பிறகு சுதாரித்துக்கொண்டு ஓரளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தங்களின் பலமான பேட்டிங் வரிசையை சாதகமாக்கிக் கொண்டு போட்டிகளை வென்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியோ, மிடில் ஆடரில் வரும் ஹஸ்ஸி, வேட்(அவரை வடே என்றும் சொல்கிறார்கள். எது கரெக்ட்?) ஆகியோரை வைத்து ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோரை எட்டி விடுகிறார்கள். அதன்பிறகு, தன்னம்பிக்கையான பவுலிங், மற்றும், சிறப்பான பீல்டிங் மூலம் வெற்றியை பெற்று விடுகிறார்கள். ஆனால் தனக்கு எது பலம், அல்லது பலவீனம் என்று தெரியாத நிலையில், ஏனோ தானோ என்று ஆடி இரண்டு அணிகளிடமும், உதை வாங்கி வருகிறார்கள் இந்திய அணியினர். என் நண்பர் ஒருவர், "ஒரு தொடரில் தோனி தலைமையில் ஒரு போட்டி டை ஆனால், அந்த கோப்பையை தோனி வென்று விடுவார்." என்று ஆரூடம் கூறுகிறார். இனி இலங்கை மனது வைத்தால்தான் இந்த ஆருடம் பலிக்கும் போலிருக்கிறதே... 



மாறாக ஒலிம்பிக் தகுதிசுற்று போட்டிக்களில் இந்திய அணியினரின் ஆட்டம், மிகப்பிரமாதமாக இருந்தது. கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலுமே இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தார்கள். இறுதி போட்டியில் பிரான்சுக்கு எதிராக 8-1 என்ற கோல் கணக்கில் பிரமாண்ட வெற்றியை பெற்று ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆட தகுதி பெற்றிருக்கும் இவர்கள், சிறப்பாக ஆடி இழந்த பெருமைகளை மீட்டு தருவார்கள் என்று நம்பலாம். தொடரில் சிறப்பாக ஆடி 16 கோல்களை அடித்த சந்தீப் கண்டிப்பாக இந்திய அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம். அவருக்கு 25 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, அதே போல அணியில் இடம்பெற்ற பிற வீரர்களுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட்டுக்கு மட்டுமே கோடிகளை வாரி இறைக்காமல், இந்த மாதிரி வெற்றிகளை ஊக்குவித்தால் இந்திய அணி பல சாதனைகளை நிகழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.


சினிமா படலம் 



கடந்த வாரம் வெளியான படங்களுள் குறிப்பிடத்தக்க படங்கள் மூன்றை பார்த்தாகி விட்டது. காதலில் சொதப்புவது எப்படி, ஏற்கனவே குறும்படமாக பார்த்து விட்டதால், அதில் சுவாரசியம் குறைவாகவே இருந்தது. ஆனால் வசனங்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தன. மிக மிக ஜாலியான, கல்லூரி மாணவர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட படம், நகர்புற, மக்களை மட்டுமே கவரும் என்பது உறுதி. அதே போல முப்பொழுதும் உன் கற்பனைகள் படம், மிக ஸ்டைலிஷ் ஆக எடுக்க வேண்டும் என்று நினைத்து சொதப்பி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதே கதையில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணுக்குள் நிலவு என்று ஒரு படம் விஜய் நடிப்பில் வெளிவந்தது.இது படம் தொடங்கி 15 நிமிடத்துக்குள் எனக்கு புரிந்து போனது. ஆகவே படத்தோடு மனம் ஒட்டவே இல்லை. அதர்வாவை குறை சொல்ல முடியாது. நடிக்க முயற்சி செய்திருக்கிறார். எத்தனை முறைதான், முரளி மகன் என்பதால் எக்ஸ்கியூஸ் கொடுக்க முடியும்? மூன்றாவது திரைப்படம் அம்புலி. பார்த்திபன் தவிர்த்து பெரிதாக ஸ்டார் வேல்யூ இல்லாமல், நிறைய புதுமுகங்களை வைத்து இயக்கி இருக்கிறார்கள், ஹாரிஸ் ஷங்கர், மற்றும் ஹரீஷ் நாராயணன். இவர்கள் எழுதி வரும் டிரீமர்ஸ் வலைத்தளத்துக்கு தீவிர வாசகன் நான். அதிலும் கேணிவனம் தொடர் மிகப்பிரபலம். இவர்கள் ஒரு பதிவர்கள் என்று சொல்வதில் நானும் ஒரு அல்ப சந்தோஷம் கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டில் மிரட்டலான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். 3டிதான் கொஞ்சம் கண்களை உறுத்தியது. அது நான் பார்த்த திரையரங்கின் குறையாக கூட இருக்கலாம். இவர்களின் முயற்சியே மிக பாராட்டுக்குரியது. இவர்களிடம் இருந்து இன்னும் சிறப்பான திரைபடங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். 


மின்வெட்டில் வெட்டு.... 

முன்பெல்லாம், "எதற்கு மின்வெட்டு?" என்று மக்கள் போராடுவார்கள். இப்போது, "எல்லோருக்கும் சமமாக மின்வெட்டு கொடு!" என்று போராடும் நிலைமைக்கு வந்து விட்டோம். மார்ச் முதல் நகரங்களில் 2 மணிநேரமும், பிற இடங்களில் 4 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள். இது ஓரளவுக்கு நிம்மதியை கொடுத்தாலும், இது எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. கோடைகாலம் நெருங்கி வருவதால், மின்வெட்டு இன்னும் அதிகாரிக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அதிக பட்சம் 24 மணி நேரம் மட்டுமே மின்வெட்டை அமல் படுத்த முடியும் அல்லவா? 



வேளச்சேரியில் ஐந்து பேரை போலீஸ் என்கவுண்டர் செய்து கொன்றிருக்கிறது. அவர்கள் உண்மையிலேயே கொள்ளையில் ஈடுபட்டார்களா? அவர்கள் மீது என்கவுண்டர் செய்தது சரிதானா? என்று வழக்கம்போல பட்டி மன்றங்கள் தொடங்கி விட்டன. அடுத்த பரபரப்பு செய்தி வரும்வரை பேசுவதற்கு ஏதாவது விஷயம் வேண்டும் அல்லவா? அதன் பிறகு எல்லோரும் இதை மறந்து விடுவார்கள். ஆனால் வடமாநிலத்தில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் அப்பாவிகளுக்குத்தான் இனி பிரச்சனை. ஏற்கனவே அவர்களை எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இப்போது அவர்களோடு நெருங்கி பழகவே அஞ்சுவார்கள். ஒரு சிலர் செய்த தவறுகளுக்கு ஓட்டு மொத்த சமுதாயமும் பழிக்கபடும். இதை கவர் செய்த ஊடகங்களோ தங்களின் எண்ணத்திற்கேற்ப செய்திகளை பரப்பி வருகிறார்கள். உதாரணமாக வடநாட்டு ஊடகங்கள் அனைத்துமே, கொல்லப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே செய்திகள் வெளியிட்டு வருகின்றன. கொலையுண்டவர்களின் உடல்களை போலீஸ் எடுத்து வரும் காட்சியை, புதிய தலைமுறை தவிர்த்து அனைத்து சேனல்களும், மிக தெளிவாக காட்டின. ரத்த வெள்ளத்தில் இருக்கும் அவர்களின் பிரேதங்களை குழந்தைகளும் பார்க்க நேரிடும் என்று துளியும் இவர்களுக்கு கவலை இல்லை. புதிய தலைமுறை மட்டுமே அந்த காட்சிகளை மறைத்து விட்டது. 

வெட்டி அரட்டை இப்போதைக்கு அவ்வளவுதான், உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....


முழுவதும் படிக்க >>

February 8, 2012

ஜெயலலிதாவுக்கு சாமர்த்தியம் போதவில்லையா?


சொன்னதும், சொல்லாததும்..... 



நான் சென்னைக்கு வந்த புதிதில் எல்லோருக்கும் வரும் குழப்பம் எனக்கும் இருந்தது. மாநகரப்பேருந்துகளில் டிக்கட் விலை ஒவ்வொரு பேருந்துக்கும் ஒரு மாதிரி இருக்கும். மஞ்சள், வெள்ளை, நீலம், பச்சை மற்றும் கருப்பு என்று ஏறுவரிசையில் டிக்கெட் நிர்ணயித்திருப்பார்கள். அப்புறம் கலைஞர் ஆட்சியில் தாழ்தள பேருந்துகள், சொகுசு பேருந்துகள் மற்றும் எக்ஸ்ப்ரஸ் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய பேருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு, இவ்வகை புதிய பேருந்துகள் அதிகரிக்கப்பட்டன. டிக்கட் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தது.  எதிர்ப்புகள் காரணமாக கட்டணத்தை கொஞ்சம் குறைத்தார்கள். ஒரு சில பேருந்துகளில், பழைய விலை,  ஒரு சில பேருந்துகளில் புதிய விலை, என்று குழப்பம் நிலவியது. காலப்போக்கில் மக்கள் புதிய விலையோடு பழகி விட்டார்கள். அதன்பின் தங்கரதம் என்று ஒரு பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. கலரில் மட்டுமே வித்தியாசமாக இருந்த அந்த பேருந்தில் டிக்கெட் கட்டணம் மிக அதிகம். பின்னர் அதையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர். இது போதாதென்று,  கட்டணம் அதிகம் உள்ள தங்கரதம், எக்ஸ்ப்ரஸ் போன்ற பேருந்துகள் பீக் அவர் என்னும் முக்கிய நேரங்களில் அதிகம் இயக்கப்பட்டு, குறைந்த டிக்கெட் கட்டணம் உள்ள பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டன. அவசர கதி வாழ்க்கையில் இதையெல்லாம் உற்று நோக்க மக்களுக்கு நேரமில்லை. இருந்தாலும், சொல்லியும் பிரயோசனமில்லை. பழகி கொண்டார்கள். இப்போதும், "சென்னையில் பீக் அவரில் முக்கிய ரூட்களில் எக்ஸ்ப்ரஸ் ரக பேருந்துகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்படுகின்றன." என்று என் நண்பன் அலுத்துக்கொண்டான். 




எங்கள் ஊரில், பேருந்து கட்டணங்கள் ஏற்கனவே குழப்பமான சூழ்நிலையிலேயே இருந்து வந்தது. தற்போது கட்டண உயர்வுக்கு பிறகு, ஒரு மாத காலத்துக்கு, தாறுமாறாக வசூலித்து வந்தார்கள். ஆனால் தனியார் பேருந்துகளில் விலையை கொஞ்சமாக உயர்த்தி அதையே மெயிண்டேயின் பண்ணினார்கள். ஆகவே தனியார் பேருந்துகளுக்கு கிராக்கி கூடியது. திடீரென்று அரசு மொபசல் பேருந்துகளும் கட்டணத்தை குறைத்து தனியார் பேருந்துகளின் கட்டணத்தை பின்பற்றினார்கள். ஆனால் எல்லா அரசு பேருந்துகளிலும் இப்படி இல்லை. இதை விட பெரிய காமெடி, நான் கல்லூரி செல்லும் வழித்தடத்தில் மொபசல் பேருந்தை விட,  சிட்டி எக்ஸ்பிரஸ் எனப்படும் நகரப்பேருந்துகளில் கட்டணம் அதிகம். இவை மட்டுமே எல்லா நிறுத்தங்களிலும் நின்று செல்லும். ஆகவே கிராமப்புற மக்கள் வேறு வழியே இல்லாமல் இவ்வகை பேருந்துகளையே நாட வேண்டி உள்ளது. இவ்வளவு நாள் வில்லனாக தெரிந்த தனியார் பேருந்துகள் இப்போது ஆபத்பாந்தவனாக தெரிகிறது. நல்ல இருக்கைகள், அதிரடி இசை மட்டுமல்லாமல், திட்டாமல் சில்லறை கொடுக்கும் கண்டக்டர்கள் என்று குறைந்த விலையில் மகிழ்வான பயணம் கிடைக்கிறது. இன்றைய தேதிக்கு, ஒரு பேருந்து தூரத்தில் வருகிறது என்றால், அதில் என்ன கட்டணம் வசூலிப்பார்கள் என்று யாரும் கணித்து விட முடியாது. சில அரசு பேருந்துகளில் சாதாரண கட்டணம் என்று எழுதி வைத்து மக்களை கவர்கிறார்கள்.இவ்வகை குழப்பங்களுக்கு மக்களும் பழகி விட்டார்கள். நான் முதல் பத்தியில் கூறிய செய்தியும், இரண்டாவது பத்தியில் கூறிய செய்தியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுதான். அம்மா சொல்லிட்டு செஞ்சாங்க. கலைஞர் சொல்லாம செஞ்சார். அதான் சொன்னேன். ஜெயலலிதாவுக்கு சாமர்த்தியம் போதவில்லை என்று. 


என் ராத்தூக்கம் போச்சு.... 



சென்னையில் வாழும் மக்கள் எல்லாம் ஒரு வகையில் புண்ணியம் செய்தவர்கள். அல்லது நம் அரசியல்வாதிகள் வாழும் புண்ணிய பூமியில் இருப்பதால் அந்த அனுக்கிரகம் இவர்களுக்கும் கிடைக்கிறது. ஏனைய தமிழக மக்களுக்கு உண்டாகும் எந்த அசவுகரியமும் மிக குறைந்த அளவிலேயே சென்னையை பாதிக்கிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்தால் அது தட்டுப்பாடு. எங்கள் ஊரில் பத்து வருடமாக மழை காலத்திலேயே ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் நடக்கிறது. கோடை காலத்தில் இது இருபது நாட்கள் வரை நீளும். இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஓட்டு மொத்த தமிழகமே சென்னையை பார்த்து வயிற்றெரிச்சல் பட்டது மின் வெட்டை பற்றித்தான். ஆனால் ஒரு கட்டத்தில் சென்னைக்கும் மின் வெட்டு அமல் படுத்தப்பட்டபோது, எல்லோரும் உள்ளூற மகிழ்ந்தார்கள். அது ஒரு அல்பசந்தோஷம். "தமிழகம் முழுவதும் ஏற்கனவே 4 மணிநேரமாக இருந்த மின்வேட்டை 8 மணிநேரம் ஆக்க போகிறார்கள்." என்று இன்று பேப்பரில் படித்தேன். ஆனால் எங்க ஊர் ரொம்ப அட்வான்ஸ். ரெண்டு நாளைக்கு முன்னாலேயே தொடங்கி விட்டார்கள். காலையில் 3 மணி நேரம், மதியம் 3 மணிநேரம், மாலையில் ஒண்ணறை மணிநேரம், இரவில் ஒண்ணறை மணிநேரம். "மொத்தம் 9 மணி நேரம் வருகிறதே?" என்ற சந்தேகம் வரலாம். 1 மணி நேரம் என்பது பேரருக்கு கொடுக்கும் டிப்ஸ் மாதிரி போலிருக்கிறது. இதில் உள்ள கொடுமை என்னவென்றால், மாலையில் இருந்து இரவு வரை உள்ள மூன்று மணிநேர மின்வெட்டு, நாலு பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மணி நேர இடைவெளி விட்டு தூண்டிக்கிறார்கள். நினைத்து பாருங்கள். தூக்கம் வந்து கண் அயரும் நேரம் கரண்ட் கட். பிறகு 45 நிமிடம் கழித்து கரண்ட் வரும். அடுத்து தூக்கம் வர ஒரு அரை மணி நேரம் ஆகும். நன்கு தூக்கம் வந்து அடுத்த 30 நிமிடங்களில் இன்னொரு கட். இப்படி இரவு 1 மணி வரை நடந்தால் ஒரு மனிதன் வாழ்வில் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். இதில் புழுக்கத்தோடு சேர்ந்து, கொசுக்கள் வேறு காதில் வயலின் வாசிக்கின்றன. என்ன வாழ்க்கைடா?

ஜிந்தாத்தா.... ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தாத்தா...  



கர்நாடக சட்ட சபையில் இரண்டு அமைச்சர்கள் (அதில் ஒருவர் பெண்கள் நலத்துறை அமைச்சராம்) இருவர் பலான வீடியோக்களை செல்போனில் பார்த்து கையும் கன்றாவியுமாக சிக்கி இருக்கிறார்கள். முன்பெல்லாம் இந்த மாதிரி செய்தி வந்தால் மக்கள் கோபமடைவார்கள். இப்போது தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கிறார்கள். மெரினா படத்தில் கடைசியில் சிவகார்த்திகேயன் சிரிப்பாரே, அதே போல ஒரு விரக்தி சிரிப்பு. இன்னும் ஒரு வாரத்தில் காதலர் தினம் வருகிறது. அப்போது தெருத்தெருவாக ரெய்டுக்கு போவார்களே? இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு போவார்கள்? காதலர்கள் திருப்பி மானங்கெட்ட கேள்வி கேட்பார்களே? சில வருடங்களுக்கு முன்னால் பார்ட்டியில் புகுந்து பெண் ஒருவரை பொடதியிலேயே அடித்தார்களே, இவர்களை என்ன செய்வார்கள்? 

அதை விடுங்கள். இன்று இந்த நிகழ்வு குறித்து பதிவெழுதும் பதிவர்கள், தலைப்புகள் எப்படி வைப்பார்கள்?

கில்மா பதிவர்கள்

சட்டசபையில் செக்ஸ் வீடியோ?
அமைச்சர் கண்டுகளித்த கிளுகிளு காட்சிகள் - வீடியோ இணைப்புகள் 
அமைச்சர் பார்த்த ஆபாச வீடியோ , நடிகை மறுப்பு (இரண்டும் வேறு வேறு செய்திகள்)

புரட்சியாளர்கள் 
ஆர்எஸ்எஸ் அம்பிகள் பார்த்த ஆபாச வீடியோ- பல்லிளிக்கும் ஜனநாயகம்
ஆத்திகர்களின் வக்கிரபுத்தி

போதும் இதுக்கு மேல யோசிக்க முடியல.... 



ஜோக்கா இல்லையா?
செய்தியாளர்கள்:சட்டசபை உறுப்பினர்கள் ரெண்டு பேர் ஆபாச வீடியோ பார்த்ததை படமெடுத்து விட்டார்கள். 
எம்‌எல்‌ஏக்கள் :அய்யோய்யோ ........
செய்தியாளர்கள்:அவர்கள் பெயர் லட்சுமண் சவதி, மற்றும் CC பாட்டீல்... 
எம்‌எல்‌ஏக்கள்:நல்லவேளை... நான் கூட என்னைன்னு நெனைச்சேன்....  

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.....


முழுவதும் படிக்க >>

February 6, 2012

அவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....

பிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எழுத முடியாமல் போய் விடும். அப்படி வெகு காலத்துக்கு முன்னால் பார்த்து எழுதாமல் விட்ட படத்தை பற்றி இப்போது பகிர்ந்து கொள்கிறேன். இந்த படத்தை பற்றி கிட்டத்தட்ட எல்லா சினிமா பதிவர்களுமே எழுதி இருப்பார்கள். இருந்தாலும் என் பார்வையில் இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்ற ஆர்வமே இதை எழுதக்காரணம். 

 பொதுவாக இளைஞர்களைக் கவர்வது காதல் கதைதான். ஆனால் எல்லோரையும் கவரும் படங்கள் த்ரில்லர் படங்கள்தான். ஹாலிவுட்டில் த்ரில்லர் படங்களுக்கு ஒரு பெரிய சரித்திரமே உண்டு. வகை வகையான த்ரில்லர் படங்களை எடுத்து தள்ளி இருக்கிறார்கள். தமிழிலும் அவ்வப்போது சொல்லிக்கொள்ளும்படியாக சில த்ரில்லர் படங்கள் வருவதுண்டு. எனக்கு பிடித்த த்ரில்லர் படங்களாக, நூறாவது நாள், ஊமை விழிகள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.சமீபத்தில் வெளிவந்த ஈரம் கூட சிறந்த படமாக இருந்தது. ஆனால் ஹாலிவுட்டை பொறுத்தவரை நிறைய த்ரில்லர் படங்கள் வருவதுண்டு. அப்படி வந்த படங்களை வரிசைப்படுத்தினால், எல்லோராலும் முதல் மூன்று இடங்களுக்குள் கண்டிப்பாக குறிப்பிடும் ஒரு படம் உள்ளது அது தான் தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் (The Silence of the Lambs - 1991).




கதையை பற்றி விரிவாக சொல்லி விடுகிறேன். பப்பலோ பில் (Buffalo Bill) என்று செல்லமாக அழைக்கப்படும் மோசமான சைக்கோ கொலையாளி ஒருவன், இளம்பெண்களை கடத்தி கொலை செய்து, அவர்களின் தோலை மட்டும் உரித்து விடும் கொடூரத்தை தொடர்ந்து செய்கிறான். அவனை பற்றி துப்பறிய கிளாரிஸ்  ஸ்டார்லிங்  என்கிற இளம் FBI பெண் அதிகாரியை நியமிக்கிறார்கள். ஒரு குறிப்புமே கிடைக்காத இந்த கேஸில், ஸ்டார்லிங்கின் வேலை என்னவென்றால், சிறையில் அடைபட்டிருக்கும் சீரியல் கில்லர் ஒருவரை சந்தித்து, அவரிடம் பேசி, அதன் மூலம், பப்பலோ பில் பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா? என்று ஆராய்வதுதான். (ஒரு கொலைகாரன் மனசு இன்னொரு கொலைகாரனுக்குத்தானே தெரியும் என்கிற ஐடியாதான்). அதன்படி பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹன்னிபால் லெக்டர் என்னும் கைதியை சந்திக்க புறப்படுகிறாள் ஸ்டார்லிங். 



ஹன்னிபால் லெக்டர் ஒரு திறமையான மனோதத்துவ டாக்டராக இருந்தவர். மனிதர்களை கொன்று சாப்பிட்ட குற்றத்துக்காக கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர். ஸ்டார்லிங் சிறைக்குள் சென்று பார்க்கும் முன், அவளுக்கு ஏகப்பட்ட கட்டளைகள் மற்றும் குறிப்புகள் தரப்படுகின்றன. அந்த டாக்டர் ஒரு மோசமான ஆள். கொஞ்ச நேரம் அவரது கண்ணை பார்த்து பேசினாலே மயக்கி விடுவான். தேவை இல்லாத பேச்சுக்களை குறைக்க வேண்டும். மிக அருகில் சென்று பேசக்கூடாது. சொந்த விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது என்று பலவாறு அறிவுறுத்தப்படுகிறாள். கொஞ்சம் அச்ச உணர்வோடு அந்த சிறைக்கூடத்துக்குள் செல்கிறாள் ஸ்டார்லிங். அங்கே இன்னும் சில கைதிகளும் இருக்கிறார்கள். எல்லோரும் தனித்தனி செல்லில். ஒவ்வொருவரும் மிக பயங்கரமாக கத்திக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். அதோ....  மூலையில் அவள் சந்திக்கப்போகும் அந்த டாக்டரின் அறை இருக்கிறது. அந்த அறை மற்ற சிறைகள் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. கம்பிகள் இல்லாமல் உடைக்க முடியாத கண்ணாடி சுவர் ஆங்காங்கே சிறு துளைகள் மட்டும். லெக்டரால் விரலைக்கூட வெளியே நீட்ட முடியாது. சிறைக்கு வெளியே ஒரு நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டே பேட்டியை தொடங்குகிறாள் ஸ்டார்லிங். 



லெக்டர் மிக அமைதியான, வயதான ஒரு டாக்டர். அவன் கண்கள்.... அதில் தெரியும் புத்திசாலித்தனம், அதையும் மீறி வெளிப்படும் கொலைவெறி, ஸ்டார்லிங்கை மேலும் பயமுறுத்துகிறது. கொஞ்சம் அதிகார தோரணையோடு அவள் லெக்டரை விசாரிக்க தொடங்க,  அவள் அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக லெக்டர் அவளை விசாரிக்க தொடங்குகிறார். சட்டென சுதாரித்து கொள்ளும் ஸ்டார்லிங் கொஞ்சம் அதிகாரத்துடன் நடந்து கொள்ள, அவளை திட்டி அனுப்பி விடுகிறார். மற்றொரு கைதியும் அவளை அவமானப்படுத்தி விடுகிறான். முதன் முதலில் வேலைக்கு வந்திருக்கும் அவளுக்கு இது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது. இருந்தாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து லெக்டரை சந்திக்கிறாள். ஒவ்வொரு முறையும் அவளால் லெக்டரை வழிக்கு கொண்டு வர முடியவில்லை. இவளை விட அவர் புத்திசாலியாக இருக்கிறார். அவரிடம் இருந்து வார்த்தைகளை வாங்க முயன்றால், அவர் இவளிடம் இருந்து வார்த்தைகளை வாங்கி விடுகிறார். அவர் கொடுக்கும் சிறு குறிப்புகள் மூலம் வெளியே பப்பலோ பில்லை தேட தொடங்குகிறார்கள். 



ஒரு கட்டத்தில் செனேட்டரின் மகளையே அவன் கடத்தி விட, அவனை விரைவில் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகவே ஸ்டார்லிங் லெக்டரிடம் மன்றாட தொடங்குகிறாள். அவரும், "சரி நான் ஒரு உண்மையை சொன்னால் நீ உன் சொந்த வாழ்க்கையைப்பற்றி ஒரு உண்மையை சொல்லவேண்டும், மேலும் என்னை வேறு ஒரு சிறைக்கு மாற்றவேண்டும்.", என்று டீல் பேசுகிறார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஸ்டார்லிங் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் புதிர் வடிவில் பதில் கொடுக்கும் லெக்டர், அவளிடம் பெர்சனல் கேள்விகள் கேட்க தொடங்குகிறார். கட்டளைப்படி பெர்சனல் விஷயங்கள் பேசக்கூடாது என்றாலும், வேறு வழி இல்லாததால், இவள் சொல்ல தொடங்குகிறாள். சிறு வயதில் அநாதை ஆனது, அதன் பின் ஆடுகளை அறுக்கும் ஒரு இடத்தில் வாழ்ந்தது, நடு இரவில், ஆடுகள் கதறும் சத்தத்தை கேட்டு அவற்றை காப்பாற்ற முடியாமல் போய், பின் அதுவே கெட்ட கனவாக அவளைத் துரத்துவது என்று எல்லாவற்றையும் சொல்கிறாள். கடைசியில் எதுவும் பேசாத லெக்டர் அவளிடம் கேஸ் பைலை கொடுக்கிறார். அதில், "பப்பலோ பில் கொலை செய்த முதல் பெண் கண்டிப்பாக அவனுக்கு நெருங்கிய தொடர்புடையவளாகத்தான் இருப்பாள்.", என்று குறிப்பிட்டிருக்கிறான். அதனை அடிப்படையாகக்கொண்டு தேடத் தொடங்குகிறார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில், சிறையில் இருந்து தப்பிக்கிறார் லெக்டர். தப்பித்து அவர் எங்கே போனார்? அவர் மறுபடியும் ஸ்டார்லிங்கை சந்தித்தாரா? பப்பலோ பில் அகப்பட்டானா? ஸ்டார்லிங்கை துரத்தும் கொடும் கனவை போக்க லெக்டர் சொன்ன வழி என்ன? என்பதை, அட்டகாசமான வசனங்களோடு, த்ரில்லிங்காக சொல்லி இருக்கிறார்கள்.



படத்தில் நடித்திருக்கும் அனைவருமே அருமையாக நடித்திருந்தாலும் பிரதான பாத்திரத்தில் வரும் இருவரை குறிப்பிட்டே ஆக வேண்டும். முதலாமவர் டாக்டர் ஹன்னிபால் லெக்டராக வரும் பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸ். இவரது கண்களே பக்கம் பக்கமாக வசனம் பேசுகின்றன. கண்களில் தெரிவது அறிவு முதிர்ச்சியா, கொலை வெறியா, இல்லை கருணையா என்று தெரியாமல், மூன்றும் கலந்து கட்டி நம்மை அச்சுறுத்துகின்றன. சைக்கோ கொலைகாரன் என்றவுடன், கரடு முரடான ஒருவராக இல்லாமல், மிக டீசண்டான, தலையை பாடிய வாரிய ஒரு மிடுக்கான டாக்டராக வருகிறார். அதிலும் ஒவ்வொரு பேச்சிலும் நிதானம், ஒரு முதிர்ச்சி என்று, அசத்துகிறார். இரண்டாமவர் ஸ்டார்லிங்காக நடித்திருக்கும் ஜோடி ஃபாஸ்டர்.  அவார்ட் வாங்குவதையே குறிக்கோளாக கொண்டவர். புதிதாக வேலைக்கு வரும் ஒருவர், அதிலும் ஒரு பெண் அதிகாரி சக மனிதர்களால் எப்படி பார்க்கப்படுவார்?, அதற்கு அவளது ரியாக்ஸன் எப்படி இருக்கும்? என்பதை அப்படியே பிரதிபலித்திருப்பார். ஆண்கள் மட்டுமே சுற்றி இருக்கும் ஒரு இடத்தில், தன் கூச்சத்தை வெளிப்படையாக காட்டாமல் மறைப்பது, முதல்முறை லெக்டரை சந்திக்கப்போகும்போது, போலியாக ஒரு கம்பீரத்தை முகத்தில் வைத்துக்கொண்டு போய், லெக்டருடனான முதல் சந்திப்பிலேயே அது சுக்கு நூறாக உடைவது, ஒவ்வொரு முறையும் லெக்டர் இவளை தோற்கடிக்கும்போது, சிறு குழந்தைபோல சோர்வடைவது என்று கலக்கி இருக்கிறார். சிறு வயதில் தனிமையின் கொடுமையை அனுபவித்து, இவை எல்லாவற்றையும் மீறி சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ள  ஒரு பெண் அதிகாரியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். யுத்தம் செய் படத்தில் வரும் சேரன் கதாபாத்திரம் கிட்டத்தட்ட இதே போல உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் ஸ்டர்லிங்கும், லெக்டரும் சிறையில் சந்தித்துக்கொள்ளும் காட்சி, மொக்கையாக ஆளவந்தானில் பயன்படுத்தப்பட்டிருக்கும். 



தாமஸ் ஹாரிஸ் என்பவர் எழுதிய நாவலைத்தழுவி எடுக்கப்பட இந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதனை இயக்கியவர் ஜோனதன் டேமே . வசூலை வாரிக்குவித்த இந்த படம் பல அவார்டுகளையும் அள்ளியது. ஆஸ்கர் அவார்டில் பிரதான அவார்டுகள் (சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம், திரைக்கதை) ஐந்தையுமே தட்டிச்சென்ற மூன்றே படங்களில் இதுவும் ஒன்று. த்ரில்லர் படங்களிலேயே இன்றளவும் பெரிதும் விரும்பப்படும் படங்களில் ஒன்றான இது, தவிர்க்க முடியாத படங்களுள் ஒன்று. நேரம் கிடைக்கும்போது தவறாமல் பாருங்கள். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..... 


முழுவதும் படிக்க >>

February 3, 2012

டாக்டர் போல யாரு மச்சான்...?


மு.கு: படங்களுக்கும் கட்டுரைக்கும் எந்த தொடர்பும் இல்லை. படத்தில் இருக்கும் அனைவர்களும் டாக்டர்கள் என்பதை தவிர. 

இந்த தலைப்பை பார்த்ததும், ஒரு சிலர் மருத்துவர்களின் அருமை பெருமைகளைப்பற்றி எழுதப்போகிறேன் என்று நினைக்கலாம். ஆனால் இந்த தலைப்பை பார்த்ததும் டக்கென்று உங்களுக்கு யாருடைய ஞாபகம் வருகிறதோ, அவரை நினைத்து இந்த பதிவை படியுங்கள். இந்த பதிவுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. நீங்கள் எந்த மன நிலையில் படிக்கிறீர்களோ, அதையே இங்கே பிரதிபலிக்கும். ஒஸ்தி வேலன் ஸ்டைலில் சொன்னா, "இது கண்ணாடி மாறிலே... அங்கிட்டு என்னத்த காட்டுதியோ, அதேயே திருப்பி காட்டுவேன்". ஆமா? இவன் எப்போதுமே சினிமா பற்றியே பேசிக்கிட்டு இருக்கானேன்னு நீங்க நினைக்கலாம். ஆரம்ப காலத்தில் இருந்தே சொல்வது போல, எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கே ஒழிய, நான் ஒன்றும் கவிஞனோ, கதாசிரியானோ அல்ல. எனக்கு என்ன தெரியுமோ அதைத்தானே எழுத முடியும்?



எல்லா பத்திரிக்கையாளர்களும் ஒருங்கே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் கண்களில் ஒருவித எதிர்பார்ப்பு. சர்க்கஸ் கூடாரத்தில் அமர்ந்திருப்போரின் மன நிலைதான். சிங்கமோ, புலியோ வருமா? இல்லை ஏதாவது ஒரு பொண்ணு வந்து ஜிம்னாஸ்டிக் செய்யுமா? இல்லை பஃபூன் வந்து காமெடி செய்வாரா? என்று கலவையான எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் இங்கு வந்திருப்பது கடைசி விஷயத்துக்குத்தான். ஏனென்றால் அவர்கள் பார்க்க வந்திருக்கும் டாக்டர் அப்படி. பத்திரிக்கையாளர்கள் ஏன் ஒரு டாக்டரை பார்க்க வேண்டும்? எல்லோருக்கும் எதேனும் கோளாறா? யாருக்கு கோளாறு என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கே புரியும். 



டாக்டர் என்பவர் டாக்டர் அல்ல. பின்னே? கம்பவுண்டரா? என்று  கவுண்டர்  ஸ்டைலில் கவுண்டர் கொடுக்கலாம். ஆனால் இந்த டாக்டர் ஒரு டாக்டர் அல்ல. ஒரு நடிகர். காலப்போக்கில் இவர் பெயருக்கு பின்னால் சாரி முன்னால் டாக்டர் சேர்ந்துகொண்டது. ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் இவர் டாக்டர் ஆனபின் நடிகர் ஆனாரா? இல்லை நடிகர் ஆனதால் டாக்டர் ஆனாரா என்று குழப்பம் இன்றும் நீடிக்கிறது. சரி விடுங்க. நாம டாக்டர் என்றே விளிப்போம். இவரை பார்க்கும்போதோ, அல்லது இவரால் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படும்போதோ, எல்லோரும் மிக குஷியாகி விடுவார்கள். ஏனென்றால் இவரது ஒரே பேட்டியை வைத்து ஒரு மாதம் பொழப்பு நடத்தலாம். டுவிட்டர், பேஸ்புக், யுட்யூப் போன்ற இடங்களில் இவரது பேட்டி பல இடங்களில், பல வெர்சன்களில் வெளியாகி களை கட்டும்.  அப்படி என்னதான் செய்வார்? என்று அறிந்து கொள்வதற்கு முன் இவர் குறித்த ஒரு சிறு அறிமுகத்தை பார்க்க வேண்டும். 



தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக ஒரு நடிகரை சொல்வார்கள். சரி அவரை விட்டு விடலாம். அவரெல்லாம் நம் டாக்டரின் கால் தூசிக்கு சமமாக மாட்டார். விடா முயற்சியில் இவர் ஒரு எடிசன். தோல்வியை கண்டு துவளாத மனதில் இவர் ஒரு மாவீரன் அலெக்சாண்டர். தன் உடல் அமைப்பை கண்டு துளியும் வருத்தப்படாததில் இவர் ஒரு ஆபிரகாம் லிங்கன். அவார்டை விட ஆத்ம திருப்தியே முக்கியம் என்று நினைப்பதில் இவர் ஒரு கமலஹாசன். நான் ஏதோ இவரது படத்தின் அறிமுகப்பாடல் வரியை இங்கு எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. இவ்வளவு நற்பண்புகள் இருந்தும் இவரால் சினிமா உலகில் சாதிக்க முடியவில்லை. காரணம் இவரல்ல. இவரை சுற்றி உள்ள சமூகம். ஒன்று அரசியல். "எங்கே இவர் அடுத்த முதல்வர் ஆகி விடுவாரோ?" என்று மிரளும் ஒரு கூட்டம், "எங்கே இவர் அடுத்த ரஜினி ஆகி விடுவாரோ?" என்று அஞ்சும் மற்றொரு கூட்டம் என்று, இவரை காலை வாரி விடுவதற்கென்றே நிறைய பேர் இருக்கிறார்கள்.  இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியம் இவரது ரசிகர்கள். இவர் சீரியசாக பேசினால் அதை காமெடியாகவும், இவர் காமெடியாக பேசினால் அதை சீரியசாகவும் எடுத்துக்கொண்டு, இவரைபற்றி வெளியே ஒரு பெரிய காமெடி இமேஜை உருவாக்கி விட்டார்கள். 



இன்றைய தேதிக்கு இவர் காமெடி ரோலில் நடித்தால், சந்தானம் ஃபீல்ட் அவுட் ஆகி விடுவார். ஆனால் நடித்தால் ஹீரோ ரோல்தான் என்பதில் உறுதியாக இருப்பது, ஒரு வகையில் இவரது மன உறுதியை காட்டினாலும், அதுவே இவரது பெரிய பலகீனம். இவரது எந்த படம் வெளிவந்தாலும் இளைய சமுதாயமே மகிழ்ச்சி கடலில் மிதப்பார்கள். மேலும் தொடர்ந்து வரும் இவரது பேட்டிகள் அவர்களின் உற்சாகத்தை இன்னும் அதிகாரிக்கும். உலகில் தன்னை விரும்பாதவர்களை கூட, தன் படத்தை எதிர்பார்க்க வைக்கும் திறமையில் உண்மையிலேயே இவர் ரஜினியை பின்னுக்கு தள்ளி விட்டார். இதை படித்தவுடன், யாராவது ரஜினி ரசிகர் என்னுடன் சண்டைக்கு வரலாம். ஆனால் அவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், ஒரு முறை  கேட்டுப் பார்க்கட்டும். இவரது படங்கள் வெளியான மறுநாளே மாபெரும் வெற்றி பெற்றுவிடும். நூறாவது நாள் போஸ்டர் ஒட்டாத படங்களே கிடையாது. படம் ஓடுகிறதோ இல்ல்யோ, படம் பிரிண்ட் போடும்போதே, நூறாவது நாள் போஸ்டரும் பிரிண்ட் போடப்படும் என்பது நாடறிந்த உண்மை. எவ்வளவு உயரத்துக்கு போனாலும், இவர் மாறாத புன்னகையுடனே இருப்பார். இவர் பேச வேண்டியதை, இவரது ரசிகர்களே பேசி விடுவார்கள். 



சரி இப்போது அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? நான் முதலில் சொன்னேன் அல்லவா? ஒரு பத்திரிக்கையாளர் கூட்டம். அது போல ஏகப்பட்ட கூட்டத்தை இவர் கூட்டி அங்கே கோபம் வரும் அளவுக்கு காமெடி செய்திருக்கிறார். எப்போதுமே பயங்கர அலப்பறை செய்யும் இவரது வித்தியாசமான படம் ஒன்று, தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. ஆனால் இவர் இன்னும் அமைதியாகவே உள்ளார். "சின்னப்பயல் சூர்யா எல்லாம் வசூலில் மூன்றாம் இடம் என்று தம்பட்டம் அடிக்கும்போது, அதை எல்லாம் மிஞ்சும் திறமை மிக்க இவர் ஏன் அப்படி செய்யக்கூடாது?", என்று தோன்றியதான் விளைவே இந்த கற்பனை பத்திரிக்கையாளர் கூட்டம். 

பத்திரிக்கையாளர்கள் தவிப்போடு இருக்க, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்று அச்சுறுத்தும் எரிமலையாக அங்கே நுழைகிறார் டாக்டர். அதிகம் பேசாத இவருக்கு முன்னால் இவரது மேனேஜர் பேசுகிறார். "சமீபத்தில் வெளியான அண்ணனின் படம், வெளியிட்ட எல்லா தியேட்டர்களிலும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இது உலக சினிமாவில் யாரும் செய்திடாத ஒரு சாதனை. அது அண்ணனாலேயே முடியும். மேலும் தமிழக, இந்திய ஏன் உலக ரெக்கார்டுகளையே இந்த படம் முறியடிக்கும் என்று எனக்கு தெரியும். உலகில் அதிக வசூல் செய்த படம் ....." (பெயர் மறந்து போனதால் கையில் வைத்திருக்கும் பிட்டை பார்க்கிறார்), பத்திரிக்கையாளர் ஒருவர், "களுக்", என்று சிரித்து விட, "ஏய் பேசிட்டிருக்கேன்ல?", என்று அண்ணன் ஸ்டைலில் சவுண்டு விட்டுவிட்டு, "ஆங் அவதார், அதை கூட நம்ம நாசர் அவதாரம் என்று தமிழில் ரீமேக் செய்திருப்பரே, அந்த படத்தின் வசூலை வீழ்த்தி விட்டதாக எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது. இதனை அளித்தவர் எஃப் பிஐ அதிகாரி உயர்திரு ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் அவர்கள். இப்போது என்ன சொல்லப்போகிறார்கள் எதிரிகள்?", என்று கண்கள் சிவக்க பேசிவிட்டு, மேலும் பேச மனசாட்சி இடம் தராததால், அண்ணனுக்கு வழி விட்டு அமர்கிறார். 



டாக்டர் மைக்கை பிடித்து, "நான் அதிகம் பேச விரும்பவில்லை. என்னென்னமோ சொல்றாங்க, இந்த படம் பல சாதனைகளை முறியடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அவதார் வசூலையே மிஞ்சி விட்டதாக சொல்றாங்க. முதலில் நான் நம்பல. அப்புறம் மதுரை மாவட்டம், ஆட்டையாம்பட்டி SAC டூரிங் டாக்கீசில் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவதார் படம் வந்திருக்கு. அது ஒரே நாள்ல, 9 ரூவா வசூல் பண்ணிச்சாம். இப்போ என் படம் அதே தியேட்டர்ல வந்திருக்கு. முதல் நாளே பத்து ரூவா வசூல் செய்து அதை முந்தி விட்டதாக, தியேட்டர் வாசலில் பீடி விற்கும், மன்ற செயலாளர் மன்னார்சாமி கண்ணீர் மல்க டுவிட்டரில் கூறி இருந்தார். இதை என் தலையில் ஏற்றிக்கொள்வதா? இல்லை முதுகில் ஏற்றிக்கொள்வதா? என்று தெரியவில்லை. என் சாதனை பயணத்தில் இது முதல் படிதான். அடுத்த வருடம், நிறைய மொக்கை டைரக்டர்களின் படத்தில் நடித்து அவர்களுக்கு வாழ்க்கை தரவேண்டி இருப்பதால் இத்தோடு முடித்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு, "வெற்றி கொடி ஏற்று, வீசும் நம்ம காற்று...." என்று விஜய்யின் பாடலை பாடிக்கொண்டே விடைபெறுகிறார். சிரித்து சிரித்து பெருகி இருந்த கண்ணீரை துடைத்தபடி, " டாக்டர் போல யாரு மச்சான்...?",  என்று அதே விஜய் பாடலை உல்டா செய்து பாடியபடி பத்திரிக்கையாளர்கள் நகர்கிறார்கள். 

பி.கு: இது கதை, கற்பனை, மொக்கை, பிளேடு, வயிற்றெரிச்சல், சொம்பு என்று எந்த வகையிலும் நீங்கள் சேர்க்கலாம். மொதல்லே சொன்ன மாதிரி இது கண்ணாடி மாதிரி. எதை நினைச்சு படிக்கிறீங்களோ அதையே பிரதிபலிக்கும். 

பி. கு : கடைசி வரை அந்த டாக்டர் யாருன்னு நான் சொல்லவே இல்லையே? இவர்தான் அவர். நீங்க யாரை நினைச்சீங்க?




முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...