விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

November 30, 2011

வெட்டி அரட்டை - அரசியல், சினிமா, கிரிக்கெட்



அப்போ ஹர்பஜன் இப்போ ஹர்விந்தர்



கடந்த வாரம் முழுவதும் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் மிக பரபரப்பாக ஒளிபரப்பப்பட்ட இந்த சண்டைக்காட்சி பல இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதே போல அரசியலையே சேவையாக செய்துவரும் பல நல்ல மனிதர்கள் வயிற்றில் புளியையும் கரைத்திருக்கிறது.  இது குறித்து செய்தி வெளியிட்ட அனைத்து ஊடகங்களுமே மறைமுகமாக கிண்டலாகவே வெளியிட்டன. ஒரு பெரிய மனிதருக்கு பொது இடத்தில் வைத்து ஒரு இளைஞனிடம் அறை வாங்குவதை போல பெரிய அவமானம் எதுவும் இருக்க முடியாது. ஆனால், "இதற்கெல்லாம் அஞ்சுபவர்களா நாங்கள்? இதை எல்லாம் பார்த்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா? என்று தங்கள் அவமானத்தையும் மறந்து தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வார்கள் சரத் பவார் போன்ற நல்லவர்கள். அதானே? இதையெல்லாம் பார்த்தால் தொழில் பண்ண முடியுமா? என் கவலை எல்லாம் அவரின் பாதுகாப்பு அதிகாரிகளைப் பற்றித்தான். இனி அவர்கள் நிலைமை என்ன? 



கருணாநிதி


செல்வி ஜெயலலிதா அவர்கள் அதிரடியாக விலையேற்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சாபத்தையும் பெற்றுக்கொண்டிருக்கிறார். விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாதுதான். ஆனால் ஒரேயடியாக இப்படி மக்கள் தலையில் கட்டுவது எந்த வகையில் நியாயம்? மக்கள் பணத்தை பிடுங்கி அரசாங்க பானையை நிரப்புவதை விட, அரசாங்க பானையில் இருக்கும் ஆயிரம் ஓட்டைகளை அடைத்தாலே பானை தானாக நிறைந்து விடும். வரி ஏய்ப்பு, ஊழல், கள்ள மார்க்கெட், லஞ்சம், முறைகேடு, மோசடி என்று எல்லா ஓட்டைகளையும் அரசு அடைப்பதாலும், அரசாங்கத்தின் அனாவசிய செலவீனங்களை குறைப்பதாலும் கூட இதை சாத்தியப்படுத்த முடியும். உதாரணமாக, பெட்ரோல், தொலைபேசி, பயணச் செலவுகள், சில்லறை செலவுகள் ஆகியவற்றை குறைக்கலாம். ஆனால் இது எல்லாம் எக்காலத்திலும் சாத்தியமல்ல என்பது மட்டும் நிச்சயம்.


எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 59 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்ததை போல இருக்கிறது தமிழக அரசு. இதை சரியாகப் பயன்படுத்தி அரசியல் ஸ்டண்ட் அடிக்க, திமுகவுக்கு நல்ல வாய்ப்பு. ஆனால் அவர்களோ, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி சொதப்புவது கண்டிப்பாக தோல்வியில்தான் முடியும். இந்நேரத்துக்கு மக்களை சந்திப்பது, ஆதரவு திரட்டுவது, போராட்டம் நடத்துவது என்று நிறைய அரங்கேற்றி இருக்கலாம். வெளியில இருக்கிற கொஞ்சநஞ்ச திமுக பிரமுகர்களையும் கம்பி எண்ண வச்சுட்டா எண்ண பண்றதுன்னு நினைத்திருக்கலாம். பாவம் கலைஞர். அவருக்கு இருக்கிற கவலைகளில் இதை எல்லாம் கவனிக்க எங்கே நேரம் இருக்கிறது? அவரே கனிமொழி வெளியே வருவாரா? மாட்டாரா? என்ற டென்சனில் இருந்தார். அப்புறம் இதெல்லாம் எப்படி ஞாபகத்தில் வரும்? முதலில் வீடு அப்புறம்தானே நாடு?  

ஏழாம் அறிவு



கடந்த சில நாட்களாக ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் படங்களுக்கிடையேயான விளம்பர யுத்தம் பற்றி அறிந்திருப்பீர்கள். கலைஞர் செய்தியையும், ஜெயா செய்தியையும் ஒரே நேரத்தில் கேட்பது போலிருந்தது. நிறைய பத்திரிக்கைகளில் இந்த விளம்பரங்கள் அருகருகில் வெளிவந்து கிச்சு கிச்சு மூட்டின. "இது மசாலா வெற்றி அல்ல ஒரிஜினல் வெற்றி", என்று ஒரு தரப்பும், "தமிழ் மக்களின் ஆதரவு பெற்றி ஒரே படம்." என்று இன்னொரு தரப்பினரும் மாறி மாறி காமெடி செய்தனர். இப்போ என்னடான்னா 80 வருட திரை வரலாற்றிலேயே அதிகம் வசூல் செய்த படங்கள் என்று எந்திரன், சிவாஜிக்கு அப்புறம் ஏழாம் அறிவு படத்தை காட்டுகிறார்கள். இது பொய் என்று சொன்னால் உடனே எல்லோரும், நிறைய வலைதளங்களின் லிங்க்களை கொடுப்பார்கள். இது பொய் என்று நான் சொல்ல போவதில்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். 2008இல் குருவி என்று ஒரு படம் வெளிவந்தது. இந்த படத்தின் 150வது நாள்(!!) விளம்பரத்தில் இதன் வசூல் சிவாஜியை முறியடித்ததாக வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிறகு ஆதவனுக்கும் அதே போல விளம்பரம் வந்தது.


தெளிவா ஒரு சந்தேகம் கேட்கிறேன் (அதெப்படி தெளிவா ஒரு சந்தேகம்? மயக்கம் என்ன பார்த்த எஃபெக்டோ?). திரு உதயநிதி அவர்கள் அப்போ சொன்னது உண்மை என்றால் இப்போ சொல்வது பொய்தானே?  இல்லை, இப்போ சொல்வதுதான் உண்மை என்றால் அப்போ சொன்னது பொய்தானே? ரெண்டாவது சொன்னதுதான் சரி என்றால், அப்போவே பொய் சொன்னவர் இப்போ சொல்ல மாட்டார்னு என்ன நிச்சயம்? இப்போ சொல்வதுதான் பொய் என்றால்  அப்போ சொன்னது மட்டும் எப்படி உண்மை என்று நம்ப முடியும்? (புரியவில்லை என்றால் கோபப்படாமல் மறுபடியும் படிக்கவும்) அநேகமாக ஒரு கல், ஒரு கண்ணாடி எந்திரனையும் முறியடிக்கும் என்று நம்பலாம். சில நண்பர்கள் உதயநிதி, சூர்யாவை வைத்து விஜய்க்கு எதிராக ஏதோ வேலை  செய்வதாகவும் சொல்கிறார்கள். அதன் விளைவே, "ரஜினிக்கு அடுத்தபடியாக சூர்யா." என்பதை நிலைநிறுத்தும் இந்த முயற்சி என்றும் சொல்கிறார்கள். சூர்யா தம்பி,  "உன் வாழ்க்கை உன் கையில்".


"விஜய்யின் 52 படங்களையும் வேலாயுதம் வசூலில் விழுங்கி விட்டது." என்று சொல்கிறார்கள். அப்படியானால் இனி வரும் விஜய் படங்களை கில்லியுடன் ஒப்பிடாமல் வேலாயுத்துடன் ஒப்பிடுவார்கள் என்று நம்பலாம். இல்லை என்றால் மேலே சொன்ன உதயநிதி கதை இதற்கும் பொருந்தும். எங்கள் ஊரில் வேலாயுதத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விட்டார்கள். இன்னும் ஏழாம் அறிவு ஓடிக்கொண்டிருக்கிறது. "இதன் மூலம் என்ன சொல்லவருகிறாய்? எனக்கு தெரியும். என்ன இருந்தாலும் நீ அஜீத் ரசிகன்தானே? அப்படித்தான் பேசுவாய்." என்று நினைப்பீர்கள். நான் அஜீத் ரசிகன்தான். ஆனால் அந்த தியேட்டர் ஓனர் அஜீத் ரசிகன் அல்ல.  

கோச்சடையான்


இந்த படமாவது வருமா? இல்லை இன்னும் கொஞ்ச நாளில் வேறு ஒரு பட அறிவிப்பு எதுவும் வெளிவருமா? என்று தெரியவில்லை. எதுவானாலும் ரஜினி பட அறிவிப்பு வந்தால் அது மகிழ்ச்சியே. அடுத்த அறிவிப்பு வரும் வரை இதுதான் அடுத்த ரஜினி படம் என்ற நம்பிக்கை தொடரும். படம் அடுத்த ஆகஸ்டில் வெளிவரும் என்று சொல்லி இருக்கிறார்கள். எது எப்படியோ, பதிவுலக நண்பர்களுக்கு வாயில் மெள்ளுவதற்கு அவல் கிடைத்து விட்டது. ரஜினி குறித்து பாராட்டி, சிலாகித்து, ரசித்து, கிண்டல் செய்து, மட்டம் தட்டி, வயிற்றெரிச்சலை கொட்டி, காப்பி பேஸ்ட் செய்து, நிறைய பதிவுகள் தேத்தலாம். மறுபடியும் ரஜினியின் ஆரம்பகாலத்தில் இருந்து அவரது நடவடிக்கைகளை கிண்டல் செய்தும், சிலாகித்தும் எழுதலாம். கமான் ஸ்டார்ட்..... 

கொலவெறி


இந்த பாடல் இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆகி விட்டது என்று சொல்கிறார்கள். இந்த பாடலில் இன்னும் ஒரு வரியை கூட கேட்டிராத பாவாத்மாக்களில் நானும் ஒருவன். ஏனோ இந்த பாடலை கேட்கவேண்டும் என்ற எண்ணம் வரவேயில்லை. இருக்கும் இடத்தில் இருந்து யூடியூபை தட்டினால் அடுத்த நொடியே பாடலை கேட்கமுடியும். இருந்தும் தோன்றவில்லை. இதே மாதிரிதான் 'எவண்டி ஒன்ன பெத்தான்' பாடலையும் வெகு நாட்கள் கழித்து கேட்டு காண்டு ஆனேன். பிறகு திரையில் பார்க்கும்போது நன்றாக இருக்கும் என்று நம்பி கண் பார்வை பறிபோனதுதான் மிச்சம். படம் வந்த பிறகு பாடலை ஒளியும் ஒலியுமாக பார்ப்பது என்று முடிவு கட்டி விட்டேன்.  

கிரிக்கெட் 


இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த கடைசி டெஸ்ட் போட்டியும் சரி, நேற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியும் சரி, கடைசி நேரத்தில் இழுத்துக்கோ பறிச்சுக்கோ நிலைமைதான். இப்படியே எல்லா போட்டிகளிலும் நடந்தால் கண்டிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு ஆதரவு கூடும். எனக்கென்னவோ மேட்ச் அந்த நிலைமைக்கு போனதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்தான் காரணம் என்று தோன்றுகிறது. நிறைய மிஸ்பீல்டிங், சொதப்பலான பவுலிங் என்று முதலிலேயே சிரத்தை இல்லாமல் ஆடினார்கள். கிரீஸ் கெய்லையும், டிவைன் பிராவோவையும் ஏன் அணியில் சேர்க்கவே மாட்டேன்கிறார்கள்?


மறுபக்கம் தென்னபபிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் சம அளவில் பலத்தை வெளிப்படுத்தின. இதே மாதிரி சம அளவில் தொடங்கிய இலங்கை பாகிஸ்தான் போட்டிகள், மெல்ல மெல்ல பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விட்டது. பாகிஸ்தான் அணி வீரர்கள் வெகு விரைவாக முன்னேறி வருகிறார்கள் என்பதற்கு இந்த தொடர் ஒரு சாட்சி. அதே நேரம் "இலங்கை அணி ஜெயவர்தனே, சங்கக்காரா மற்றும் மலிங்காவை மட்டுமே நம்பி இருக்கிறதோ?", என்று எண்ணத்தோன்றுகிறது.

இப்போதைக்கு வெட்டி அரட்டை அவ்வளவுதான்.... 

உங்களது கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

November 23, 2011

மழலைகள் உலகம் - தொடர் பதிவு


இந்த தொடர் பதிவுக்க அழைத்த நண்பரே சீனுவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மழலைகள் பற்றி என்ன எழுதுவது என்று யோசித்த போது வழக்கம்போல கொஞ்சம் சொந்த அனுபவங்களையும், கொஞ்சம் அறிவுரையும் (வாத்தியார் என்றாலே இப்படித்தானா?) கூறலாம் என்று முடிவு கட்டினேன். 

என் குழந்தைப்பருவம்.

என் குழந்தைப்பருவம் உண்மையிலேயே மிக ஜாலியான ஒரு பருவம். எங்கள் வீட்டில் பிள்ளைகள் எண்ணிக்கை மிக அதிகம். அதே போல என் தந்தையின் உடன் பிறந்த இரண்டு அத்தைகள், ஒரு சித்தப்பா என்று அவர்களின் பிள்ளைகளும் அதிகம். ஏதாவது பண்டிகை, திருவிழா என்றால் எங்கள் வீடே குழந்தைகளால் நிரம்பி இருக்கும். ஒன்றாக விளையாடுவது, பட்டாசு வெடிப்பது, பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது என்று செம கலாட்டா நடக்கும். அதே போல எங்கள் தெருவிலும் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் அதிகம். நாங்கள் வசிக்கும் காம்பவுண்டில் மட்டுமே ஒரு கிரிக்கெட் அணிக்கு தேவையான அளவுக்கு ஆண் குழந்தைகள் உண்டு. விடுமுறை விட்டு விட்டால் தெருவே கலங்கி விடும். பல பல்புகள், பாத்திரங்கள், ஓடுகள் நொறுங்கும்.


நான் குறைந்த காலத்திலேயே பேச துவங்கி விட்டதால் மிக திருத்தமாக பேசுவேனாம். ஆகவே நான் மழலை பேசியது மிக குறைவு. அதே போல சிறிய வயதிலேயே நிறைய விஷயங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டதால் அவை என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. பெரும்பாலான பெரியவர்கள் "குழந்தைக்கு என்ன புரியப்போகிறது?", என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உள்வாங்கும் திறன் மிக அதிகம். ஆகவே அப்போது புரியாவிட்டாலும் சிறிது காலம் கழித்து அதனை புரிந்து கொள்வார்கள். அதே போல குழந்தைகள் தமக்கு நேர்ந்த அவமானங்கள், தோல்விகள் ஆகியவற்றை மறப்பதில்லை. அதில் இருந்து வெளியே வந்து விட்டாலும், அவை மாறாத தழும்புகளாக இப்போதும் மனதில் இருக்கிறது. 

அடுத்த தலைமுறை

எனக்கு அடுத்த தலைமுறை என்பது என்னை விட மிக புத்தி கூர்மை உள்ளதாக உள்ளது. அவர்களுக்கு தேவையான விஷயத்தை நாம் அளித்தால் அவர்களே அதை எளிதில் உள்வாங்கி கொள்கிறார்கள். ஆனால் பொறுமையும், மன உறுதியும் குறைவாக இருக்கிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறார்கள். இதற்கு காரணம் நம் சமூகமே என்பதில் சந்தேகமே இல்லை. ஆசிரியர் என்பதாலேயே இளைய தலைமுறையோடு பழகும் வாய்ப்பு என்பது எனக்கு மிக அதிகம். கல்லூரி படிப்பை முடித்து 7 ஆண்டுகள் ஆன பிறகு, இன்னும் கல்லூரி பருவத்திலேயே இருப்பது என் வரப்பிரசாதம். இவற்றில் இருந்து நான் கற்றுக்கொண்டது, "எங்களை எங்கள் போக்கில் விடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.", இதுதான் இன்றைய தலைமுறையின் மன நிலை. இது சரிதான். ஆனால் அதே சமயம், மனப்பக்குவம் மற்றும் மன உறுதி குறைவாக உள்ளது. இது குழந்தை பருவத்தில் இருந்தே சரி செய்ய வேண்டியது 

பெற்றோர்களுக்கு.... 


ஒரு குழந்தை சிறு வயதில் இருந்தே பெருத்த ஏமாற்றங்களை சந்திக்காமல் இருந்தால் அது நல்ல மன நிலையுடன் வளர வாய்ப்பிருக்கிறதாம். அதே போல சிறு வயதில் அதன் மனதில் பதியும் எந்த ஒரு பாதிப்பும் பிற்காலத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே இதற்கு தக்கவாறு நடந்து கொள்வது பெற்றோரின் கடமைதான்.

பத்து வயதுக்குள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளை படிக்கும் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் பல மடங்கு உயரும் என்று எங்கோ படித்த நினைவு. ஆகவே நாம் குழந்தைகள் வழக்கமாக கற்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு, மேலும் சில மொழிகளை கற்கும் வாய்பை ஏற்படுத்தி கொடுப்பது நம் கடமை. 

தற்காலத்தில் பெரியவர்களிடமே படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. ஆனால் படிக்கும் பழக்கம் என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் என்பது அனுபவஸ்தர்களுக்கே தெரியும். ஆகவே நம் குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது நம் கடமை. 

சில பெற்றோர்கள் நாம் குழந்தைகள் படிப்பை தவிர்த்து, தனித்திறன்களிலும் பங்கு பெற்று பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான். அப்புறம், "எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு படிப்பை கவனி.", என்று சொல்லி விடுவார்கள். இது முற்றிலும் தவறு. நான் மேடையில் நாடகம், மிமிக்ரி என்று தொடங்கிய பிறகு என் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால் அதன் பிறகுதான் அதிகரித்தது. இவை யாவும் நம் மனதை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும் விஷயங்கள். ஆகவே படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. இதனால் நம் படிப்பு பாதிக்காது என்பதும் நான் அனுபவத்தில் உணர்ந்தது. 

மொத்தத்தில் நம் கவலைகள் மறக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. நம் பொழுதை குழந்தைகளோடு செலவிட்டாலே போதும். அந்த கணத்தில் நாமும் நம் மழலை பருவத்திற்கு சென்றுவிடுவோம். மழலைகள் உலகம் மகத்தானது. இந்த பதிவை யார்வேண்டுமானாலும் தொடரலாம். எல்லோருக்குமே மழலை உலகம் பற்றிய கருத்துக்கள் இருக்குமல்லவா?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>

November 17, 2011

அஜீத் என்ற அமெரிக்க கைக்கூலி


ஹிட்லரை பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கேட்பவரை உடனே பாதித்துவிடும். அது எந்தவிதமாக என்பது வேறுவிஷயம். அவரது நோக்கம் கேட்பவர் தன் வார்த்தைகளால் உலுக்கப்பட வேண்டும். அதுதான் முக்கியம். இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லோருமே கொஞ்சம் துணுக்குற்றிருப்பீர்கள். எனக்கு அதுதான் வேண்டும். எனக்கு மட்டுமல்ல பதிவுலகில் பெரும்பாலானோருக்கு இதுதான் வேண்டும். பதிவுலகிற்கு வந்து கொஞ்ச நாளிலேயே நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ஒரு வார்த்தையை பார்த்தவுடன், அதை சொன்னவர் யார்? என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சரி இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள்? யாரும் நினைவுக்கு வரவில்லையா? சரி விடுங்க. அடுத்த பத்திக்கு போகலாம். 


நான் பதிவுலகிற்கு வரும் முன்னரே கம்யூனிசம் மீது கொஞ்சம் ஆர்வம் இருந்தது. அதை பற்றி தெரிந்து கொள்ள பல முயற்சிகள் எடுத்தேன். அதன் பின்னர் பதிவுலகில் நிறைய தோழர்கள் எழுதுகிறார்கள் என்றவுடன், அது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் எண்ணி மகிழ்ந்தேன்.சில பல பதிவுகளை படிக்க தொடங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் இல்லாமல் போய்விட்டது. சொல்லப்போனால் இப்போதெல்லாம் கம்யூனிசம் என்றால் ஏதோ தீவிரவாதிகளின் சித்தாந்தம் என்பது போல தோன்றுகிறது. இது இவர்களின் பிரச்சனையா? இல்லை கம்யூனிசமே இப்படித்தானா? இல்லை எனக்குத்தான் பிரச்சனையா? என்று தெரியவில்லை. என்னை மாதிரியான ஆட்களுக்கென்றே பிரேத்யேகமாக ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் "பொதுபுத்தியில் உறைந்து போன நடுத்தர வர்க்கம்". இந்த வார்த்தைகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு "தெருநாயின் புத்தியை உடைய", என்றே காதில் கேட்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னை ஒரு ஈனபிறவியாக நினைக்க வைத்த பெருமை பதிவுலக காம்ரேடுகளையே சாரும். என்னை பொறுத்தவரை ஒருவன் கீழ்நிலையில் இருக்கிறான் என்றால் அவனுக்கு போதிய அறிவை கற்பித்து அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர மிகுந்த பொறுமை வேண்டும். அந்த மாதிரி கீழ்நிலையில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு இவர்கள் எழுதும் வார்த்தைகள் வெறும் நக்கல் நையாண்டியாகவும், கோபமேற்றுவதாகவுமே உள்ளது. இதுதான் அவர்களது எழுத்தின் நோக்கமா?


சமீபத்தில் நடிகர் அஜீத் அவர்களைப்பற்றிய ஒரு கடுமையான விமர்சன கட்டுரையை ஒரு தளத்தில் அவர்கள் எழுதி இருந்தார்கள். அதனை படித்த கோபத்தில்தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு முன்னால் சூர்யா பற்றியும் எழுதி இருந்தார்கள். இது மட்டுமல்லாமல் அப்துல்கலாம், உதயமூர்த்தி உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள் பற்றியும், அவ்வப்போது அருவருக்கத்தக்க வார்த்தைகளை நிரப்பி கட்டுரைகள் எழுதுவது வாடிக்கை. அந்த வகையில் அஜீத் பற்றி எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையில் அவர்களது அடிப்படை சித்தாந்தக் கருத்துக்களையும் சேர்த்திருந்தார்கள். இந்த கட்டுரையை படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம், அஜீத் செய்தது சரியா தவறா? அடுத்தவருக்கு அன்பின் வெளிப்பாடாக விருந்து படைக்க வேண்டுமானால் கூட அதற்கு தோழர்களின் சம்மதம் வாங்கவேண்டும் போலிருக்கிறது. சமூகத்தில் பிறருக்கு நல்லது செய்பவனுக்கேன்றே சில தகுதிகள் வைத்திருக்கிறார்கள். அவன் பணம் சம்பாதிக்கக்கூடாது, சிகப்பாக இருக்கக்கூடாது, குறிப்பாக இந்துவாகவோ,பார்ப்பனராகவோ இருக்கக்கூடாது. அப்படி உதவி செய்தாலும் அதை வெளியே சொல்லக்கூடாது. ஆனால் மேற்படி நடிகர் ஒரு சிகப்பு சட்டைக்காரராக இருந்திருந்தால், மேலே உள்ள தகுதிகள் எதுவும் செல்லாது. அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த ஜாதியை, எந்த மதத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சும்மா வந்து கொடி பிடித்தாலே அவரது போட்டோவோடு, "எல்லோராலும் 'தல' என்று அன்பாக அழைக்கப்படும் தோழர் அஜீத்குமார்!!", என்று கட்டுரை எழுதுவார்கள். இதுதான் கம்யூனிசமா? எனக்கு தெரியவில்லை. உயர்சாதியில் பிறந்ததாலேயே ஒருவன் அயோக்கியனாகத்தான் இருப்பான் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கருத்து.


"ஹிந்துவாக பிறந்தவனுக்கு தன்மானம் என்பதே கிடையாது.", என்கிற நோக்கில் இவர்கள் எழுதும் கட்டுரைகள் விழிப்புணர்வுக்கு மாறாக, கோபத்தையே உண்டு பண்ணுகிறது. இவர்களின் கட்டுரை எப்போதுமே சிறுபான்மையினரை நோக்கியே இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும், அங்கே சிறுபான்மையினரை கவர்ந்திழுப்பதே இவர்களது நோக்கம். ஏனென்றால் அவர்கள்தான் கொஞ்சம் சீண்டினாலும் சிலிர்த்து எழுந்து விடுவார்கள். முதலில் இவர்களது கட்டுரைகளில் கொஞ்சம் நியாயம் இருப்பது போல தென்பட்டாலும், இவர்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து எழுதுவது, அதனை எதிரியாக பாவிப்பவர்களை கவர்வதற்காக, என்று அப்பட்டமாக தெரிகிறது. அதே போல, "இந்த சமூகத்தில் நல்லது செய்பவன் கண்டிப்பாக கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும். அதிலும் அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும்.", என்ற நோக்கம் இவர்களது கட்டுரைகளில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு கட்டுரையிலும 'பார்ப்பன' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தவறுவதே இல்லை. சரி அவர்கள் சித்தாந்தப்படி எண்ணவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும். சம்பந்தப்பட்ட கட்டுரை படிப்பவர்களை சிந்திக்க வைப்பதை விட, வெறியேற்றவே செய்கிறது. குறிப்பிட்ட மனிதரை, சாதியை, எதிரியாக பாவிப்பவர்கள் தங்களது வயிற்றெரிச்சலை போக்கி கொள்ளும் இடமாகவே இருக்கிறது. படிப்பவர்கள் எந்த மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று இந்த மாதிரி எழுதப்படும் கட்டுரைகளுக்கு வரும் கருத்துரைகளைப் படித்தாலே தெரியும். இதுதான் அவர்களுக்கு வேண்டும். நாம் நினைப்பது போல புதிய சமுதாயம் மலரவேண்டும் என்பது அவர்களது நோக்கம் அல்ல. அவர்களின் நோக்கம் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்குவதுதான். அவர்களே பல இடங்களில் தங்களை நக்சல் அமைப்பு என்று பெருமைப்படக் கூறிக்கொள்கிறார்கள். 


இது போல சிகப்பு சாயம் பூசிக்கொண்டு மறைமுகமாக இந்தியாவில் பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவை புரட்சி என்ற பெயரில் நாட்டில் இனத்தின், மதத்தின், வர்க்கத்தின் பெயரால் குழப்பம் விளைவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. நாமெல்லாம் நினைப்பது போல தீவிரவாதிகள் தங்களுக்கென்று வைத்திருக்கும் வலைத்தளங்கள் அனைத்துமே, "நாங்கள் தீவிரவாதிகள்", என்று சொல்லிக்கொள்வதில்லை. "நாங்கள் சமூக ஆர்வலர்கள். புதிய சமுதாயத்தை மலரச்செய்வோம்.", என்றே கூறிக்கொள்கின்றன. நம் ஆழ்மனதில் உள்ள ஆதங்கங்களை கண்டு பிடித்து, அதற்கு புது அர்த்தம் கற்பித்து, நம்மை மூளைச்சலவை செய்து, ஒரு தேச விரோதியாக மாற்றுவதே இவர்களின் நோக்கம். இவர்கள் பின்னால் செல்வதும், ஒரு சாதி சங்கத்தலைவர் பின்னால் செல்வதும் ஒன்றுதான். இவர்கள், "இன்றுவரை இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது." என்று சொல்லி வருகிறார்கள். உண்மைதான். எல்லா நாடுகளுமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்புவரை கிடையாதுதான். அதற்காக அனைத்தையும் பிரித்து விட்டால் எஞ்சி இருப்பது சூடுகாடுகள் மட்டுமே. நண்பர்களே பூணூல் போட்டிருககும் எல்லாம் பார்பனியம் அல்ல. பல நேரங்களில் அது சிகப்பு சட்டையும் போட்டிருக்கும் என்பதை மறவாதீர்கள்.


பின்குறிப்பு: இந்த கட்டுரை எழுத. நான் அமெரிக்கா உள்ளிட்ட எந்த முதலாளித்துவ நாட்டிடமும், காங்கிரசிடமும், இந்து முன்னணி உள்ளிட்ட எந்த இந்துத்வா அமைப்பிடமும் கூலி எதுவும் பெறவில்லை. மேலும் சினிமாக்காரன் பின்னால் செல்லும் விசிலடிச்சான் குஞ்சும் அல்ல. நான் சாதாரண, தெருநாய் புத்தி உள்ள சாரி, பொதுபுத்தி உடைய நடுத்தர வர்க்கம். அவ்வளவுதான். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

தன்னம்பிக்கைக்கு மறுபெயர் இவர்தானோ?


நான் இரண்டு மனிதர்களின் பெயர்களை கூறுகிறேன். உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள். ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் மற்றும் ஜீன் டொமினிக் பாபி. முதலாவது மனிதரை பெரும்பாலானோர் கேள்விபட்டிருப்போம். நான் முதலாமவரை பற்றி தேடும்போது இரண்டாமாவரை பற்றி தெரிந்து கொண்டேன். சரி இரண்டு பேரை பற்றியுமே கூறி விடுகிறேன்.


ஜீன் டொமினிக் பாபி மிகவும் புகழ் பெற்ற பிரெஞ்சு பத்திரிக்கையாளர். தனது 43ஆவது வயதில் பக்கவாதத்தால் எல்லா பக்கமும் தாக்கபட்ட அவர் 20 நாட்கள் கோமாவில் இருந்திருக்கிறார். கண்விழித்து பார்த்தால், அவரால் தன் உடலின் எந்த பாகத்தையுமே அசைக்க முடியவில்லை. கண் இமைப்பதை தவிர வேறு எதுவுமே அவரால் செய்ய முடியாது. இந்த நோய்க்கு லாக்டு இன் சிண்ட்ரம் (Locked in syndrome) என்று பெயர் சொல்கிறார்கள். அதாவது ஒருவர் உடலில் தன்னார்வ தசைகள் எல்லாம் செயலிலந்து போகுமாம். அனிச்சை செயல்கள் மட்டுமே சாத்தியம். சிந்திக்க முடியும். ஆனால் பேசவோ, எழுதவோ முடியாது. கிட்டத்தட்ட உயிருள்ள ஒரு தாவரம் மாதிரி.


இந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆசை. இந்த நிலை ஏற்படுவதற்கு முன்னரும் பின்னரும் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஒரு புத்தகம் எழுத விரும்பினார். வெறும் கண்ணாசைவை மட்டும் வைத்து எழுதியும் முடித்தார்.  இவருக்கு உதவியாக இருந்தவர் கிளாட் மெண்டிபிள் என்னும் பெண். பிரெஞ்சு எழுத்துக்களை வரிசையாக வாசிப்பார் கிளாட். குறிப்பிட்ட எழுத்து வந்ததும் கண்ணாசைப்பார் பாபி. அதை எழுதிக்கொள்வார். வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி பயன்படும் எழுத்துக்களை முதலில் எழுதி வைத்திருப்பாராம். இப்படியே ஒரு வார்த்தை, பிறகு வாக்கியம் என்று எழுதுவார்கள். இந்த புத்த்கம் எழுத பத்து மாதங்கள் ஆனதாம். இந்த புத்தகம் வெளிவந்து ஒரே வாரத்தில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்று தீர்ந்தது. புத்தகம் வெளிவந்த மூன்றாவது நாளில், தன் கடைசி ஆசை நிறைவேறிய மன நிறைவில், இமைத்து கொண்டிருந்த கண்களை நிரந்தரமாக மூடினார் பாபி.

ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் என்பவர் புகழ்பெற்ற பிரபஞ்ச அறிவியல் அறிஞர். பதின்ம வயதில் இவரை மோட்டார் நியூரான் டிசீஸ் (Motor neuron disease) என்னும் நரம்பியல் நோய் தாக்கி இருக்கிறது. நடக்கும்போது நிலை தடுமாறி போத்தென்று தரையில் விழுந்து பலமுறை தலையில் அடிபட்டிருக்கிறது. 21 வயதில் நோய் முழுமையாக தாக்க, டாக்டர்கள் இன்னும், "இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே ஹாக்கிங்க்ஸ் உயிரோடு இருப்பார்.", என்று கூறி விட்டனர். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக, கொஞ்சம் கொஞ்சமாக தன் உடல் இயக்கத்தை இழக்க தொடங்கியிருக்கிறார். தன் 40 வயதில்  ஒட்டுமொத்தமாக உடலில் இயக்கம் நின்றுவிட்டது. இடையில் நிமோனியா வேறு தாக்க, அதற்கு கொடுத்த கடுமையான வைத்தியம் காரணமாக பேச்சும் நின்றுபோனது. "ஆனால் மூளை இயக்கத்தை நிறுத்தவில்லையே. அது போதும்!"., என்று நினைத்தவர் தன் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதையும், புத்தகங்கள் எழுதுவதையும் மட்டும் நிறுத்தவே இல்லை.


ஸிபீச் சிந்தஸைசர் (Speech synthesizer) என்ற கருவியை வாங்கி தாடையில் பொருத்திக்கொண்டார். இது நம் தாடை அசைவை வைத்து வார்த்தைகளை ஒலியாக மாற்றி தரும் கருவி. கேட்க நன்றாகத்தான் இருக்கும். மிகவும் வலியை தரும் ஒரு பேசும் முயற்சி. இதற்கு பேசாமேலேய இருந்துவிடலாம் என்று நினைக்க தோன்றும். மேலும் நாம் நினைக்கும் வார்த்தையை உருவாக்குவதற்குள் தாவு தீர்ந்து விடும்.  இந்த நிலையிலும் மனம் தளராது பல கருத்தரங்குகளிலும், மேடைகளிலும் தோன்றி உரையாற்றி இருக்கிறார் ஸ்டீபன். தன் பேச்சுக்களை முதலிலேயே பேசி ரெக்கார்ட் செய்து கொள்வாராம். ஆனால் லைவ் கலந்துரையாடல்களில் அது சாத்தியமல்ல. அப்போதுதான் அவர் பேச எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது விளங்கும்.  ஒரு முறை ஒரு கேள்விக்கு பதில் அளிக்க சுமார் 7 நிமிடங்கள் எடுத்துக்கொண்டாராம்.


இவர் எழுதிய புத்தகங்கள், A Brief History of time, Black Holes and Baby Universes போன்றவை உலகப்புகழ் பெற்றவை. தற்போது உடல் நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இவர் கொஞ்சம் கொஞ்சமாக நலமடைந்து வருகிறார். "இழப்பதற்கு ஒன்றுமில்லை. பெறுவதற்கு இந்த பொன்னுலகமே இருக்கிறது.", என்று சொன்னவர் காரல் மார்க்ஸ். இவரது வார்த்தைகள் போராட்டத்தின் உன்னதத்தை சொல்கின்றன. அதற்கு இந்த இருவரை தவிர வேறு சிறப்பான உதாரணம் யாராக இருக்க முடியும்? இவங்களுக்கு முன்னால, நமக்கு இருப்பதெல்லாம் என்னங்க கஷ்டம்?

கார்ல் மார்க்ஸ் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. தோழர்களுக்கு எதிராக பொதுபுத்தி கட்டுரை ஒன்று எழுதலாம்னு நினைச்சேன். மறந்துட்டேன். அப்புறம் எழுதுறேன்.

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

முழுவதும் படிக்க >>

November 15, 2011

காக்க வைப்பது, காத்திருப்பது - எது சுகம்?


இது கண்டிப்பாக காதல் சம்பந்தமான பதிவு அல்ல. சொல்லப்போனால் அதற்கு எதிரான பதிவு. நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் உண்டு. அதாவது நம்மிடம் இல்லாத ஒரு நல்ல விஷயத்தை அடுத்தவரிடம் எதிர்பார்ப்போம். சிலருக்கு நம்மிடம் அந்த குணாம்சம் இல்லை என்றே தெரியாது. பலருக்கு  தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல், அடுத்தவரை கடிந்து கொள்வோம். சமீபத்தில் படித்த ஒரு பொன்மொழி, "நம்முடைய தவறுகளுக்கு நாமே வக்கீல் ஆகிறோம், அடுத்தவரின் தவறுகளுக்கு நாமே நீதிபதி ஆகிறோம்." இதுதான் எல்லா இடத்திலும் நடக்கிறது. இதில் ஒரே ஒரு குணாம்சத்தை பற்றி மட்டும் எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அது நேரம் தவறாமை. எல்லோரிடமும் இருக்கவேண்டிய, பலரிடம் இல்லாத இந்த குணம்தான் என்னை பொறுத்தவரை ஒருவரிடம் இருக்கவேண்டிய தலையாய குணம். 


தனக்கு வந்தால்தான் தெரியும்.... 


சந்திப்புகள், நிகழ்வுகள், விழாக்கள் ஆகிய பல இடங்களுக்கு நான் செல்வதுண்டு. அப்படி செல்லும்போது தவறாமல் நடக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அந்த இடத்தில் நான்தான் முதல் ஆளாக இருந்திருக்கிறேன். குறித்த நேரத்திற்கு சுமார் 5 நிமிடம் முன்னமே சென்று விடுவதால், பத்தில் இருந்து 30 நிமிடம் வரை காத்திருந்த அனுபவம் எனக்கு அதிகம் உண்டு. நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் உண்டு. லேட்டாக வந்தவர்கள், "உன்னுடைய கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?" என்று நக்கல் விட்டதும் உண்டு. காத்திருத்தல் என்பது எவ்வளவு கடுப்பை கிளப்பும் என்பதை நீங்கள் உணர வேண்டுமானால், ஒரு முறை ஏதாவது செல்போன் சேவையின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு பஸ்ஸோ, ட்ரெயினோ குறித்த நேரத்தில் வரவில்லை என்றால், அந்த வண்டியை ஓட்டுபவரில் இருந்து, அந்த துறை மந்திரி வரை கிழித்தெடுப்போம். காலையில் மனைவி டிபன் ரெடி பண்ண கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டால் அவளோடு சேர்த்து அவளின் பெற்றோரையும் தாளிப்போம். காத்திருத்தலின் அவஸ்தையை உணரும் நாம், அடுத்தவரை காக்க வைக்கும்போது உணர்வதில்லை. அதுதான் இங்கே பிரச்சனை. கீழே இருக்கும் படத்தை பார்த்தாலே சாஃப்ட்வேர் துறையில் இருக்கும் பலருக்கு பீபி எகிறும். அது போலத்தானே அடுத்தவருக்கும் இருக்கும்?  



கால தாமதம் ஏன்?

என் நண்பர் ஒருவர் பின்லாந்து சென்ற அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். வெள்ளைக்காரனுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி கூறினார்.  வெள்ளைக்காரன் இந்த வேலையை நம்மால் குறித்த நேரத்துக்குள் முடிக்க முடியாது என்று நினைத்தால், ஒன்று மறுத்து விடுவான் இல்லை அதற்கான காரணங்களை கூறுவான். நம்மாட்கள் ஒன்றுமே பேசாமல் அதை வாங்கி கொண்டு, பின்னர் தலையை சொறிந்து கொண்டு நிற்பார்கள். "எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்",னு வடிவேலு காமெடியா சொன்னாலும், அதுதான் உண்மை. தவறான திட்டமிடல்களே கால தாமதத்தின் முக்கிய காரணி. ஒரு செயலை செய்வதற்கு முன்னரே, அதற்கான காலக்கெடு, தேவையான ஆதாரங்கள் ஆகியவை பற்றிய தெளிவான திட்டமிடல் வேண்டும். சரியாக திட்டமிட்டு, அதற்கெற்றார்போல சமயோஜித செயல்பாடுகளால் ஒரு செயலை வெற்றிகரமாக குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க முடியும். 


கால தாமதத்தின் இன்னொரு காரணம் அலட்சியம். ?கொஞ்சம் லேட்டானா என்ன குடியா முழுகி போயிடும்?", என்ற எண்ணம் பலருக்கு உண்டு. இது பெரும்பாலும் அந்த செயல்களில் சம்பந்தம் இல்லாதவர்களுக்கே வரும். அரசு அலுவலர்கள், உயரதிகாரிகல் ஆகியோர் இந்த மனப்பான்மையோடு செயல் படுவதே எந்த வேலையும் கால தாமதமாக நடப்பதின் முதல் காரணம். இந்த கால தாமதத்தால் தனக்கு எந்த பாதிப்பும் கிடையாது எனும்போது அவர்களுக்கு ஒருவித அலட்சிய மனப்பான்மை உண்டாகிறது. சரியான திட்டமிடல் இல்லாமல் உண்டாகும் கால தாமதம் கூட ஒருவருக்கு மிகச்சிறந்த அனுபவ பாடத்தை கொடுக்கும். ஆகவே அவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் அலட்சியத்தால் கால தாமதம் செய்பவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை. ஒரு நாள் அதே அலட்சியம் அவர்களை நோக்கி திரும்பும் வரை.... 

காலம் தவறாமல் இருப்பது எப்படி? 


என்னை பொறுத்தவரை காலம் தவறாமை என்பது தலைமை பண்புகளில் மிக முக்கியமானது. ஒரு இடத்துக்கு தலைவன் சரியான நேரத்துக்கு வந்தால்தான், அவனுக்கு கீழே இருப்பவர்களும் வருவார்கள். காலம் தவறாமை என்பது ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இருக்கும் ஈடுபாட்டின் அளவுகோல். ஆகவே உங்களுக்கு கீழே இருப்பவர்களிடம் சரியாக வேலை வாங்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் காலம் தவறாமல் இருக்க பழகி கொள்ளவேண்டும். பிரச்சனை இந்த இடத்தில் இருந்தே தொடங்குவதால், இதை சரி செய்துவிட்டாலே எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெறும். 

முக்கியமாக சரியான திட்டமிடல் வேண்டும். அதற்கு கொஞ்சம் காமன் சென்ஸூம், கொஞ்சம் அனுபவ அறிவும் இருந்தாலே போதும். ஆறு மணி வண்டிக்கு, போன தடவை ஐந்து மணிக்கு கிளம்பியதால், வண்டியை தவறவிட்டோம் என்று தெரிகிறது. இந்த முறை கொஞ்சம் முன்கூட்டியே கிளம்ப வேண்டும் என்று உணர்வதற்கு குறந்த பட்ச காமன் சென்ஸ் போதும். 

காலம் தவறாமைக்கு மற்றொரு முக்கிய எதிரி ஒத்தி போடுதல். எந்த ஒரு செயலையுமே தள்ளி போட்டால், கண்டிப்பாக அது காலதாமதத்தில் கொண்டு சேர்த்து விடும். என் நண்பன் கரெக்டாக வண்டிக்கு கிளம்பும்போதுதான், செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணனும் என்று சொல்வான். அந்த அவசரத்தில் ரீசார்ஜ் கடையை தேடி அலைந்து, டென்ஷன் ஆவது வேறு கதை. குறைந்த பட்சம் கிளம்பும் முன்னரே ரீசார்ஜ் செய்திருக்கலாம். இதுபோல டாகுமெண்ட் ஜெராக்ஸ் எடுப்பது, சட்டை இஸ்திரி செய்வது என்று சின்ன சின்ன வேலைகளை நாம் ஒத்திப்போடுவதால், அவை எல்லாம் கடைசி நேரத்தில் கியூவில் நின்று நம்மை பயமுறுத்தும். 

அடுத்தவர் இடத்தில் நம்மை பொருத்தி பார்த்தல், ஆங்கிலத்தில் Standing on Others Shoes   என்று சொல்வார்களே. இதற்கு பெரிய மனது வேண்டும். ஆனால் இந்த பண்பு வந்து விட்டால் கண்டிப்பாக காலம் தாழ்த்த மாட்டோம். ஒட்டு மொத்தத்தில் சுறுசுறுப்பு என்கிற மருந்தே தாமதம் என்ற வியாதியை வரவிடாமல் தடுக்கும் தடுப்பூசி. என்னை பொறுத்தவரை நோய்க்கு மருந்து உண்பதை காட்டிலும், தடுப்பூசி போடுவதே புத்திசாலித்தனம். 

உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க..... 

முழுவதும் படிக்க >>

November 11, 2011

அம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு

அம்மான்னா சும்மா இல்லடா....


ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்டே வருவார். பொதுவாகவே ராமராஜனுக்கு இளையராஜாவின் குரல் மிகப்பொருத்தமாக இருக்கும். இந்தப்பாடலிலும்தான். பாடல் முழுவதும் தாயின் பெருமைகளை மிக உருகி பாடி இருப்பார் இளையராஜா. அதற்கேற்றார் போலவே லிப்ஸ்டிக் உதடுகளை அசைத்து பாடி இருப்பார் ராமராஜன். சரிதான் "அம்மான்னா சும்மா இல்லடா" பாடல் எல்லா அம்மாக்களுக்கும் பொருந்துகிறதோ இல்லையோ, முதல்வருக்கு நன்றாகவே பொருந்துகிறது. நம்ம மக்கள்கிட்ட இருக்கிற கெட்ட குணமே,  "இவரை விட அவர் நல்லது செய்வார்." என்று மாறி ஓட்டுப்போடுவது, அவர் பதவிக்கு வந்த கொஞ்ச, "நாளில் நாம் செய்தது சரியா?" என்று குழம்புவது, கடைசியில், "அவரே தேவலாம்." என்று அங்கே ஓட்டுப்போடுவது.


ஆனால் தப்பி தவறி கூட வேறு யாருக்கும் ஓட்டுப்போட்டு விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே தோல்வியை பற்றி எந்த கவலையுமே இல்லாமல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏதோ விடுமுறை கிடைத்ததை போல, சும்மா அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருப்பது. பின் அடுத்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையாக 'உழைப்பது' என்று திராவிட கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. "கடந்த ஐந்தாண்டுகளில் கலைஞர் பல சாதனைகள் செய்தார்." என்றும், "இதெல்லாம் ஒரு சாதனையா?" என்றும் பலர் வாதாடுகிறார்கள். என்னை பொறுத்தவரை, கலைஞர் தான் செய்த ஒவ்வொன்றையுமே, மிக கவனமாக செய்திருக்கிறார். அதாவது பிற்காலத்தில் தன்னை ஒரு சரித்திர நாயகனாக எல்லோரும் நினைக்க வேண்டும் என்பதற்காக செய்தது போலவே இருந்தது (இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு என்ன தெரியவா போகிறது?). ஆனால் ஆட்சியில் அமர்ந்த மறுகணமே அம்மா, "இந்த வரலாற்று சுவடுகள் எதிர்கால சந்ததியினருக்கு தெரியக்கூடாது." என்ற முனைப்பில் அனைத்தையுமே அழிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போ மக்களுக்கு எதுவுமே செய்ய மாட்டாங்களா? "மக்கள் கெடக்குறாங்க முட்டாபசங்க. என்ன நல்லது பண்ணாலும் அடுத்த தேர்தலில் கட்சி மாறித்தான் ஓட்டு போடுவாங்க. அதுக்குள்ள இவர் பண்ண எல்லாத்தையுமே அழிச்சுடனும்."  அம்மான்னா சும்மா இல்லடா....

 தரம் தாழ்ந்த பகுத்தறிவு


"பகுத்தறிவு என்றால் என்ன?" என்று இன்று யாருக்குமே சரியாக தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. ஆனால் பகுத்தறிவுக்கே பாசறையாய் விளங்கும் ஒரு இயக்கம் பல ஆண்டுகளாக பகுத்தறிவுக்கு பல இலக்கணங்களை கூறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இலக்கணம் அவர்களாலேயே மாற்றப்படுவதால், தற்போது "பகுத்தறிவு என்றால் என்ன?" என்பதிலேயே எல்லோருக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. சரி இதெல்லாம் பழைய கதை. கொஞ்ச நாளைக்கு முன்னால் "கலாநிதிமாறன் பின்லாந்துக்கு ஓட்டம்!!" என்று, சில பார்ப்பன ஏடுகள் செய்தி வெளியிட்டிருத்தன அல்லவா?. வழக்கமாக இந்த மாதிரி ஏடுகளில் வரும் செய்திகளுக்கு பாசறையின் போர்வாள் ஏட்டில் பதில் கூறப்பட்டிருக்கும். அது உண்மையோ பொய்யோ என்பது அப்புறம்தான். அதே போல இந்த செய்திக்கும் பதில் கூறப்பட்டிருக்கிறது. வழக்கம்போல பாப்பன ஏடுகளை நடத்துபவர்களை வாங்கு வாங்கென்று வாங்கி இருக்கிறார்கள். கட்டுரையை எழுதியவர் ஒரு படி மேலே சாரி கீழே போயி, அந்த ஏடுகளை நடத்துபவர்களின் தாயின் கற்பின் மீதும் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.


கலாநிதி பின்லாந்து சென்றுள்ளார் என ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ள அந்த எழுத்தாளரும், அதனைப் பிரசுரித்த ஏடும், அதனை வெளியிட்ட வெளியீட்டாளரும், அதன் ஆசிரியரும், அதன் தலைவரும் உத்தமி ஒருத்திக்குப் பிற்ந்திருந்தால் - கலாநிதி மாறன் பின்லாந்து சென்றதை நிரூபிக்க வேண்டும்! செய்வார்களா? நிரூபித்துக்காட்டி தாங்கள் உத்தமிக்குப் பிறந்தவர்கள் என்பதை நிலை நிறுத்துவார்களா? பத்திரிகை இருக்கிறது; பேனா இருக்கிறது என்பதற்காக எதையும் எழுதலாம் என்ற ஈனபுத்தியாளர்கள், கலாநிதி மாறன் பின்லாந்து சென்றதை நிரூபித்து - தங்கள் தாயின் பத்தினித் தனத்தை நாடறியச் செய்வார்கள் என நம்புவோமாக!
(Courtesy: www.tamilleader.in)


அப்படியானால் உண்மையிலேயே கலாநிதி வெளிநாடு செல்லவில்லையா? அதுவும் இல்லை. அவர் வெளிநாடு சென்றிருக்கிறார் என்பதையும் ஒத்துக்கொள்கிறார்கள். சரி எங்கே சென்றார்? அது பற்றி எதுவும் கூறவில்லை. இப்போது கலாநிதியை பற்றி செய்தி வெளியிட்டது குற்றமா? இல்லை அவர் பின்லாந்து சென்றார் என்பது குற்றமா? இப்படி செய்தி வெளியிட்டதற்கு சம்பந்தப்பட்டவரின் தாய் எப்படி பொறுப்பாக முடியும்? அப்படியானால் தவறான நடத்தை உள்ள பெண்ணுக்கு பிறந்தவர்கள் எல்லோரும் நாட்டில் தவறு செய்வார்கள். அதற்கு முழுக்காரணமும் அந்த பெண்தான் இல்லையா? இதற்கு பெயர்தான் பட்டர்பிளை எஃப்பெக்டோ? பகுத்தறிவு கொண்டாடும் பெண்ணியம் பல்லிளிக்கிறது.

அஷ்'வின்' நட்சத்திரம் 


டெல்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பினாலும், ஆசிய அணிகளுக்கே உரிய சுழற்பந்து வீச்சை பயன்படுத்தி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, தன் முதலாவது போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார் அஷ்வின். மீதம் உள்ள போட்டிகளிலும், அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், ஹர்பஜன் அணிக்குள் வருவது கேள்விக்குறி ஆகி விடும். இரண்டாவது இன்னிங்சில் வழக்கம்போல, "சச்சின் நூறாவது சதம் கடப்பார்." என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அதற்கு பதிலாக 15000 டெஸ்ட் ரன்கள் என்ற இன்னொரு சாதனையை படைத்திருக்கிறார். சாதனைகள் என்பது முறியடிக்கத்தான். ஆனால் இந்த சாதனை நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பது என் கருத்து. இப்போதைக்கு சச்சினை டெஸ்ட் போட்டிகளில் நெருங்கி வருபவர் ஜாக் காலிஸ் மட்டுமே (டிராவிட் மற்றும் பாண்டிங் மீது நம்பிக்கை இல்லை). இவர் டெஸ்ட் போட்டிகளில் 12000 ரன்களை நெருங்கி விட்டார். ஆனால் இவருக்கு இப்போதே 36 வயதாகி விட்டதாலும், சச்சின் எப்போது ஓய்வு பெறுவார் என்று சொல்ல முடியாததாலும், காலிஸ் சச்சின் சாதனையை முறியடிப்பது சந்தேகமே...

மண்ணை கவ்வுமா கங்காரு?


நாம் எல்லோரும் இந்த டெஸ்ட் போட்டியை கவனித்து கொண்டிருக்க, மறுபுறம் இதை விட சுவாரசியமான போட்டி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது பல வினோதமான நிகழ்வுகள் ஏற்படுவது சகஜமாகி விட்டது. 434 ரன்களை விரட்டி பிடித்தது, டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது கடின இலக்கான 414ஐ விரட்டி பிடித்தது என்று அவ்வப்போது நடந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இந்த போட்டியையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா தடுமாறினாலும், கிளார்க் 151ரன் எடுக்க, 284 எடுத்து மூச்சு விட்டுக்கொண்டது. பிறகு ஆடிய தென்னாபிரிக்கா எந்த எதிர்ப்பும் காட்டாமல், 96 ரன்னுக்குள் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா மிக தெனாவட்டாக ஆட தொடங்கியது. எடுத்தவுடனே அதிர்ச்சிதான். அதன் பின்னர் 5 ஓவர் வரை விக்கெட் எதுவும் விழவில்லை. பிறகு ஒரு ஓவருக்கு ஒரு விக்கெட் என்ற ரீதியில் விக்கெட் விழ, 12 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 21 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து விட்டது. டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த ஸ்கோர் 26. அதை தவிர்க்க ஆஸ்திரேலியா போராடியது. கடைசியில் சிடில் வந்து சில பவுண்டரிகள் அடிக்க, 47 ரன்னுக்குள் ஆட்டத்தை முடித்துக்கொண்டது. தற்போது 236 ரன் என்ற இலக்கோடு தென்னாபிரிக்கா ஆடி வருகிறது. அவர்கள் ஜெயிக்கிறார்களா இல்லையா என்று இன்று தெரிந்து விடும். இன்று ஆட்டத்தின் மூன்றாம் நாள் மட்டுமே. இரண்டாம் நாளான நேற்று மட்டும் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. என்னப்பா ஆச்சு உங்களுக்கு?

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....

முழுவதும் படிக்க >>

November 9, 2011

மீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+


டிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... 


திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை முதலிய இத்யாதிகளை காட்டி பீதியை கிளப்புவது. இவ்வகை படங்களை ஸ்லாஷர் வகை படங்கள் என்று கூறுகிறார்கள்.  இரண்டாவது வகை, காட்சி அமைப்புகள், வசனம், கதாப்பத்திரங்களின் உணர்வு என்று உளவியல் ரீதியாக பீதியை கிளப்புவது. இதில் இரண்டாவது வகை படங்கள் பார்க்கும்போது ஏற்படும் த்ரில்லிங் அலாதியானது என்றாலும், இவ்வகை படங்களுக்கு மொழி அறிவு ஓரளவுக்கு தேவையாகிறது. இல்லை என்றால், சின்னதம்பி பட கவுண்டமணி போல, "சூப்பரப்பு!!", என்று சும்மா கை தட்டுவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் முதல் வகை படங்களுக்கு அவ்வகை அறிவு தேவை இல்லை.  வெறும் காட்சி அமைப்புகள் மற்றும் இசையே முக்கிய பங்கு வகிப்பதால், மொழி தெரியாதவர்கள் கூட இதனை ரசிக்கிறார்கள்.


இப்போது நான் சொல்லப் போகும் படம் கூட மொழி அறிவு தேவை இல்லாத ஒரு படம்தான். இந்த ஹாலிவுட்காரர்களுக்கே உண்டான ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால், ஒரு படம் ஓடிவிட்டால், அதனை தொடர்ந்து எத்தனை பாகங்கள் எடுக்கவேண்டுமோ எடுத்து, பார்வையாளர்கள் சலித்து, காறி துப்பும் வரை விடமாட்டார்கள். அந்த வகையில் 2003ஆம் ஆண்டில் வெளிவந்து சக்கை போடு போட்ட ராங் டர்ன் (Wrong Turn) படத்தின் நாலாவது பாகத்தை பற்றித்தான் இப்போது நான் கூறப்போகிறேன். Wrong Turn 4 - Bloody Beginnings. (2011)

முதலில் ராங்க் டர்ன் சீரிஸ் பற்றி தெரியாதவர்களுக்கு அதன் அடிப்படை கதையை கூறி விடுகிறேன். நீங்கள் காட்டு பாதை வழியாக வண்டியில் தனியாக பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் மாற்றுப்பாதையில் செல்ல நேரிடுகிறது. எதிர்பாராத விதமாக நீங்கள் காட்டில் வழி தவறி விடுகிறீர்கள். அதே காட்டுக்குள், இப்படி வழி தவறி வருபவர்களை வேட்டை ஆடி சாப்பிடும் ஒரு மூன்று பேர் கொண்ட குழு இருக்கிறது. எப்படி இருக்கும்? இதுதான் ராங்க் டர்ன் படத்தின் அடிப்படை. அப்படி காட்டுக்குள் வரும் மனிதர்களை மூன்று பேர் கொண்ட குழு ஒன்று கொடூரமாக துரத்தி துரத்தி வேட்டையாடுகிறது. முதல் பாகம் மெகா ஹிட் ஆகி விட, அதனை தொடர்ந்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தில் முறையே ரியாலிட்டி ஷோவுக்காக வருபவர்களையும், சிறைக்கைதிகளையும் எப்படி அந்த குழு வேட்டையாடுகிறது என்று காட்டி இருப்பார்கள். 


இந்த நாலாவது பாகம், இதுவும் அதே வகைதான். ஆனால் இது ப்ரீக்வலாக வந்திருக்கிறது. அதாவது இந்த மூன்று பாகங்களுக்கும் முன்னால் நடக்கும் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. காட்டுக்குள் தன்னந்தனியாக அமைந்திருக்கும் ஒரு மனநல காப்பகத்தில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே மிருக குணத்துடன், அதாவது தான் உறுப்புகளையே கடித்து சாப்பிடும் அளவுக்கு கொடூரமான குணத்துடன், சிதைந்த முகத்துடன் இருக்கும் சிறுவர்களை தனியே அடைத்து வைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய அந்த காப்பகத்தில், தனியாக ஒரு சிறையில் இருக்கும் அவர்கள் எதிர்பாராத விதமாக தப்பிவிட, அந்த காப்பகத்தையே துவம்சம் செய்து, அனைவரையும் கொன்று தீர்க்கிறார்கள்.  வெகு காலத்துக்கு அங்கே யாருமே வராமல், கவனிப்பாரற்று போகிறது அந்த மன நலகாப்பகம் .


ஆர்ப்பாட்டமான இளைஞர் குழு ஒன்று, (5 பெண்கள், 4 ஆண்கள்), ஆளுக்கொரு பனிச்சறுக்கு மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு அடர்ந்த பனிப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஒருவரை முந்தி ஒருவர் உற்சாகமாக வண்டியை செலுத்த, ஒரு கட்டத்தில் அனைவரும் வந்த பாதையை மறந்து விடுகின்றனர். எங்கு பார்த்தாலும் பனி. இன்னும் ஒரு மணி நேரத்தில் இருட்டி விடும். மேலும் கடுமையான பனிப்புயல் வேறு வீசத்தொடங்கி விட்டது. இப்படியே இருந்தால் செத்து போய்விடுவோம். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது வெகு தூரத்தில் மங்கலான வெளிச்சத்தில் கட்டிடம் ஒன்று தெரிகிறது. அதனை பார்த்தவுடன் அனைவருக்கும் உற்சாகம் தொத்தி கொள்கிறது. எல்லோரும் அந்த கட்டிடத்தை நோக்கி செல்ல்கிறார்கள். அந்த கட்டிடம், வெகு காலமாக யாருமே வராமல் போன அதே மனநல காப்பகம்தான். 


மிகப்பெரிய கட்டிடத்தின் ஒரு அறைக்குள் அனைவரும் தங்குகிறார்கள். முழுவதுமாக இருட்டி விட, வெளியே கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருக்கிறது. தன்னிலை மறந்த அந்த இளைஞர்கள் குடியும் கும்மாளமுமாக, ஓடிப்பிடித்து விளையாடுவது, ஹாஸ்பிடல் வராண்டாவில் வீல்சேர் ரேஸ் வைப்பது, ஆடிப்படுவது என்று பொழுதை கழிக்கிறார்கள். இவர்களை ஒரு மூன்றுபேர் தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். பிறகென்ன, அந்த மூன்றுபேர் இந்த இளைஞர்களை எப்படி வேட்டை ஆடினார்கள்? அவர்களுள் யார் யார் தப்பி சென்றார்கள்? என்று முகத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லி இருக்கிறார்கள். முதல் மூன்று பாகங்களைப்போல அல்லாமல், முழுக்க முழுக்க ஒரு கட்டிடத்துக்குள்ளேயே இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். ரத்தத்தை பார்த்தால் எனக்கு கண்களை இருட்டிக்கொண்டு வரும் என்று சொல்பவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது. 


முந்தைய பாகங்களைக்காட்டிலும் இதில் வன்முறைக் காட்சிகள் மிக அதிகம்.  பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்திருப்பதால் ஏதோ நிஜமாகவே நடப்பது போல இருக்கிறது. மனிதர்களின் உறுப்புகளை வெட்டி சமைத்து சாப்பிடுவதை ஆற அமர காட்டியிருக்கிறார்கள்.  அதிலும் கட்டிங் பிளேயரை வைத்து, உயிருடன் இருப்பவரின் வயிற்றுக்குள் இருந்து ஈரலை எடுத்து வெட்டி சாப்பிடுவது கொடூரத்தின் உச்சம்.  இந்த படத்தை தயவுசெய்து, சாப்பிடும்போதோ, வயிறு நிறைய சாப்பிட்ட பின்னரோ பார்க்கவேண்டாம். எல்லாம் வெளியே வந்து விடும். மிகப்பெரிய திரில்லிங்கோ, சுவாரசியமோ இல்லாவிட்டாலும், இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். சொல்ல மறந்துட்டேன். இந்த படத்தில் சில பலான காட்சிகளும் உண்டு. இத்தனை ஆண் மற்றும் பெண் நடிகர்களை வைத்துக்கொண்டு, பலான காட்சி இல்லா விட்டால் எப்படி? கண்டிப்பாக பெண்களும் குழந்தைகளும் பார்க்க கூடாத படம். நேரமிருந்தால் மற்றவர்கள் பார்க்கலாம். 

உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 


முழுவதும் படிக்க >>

November 5, 2011

ஊடகங்கள் வளர்க்கும் குழந்தைகள்


இயக்குனர் சசிக்குமார் ஒரு முறை, "நம்ம நாட்டில் குழந்தைகளுக்காக படம் எடுப்பது மிக மிக குறைவு.", என்று குறைபட்டுக்கொண்டார். அது உண்மைதான். இப்போது நான் சொல்லப்போவது குழந்தைகளுக்கான படங்கள் எடுப்பதை பற்றி அல்ல. அது குறித்து இன்னொரு முறை எழுதுகிறேன். அதனோடு சம்பந்தப்பட்ட வேறு விஷயம். என்னதான் தொழில்நுட்பம், ஊடக வசதிகள் வளர்ந்து விட்டாலும், எல்லோருக்குமே, "அந்த காலம் மாதிரி வருமா?" என்று தங்களின் குழந்தை பருவத்து ஏக்கங்கள் வருவது மறுக்கலாகாது. இந்த மாதிரி நோஸ்டல்ஜிக்காக தோன்றும் சில தருணங்களை நினைத்து பார்க்கும்போது, நாம் பெற்ற சில விஷயங்களையும், நம் அடுத்த சந்ததியினர் இழந்த சில விஷயங்களையும் ஒப்பிட்டதன் விளைவே இந்த பதிவு. 


நான் வளர்ந்த சூழல் என்பது ஒரு கூட்டுக்குடும்பம் மாதிரி. என்னுடைய தெருவில் இருக்கும் அத்தனை பேருமே நான் பிறப்பதற்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கே வாழ்பவர்கள். ஆகவே எல்லா வீட்டு பிள்ளைகளும், ஒன்றாக விளையாடுவோம், ஒன்றாக சண்டை போடுவோம், ஒன்றாகவே திட்டு வாங்குவோம். அதே போல எல்லா வீட்டிலேயுமே குறைந்தது ஒரு முதியவராவது இருப்பார். செல்போன்களும், கேபிள் டிவிகளும் ஆக்கிரமிப்பு செய்திராத அந்த நகரத்தின் தெருக்களில், மாலை நேரங்களில் எல்லா பெரியவர்களும் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு கேலியும் கிண்டலும் செய்தபடி, தங்களின் பால்ய காலத்தை நினைவு கூர்வார்கள்.சிறுவர்கள் நாங்கள் அனைவரும் அவர்களின் மத்தியில் அமர்ந்து கொண்டு அவர்களின் உரையாடலை கேட்போம். அவர்கள் உபயோகிக்கும் பல வார்த்தைகள் புரியாது. இருந்தாலும் கேட்போம். சிறுவயது காதல், கலவரம், பிரச்சனைகள், நகைச்சுவைகள் என்று கேட்க கேட்க சுவாரசியம் கூடிக்கொண்டே போகும். அந்த சமயத்தில் தெருவுக்குள் ஏதாவது பால்காரர், போஸ்ட்மேன், பழவியாபாரி என்று வந்து விட்டால் தொலைந்தது. "கலாய்ப்பது என்றால் என்ன?" என்று அப்போதுதான் நான் கற்றுக்கொண்டேன்.

திடீரென திட்டிக்கொள்வார்கள், உடனே ஒட்டிக்கொள்வார்கள். ரஜினி படம், எம்ஜியார் படம் என்றால் உடனே ஒரு தூக்குவாளி நிறைய காபி போட்டு எடுத்துக்கொண்டு, தெருவே தியேட்டருக்கு ஓடும். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, முறுக்கு, மிக்சர், அதிரசம், வடை என்று கைக்கு கை மாறி வந்துகொண்டே இருக்கும். பிறகு காலங்கள் மாறிய பிறகு, ஊருக்கு வெளியே பிளாட்டுகள் போட்டு தனி வீடுகள் வந்தன. எங்கள் தெரு காலியாக தொடங்கியது. இப்போது இன்னும் இருப்பது எங்களையும் சேர்த்து இரண்டே குடும்பங்கள்தான். எங்கள் உலகம் விரிய தொடங்கியது. ஆனால் உள்ளம் குறுகிப்போனது. விடுகதைகள், நக்கல் நையாண்டிகள், ஆரோக்கியமான விவாதங்கள், பழமொழிகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் இன்னும் பல என்று யாரும் எனக்கு கற்று தரவில்லை. அவர்களின் மத்தியில் வளர்ந்ததால் நானே கற்றுக்கொண்டேன். 


ஆனால், "இன்று வளரும் குழந்தைகள் ஒரே அறைக்குள், அதிலும் ஒரே மேஜைக்குள் கூறுகிப்போய்விட்டார்களோ?", என்று தோன்றுகிறது. பணிக்கு செல்லும் பெற்றோர் வீடு திரும்ப மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. மதியம் மூன்று மணிக்கு வீட்டுக்கு வரும் குழந்தைக்கு, டிவியும் இண்டர்நெட்டுமே பெற்றோர். ஜான்சீனாவும், அண்டர்டேக்கருமே கதை மாந்தர்கள். அவர்கள் பேசுவதே மொழி. இண்டர்நெட்டில் கிடைப்பதே நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள். முனைவர் கு.ஞானசம்பந்தம் சொல்வார், "இக்கால குழந்தைகளுக்கு, அண்டார்டிக்காவில் இருக்கும் ஒரு இடத்தை பற்றி தெரியும். ஆனால் பள்ளி விட்டதும், தானாக வீட்டுக்கு வரும் வழி தெரியாது.". ஆமாம் அவர்களுக்கு பேஸ்புக்கில் இருக்கும் நண்பனின், நண்பியின் , நண்பனையை பற்றி எல்லாம் தெரியும். "தன் தாத்தா யார். அவர் எப்படி வாழ்ந்தார்?", என்று தெரியாது. என் பெற்றோருக்கு தெரிந்த அளவுக்கு சொலவடைகள், பழமொழிகள் எனக்கு நினைவில் இல்லை. எனக்கு தெரிந்த அளவுக்கு கூட என் இளையவர்களுக்கு தெரியவில்லை. இனி என் பிள்ளைகளுக்கு சொலவடை என்றால் என்ன? என்று கூட தெரியாமல் போய் விடுமோ? 


ஊடகத்தின் ஆளுமை என்பது தவிர்க்க இயலாதது, தவிர்க்க கூடாதது. இல்லாவிட்டால் கிணற்று தவளையாகவே இருந்து விடவேண்டியதுதான். ஆனால் ஊடகத்தின் கொம்பை பிடித்த வளரும் கொடிகள், தங்களின் வேர்களை மறப்பதுதான் கொடுமை. எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன், சொந்தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு வருவதை முற்றிலும் தவிர்ப்பான். கேட்டால், "எனக்கு crowd என்றாலே அலர்ஜி." என்று சொல்வான். ஆனால் வாரம் தவறாமல் பப் மற்றும் டிஸ்கோதே செல்வதை மறப்பதில்லை. அவன் ஊடகம் வளர்த்தெடுத்த குழந்தைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். எப்படி என் முன்னோர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களிடம் கதை கேட்டேனோ, அதே போல தற்கால குழந்தைகள் இண்டர்நெட்டிலும், தொலைக்காட்சியிலும், நடப்பவற்றை ஊன்றி கவனிக்கிறார்கள். என்னை அறியாமல் நான் கற்றது போல, அவர்களை அறியாமலேயே அவர்களும் கற்கிறார்கள். ஆனால் நான் கற்றது Real World. அவர்கள் கற்றுக் கொண்டிருப்பது Virtual World. அதையே அவர்கள் உண்மை என்றும் நம்புகிறார்கள். ஊடகங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலான குழந்தைகள், சக மனிதர்களை ரத்தமும் சதையுமாக பார்க்காமல், தேவை இல்லை என்றால் அன்இன்ஸ்டால் செய்து கொள்ளும் சாஃப்ட்வேராகத்தானே பார்க்கிறார்கள்? 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.... 
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....
  
முழுவதும் படிக்க >>

November 2, 2011

தெரியாம மாட்டிக்கிட்டா என்ன பண்றது?

ரொம்ப நாளாக ஹாலிவுட் படங்கள் அதிகமாக பார்க்காததால், அந்த படங்களை பற்றி எழுதாமல் இருந்தேன். நேற்று நான் பார்த்த படம் என்னை மிகவும் கவர்ந்ததால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஹாலிவுட் பட ரசிகர்களிடம், "உங்களுக்கு மிகவும் பிடித்த த்ரில்லர் எது?" என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் சொல்வது சைக்கோ என்ற படம்தான். ஐம்பதுகளில் வந்தாலும் இன்னும் அது பேசப்படுவது அந்த படத்தின் சிறப்பு. ஆனால் நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் பெரும்பாலானவர்களைப்போல எனக்கும் கருப்பு வெள்ளை படம் என்றால் கொஞ்சம் ஈடுபாடு குறைந்து விடுகிறது. ஆனால் எதேச்சையாக ஆல்ஃபிரட் ஹிச்காக் (Alfred Hitchcock) பற்றி படிக்க நேர்ந்தது. "சரி அப்படி மனிதர் என்னதான் படமெடுத்திருக்கிறார் பார்த்து விடுவோம்.", என்று அவரது படங்களை தரவிறக்க தொடங்கினேன். சைக்கோ பற்றி தெரிந்திருந்தாலும், முதலில் அதை பார்க்க விரும்பவில்லை. "இதுவரை கேள்விப்படாத ஒரு படத்தை எடுத்து பார்ப்போம் அப்போதுதான் எந்த முடிவும் செய்து கொள்ளாமல் ரசிக்க முடியும்.", என்று நான் தேடிப்பிடித்து பார்த்த படம் என்னை வியக்க வைத்தது. அதுதான் தி ராங் மேன் (The Wrong Man - 1956) 



நீங்கள் ஒரு சராசரி குடும்பத்தலைவன். எந்த வம்புதும்புக்கும் போகாதவர். குடும்ப செலவுகளுக்கே பணம் போதாமல் திண்டாடுபவர். கடவுள் புண்ணியத்தில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. திடீரென்று ஒருநாள் நீங்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது, வீட்டு வாசலில் போலீஸ் நிற்கிறது. மனைவியிடம் கூட எதுவும் சொல்ல விடாமல், உங்களை அப்படியே போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று விடுகிறார்கள். உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகிறது. நீங்களும் எதையும் மறைக்காமல் உண்மைகளை சொல்கிறீர்கள். கொஞ்ச நேரம் கழித்து, போலீஸ் அதிகாரிகள், உங்களை கைது செய்து ஜெயிலில் அடைத்து விடுகிறார்கள். என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. உங்களுக்கு எப்படி இருக்கும்?


இதுதான் இந்த படத்தின் கதை. கிறிஸ்டோபர் இம்மானுவேல் பாலிஸ்ட்ரோ சுருக்கமாக மேன்னி, ஒரு இரவு விடுதியில் இசைக்குழுவில் பிடில் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர்.  அவருக்கு அன்பான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என்று அமைதியான குடும்பம். தினமும் இரவு விடுதிக்கு சென்று விட்டு விடியற்காலைதான் வீட்டுக்கு வருவார். தன் வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பத்தையே நடத்தியாக வேண்டும். எதிர்பாராமல் வரும் சின்ன சின்ன செலவுகள் கூட அவருக்கு பெரும் சுமைதான். இது குறித்து தினமும் தம்பதிகள் பேசி கவலைப்பட்டுக் கொள்வார்கள். மேன்னியின் மனைவிக்கு தீராத பல்வலி இருக்கிறது. மருத்துவரிடம் சென்றால் அதிகம் செலவாகும் என்பதால் அவள் தவிர்த்து வருகிறாள். மேன்னி அவளை மருத்துவரிடம் அழைத்து செல்ல முடிவெடுக்கிறார். 


கையில் பணமில்லை. ஏற்கனவே தன் பேரில் உள்ள இன்சூரன்ஸ் பாலிசியில் இருந்து நிறைய கடன் வாங்கி விட்டாயிற்று. ஆகவே தன் மனைவி பேரில் உள்ள பாலிசியின் மீது கடன் வாங்க இன்சூரன்ஸ் அலுவலகம் செல்கிறார். அங்கே வேலை பார்க்கும் பெண்கள் இவரைப்பார்த்ததும் பதட்டம் அடைகிறார்கள். பின் இவர் சென்றதும் போலீசுக்கு போன் செய்கிறார்கள். மறுநாள் மேன்னி வழக்கம்போல வீடு திரும்பும் போது வாசலில் போலீஸ் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இவரை அவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுகிறார்கள். அங்க சில விசாரணைகள் நடத்தப்படுகிறது. அந்த இன்சூரன்ஸ் கம்பெனி பெண்கள் இவரை அடையாளம் காட்டுகிறார்கள். மேன்னி ஜெயிலில் அடைக்கப்படுகிறார். "வேலைக்கு சென்ற கணவனை காணவில்லை என்று பதட்டத்துடன் தன் மனைவி என்ன செய்கிறாளோ?" என்ற குழப்பத்துடன் மேன்னி ஜெயில் அறைக்குள் செல்கிறார். பின் அவர் எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்தார் என்பதுதான் மீதிக்கதை. 


மேன்னியாக நடித்திருப்பவர் நடிகர் ஹென்றி ஃபோண்டா (போண்டா அல்ல Fonda). இவர் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை பிரிட்ஜெட் ஃபோண்டாவின் தாத்தா. ஒரு சராசரி குடும்பத்தலைவனாக அசத்தி இருக்கிறார். ஒரு நடுத்தரவர்க்க, ஆண் போலீசை பார்த்ததும் எப்படி பயப்படுவான், கோர்ட்டை  பார்த்ததும் எப்படி மிரளுவான்,  ஜெயிலில் எப்படி கூனி குறுகி போவான் என்பதை அப்படியே செய்திருப்பார். அவரது மனைவியாக சைக்கோ பட புகழ் வேரா மைல்ஸ் நடித்திருக்கிறார். அம்மணி மிக அழகாக இருக்கிறார். அப்பாவித்தனமான மனைவியாக நடித்து அசத்தி இருக்கிறார். இவர்களோடு, போலீஸ், வக்கீல் என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 


கத்தி, ரத்தம் ஏன் குறைந்த பட்சம் ஒரு டுவிஸ்ட் கூட இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் படத்தை தரமுடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஆல்ஃபிரட் ஹிச்காக். படத்தில் எந்த டுவிஸ்டும் கிடையாது. கொலை கிடையாது. அலறல் கிடையாது. ஆனால் படம் நெடுக சஸ்பென்ஸ்தான். "இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.", என்று படத்தின் ஆரம்பத்திலேயே வந்து சொல்லி விடுகிறார். மேலும் உண்மை சம்பவத்தை அப்படியே எந்த வித சினிமாத்தனமும் இல்லாமல் எடுத்திருக்கிறார். பொதுவாக சஸ்பென்ஸ் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகளில் எதிர்பாராத திருப்பம் ஒன்று இருக்கும். ஆனால் இதில் அப்படி எதுவும் கிடையாது. ஆனாலும் படத்தின் ஒன்றே முக்கால் மணிநேரமும் உங்களை ஆடாமல் அசையாமல் படத்தோடு ஒன்றி போக செய்து விடுகிறார். ஹிச்காக் படங்களில் நகைச்சுவை உணர்வு தூக்கலாக இருக்குமாம். ஆனால் இதில் அதுவும் மிஸ்ஸிங். அப்படி இருந்திருந்தால் அது படத்தின் மைனஸ் பாயிண்டாகவே இருந்திருக்கும். இந்த படத்தை பார்த்து முடித்ததும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது தவறாமல் பாருங்கள். 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க.... 

முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...