விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

January 29, 2011

டெரர் செய்திகள் - விஜய்க்கு ஆப்பு !

டெரர் செய்திகள் 



டெரர் செய்தி #1: 
கடந்த சில நாட்களாக சில பல டெரர் செய்திகள் செய்தித்தாளில் தென்படுகின்றன. சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இங்கிலாந்தில் ஒருவர் 29 வயதில் தாத்தா ஆகி விட்டார். அவருக்கு மகள் பிறந்தது 14 வயதில். தற்போது அவளுக்கு 14 வயது. கர்ப்பமாக இருக்கிறாளாம். அப்படியானால் 43 வயதில் கொள்ளுத்தாத்தா ஆகி உலக சாதனை படைக்கலாம். ஒரு உண்மை தெரியுமா? நான் இருபத்து நான்கு வயதிலேயே தாத்தா ஆகி விட்டேன். சந்தேகப்படாதீர்கள். எனக்கும் என் அக்காவுக்கும் பதினேழு வயது வித்தியாசம். என் அக்கா மகளுக்கும் எனக்கும் ஒண்ணரை வயது வித்தியாசம். என் அக்கா மகளுக்கு இரண்டாண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு முறைப்படி நான் தாத்தா. சரிதானே?

டெரர் செய்தி #2: 
தமன்னா, அனுஷ்கா ஆகியோரின் கலைசேவையை பாராட்டி கலைமாமணி விருதுகள் அறிவிக்க பட்டிருக்கின்றனவாம். இவர்கள் செய்த சேவை என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்னுடைய வருத்தம் என்னவென்றால் இவர்களுக்கு முன்பே, வெகுநாட்களாக கலைசேவையை தான் தலையாய செயலாக செய்து வரும் ஷகீலாவுக்கு ஏன் இன்னும் கலைமாமணி விருது அறிவிக்கபடவில்லை என்பதுதான். ஒரு வேளை அவர் அடுத்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படலாம்.

டெரர் செய்தி #3:
மாலேகானில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி உயிருடன் எரித்து கொல்லப்பட்டிருக்கிறார். சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தியாவில் போலீஸ்காரன், ரவுடி, அரசியல்வாதி மூன்று பேர்தான் உயிர் வாழ முடியும் போலிருக்கிறது (யாருப்பா அது, மூணுமே ஒண்ணுதான்னு சொல்றது?). இந்துமதம் எங்கே போகிறது என்பதை போல, பேசாம பால்தாக்கரேவை விட்டு இந்தியா எங்கே போகிறது என்று எழுத சொல்லலாம்.

டெரர் செய்தி #4: 

"எல்லா சாதியினரும் முதலமைச்சர் ஆகும்போது ஒரு வன்னியர் ஏன் முதலமைச்சர் ஆகக்கூடாது?" என்று ராமதாசு அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார். பேசாமல், "நான் ஏன் ஆகக்கூடாது?" என்று கேட்டிருக்கலாம். வர வர இவருக்கு காமெடி மிக சரளமாக வருகிறது. இவரால் காமெடி பீஸ் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் தெரிந்தோ தெரியாமலோ, ஆட்சியை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாகவே மாறி விட்டார். இவர்தான் காமெடி பீஸாகவே இருக்கிறார்.


விஜய்க்கு ஆப்பு 

உயர்திரு எஸ்எ சந்திரசேகர் அவர்கள் எம்ஜிஆர் படங்களுக்கு இடையூறு தந்ததைப்போல, தன் மகனுக்கு இடையூறு செய்கிறார்கள் என்று தன் மகனையும் எம்ஜிஆரையும் ஒப்பிட்டுள்ளார். இளைய தளபதிக்கு ஆப்பு வேறெங்கும் இல்லை. அவர் வீட்டிலேயேதான் இருக்கிறது.  அதை அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. மேலும் திரு விஜய் அவர்கள் குடியரசு தினம் அன்று எல்லா சேனல்களிலும் அஸினுடன் ஜோடியாக தோன்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயா டிவியில் பேசும்போது மட்டும் ஆளும்கட்சியையும், அவர்கள் சார்ந்த தொலைக்காட்சிகளையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல குத்தி குத்தி குறும்பாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை ஆளும் கட்சிக்காரர்கள் ஜெயாடிவி பார்க்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.

இந்த போட்டோவை எடுத்தவர் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி 

போதாக்குறைக்கு அவரது ரசிகர்கள் வேறு விஜய் அவர்கள் திமுகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள். சுமாரான ஒரு படத்துக்கே, "தடைகளை வென்ற தளபதி!", "எதிரிகளை அழித்த தளபதி!!" என்று முழங்கும் தளபதியின் படை, ஒருவேளை காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக திமுக தோற்று விட்டால் என்ன செய்வார்களோ? என்று உண்மையிலேயே டெரராக இருக்கிறது.

அதுசரி பேப்பரில் காவலன் இந்த ஆண்டின் முதல் வெற்றி, சிறுத்தை பத்தாண்டுகளின் மகத்தான வெற்றி, ஆடுகளம் சாதனை வெற்றி என்று போடுகிறார்கள். எதை நம்புவது?

தமிழக மீனவர்களின் வேதனைக்காக கந்தசாமிக்கு (பார்க்க கருத்து கந்தசாமி) கருத்து தந்து உதவிய அதிஷா அவர்களுக்கு மிக்க நன்றி 

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

   
முழுவதும் படிக்க >>

January 24, 2011

வெட்டி அரட்டை - வெகுநாளாக ஒரு சந்தேகம்.....


வர வர பதிவுகளில் அதிகமாக கவனம் செலுத்த முடிவதில்லை. வேலைப்பளுவெல்லாம் கிடையாது. ஒரு பதிவெழுதுவதற்கு ஒண்ணரை மணிநேரம் செலவாகும். அதனால் நேரம் கிடைப்பதில்லை என்று சொல்ல இயலாது. முதல் பிரச்சனை மேட்டர் பிரச்சனை. எழுதுவதற்கு தோதான மேட்டர் வேண்டும், அல்லது படிக்க சுவாரசியமாக எந்த மேட்டரையும் எழுத தெரிய வேண்டும். இவை என்னிடம் ரொம்ப கம்மி. இரண்டாவது பிரச்சனை அப்படியே ஏதாவது மேட்டர் சிக்கி எழுத உட்கார்ந்தால், சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி மறுத்ததை போல, இண்டர்நெட் இணைப்பு பல்லை காட்டும். 

ரொம்ப நாளாவே எனக்கும் ஏர்டெல்லுக்கும் பெரிய வாய்க்கால் தகராறே நடந்து வருவது எல்லோரும் அறிந்ததே. அந்த பிரச்சனை முத்தி, பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. அந்த கதையை பற்றி எழுதவேண்டுமானால் கலைஞரின் தாய்காவியம் தோற்றுவிடும். அவ்வளவு போராட்டங்கள். (புதிய பதிவர்களுக்கு: "எந்த ஒரு மேட்டருமே இல்லாமல் ஒரு பத்தி எழுதுவது எப்படி?" என்ற ஐடியாவுக்கு, மேலே உள்ள பத்தியை ரெஃபரன்சாக வைத்துக்கொள்ளுங்கள்)



வெகுநாளாக ஒரு சந்தேகம்.


நான் விபரம் தெரிந்த நாள்முதலாக தினமலரின் சிறுவர்மலர், மற்றும் வாரமலரை தவறாமல் படிப்பவன். முன்பெல்லாம் வாரமலரின் சினிமா துணுக்குகள் ஆறு பக்கங்கள் வரும். அதிலும் நடு பக்கத்தை யாரும் இல்லாத இடத்தில் சென்றுதான் பார்க்க முடியும். இப்போது சினிமா துணுக்குகளை நான்கு பக்கமாக குறைத்து விட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை. இப்போது பிரச்சனை அதுவல்ல. வெகு நாட்களாக, அதாவது இருபது வருடங்களுக்கும் மேலாக அந்துமணி என்னும் நபர் எழுதும் பகுதி ஒன்று வரும். நிறைய பேர் படித்திருப்பீர்கள். கிட்டத்தட்ட பதிவுலக ஸ்டைலில் எழுதப்ப்ட்டு வரும் இந்த பகுதியை தொடர்ந்து படிப்பவராக இருந்தால் ஒரு விஷயம் உங்களுக்கு புலப்படும். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை பற்றி தங்களுக்குள் நடந்த விவாதத்தை விவரிப்பார். பெரும்பாலும் அவை தண்ணியடிக்கும்போது நடந்தவைகளாக இருக்கும். "எல்லோரும் அடித்தார்கள். நான் அடிக்கவில்லை" என்ற வரி கண்டிப்பாக இருக்கும். அதே போல தனக்கு ஆங்கிலமே தெரியாது என்று ஒவ்வொரு வாரமும் சொல்லிவிடுவார். தன்னை பெண் குல காப்பாளர் போலவும் காட்டிக்கொள்வார். 


தனக்கு குடிப்பழக்கம் இல்லை என்பதையும், ஆங்கிலம் தெரியாது என்பதையும் ஒவ்வொரு வாரமும் சொல்வதன் தேவை என்ன? இவர் குடித்தால் என்ன? குடிக்கா விட்டால் என்ன? இல்லை "நாங்கள் தண்ணி அடித்தோம்" என்ற சம்பவத்தையே விவரிக்காமல் தவிர்த்திருக்கலாமே? எனக்கு அந்துமணி மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரது பகுதியை படிக்கும்போது கடுப்புதான் வருகிறது. சமீபத்தில் அவர் மீது பாலியல் தொந்தரவு புகார் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. ("நீ எழுத தெரியாது! என்று ஒவ்வொரு பதிவிலும் சொல்கிறாயே, அது போலத்தான் இது!" என்று யாரும் சொல்லாதீர்கள்)


மானத்தை காப்பாற்றிய பதான் 


இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனை புரியும் என்று நினைத்த எனக்கு இந்த ஆண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி இரண்டு ஆட்டங்களில் இந்தியா ஆடிய விதத்தை பார்த்த போது ஏமாற்றத்தை மிஞ்சி அச்சமே உண்டானது. ஐம்பது அறுபது ரன்கள் எடுப்பதற்குள் நான்கைந்து விக்கெட்டுகளை இழந்து விடுவது, பின்னர் அரைகுறை ஆட்டக்காரர்கள் வந்து பந்தை அடிப்பதற்கு பதிலாக காற்றிலேயே மட்டையை சுழற்றுவது என்று கடுப்பை கிளப்பும் ஆட்டம் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு சொந்தம். ராபின்சிங் ஒரு புறம் வியர்வை வழிய நிற்க , கும்ப்ளேவோ, பிரசாத்தோ மறுபுறத்தில் மட்டையால் விக்கெட் கீப்பருக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருப்பார்கள். அதே நிகழ்வு மீண்டும் நடந்த போது, உலக கோப்பை மீது சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் "இவர்கள்தான் ஐபிஎல்இல் ஏலம் எடுக்கபட்டு விட்டார்களே. அவர்கள் ஆட்டம் அப்படித்தான் இருக்கும்." என்று எண்ண  தோன்றியது. இருப்பினும் இறுதி ஆட்டத்தில் ஒரு மோசமான தோல்வியை தவிர்க்க வேண்டி விளையாடிய யூசுப் பதான் ஒரு கட்டத்தில் வெற்றிக்கு மிக அருகில் அணியை அழைத்து சென்றது சிறப்பு.  

ஹோம் தியேட்டர் எஃப்பெக்ட்டில் ஒரு படம் 


எல்லா நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஒரு ஆடம்பர ஆசை உண்டு. தன் வீட்டில் ஹோம் தியேட்டர் சிஸ்டம் வாங்கி ஒரு அறையில் பொருத்தி, யாருமில்லாமல் தனியாக ப்ரோஜெக்டரில் தியேட்டர் எஃப்பெக்ட்டோடு படம் பார்க்க வேண்டும் என்று. அந்த ஆசையை தற்காலிகமாக தீர்த்து வைத்தது இளைஞன் படம். தியேட்டரில் என்னையும் சேர்த்து நான்கு பெரியவர்கள் ஒரே ஒரு சிறுவன். ஐந்து பேருக்காக ஒரு காட்சி. விரும்பிய இடத்தில் எப்படி வேண்டுமானாலும் அமரலாம். தனியாக இருப்பது கொஞ்சம் பயமாக இருந்தது. இருந்தாலும் இவ்வளவு சுதந்திரமாக எந்த படத்தையுமே நான் பார்த்ததில்லை. அதுசரி டீவியில் இளைஞன் பட விளம்பரத்தில் எல்லோரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை விடுத்து, கதை எழுதியவரை வாழ்த்துகிறார்கள். அதே நேரம் சன் பிக்சர்ஸ் படம் என்றால், கதை எழுதியவர், இயக்குனரை விடுத்து, தயாரிப்பாளரை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்களே? எப்படி?  

பதிவு ரொம்ப நீளமாகி விட்ட படியால், மனதை வருடிய ஒரு படத்தை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

January 17, 2011

காவலனும் பொங்கல் கொண்டாடிய கதையும்....


வழக்கமாக பண்டிகை தினங்களில் தொலைக்காட்சிக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நான், இந்த முறை ஒரு சிறப்பு நிகழ்ச்சி கூட பார்க்கவில்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள், சிறப்பு திரைப்படங்கள் எதுவுமே என்னை கவரவில்லை. நண்பர்களை சந்திப்பது, புதுப்படங்கள் பார்த்தது என்று பொங்கல் கழிந்து விட்டது

பொங்கல் திரைப்படங்கள்

டிஸ்க்: இது திரைப்பட விமர்சனம் அல்ல. அவற்றை பார்த்த போது என் மனதில் தோன்றியது. ஸ்பாய்லர் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.



சிறுத்தை 

முதலில் காவலன் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். போகி அன்று ரிலீஸ் ஆகாததால், சிறுத்தை பார்க்க சென்றேன். பொதுவாக எனக்கு தெலுங்கு மசாலா படங்கள் மீது கொஞ்சம் ஈடுபாடு உண்டு. விக்கிரமார்க்குடுவின் ரீமேக் என்றவுடன் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு கட்டி இருந்தேன். நான் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாகவே இருந்தது. அதிலும் சந்தானம் புல் ஃபார்மில் இருக்கிறார். அவர் அடிக்கும் ஒன்லைனர்கள் மற்றும் கவுண்டர்களுக்கு திரை அரங்கில் ஓட்டு மொத்த கூட்டமும் சிரித்து சிரித்து களைத்து போனது. 


படத்தில் "லாஜிக் என்றால் கிலோ எவ்வளவு?" என்று கேட்டாலும், படத்தை ரசிக்க வைத்திருப்பதில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பருத்திவீரன் சாயலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கார்த்தி வெளிவந்து கொண்டிருக்கிறார். தமன்னா ஒரு சில நேரங்களில் மட்டும் அழகாக இருக்கிறார். வில்லன்களை கொடூரமானவர்களாக காட்டுகிறேன் என்று மந்திரவாதி மாதிரியும் ராப்பிச்சைகாரன் மாதிரியும் காட்டி இருக்கிறார்கள். காமிரா மற்றும் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. வித்யாசாகர் எல்லா பாடல்களுக்கும் ஒரே பீட்டை வாசித்திருக்கிறார். எல்லா பாடல்களுமே "டங்கு..டக்கு...டங்கு..டக்கு" என்று ஒரே சத்தம். "ராக்கெட் ராஜா" பாடலும், "ரக்கம்மா ராக்கு" பாடலும் கொஞ்சமேனும் ரசிக்க வைக்கிறது. 



தியேட்டரில் பாடல்களை படத்தின் ஸிபீடு பிரேக்கர்களாகத்தான் பார்க்கிறார்கள். எங்கள் ஊரிலேயே ஒரு பாடாவதி தியேட்டரில் படம் வெளியாகி உள்ளது. அந்த தியேட்டரில் சமீபத்தில் எந்த படமும் ஓடி வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அவர்களுக்கு சிறுத்தை கண்டிப்பாக மறுவாழ்வு தரும் என்பது மூன்றுநாட்களாக ஹவுஸ்புல்லாக ஓடுவதில் இருந்தே தெரிகிறது.

காவலன் 


பொங்கல் அன்று காலையில் காவலன் பார்க்கலாம் என்று தியேட்டருக்கு சென்றால், "பொட்டி வரலை!" என்று காவலன் (போலீஸ்காரர்) அனைவரையும் அடித்து விரட்டிக்கொண்டிருந்தார். சரி மதியம் 2.30 காட்சிக்கு சென்றால். அப்போதும் அதே கதை. ஆனால் ரசிகர் கூட்டம் கலையவில்லை. அதோ இதோ என்று 3.45க்கு படம் தொடங்கினார்கள். விஜய் ரசிகர்கள் காய்ந்து போய் இருக்கிறார்கள் என்று நன்றாக தெரிந்தது. முதல் பதினைந்து நிமிடங்களுக்கு வசனம் காதில் விழவில்லை. கண்டிப்பாக விஜய்க்கு இது ஒரு வித்தியாசமான படம்தான். ஆனால் விஜய்க்கு மட்டும்தான். 


பொதுவாக விஜய் படங்கள் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லாவிட்டாலும் பல படங்களை ரசித்து பார்த்திருக்கிறேன். இதே பொங்கல் அன்று ஆழ்வார் பார்த்த கடுப்பில், போக்கிரியை ரசித்து பார்த்திருக்கிறேன். வேட்டைக்காரனில் இடைவேளை வரை கூட ரசிக்கும்படிதான் இருந்தது. படம் பார்க்கும்போது பத்து வருடங்களுக்கு முன்பு வந்த பூவெல்லாம் உன் வாசம் படம்தான் ஞாபகம் வந்தது. இந்த படத்தில் ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக ஏதும் இல்லாமல் ரசிகர்களையும், ஒரு சராசரி பொதுஜனம் ஏற்றுக்கொள்ளாத விதமாக கிளைமாகஸ் வைத்து மக்களையும் ஏமாற்றி விட்டார்கள். 

இந்த ஹேர்ஸ்டைலை பார்த்தவுடன் அசல் படத்தில் அஜித் ஹேர்ஸ்டைலை கலாய்த்தவர்கள்தான் ஞாபகத்துக்கு வந்தார்கள் 
காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. போன் பேசிக்கொண்டே பெண்கள் டாய்லெட்டில் நுழைவது மட்டும் கிச்சு கிச்சு மூட்டுகிறது. விஜய் இளமையாகவும், அசின் முதுமையாகவும் இருக்கிறார்கள். அவரது சித்திப்பெண் ஓகே. விஜய் பாடல் காட்சியிலும், கிளைமாக்சிலும் தேவை இல்லாமல் தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றி அமைத்திருக்கிறார். அவருக்கு பொருந்தவில்லை. ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. பாடல்கள் சுமார்தான். "யாரது..." பாடல் மட்டும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. மற்றபடி காவலன் மகா ஹிட்டாக வாய்ப்பில்லை. ஆவரேஜ் வரிசையில்தான் சேரும். விஜய்யை பொறுத்தவரை முதலுக்கு மோசமில்லை.


ஒரு பயணமும் விபத்தும் 


மாட்டுப்பொங்கல் அன்று திருச்சியை சுற்றி உள்ள கோவில்களுக்கு சென்று வந்தோம். அதனால் அன்று முழுவதும் ஒரே சுத்தல்தான். மலைக்கோட்டையில் ஒரு பிரெஞ்சு குடும்பத்தினர் அனைவரது நெற்றியிலும் திருநீர் பட்டையும், அவர்கள் பிள்ளையார் என்று சொன்ன உச்சரிப்பும் வேடிக்கையாக இருந்தது. வரும் வழியில் மேலூர் அருகே நடு ரோடில் ஹைவே பேட்ரோல் வண்டி நின்று கொண்டிருந்தது. காவல்காரர் வண்டிகளை வேறு பாதையில் திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். யாரோ ஒரு சுமோகாரன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஐந்துபேரை அதிவேகமாக மோதி சிதறடித்து விட்டான். இத்தனைக்கும் அவர்கள் ஒன்றாக சென்றவர்கள் அல்ல. குறிப்பிட்ட இடைவெளியில் நடந்து சென்றவர்கள். 


வந்தவன் புல் மப்பில் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் வரிசையாக ஐந்து பேரை இடித்திருக்க மாட்டான். ஊர்மக்கள் ஒன்று கூடி சாலையை மறித்து விட்டார்கள் (இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டுகோள் விடுத்து மறுக்கப்பட்டதாம்). ஆகவே சிவகங்கை மாவட்டத்துக்குள் நுழைந்து சுற்றி விருதுநகர் வந்தோம். நாற்கர சாலை வந்ததில் இருந்து பயண நேரம் குறைந்து விட்டது. விபத்துக்களின் எண்ணிக்கையோ தாறுமாறாக உயர்ந்து விட்டது.

வலைச்சரம், கோவில்களுக்கு சென்றது என்று இந்த வருட பொங்கலும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. இந்த வலைப்பக்கத்தை தொடர்பவர்கள் 99 பேர். யார் அந்த நூறாவது நபர் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

பிகு: எங்கள் ஊரில் இருந்த மூன்று திரைஅரங்குகளை காவலன், சிறுத்தை மற்றும் இளைஞன் ஆக்கிரமித்துவிட்டதால் ஆடுகளம் ரிலீசாகவில்லை. 

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

முழுவதும் படிக்க >>

January 13, 2011

திரும்பி பார்க்கிறேன் - பிளாஷ்பேக்


இந்த மாதம் முழுவதுமே பிளாஷ்பேக் மாதம் போலிருக்கிறது. நண்பர் பாலாஜி சரவணன் என்னை கடந்த வருடத்தை திரும்பி பார்க்க அழைத்திருக்கிறார். முதலில் அவருக்கு என் நன்றிகள். இத்தோடு மூன்றாவது தடவையாக திரும்பி பார்க்கிறேன். இதற்குமுன் 100ஆவது பதிவுக்காக ஒரு முறையும், வலைச்சரத்துக்காக ஒரு முறையும் ஏற்கனவே திரும்பி பார்த்து விட்டேன். மறுபடியும் ஒருமுறை திரும்பி பார்க்கிறேன்.சொந்த வாழ்வை பற்றி திரும்பி பார்ப்பதா? அல்லது பதிவுலகில் நடந்ததை பற்றி திரும்பி பார்ப்பதா? என்று தெரியவில்லை. 


சொந்த வாழ்க்கையில் கடந்த ஒரு ஆண்டில் பெரிதாக எதுவும் மாற்றங்கள் நிகழவில்லை. என் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் அதிகரித்தார். அழகான உறுப்பினர். என் அண்ணனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் நான் வாடா படம் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். 

பதிவுகளை நான் படிக்க ஆரம்பித்தது 2009இல். ஆனால் பதிவெழுத தொடங்கியது 2010 பிப்ரவரியில். எதையாவது வாசித்து விட்டாலோ, எந்த ஒரு போது நிகழ்வுகளைப்பற்றி மனதில் அபிப்ராயம் ஏற்பட்டாலோ யாரிடமாவது பகிர்ந்து கொள்வது (அதாவது ஓட்டை வாய்) எனக்கு மிக பிடிக்கும். அந்த மாதிரியான நேரங்களில் நான் சொல்வதை புரிந்து கொள்ளும் அளவுக்காவது விபரம் தெரிந்த நபர்கள் இல்லை என்றால், யாரிடம் சொல்வது என்று திண்டாட்டம்தான். இந்த குறையை போக்க எனக்கு கிடைத்த வழிதான் பதிவுகள். என் பதிவுகள் வாயிலாக நான் நினைப்பதை, படித்ததை பகிர்ந்து கொள்ள முடிந்தது.


எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாமல், நினைத்ததை எல்லாம் எழுதி தள்ளி இருக்கிறேன். சில பதிவுகள் இப்போதும் என் மன நிலையை பிரதிபலிக்கின்றன. சில பதிவுகள் அந்த சமயத்தில் என்னுடைய சிறு பிள்ளை தனமான எண்ணங்களை வெளிப்படுத்தி இருப்பதை காட்டுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே யார் வம்பு தும்புக்கும் போறதில்லை. ஆனால் கார்க்கி தொடங்கி, வால்பையன், வெண்ணிற இரவுகள் கார்த்தி, புலவன் புலிகேசி, சதீஷ் வரை  நிறைய விவாதம் செய்திருக்கிறேன். வீண் விவாதமும் செய்திருக்கிறேன். இதில் வெண்ணிறஇரவுகள் கார்த்தியோடு செய்த விவாதம் என்னை பிரபலப்படுத்தியது. நான் எழுதிய ஒரே எதிர்வினை இவருக்குத்தான்.

ஒரு நண்பர் நான் சினிமா மற்றும் கிரிக்கெட் பற்றி அதிகம் எழுதுவதாக குறைபட்டுக்கொண்டார். நான் ஹிட்ஸ், மற்றும் ஓட்டுக்களுக்காக எதுவும் எழுதுவதில்லை. தினமும் நினைத்த மாத்திரத்தில் கதை, கவிதை படைக்க நான் பெரிய எழுத்தாளன் கிடையாது. நமக்கு எது வருகிறதோ அதை மட்டுமே செய்யவேண்டும். நமக்கு வருவதெல்லாம் வெட்டிப்பேச்சுதான். அதைத்தான் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறேன்(ஹி..ஹி). முடிந்த அளவு யாரையும் காயப்படுத்தாமல், ஆபாசமாக இல்லாமல், அநாகரீகமாக இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் (அதை படிக்கிறவங்க சொல்லணும்).


பதிவுலகில் கடந்த வருடத்தில் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். தொழில் நுட்ப ரீதியாக, உளவியல் ரீதியாக. என் வலைத்தளத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு ஃபாலோயர் பட்டை கிடையது. பெரும்பாடு பட்டு இணைத்தேன். ஓரளவுக்கு எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுத கற்றுக்கொண்டுள்ளேன். உளவியல் ரீதியாக பார்த்தால், எந்த ஒரு விவாதத்திலும் வெற்றி கிட்டுவதில்லை. ஒன்று சண்டையில் சென்று முடிகிறது. இல்லை விதண்டா வாதமாக மாறுகிறது. முடிவில் நட்பு முறிவதென்னவோ நிச்சயம், என்றெல்லாம் தெரிந்து கொண்டேன்.

ஏதோ ஒரு வலைப்பதிவில் படித்தது. "பதிவுலகம் என்பது நம் காலப்பெட்டகம். டைரி என்று கூட வைத்துக்கொள்ளலாம்". அவ்வப்போது கடந்த காலங்களில் எழுதிய என் பதிவுகளை திருப்பி படிக்கும்போது, அந்த கால கட்டங்களில் என் மன நிலையும், சமூகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. கடந்த ஒரு வருடத்தில் எழுத்திலும், எண்ணத்திலும் சில முன்னேற்றங்கள் தென்படுகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது.

முழுவதும் படிக்க >>

January 11, 2011

வியாபாரமான கிரிக்கெட், விவஸ்தை கெட்ட விளம்பரம்


சமீபத்தில் வோடபோன் விளம்பரம் ஒன்று வருகிறது. அதில் வரும் வாசகமும் காட்சியும் உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறது. தன் பிறந்த நாளுக்கு எல்லோருக்கும் ஒரு சாக்லேட் கொடுக்கும் ஒரு பெண், தன் நண்பிக்கு மட்டும் நிறைய சாக்லேட் கொடுப்பாள். பின் வரும் வாசகம் யாராவது உங்களை ஸ்பெசலாக நினைக்க செய்தார்களா? என்று. இந்த விளம்பரத்தை நான் மேற்கோள் காட்டியதன் நோக்கம் என்னவென்றால், என்னையும் வலைச்சரத்தில் ஒரு வாரகாலம் ஆசிரியராக பணியாற்ற அழைத்திருக்கிறார்கள்.



உண்மையிலேயே கதை, கவிதை என்று சுவையாக எழுதும் அளவிற்கு எனக்கு திறமை இருந்தது கிடையாது. இருந்தும் நானும் எழுதிக்கொண்டுதான் இருந்தேன் என் வலைப்பக்கத்தில். ஆனால் திடீரென்று வலைச்சரத்தின் ஆசிரியர் சீனாவிடம் இருந்து மின்னஞ்சல், "ஆசிரியராக இருக்க முடியுமா?" என்று. வலைச்சரத்துக்கு சென்று பார்த்ததில் மிரண்டு போய் விட்டேன். உண்மையிலேயே சிறப்பாக எழுதும் பலர் ஆசிரியராக இருந்திருக்கிறார்கள். இதில் என்னையும் எழுத அழைத்து கவுரவித்த சீனாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
வலைச்சரத்திலும் எழுத வேண்டி இருப்பதால் இங்கு அதிக நேரம் செலவளிக்க இயலவில்லை 


விளம்பரம்

பதிவின் ஆரம்பத்தில் ஒரு நல்ல விளம்பரத்தை பற்றி சொன்னேன் அல்லவா? சமீபகாலமாக நல்ல விளம்பரங்களின் வருகை மிக குறைந்து விட்டது. மொக்கை விளம்பரங்கள் அல்லது கன்றாவி விளம்பரங்கள்தான் அதிகம் வருகின்றது. ஒரு கடையில் சாதாரண செல்போன் வைத்திருக்கும் ஒருவனுக்கு  சில்லறை கொடுப்பதற்கு பதிலாக சாக்லேட் கொடுக்கும் ஒரு பெண், குறிப்பிட்ட போன் வைத்திருப்பவனுக்கு, சில்லறைக்கு பதிலாக காண்டம் கொடுக்கிறாள். ஏனென்றால் அவன் ஆண்மகனாம். மற்றவன் எல்லாம் பச்சாவாம். கொடுமைடா சாமி. குறிப்பிட்ட ஒரு செல்போனை நீங்கள் வாங்காவிட்டால், உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம் பளாரென்று அறைந்து கொள்வீர்கள் என்று ஒரு விளம்பரம். உச்ச கட்ட கற்பனை வளத்துடன் வருபவை சானிடரி நாப்கின் விளம்பரம்தான். விதவிதமான இசை, மலர் போன்ற டிசைன் என்று. குழந்தைகளை தயவுசெய்து டீவி பார்க்க அனுமதிக்காதீர்கள்.

டென் கிரிக்கெட் சேனல்காரர்கள் இந்திய, தென்னாபிரிக்க கிரிக்கெட் போட்டிகளை மிகுந்த விலை கொடுத்து வாங்கி இருப்பார்கள் போலிருக்கிறது. பத்து செகண்டுக்கு ஒரு விளம்பரம் ஒளிறுகிறது. போட்டியில் பாதிநேரம் முக்கால் ஸ்கிரீனில்தான் ஆட்டம் தெரிகிறது. முன்பெல்லாம் ஆட்டத்துக்கு நடுவே விளம்பரங்கள் பார்த்தது போய், தற்போது விளம்பரங்களுக்கு இடையே ஆட்டங்களை பார்க்கும் நிலை வந்துவிட்டது.


கிரிக்கெட்டோ கிரிக்கெட் 


இந்தியா எதில் வல்லரசாகிறதோ இல்லையோ கிரிக்கெட்டில் ஆகி விட்டது. எல்லா நாட்டுகாரனும் நம்ம நாட்டை நோக்கி படையெடுக்கிறான். திவாரி, தவான் போன்ற அட்ரஸ் இல்லாத வீரர்கள் கூட கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன் இதெல்லாம் ஒரு விளையாட்டுக்கு நல்லதுக்கில்லை. நம்ம தாதாவை புறக்கணித்ததும் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அசாருதீனுக்கு அப்புறம் இந்திய அணியில் எனக்கு மிகவும் பிடித்தது கங்குலிதான். திமிர், தெனாவட்டு ஆகியவற்றை மொத்த அணிக்கும் கற்றுக்கொடுத்தவர் தாதா. எதிரணிக்காரன் கெட்ட வார்த்தையில் திட்டினாலும், நிலம் பார்த்து நடந்த இந்திய வீரர்களை, நிமிர்ந்து முகம் பார்க்க வைத்தவர். இத்தனைக்கும் சென்ற ஐபிஎல்இல் இவர் நன்றாகத்தான் ஆடினார். தாதா இல்லாத அணி தேவை இல்லை என்று வங்காள ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்க, கங்குலியின் பங்கு அணியில் நிச்சயம் இருக்கும் என்று சப்பை காட்டு கட்ட தொடங்கி இருக்கிறார் ஷாரூக்.


நினைத்தது நடந்து விட்டது. ஆஷஸ் தொடரை இழந்து பரிதாபமாக இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இது குறித்து நண்பர் ஸ்பீட் மாஸ்டர் எழுதிய வரக்குத்து வாங்கிய ஆஸ்திரேலியா என்ற பதிவில் நான் படித்து சிரித்த பஞ்ச் டயலாக் "ஓவரா பேசுர வாயும், ஓவர் நைட்டுல கத்துற நாயும், அடி வாங்காம போனதா சரித்திரமே இல்லை."

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...


முழுவதும் படிக்க >>

January 6, 2011

வெட்டிப்பேச்சு - நான் என்ன சொல்ல வர்றேன்னா..

வணக்கம் மக்களே. எல்லோருக்கும் வரும் ஆங்கில புத்தாண்டு  இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள். லேட்டா சொல்றேன்னு நினைக்காதீங்க. புத்தாண்டு வாழ்த்தை அந்த ஆண்டில் எல்லா நாளும் சொல்லலாம்தானே?(என்ன ஒரு லாஜிக்?) தவிர பதிவுலகத்தில் அப்பப்ப சில சந்தேகங்களை கிளப்பி விட்டுக்கொண்டே இருப்பார்கள். சமீபத்தில், "ஆங்கில புத்தாண்டு கொண்டாடுகிறாயே நீயெல்லாம் தமிழனா?" என சந்தேகத்தை கிளப்பி விட்டு விட்டார்கள். ஏற்கனவே தமிழ் புத்தாண்டு என்றைக்கு வருகிறது என்று குழப்பத்தில் இருந்து வருகிறேன். ஆகவே உக்காந்து யோசித்து என்னைக்கு கொண்டாடினா என்ன? ஒண்ணும் உருப்படியா செய்வது கிடையாது. ஆகவே ஒரு மனிதன் எத்தனை புத்தாண்டுகள் வேண்டுமானாலும் கொண்டாடலாம். என்ற முடிவுக்கு வந்து விட்டேன். So Happy New Year Folks... சென்ற ஆண்டில் கண்டு கொள்ளாமல் இருந்து இந்த ஆண்டு என் மனதில் இடம் பிடித்த இருவர் படங்களை பதிவின் கடைசியில் காண்க. இருவர் பெயரும் ஒன்றே. 




எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் இவன் ரொம்ப நல்லவன்

வேற யார். தமிழர்கள்தான். மறுபடி தமிழர்களை கேணையர்களாக்க ரெடியாகிவிட்டது சன்டி‌வி. கடந்தவாரம் பாதியை ஒளிபரப்பாமல் டீலில் விட்ட நட்சத்திர கலைவிழாவை மறுபடியும் இந்தவாரம் தொடரப்போகிறார்களாம். ஆகவே இந்தவாரமும் முழுவதும் உட்கார்ந்து பார்க்கவேண்டும். ஏனென்றால் நான் தமிழனாச்சே.


உங்கம்மா, அக்கா போட்டோவை கொடு...



இந்த வசனம் ஞாபகம் இருக்கா? புவனேசுவரி விவகாரத்தில் நடிகைகளின் பெயர்களை வெளியிட்டதற்காக நடிகர் சங்கம் நடத்திய கண்டன கூட்டத்தில் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் பேசிய ஆவேச பேச்சு.  அதாவது தேவை இல்லாமல் சினிமா கலைஞர்களை குறிப்பாக நடிகைகளை இழிவு படுத்தும் விதமாக செய்திகள் படங்களை வெளியிடும் பத்திரிக்கைகளை சாடும் விதமாக இவர் அவ்வாறு கொந்தளித்து பேசினார். சில நாட்களுக்கு முன் ஆடுகளம் ஆடியோ வெளியீடு சன்டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தெரியாத்தனமாக பத்மஸ்ரீ விவேக் அவர்கள் பேசிய பேச்சை கேட்டு தொலைத்தேன். இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை அவருக்கு ஏன் வழங்கினார்கள் என்ற காரணம் புரிந்தது. கதாநாயகி டெய்ஸியை பார்த்து "உன்னை வெள்ளாவியில வச்சு வெளுத்தாகளா?, வெயிலே படாம வளத்தாகளா' என்ற பாடல் வரியை மேற்கோள் காட்டினார். முத்தாய்ப்பாக, "டெய்ஸி அவர்களின் அழகை பற்றி சொல்ல வேண்டுமானால் சூப்பர் பிகர்!!"  என்று சொல்லியபடி ரசிகர்களை பார்த்து சிரித்தார். அதாவது "சினிமா என்பது என் வீடு. அதில் வரும் நாயகிகள் எல்லாம் என் பொண்டாட்டி மாதிரி. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், ஆனால் மற்றவர்கள் எல்லோரும் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்!"  என்பது மாதிரிதானே இருக்கிறது. யார் யாருக்கோ பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். முதலில் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் பெரியார் திருவாளர் விவேக்குக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.


சரியான சவாலும் சம்மட்டி அடியும்.



2010 இறுதியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து. அதுவும் வெகு நாட்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் வாயிலாக. இந்திய தென்னாபிரிக்க அணிகள் ஒரு புறமும், ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகள் மறுபுறமும் ஆடி வருகின்றன. இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டிகள் உண்மையிலேயே இரு அணிகளுக்கும் சரியான சவால். இருவரும் விடாக்கண்டன், கொடாக்கண்டனாக விளையாடி வருகிறார்கள். தர வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதினால் இப்படித்தான் இருக்கும் என்று காட்டி உள்ளார்கள். இதோ இந்த பதிவை நான் எழுதி கொண்டிருக்கும் நாள்தான் கடைசி போட்டியின் கடைசி தினம். இன்று வரை கோப்பை யாருக்கு என்று முடிவு செய்ய முடியாத ஒரு இழுபறி நிலை. சரியான சவால்தான்


மறுபுறம் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை சம்மட்டியாக அடித்து விட்டது. இன்று வரை ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு நாள் மீதம் இருக்கும் நிலையில், இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. ஏற்கனவே பத்திரிக்கைகள் ரிக்கி பாண்டிங்கை திட்டி தீர்த்து விட்டன. இறுதிப்போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி என்றால் அதை அவர்களால் தாங்கி கொள்ளவே முடியாது. உலகக்கோப்பை நெருங்கி வரும் நேரத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு மேலும் ஒரு பெரும் இடியாக இறங்கி உள்ளது ஆஷஸ் தோல்வி. 

என் பதிவின் எதிரொலி 

பிரபல பத்திரிக்கைகள் எல்லாம் ஒரு செய்தி வெளியிட்டு, அது சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுத்தால் உடனே, "தினமலர் செய்தி எதிரொலி, தூர்வாறப்பட்ட குளம்!!"  என்று செய்தி வெளியிடுவார்கள். நான் சில நாட்களுக்கு முன் விருதுநகரை பற்றி பதிவு ஒன்று எழுதி இருந்தேன். தற்போது விருதுநகரை சுற்றி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆகவே சொல்கிறேன், "என் பதிவின் எதிரொலி, சரிசெய்யப்படும் சாலைகள்!!",  "யாருப்பா அது, பொய் பொய்ன்னு கத்துறது? என்னது தேர்தல் வர்றதாலதான் ரோடு போடுராங்களா?, என் பதிவால் இல்லையா? செல்லாது செல்லாது. ஒத்துக்க முடியாது. என் பதிவ பாத்துட்டுதான் ரோடு போடுறாங்க." என்னங்க நான் சொல்றது கரெக்ட்தானே? 

நான் என்ன சொல்ல வர்றேன்னா

உங்களுக்கு நம்ப முடியாத இரண்டு விஷயங்கள் சொல்கிறேன். 

விஷயம் #1 
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் முதல் இரண்டு ரேங்குக்குள் வந்துவிடுவேன். ஏதாவது ஒரு தேர்வில் மூன்றாவது ரேங்க் வந்துவிட்டால் ஒரு வாரத்துக்கு சாப்பாடு இறங்காது. பிறகு பத்தாவது, பிளஸ்டூ படிக்கும்போது, ரேங்க் முக்கியமல்ல மார்க்குத்தான் முக்கியம் என்று உயிரைக்கொடுத்து படித்தேன். அந்த கால கட்டத்தில் ரேங்கும் வரவில்லை, மார்க்கும் வரவில்லை. கல்லூரியில் படிக்கும்போது, ரேங்கும் ஒரு பொருட்டில்லை, மார்க்கையும் மதித்தது கிடையாது. முடிந்தவரை படிப்பது, தெரிந்தவரை எழுதுவது. அவ்வளவுதான். ரேங்கும் மார்க்கும், கூடவே மெடலும் தேடி வந்தது.


விஷயம் #2 
பதிவுலகத்தில் எழுத தொடங்கும் முன் ஒரு சில நண்பர்களின் வலைப்பக்கத்தை பார்க்கும்போது ஒரு லட்சம் ஹிட்ஸுக்கு நன்றி, 50 வோட்டுக்கு நன்றி என்றெல்லாம் படிக்கும்போது, நாமும் இப்படி ஹிட்டுக்கள், வோட்டுகள் வாங்க வேண்டும் என்று விரும்பியதுண்டு. பிறகு அப்படி வோட்டு விழாத போது மிகவும் வருந்தி இருக்கிறேன். நூறு பதிவு எழுதுவதற்குள் ஒரு லட்சம் ஹிட்டுகள் வாங்கி விடவேண்டும் என்று கூட முடிவு கட்டி இருந்தேன். (இது 102 ஆவது பதிவு, ஹிட்டுகள் 44 ஆயிரத்தி சொச்சம்). பிறகு இரண்டையும் விட்டு தள்ளிவிட்டேன். அப்புறம் என்ன டாஷுக்கு ஹிட் கவுண்டரும், தமிழிஷ் ஓட்டு பட்டையும் என்று கேட்கிறீர்களா? எல்லாம் ஒரு கணக்குக்குத்தான். 

உண்மை ஒன்று சொல்கிறேன். நம்ப மிக கஷ்டமாக இருக்கும். இதுவரை தமிழ்மணம் வலைத்தளத்துக்கு இரண்டே தடவைதான் சென்றிருக்கிறேன். முதன் முதலாக பதிவு எழுத தொடங்கியபோது என் பதிவை இணைக்க முயற்சி செய்தபோது ஒருமுறை(இணைந்து விட்டதா என்று இன்று வரை திரியவில்லை). சென்ற மாதம் ஓட்டு போட சொல்லி ஒரு மெயில் வந்தது. அப்போது ஒருமுறை. ஓட்டு வாங்கும் நண்பர்களையோ, முதல் இருபது இடத்தில் இருக்கும் திறமையாளர்களையோ நான் குறை சொல்லவில்லை. ஹிட்டுக்காகவும், வோட்டுக்காகவும், முக்கியமாக ரேங்குக்காகவும் எழுதுவது என்பது என்னை பொறுத்தவரை தேவை அற்றது. நாம் மன நிறைவுக்காக எழுதி அது பலருக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக ரேங்க் நிச்சயம். ரேங்க் கிடைக்கவில்லையே என்றால் கூட கவலை இல்லை. நாம்தான் ரேங்குக்கு எழுதவில்லையே?

ஒரு பஞ்ச் டயலாக் "மார்க்குக்காக மட்டுமே படிக்கிற படிப்பும், ஹிட்டுக்காக மட்டுமே எழுதுற பதிவும், எதுக்கும் உதவப்போறதில்லை.



சாப்பாட்டுக்கடை

எல்லா உணவு வகைகளும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு கடை உள்ளது.

டீ - 1 ரூபாய் , 
சாப்பாடு - 2 ரூபாய், 
தாலி மீல்ஸ் - சைவம் - 12.50 ரூபாய்  
                            அசைவம் - 22 ரூபாய்
சப்பாத்தி - 1 ரூபாய் 
தோசை - 4 ரூபாய் 
பிரியாணி -  8 ரூபாய்
கோழி மசாலா - 24 ரூபாய் 
மீன் - 17 ரூபாய் 

மிகவும் குறைவான வருமானம் உள்ள ஏழைகளுக்காவே இயங்கும் இந்த கேண்டின் இருக்கும் இடம், இந்தியா பாராளுமன்ற வளாகம். இதனால் பயன் பெரும் ஏழைகள் வேறு யாருமல்ல. நம் எம்பிக்கள்தான். 


2011 இல் என் மனதில் இடம்பிடித்த அந்த இரண்டு பேர்


இரண்டு அமலாக்கள்





உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...   





















முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...