சமீபத்தில் குமரன் குடிலுக்கு சென்று வந்தேன். அந்த குடிலின் சொந்தக்காரர் தனக்கு புரியாத சில விஷயங்களை பற்றி கூறி இருந்தார். அவருடைய சந்தேகங்கள் பல எனக்கும் உண்டு. முன்பே சொன்னது போல இந்த பதிவுலகத்துக்கு வந்தபிறகு நிறைய கற்றுக்கொண்டேன். எவ்வளவுதான் புத்தகங்கள், படைப்புகள் நிரம்பி வழிந்தாலும் குப்பைத்தொட்டி நூலகம் ஆகாது. ஒரு நூலகம் போல ஆக வேண்டும் என்று கண்டதை எல்லாம் நிரப்பி என்மனம் குப்பைதொட்டி ஆனதுதான் மிச்சம். முதலிலேயே கூறிகொள்கிறேன் இவை என் வாதங்கள் அல்ல. சந்தேகங்கள்தான்.
ஆணாதிக்கம்
நான் ஒரு ஆசிரியன். மற்றவர்களை விட இளைய சமுதாயத்தினருடன் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்றவன். ஒரு பெண் தவறு இழைக்கிறாள் (ஆண் செய்தாலும் தவறு தவறுதான்). "ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே?" என்று கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கிறது? "அதென்ன பெண்ணாக இருந்து கொண்டு? அப்படியானால் ஆண் செய்தால் தவறில்லையா?" என்பதுதான் எதிர் கேள்வியாக இருக்கிறது. கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே? இது ஆணாதிக்கமா? ஆண் என்பவன் உணர்வுரீதியாக அதிகம் சிந்திப்பதில்லை. பெண் அதிகமாக சிந்திப்பது உணர்வுரீதியாகத்தான். உணர்வு ரீதியாக சிந்திப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள். அந்த தொனியிலேயே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்ற வார்த்தை வருகிறது. இதே போல பெண்ணுக்கு சமஉரிமை என்று சொல்பவர்கள் சொல்லும் முதல் வார்த்தை நாங்களும் ஆண்களுக்கு இணையாக பல செயல்கள் செய்கிறோம் என்பது. ஒருவர் மாதிரி இன்னொருவர் செய்வது எப்படி சம உரிமை ஆகும். ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் என்பது என் கருத்து. இதனை சுட்டிக்காட்டுபவன் ஒரு ஆணாக இருந்துவிட்டால், ஆணாதிக்கமா?
என் தோழி ஒருத்தியுடன் வெகு நாட்கள் கழித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவளைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். படித்து முடித்தவுடன் போய் ஒரு பெரிய நிறுவனத்தில் உட்காரவில்லை. இரண்டாண்டு படாதபாடு பட்டு ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து பின், தற்போது ஒரு பெரிய நிறுவனத்தில் எண்ண முடியாத அளவுக்கு சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறாள். பெரிய கம்பெனிகள் நடத்தும் Off Campus நேர்முக தேர்வுகளில்தான் நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ஒரு தேர்வு பாக்கி இல்லாமல் ஆவலுடன் வருவார் அவளின் தந்தை. அவர் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். கல்லூரியில் தன் பிள்ளையை சேர்க்க வரும்போது ஒரு தந்தையின் முகத்தில் இருக்குமே அதே போல. என்ன நடக்கிறதென்று தெரியாது. ஆனால் நம் மகள் நேர்முக தேர்வுக்கு வருகிறாள், அவளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கும். தற்போது அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவனை காதலிப்பதாக சொன்னாள். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சொன்னாள். தன் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் திருமணம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள். அவளின் பெற்றோர்கள் கேட்பதாக இல்லை. இது குறித்து என்னிடம் அவள் சொன்ன வார்த்தை, "ரொம்ப ஓவரா பண்றாரு எங்கப்பா. எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல. அதனால இங்க தனியா ஒரு ரூம் எடுத்திட்டேன். செல் நம்பர் கூட மாத்திட்டேன். என்னை என்ன அவுங்க அடிமைன்னு நினச்சுட்டான்களா?" . இந்த திமிர் எப்போது வந்தது? படித்த பின்பா? வேலைக்கு போன பின்பா? ஆண்தான் பெற்றோரை அனாதையாக விடுவான் என்று பார்த்தால் இந்த பெண்ணும் விட்டுவிடுவாள் போலிருக்கிறதே? ஒருவேளை இதுதான் சம உரிமையோ? இதை சுட்டிக்காட்டுவது ஆணாதிக்கமா?
பார்ப்பனீயம்
பார்ப்பனியம் என்றால் என்ன என்று ஒரு பதிவர் தெளிவாக எழுதி இருந்தார். அதாவது பார்ப்பனீயம் என்பது பிராமணர்களை குறிப்பது அல்ல. தனக்கு கீழே இருக்கும் ஒருவன் வளர விடாமல் தடுப்பது, அவனை மட்டம் தட்டுவது எல்லாமே பார்பனீயம்தான். தீர்ந்தது சந்தேகம். ஆனால் அதே பதிவர் மற்றும் இன்ன பிற தோழர்கள் பார்ப்பனீயம் என்ற வார்த்தையை பயன்படுத்தும் இடம் எல்லாமே பிராமணர்களை குறிப்பதாகவே இருக்கிறது. மேலும், "ஐ டி துறையில் இருக்கும் மேலதிகாரிகள், தன் கீழே வேலை பார்க்கும் ஒருவனை சட்டைக்குள் எட்டிப்பார்க்கிறார்கள் பூணூல் தெரிகிறதா? என்று, எல்லாம் பார்ப்பனனின் திமிர்!!!" என்றும் எழுதி இருக்கிறார்கள். ஒரு பிரச்சனை நடக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரு கருத்தை பிடித்து தொங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக ஒருவன் கருத்து தெரிவிக்கிறான். உடனே அவன் சட்டைக்குள்ளே எட்டிப்பார்த்து அதையும் எழுதுகிறார்கள். இவர்களில் யார் பிராமணன்? யார் பார்ப்பனன்? என் நண்பன் ஒருவன் இருந்தான். மருத்துவராவது அவன் கனவு. ஆனால் முடியவில்லை. காரணம் அவன் பிராமணன். அவனை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கிடைத்துவிட்டது. பிராமணனாக பிறந்ததுதான் அவன் செய்த தவறா? இயல்பாகவே மற்றவர்கள் மீது அவனுக்கு எழும் கோபத்தில் பொரிந்து தள்ளுகிறான். உடனே எட்டிப்பார்த்து "பார்ப்பனனின் திமிரை பார்த்தீர்களா?" என்கிறார்கள். அட எதுதான் பார்ப்பனீயம்?
முதலாளித்துவம்
குமரனுக்கு வந்தது போல எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளாகவே இருக்கிறது. முதலாளித்துவத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்று கைவலிக்க நிறைய பதிவர்கள் எழுதி வருகிறார்களே? இவர்கள் யாரும் வேலையே பார்க்கவில்லையா? ஒரு முதலாளியின் கம்பெனியில், அவரிடமே சம்பளம் வாங்கி கொண்டு அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எப்படி மனது வருகிறது. முதலாளி என்பவன் அவ்வளவு அயோக்கியனா? "மணிரத்னம் கார்பரேட் கம்பெனிகளுக்கும், அரசாங்கத்துக்கும் பயந்து பட்டும் படாமலும் படமெடுக்கிறார், அவர் ஒரு சுயநலவாதி." என்று சொல்லும் இவர்களும், தன் கொள்கையை மறந்து மாத சம்பளத்துக்காக ஒரு முதலாளியிடம் பல் இளிக்கிறார்களே இவர்கள் சுயநலவாதிகள் இல்லையா? "நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் தீவிரவாத இயக்கங்கள் காரணம் இல்லை, அரசுதான் மக்களை திசை திருப்ப இப்படி நாடகம் ஆடுகிறது, மக்கள் மட சாம்பிராணிகள்!!!" என்று தேர்தல் அன்று ஓட்டு போட செல்லாமல் வீட்டுக்குள் உட்கார்த்து பதிவு எழுதுகிறார்களே இவர்கள்தான் நல்லவர்களா? ஒரு சினிமாவை கூட அரசியல் நோக்கோடு, உர்ரென்று பார்த்துக்கொண்டிருந்தால் மன இறுக்கம் வந்து பைத்தியம் பிடித்து விடாதா?
கடவுள் நம்பிக்கை
பதிவுலகம் என்றில்லை எல்லா இடத்திலும், எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்ப்புவாதம் என்று ஒன்று உண்டு. இது அதிகம் இருப்பது கடவுள் மற்றும் மத சம்பந்தமான விஷயங்களில். முதலிலேயே சொல்லி விடுகிறேன் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கடவுள் மறுப்பாளர்கள் எல்லோருமே கடுமையான வார்த்தைகளால் கடவுளை திட்டுகிறார்களே இது எதற்காக? பொதுவான, வேரிலேயே ஊறிப்போன ஒரு அடிப்படை நம்பிக்கையை உடைக்க வேண்டுமானால் எவ்வளவு பக்குவம் பொறுமை வேண்டும்? மோசமான ஒரு தாய்க்கு பிறந்த ஒரு மகனிடம் சென்று "உங்கம்மா ஒரு தே...." என்றால் அவன் என்ன செய்வான்? அடிக்கத்தான் வருவான். நான் உண்மையைதானே கூறினேன்? என்று வாதம் செய்வது எந்த வகையில் நியாயம்? ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த பெரியாரின் வாசகம் இது.
எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!
இதை எத்தனை நாத்திகர்கள் செய்கிறார்கள்? நாத்திகர் என்பது தங்களை மட்டப்படுத்த ஆத்திகர்கள் வைத்த பெயராம். அப்படியானால் பகுத்தறிவுவாதிகள் என்ற பெயர் கூட உங்களை நீங்களே சொரிந்து கொள்ள வைத்து கொண்ட பெயர்தானே. பகுத்தறிவுக்கும், நாத்திகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நான் கடவுள் இருக்கிறான் என்று சொல்லவில்லை. நம்புகிறேன். அதே போல்தான் உங்கள் கொள்கையை நீங்களும் நம்புகிறீர்கள். ஆனால் அதை சொல்லும் விதத்தில் வார்த்தை பிரயோகங்கள் மனதை புண்படுத்துவது போல இருப்பது ஏன்? உங்களின் நோக்கம் உங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லை அவர்கள் மனதை புண்படுத்துவதா? இந்த கேள்வியை கடவுளை ஆபாசமாக திட்டி எழுதும் பல பதிவர்களிடம் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஏனோ பதில்தான் வரவில்லை. மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன் கடவுள்மறுப்பு, சாதி மறுப்பு, பார்ப்பனீய ஒழிப்பு என்று ஒரு சாதி உருவாகி இருக்கிறதே ஒழிய வேறொன்றும் நிகழ்ந்து விடவில்லை. என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் மாபெரும் சந்தேகங்கள் இவை. யாராவது தீர்த்து வைத்தால் நல்லது.
பிடிச்சிருந்தா மறக்காம ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...
முழுவதும் படிக்க >>